Wednesday, July 19, 2023

1223. மாதமோ மார்கழி!

வள்ளி தன் வீட்டு வாசலில் வந்து நின்றபோது, பனிக் காற்று அவள் உடலைச் சுள்ளென்று தாக்கியது.

இது மாலை நேரம் ஆயிற்றே! இப்போதே ஏன் இப்படிக் குளிர்கிறது?

"மார்கழி மாசம். முன்பனிக் காலம்னு சொல்லுவாங்க. பொழுது சாயற நேரத்திலேயே எப்படிக் குளிருது பாரு! இந்தக் குளிர் உடம்புக்கு ஒத்துக்காது. உள்ளே போயிடு!" என்று கூறிக் கொண்டே, வெளியிலிருந்து வீட்டுக்குள் நுழைந்தாள் அவள் அம்மா.

'மார்கழி மாதம் என்பதாலா இந்த மாலை நேரத்தில் இவ்வளவு குளிர்கிறது?

'இல்லை. அதனால் இல்லை.

'சென்ற ஆண்டு மார்கழி மாத மாலை வேளையில் இது போன்ற குளிர் இல்லையே!

'ஓ! இப்போது காரணம் புரிகிறது.

'அப்போது என் காதலர் என் அருகில் இருந்தார். அதனால் என் முன்னால் வரத் துணிவில்லாமல், பனியினால் மேனி கருத்து, பசலை அடைந்து நடுங்கிக் கொண்டு வந்ததல்லவா இந்த மாலை!

'ஆனால் இன்று, என்னிடம் பிணக்குக் கொண்டது போல், இப்படி என் மீது குளிரை வீசி என்னைத் துன்புறுத்துகிறதே இந்த மாலை! தினமும் இப்படி என்னைக் கொடுமைப்படுத்தி, என் உயிரை வாட்டுவது என் அருகில் என் காதலன் இல்லை என்ற இளக்காரத்தினல்தானே?

'ஏ, மாலைப் பொழுதே! அவர் திரும்பி வரட்டும். அப்போது உன்னை கவனித்துக் கொள்கிறேன்!'

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 123
பொழுது கண்டிரங்கல்
குறள் 1223
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்.

பொருள்:
அவர் என்னைப் பிரிவதற்கு முன்பு, என் முன் வரவே நடுக்கம் எய்தி, மேனி கருத்து வந்த இந்த மாலைப் பொழுது, இப்போது என் உயிரைப் பறிப்பது போல் தோன்றி, துன்பம் பெருகும்படி நாளும் வருகின்றது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Tuesday, July 18, 2023

1222. மயங்கிய மாலைப் பொழுது

 மதுவந்தி கண் விழித்தாள்.

'எப்போது தூங்கினேன்?' என்ற கேள்வி அவளுள் எழுந்தது. அதைத் தொடர்ந்து, 'இப்போது நான் விழித்துக் கொண்டிருக்கிறேனா?' என்ற கேள்வியும் வந்தது.

தன்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டாள் மதுவந்தி. வலித்தது. 'அப்படியானால், விழித்துக் கொண்டுதான் இருக்கிறேன்!'

'ஒருவேளை, இந்தக் கிள்ளிக் கொள்வது, வலியை உணர்வது எல்லாமே தூக்கத்தில் வரும் கனவில் நிகழ்வதாக இருந்தால்...?'

மதுவந்தி எழுந்து, நடந்து வாசலுக்கு வந்தாள்.

'ஏன் எல்லாம் மங்கலாகத் தெரிகின்றன?

ஒருவேளை, தூக்கத்தில் தெரியும் காட்சிகள் என்பதால்தான் எல்லாம் மங்கலாகத் தெரிகின்றனவோ?'

வாசல் திண்ணையில் அம்மா அமர்ந்திருந்தாள்.

"தூங்கி எழுந்தியா? ராத்திரி முழுக்க தூங்காம, மத்தியானம் உன்னை அறியாமலேயே தூங்கிட்டு, சாயந்திரம் எழுந்து வர! பகல்ல சரியா சாப்பிடக் கூட இல்ல. இரு. உனக்குச் சாப்பிட ஏதாவது எடுத்துக்கிட்டு வரேன்!" என்று கூறியபடியே உள்ளே போனாள் அவள் அம்மா.

அவளைக் கடந்து போனபோது, "உன் புருஷன் ஊருக்குப் போனதிலேந்து கண்ணெல்லாம் மங்கிப் போய் சோர்வாவே இருக்கே! அவன் எப்ப திரும்பி வரப் போறானோ, நீ எப்ப பழையபடி ஆகப் போறியோ?" என்று முணுமுணுத்துக் கொண்டே போனாள் அம்மா.

அம்மா சொன்ன பிறகுதான், அது மாலை நேரம் என்பது மதுவந்திக்குப் புரிந்தது.

'ஓ, இது மாலை நேரமா? அதுதான் இப்படி மங்கலாய் இருக்கிறாயா? நீ பகலைச் சேர்ந்தவளா, அல்லது இரவைச் சேர்ந்தவளா? பாவம், அது தெரியாமல்தானே நீ இப்படி மயங்கி நிற்கிறாய்? ஏன் இந்த மயக்கம்? உன் காதலனும் என் காதலனைப் போல் கொடியவனோ? உன்னைத் தனியே விட்டு விட்டுப் போய் விட்டானோ? அதனால்தான், நீயும் என்னைப் போல் கண் பார்வை மங்கி நிற்கிறாயோ?'

"மது, உள்ளே வா! பலகாரம் எடுத்து வச்சிருகேன்!"

உள்ளிருந்து அம்மாவின் குரல் கேட்டது.

'அம்மாவின் குரல் கேட்பது கனவிலா அல்லது நனவிலா?'

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 123
பொழுது கண்டிரங்கல்
குறள் 1222
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.

பொருள்:
பகலும் இரவுமாய் மயங்கும் மாலைப்பொழுதே! என்னைப் போலவே நீயும் ஒளி இழந்த கண்ணோடு இருக்கிறாயே; உன் கணவரும் என் கணவரைப் போல் கொடியவரோ?

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Sunday, July 16, 2023

1221. இதுவா மாலைப் பொழுது, இல்லவே இல்லை!

மாலைப் பொழுது என்றாலே கண்மணிக்குத் தனி மகிழ்ச்சிதான். 

கண்மணிக்கு மட்டுமல்ல, எல்லா இளம் பெண்களுக்கும்தான் - அதாவது காதலனுடன் சேர்ந்து வாழும் இளம் பெண்களுக்கு!

மலர்ச் சோலைகளில், மலர்களுக்குப் போட்டியாகக் குழுமி இருக்கும் இளம் பெண்களும், அவர்களுடன் அன்புடன் உரையாடும் இளங்காளைகளும் என்று எத்தகைய களையுடன் இருக்கும் மாலைப் பொழுது!

மலர்ச்சோலைகள்தான் என்றில்லை, மரத்தோட்டங்ள், சாலை ஓரங்கள், நதிக்கரைகள், குளக்கரைகள் மற்றும் விடுகளுக்குள்ளேயும் கூட உற்சாகத்தைக் கொண்டு வரும் பொழுதல்லவா மாலை!

என்னதான் நாள் முழுவதும் காதலரின் நினைவில் களிப்பாக இருந்தாலும், மாலைப் பொழுது அளிக்கும் இன்பம் தனிச் சுவை கொண்டதுதான். அவ்வாறு சிறப்பாக இன்பமளிக்க வேண்டுமென்று மாலைப் பொழுது இறைவனிடம் வரம் வாங்கிக் கொண்டு வந்திருக்கும் போலும்!.

சட்டென்று தலையை உலுக்கிக் கொண்டாள் கண்மணி.

'இதென்ன, இப்போது மாலைப் பொழுதைப் பற்றிய நினைவு - கடும் கோடையில் வசந்த காலத்தின் இனிமையைப் பற்றி நினைப்பது போல்? இப்போதெல்லாம்தான் மாலைப் பொழுது என்ற ஒன்று வருவதே இல்லையே!

மாலைப் பொழுதைப் பார்த்தே மாதங்கள் பல ஆகி விட்டன.

அவள் கணவன் அவளைப் பிரிந்து வெளியூர் செல்வதற்கு முதல் நாள் அவளுடன் இனிமையாகப் பேசிக் கொண்டிருந்தானே, அந்த நாளுக்குப் பிறகு, அவள் மாலைப் பொழுதையே பார்க்கவில்லேயே!

"கண்மணி. பொழுது சாஞ்சுடுச்சு பாரு. விளக்கேத்தி வை!"

உள்ளிருந்து அம்மாவின் குரல் கேட்டது.

இல்லை, இது மாலைப் பொழுதல்ல. அம்மா தவறாகக் கூறுகிறாள். தினமும் எனக்கு அதிகத் துன்பத்தைக் கொடுக்கும் இந்தப் பொழுதை மாலை என்று எப்படிக் கூற முடியும்?

நான் மட்டுமா? என்போல் காதலனைப் பிரிந்து வாழும் என் தோழிகளும் இந்தப் பொழுதைத் தங்கள் உயிரைக் குடிக்கும் கொடிய பொழுது என்றுதானே கூறுகிறார்கள்?

என் கணவர் என்னை விட்டுப் பிரிந்து சென்றபோது, மாலைப் பொழுதும் அவருடன் சென்று விட்டது. இனி அவர் திரும்பி வரும்போதுதான் மாலையும் வரும்.

இது மாலை அல்ல, மாலை என்ற வேடத்தில் வந்து என்னைத் துன்புறுத்தும் கொலைப் பொழுது.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 123
பொழுது கண்டிரங்கல்
குறள் 1221
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.

பொருள்:
பொழுதே! நீ மாலைக் காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கின்றாய்!

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Monday, July 10, 2023

1220. பரிதாபப்படுகிறேன்!

"ஏற்கெனவே என் பொண்ணு கணவனைப் பிரிஞ்ச துயரத்தில இருக்கா. அது போதாதுன்னு ஊர்ல சில பேர் அவ புருஷனைப் பத்தி அவதூறு பேசறாங்க. என்னால எவ்வளவுதான் தாங்கிக்க முடியும்?"

புலம்பிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள் செங்கமலம்.

"என்னம்மா ஆச்சு? என்ன பேசிக்கறாங்க?" என்றாள் கமலா.

"அது ஒண்ணுமில்லடி. உனக்கு அது தெரிய வேண்டாம்."

"எனக்குத் தெரிய வேண்டாம்னா, ஏன் எது காதுபடப் புலம்பிக்கிட்டே வந்தே? சொல்லும்மா!"

"புதுப் பொண்டாட்டியை விட்டுட்டு வெளியூர் போன புருஷன் இப்படியா மாசக்கணக்கா பொண்டாட்டியைப் பிரிஞ்சு இருப்பான், அவனுக்கு என்ன கல் மனசான்னு பேசிக்கறாங்க."

"அவ்வளவுதானே? நீ அவதூறாப் பேசறாங்கன்னதும், என்னவோ ஏதோன்னு நினைச்சேன்!"

"ஏன், இப்படிப் பேசறவங்க மேல உனக்குக் கோபம் வரலையா?"

"கோபம் வரலைம்மா. பரிதாபம்தான் வருது!"

"பரிதாபமா? எதுக்கு?"

"பின்னே? நான் என் புருஷனை தினம் கனவில பாத்துக்கிட்டு, அவரோட சந்தோஷமாப் பேசிக்கிட்டிருக்கேன். இது புரியாம, என்னைப் பிரிஞ்சு இருக்கார்னு இவங்க என் புருஷன் மேல குற்றம் சாட்டினா, இவங்க யாரும் தன்னோட புருஷனைப் பிரிஞ்சிருந்த காலத்தில, அவரை இவங்க கனவில பார்த்ததில்லேன்னுதானே அர்த்தம்? அந்தக் கொடுப்பினை கூட இல்லாதவங்களைப் பார்த்துப் பரிதாபப்படாம வேற என்ன செய்ய முடியும்?" என்றாள் கமலா.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 122
கனவுநிலை உரைத்தல்
குறள் 1220
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.

பொருள்:
என் காதலர் என்னைப் பிரிந்திருப்பதாக அவரைக் குற்றம் சாட்டுகிறார்களே, இந்த ஊரார், பிரிந்து சென்ற தமது காதலனைக் கனவில் காண்பது கிடையாதோ?

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1219. எனக்கில்லை பிரிவுத் துயர்!

பரிமளாவைப் பார்க்க அவள் தோழி புஷ்பவல்லி வந்தபோது, அவளுடன் நான்கைந்து இளம் பெண்கள் வந்தனர்.

"இவங்கள்ளாம் என் தோழிகள். உன்னைப் பார்க்கணும்னு வந்திருக்காங்க!" என்றாள் புஷ்பவல்லி.

'என்னை எதற்குப் பார்க்கணும்?' என்பது போல் தோழியைப் பார்த்தாள் பரிமளா.

"அஞ்சாறு மாசமா நீ உன் கணவனைப் பிரிஞ்சிருந்தாலும், உன் பிரிவுத் துயரத்தை வெளிக்காட்டாம அமைதியா இருக்க. அதை இவங்ககிட்ட சொல்லி, 'நீங்க மட்டும் ஏன் இப்படித் துயரமா இருக்கீங்கன்னு?' கேட்டேன். அதான் உன்னைப் பாக்கணும்னு சொன்னாங்க. அழைச்சுக்கிட்டு வந்தேன்!" என்றாள் புஷ்பவல்லி.

பரிமளா மௌனமாக இருந்தாள்.

"உன் கணவனைப் பிரிஞ்ச வருத்தம் உனக்கு இல்லையா?" என்றாள் வந்திருந்தவர்களில் ஒருத்தி.

"பிரிஞ்சு இருக்கற வருத்தம் எல்லாருக்கும்தான் இருக்கும். எனக்கு மட்டும் எப்படி இல்லாம இருக்கும்?" என்றாள் பரிமளா.

"உன் பிரிவுத் துயரை நீ வெளியில காட்டிக்காம இருக்கறது பெரிய விஷயம்தான்!" என்றாள் மற்றொரு பெண்.

"பிரிவுத் துயர் இருக்குதான். ஆனா, அவரை அடிக்கடி சந்திக்கறதால, அது அந்த அளவுக்கு என்னை அழுத்தறதில்ல!"

"அடிக்கடி சந்திக்கறியா? எப்படி?" என்றாள் மற்றொரு பெண், வியப்புடன்.

"தினமும் என் கனவில அவர் வராறே! வந்து, என்கிட்ட அன்பாப் பேசறாரே! அந்த மகிழ்ச்சியான அனுபவத்தாலதான், பிரிவுத் துயரோட அழுத்தத்தை என்னால தாங்கிக்க முடியுது!" என்ற பரிமளா, "ஆமாம், உங்களுக்குக் கனவு வரதில்லையா, அல்லது கனவில உங்க காதலர் வரதில்லையா?" என்றாள் அந்தப் பெண்களைப் பார்த்து.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 122
கனவு நிலை உரைத்தல்
குறள் 1219
நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.

பொருள்:
கனவில் காதலரைக் காணாதவர்கள்தான் அவர் நேரில் வந்து காணவில்லையே என்று நொந்து கொள்வர்.

குறள் 1218
அறத்துப்பால்                                                               பொருட்பால்

Sunday, July 9, 2023

1218. காணாமல் போய்க் கிடைத்தவன்!

சாந்தினி கட்டிலில் படுத்துக் கொண்டு மேலே பார்த்துக் கொண்டிருந்தாள். நீண்ட நேரம் அவளுக்கு உறக்கம் வரவில்லை.

எப்போது உறங்கினாள் என்று அவளுக்குத் தெரியாது.

திடீரென்று ஒரு காட்சி தோன்றியது.

மேகவர்ணன் மேலே எங்கிருந்தோ இறங்கி வருகிறான். சாந்தினியின் அருகில் வருகிறான். அவள் தோள்களைப் பற்றுகிறான். பிறகு அவள் தோள்களின் மேல் சாய்ந்து கொள்கிறான்.

பிறகு...

சாந்தினிக்கு எங்கோ பறந்து செல்வது போன்ற உணர்வு ஏற்பட்டது.

அந்த உணர்வு எவ்வளவு நேரம் நீடித்ததென்று தெரியவில்லை, திடீரென்று தன் தோள்களை அழுத்திய சுமை இறங்கி விட்டாற்போல் இருந்தது.

எங்கே மேகவர்ணன்?

அவள் கண்களுக்குப் புலப்படவில்லை.

எங்காவது ஒளிந்து கொண்டிருப்பானோ என்று அவள் யோசித்தபோதே, அவள் கண்கள் திறந்து கொண்டன.

விருட்டென்று படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டாள் சாந்தினி.

இத்தனை நேரம் தன் தோள் மீது சாய்ந்து கொண்டிருந்த காதலன் எங்கே?

சுற்றுமுற்றும் பார்த்த சாந்தினி, திடீரென்று நினைவு வந்தவளாகத் தன் நெஞ்சில் கைவைத்துப் பார்த்தாள்.

உடனே அவள் முகம் மலர்ந்தது. மேகவர்ணன் எங்கேயும் போய் விடவில்லை. அவள் நெஞ்சுக்குள்தான் அமர்ந்திருக்கிறான்.

கூட வந்த குழந்தையைக் காணோமே என்று ஒரு கணம் பதைபதைத்த ஒரு தாய்க்கு, குழந்தை தனக்கு அருகிலேயே இருப்பதைக் கண்டதும் ஏற்படும் நிம்மதி சாந்தினிக்கு ஏற்பட்டது.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 122
கனவுநிலை உரைத்தல்
குறள் 1218
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.

பொருள்:
தூக்கத்தில் கனவில் வந்து என் தோள் மீது சாய்ந்து இன்பம் தந்தவர், நான் கண் விழித்ததும், என் நெஞ்சில் தாவி அமர்ந்து கொண்டார்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Friday, July 7, 2023

1217. அன்புள்ள மன்னவனே, ஆசையில் ஓரு கடிதம்!

"பரிவாதினி! நம்ம முத்துப்பாண்டி உன் புருஷன் இருக்கற ஊருக்குத்தான் போறானாம். உன் புருஷனுக்கு ஏதாவது ஓலை கொடுக்கறதா இருந்தா, அவன்கிட்ட கொடுத்தனுப்பு!" என்றாள் அன்னமயில்.

"வீட்டுக்குத் திரும்பணுங்கற சிந்தனையே இல்லாம, வெளியூரிலேயே உக்காந்திருக்கிற மனுஷனுக்கு நான் என்ன ஓலை அனுப்பறது?" என்றாள் பரிவாதினி, வெறுப்புடன்.

"அப்படின்னா, ஓலை அனுப்பப் போறதில்லையா?"

"இல்ல, இல்ல. ஒரு ஓலை எழுதிக் கொடுக்கறேன் நான் ஒருத்தி இங்கே இருக்கேன்னு அவருக்கு ஞாபகப்படுத்த வேண்டாமா?"

ஓலையையும், எழுத்தாணியையும் எடுத்துக் கொண்டு உட்கார்ந்து என்ன எழுதுவதென்று யோசித்தாள் பரிவாதினி.

இரண்டு மூன்று முறை எழுதி, அடித்து ஓலைகள் கிழிந்ததுதான் மிச்சம். என்ன எழுதுவதென்றே தெரியவில்லை.

அலுப்பில் கண் அயர்ந்து, தூக்கம் வருவது போல் இருந்தது.

தூக்கம்!

ஓலையில் என்ன எழுதுவதென்று பரிவாதினிக்குத் தெரிந்து விட்டது!

உடனே, புதிதாக ஒரு ஓலையை எடுத்து, விறுவிறுவென்று எழுத ஆரம்பித்தாள்:

அன்புள்ளவரே!
எனக்கு தினமும் கனவு வருகிறது, கனவில் நீங்கள் வருகிறீர்கள். என் மீது அன்பு செலுத்துகிறீர்கள். ஆனால், ஒவ்வொரு முறையும் கனவு முடிந்ததும், 'இது கனவுதானா, அவர் உண்மையிலேயே வரவில்லையா?' என்ற உணர்வு எனக்கு அளிக்கும் ஏமாற்றத்தையும், மனவருத்தத்தையும் என்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. எனவே, நான் உங்களுக்கு வைக்கும் வேண்டுகோள் ஒன்றுதான். தயவு செய்து என் கனவில் வந்து என்னை வருத்தாதீர்கள். அடுத்த முறை நான் உங்களைச் சந்திப்பது நனவில் நிகழ்வதாக இருக்கட்டும்.

தாங்கள் தினமும் கனவில் வருவதால் வருந்தும்,

பரிவாதினி

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 122
கனவுநிலைஉரைத்தல்
குறள் 1217
நனவினால் நல்காக் கொடியார் கனவினால்
என்எம்மைப் பீழிப் பது.

பொருள்:
நேரில் வந்து அன்பு செய்யாத இந்தக் கொடிய மனிதர், கனவில் மட்டும் நாளும் வந்து என்னை வருத்துவது ஏன்?

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Thursday, July 6, 2023

1216. நனவு ஏன் வந்தது?

ருக்மிணி சமையலறையில் இருந்தபோது, அங்கே கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்தாள் வசந்தி.

"எங்கேம்மா அவரு?" என்றாள் வசந்தி.

"யாரு? உங்கப்பாவா? வெளியே போயிருக்காரு."

"நான் 'உன் அவரை'க் கேக்கலம்மா. 'என் அவரை'க் கேக்கறேன்."

"ஏண்டி, தூக்கத்திலேந்து முழிச்சுட்டியா, இல்லை தூக்கத்தில நடந்து வந்து கேக்கறியா? உன் புருஷன் வெளியூர் போய் மூணு மாசம் ஆச்சு. காலையில எழுந்து வந்து அவர் எங்கேன்னு கேக்கற?" என்றாள் ருக்மிணி, எரிச்சலுடன்.

"இப்ப இருந்தாரேம்மா! என்னோட இத்தனை நேரம் பேசினாரே அம்மா!" 

"முதல்ல போய் முகத்தைக் கழுவிக்கிட்டு வாடி. தூக்கக் கலக்கம் கலையாம பேசற குழந்தை மாதிரி பேசிக்கிட்டு!"

கண்களைத் தேய்த்துக் கொண்ட வசந்தி, "கனவுதான் போல இருக்கு. ஆனா, நேரில நடக்கற மாதிரியே இருந்தது. எங்கிட்ட எவ்வளவு அன்பாப் பேசினாரு! இந்த நனவுங்கற ஒண்ணு இல்லாம இருந்தா, கனவிலேயே அவரோட ஆனந்தமாப் பேசிக்கிட்டிருப்பேன் இல்ல?" என்றாள், விரக்தியுடன்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 122
கனவுநிலை உரைத்தல்
குறள் 1216
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.

பொருள்:
நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பார்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1215. மகள் புரிந்து கொண்ட தத்துவம்!

"வீட்டில எப்பவும் சோகமா உக்காந்திருக்க. வா, ஆன்மீகச் சொற்பொழிவுக்குப் போயிட்டு வரலாம்" என்று மகளை அழைத்தாள் லட்சுமி.

முதலில் சற்றுத் தயங்கினாலும், பிறகு தாயுடன் சென்றாள் கிரிஜா.

சொற்பொழிவு முடிந்து வீட்டுக்கு வந்ததும், "ஆன்மீகச் சொற்பொழிவுன்னா, ஏதாவது புராணக் கதை சொல்லுவாரு, சுவாரசியமா இருக்கும்னு நினைச்சுக்கிட்டுப் போனா, வெறும் தத்துவத்தைப் பேசி, அலுப்புத் தட்டும்படி பண்ணிட்டாரு. உன்னை வேற அழைச்சுகிட்டுப் போனேனே!" என்றாள் லட்சுமி, சோர்வுடன்.

"ஏம்மா, நல்லாத்தானே சொன்னாரு?" என்றாள் கிரிஜா.

"என்னடி சொல்ற? அவர் சொன்ன தத்துவமெல்லாம் உனக்குப் புடிச்சிருந்ததா?" என்றாள் லட்சுமி, வியப்புடன்.

"புடிச்சுது, புடிக்கலேன்னு இல்லை. அவர் சொன்னதில இருந்த உண்மை புரிஞ்சுது."

"என்ன உண்மையைப் புரிஞ்சுக்கிட்டே?" என்றாள் லட்சுமி, கேலியாக.

"நிலையாமையைப் பத்திப் பேசினாரும்மா. நிலையாமைன்னா என்ன? எது நடந்தாலும், அது அந்தத் தருணத்தில மட்டும்தான் இருக்கும், அப்புறம் அது இருக்காதுன்னுதானே அர்த்தம்?"

"ஆமாம். இதில நீ என்ன புதுசாப் புரிஞ்சுக்கிட்ட?"

"என் புருஷன் என்னோட இருந்தப்ப, நான் சந்தோஷமா இருந்தேன். இப்ப அவர் என்னைப் பிரிஞ்சு, எங்கேயோ தொலைதூத்தில இருக்காரு. இப்ப அவர் என்னோட இல்லாதப்ப, அந்த சந்தோஷம் இல்லை. அது மாதிரி..."

"அது மாதிரி?"

"என் கனவில அவர் வரப்ப, சந்தோஷம் இருக்கு. ஆனா, கனவு முடிஞ்சு, கண் முழிச்சப்பறம், அந்த சந்தோஷம் இல்ல. அதாவது, அவர் என்னோட இருந்தப்ப எனக்கு இருந்த சந்தோஷம் அந்த சமயத்தில மட்டுமே இருந்த மாதிரி, கனவில அவர் வரப்ப கிடைக்கற சந்தோஷமும் கனவு காணும்போது மட்டும்தான் இருக்கு! இதைத்தானே அம்மா, வாழ்க்கையில நடக்கறது எல்லாமே நீர்க்குமிழி மாதிரி, அந்தச் சமயத்தில மட்டும்தான் இருக்கும்னு அந்தச் சொற்பொழிவாளர் சொன்னாரு?"

மகள் இதைப் புரிந்து சொல்கிறாளா, அல்லது விரக்தியில் சொல்கிறாளா என்று புரிந்து கொள்ளும் முயற்சியில் கிரிஜாவின் முகத்தை உற்றுப் பார்த்தாள் லட்சுமி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 122
கனவுநிலை உரைத்தல்
குறள் 1215
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.

பொருள்:
முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்‌பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Wednesday, July 5, 2023

1214. கன்னத்தில் விழுந்த அறை!

மீராவைத் தூக்கத்திலிருந்து எழுப்ப முயன்றாள் அவள் அம்மா காமாட்சி.

எவ்வளவோ கூப்பிட்டும் மீரா எழுந்திருக்காததால், அவளைப் பிடித்து உலுக்கினாள் காமாட்சி.

கண் விழித்து எழுந்த மீரா, எதிர்பாராத விதமாகக் காமாட்சியின் கன்னத்தில் அறைந்து விட்டாள்.

அதிர்ச்சியடைந்த காமாட்சி, கன்னத்தைப் பிடித்துக் கொண்டு, "என்னடி இது? நான் உன் அம்மா. இப்படியா என்னை அடிப்பே?" என்றாள் சற்றுக் கோபத்துடன்.

அப்போதுதான் கண்களைக் கசக்கிக் கொண்டு இயல்பு நிலைக்கு வந்த மீரா, தான் அறைந்த அம்மாவின் கன்னத்தை வருடி, "மன்னிச்சுக்கம்மா! நல்லா தூங்கிக்கிட்டு இருக்கறப்ப என்னை உலுக்கி எழுப்பினதால, என்னை அறியாம கோபம் வந்து அடிச்சுட்டேன்!" என்றாள்.

"நல்லா அடிப்பேடி!" என்ற காமாட்சி, "உன் புருஷன் உங்கிட்ட கோவிச்சுக்கிட்டு உன்னை வீட்டை விட்டு அனுப்பினதிலேந்து நீ இப்படித்தான் இருக்கே. அவன் எப்ப கோபம் தணிஞ்சு உன்னை அழைச்சுக்கிட்டுப் போகப் போறானோ!" என்றாள், பெருமூச்சுடன்.

'நேரில எங்கிட்ட அன்பு செலுத்தாத மனுஷன், இன்னிக்குக் கனவில வந்து எங்கிட்ட அன்பு காட்டினாரு. என்னைத் தூக்கத்திலேந்து எழுப்பி, அந்த சுகமான கனவைப் பாதியில கலைச்சுட்டியே! அந்த ஆத்திரத்திலதானே என்னை அறியாமலேயே உன்னை அறைஞ்சுட்டேன்!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் மீரா.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 122
கனவுநிலை உரைத்தல்
குறள் 1214
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.

பொருள்:
நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டு வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Tuesday, July 4, 2023

1213. கனவில் வருபவன்

"என்னைக் காதலிக்கறதா சொன்னாரு. கல்யணம் பண்ணிப்பேன்னு கையிலஅடிச்சு சத்தியம் பண்ணினாரு. ஆனா, இப்ப ஆறு மாசமா அவரைக் கண்ணிலேயே காணல!" என்றாள் கார்த்திகா.

"எங்கே போயிட்டாரு? விசாரிச்சுப் பாத்தியா?" என்றாள் அவள் தோழி ராகினி.

"அவங்க வீட்டிலேயே கேட்டுட்டேன். அவங்களுக்கு எங்க காதலைப் பத்தித் தெரியுமே! நண்பர்களோட ஏதோ வெளிநாட்டுக்குப் போயிருக்காராம். எப்ப வருவார்னு அவங்களுக்கே தெரியாதுன்னு சொல்றாங்க!"

"எதுக்கு வெளிநாட்டுப் பயணம்?"

"அவர் அப்பா நிறையப் பணம் சம்பாதிச்சு வச்சிருக்காரு. அதை வச்சுக்கிட்டுக் கொஞ்ச நாள் எங்கேயாவது உல்லாசமாப் போகலாம்னு போயிருப்பார் போல இருக்கு!"

"சரி. அவர் வரப்ப வரட்டும். அதுக்காக நீ சாப்பிடாம, தூங்காம இருந்து உடம்பைக் கெடுத்துக்காதே!" என்றாள் ராகினி.

"சாப்பாடு பிடிக்காதததால, ஒழுங்கா சாப்பிடறது இல்லதான். ஆனா, தூங்காம இருக்க மாட்டேன்!" என்றாள் கார்த்திகா.

"ஆமாம். முழிச்சுக்கிட்டு இருக்கறப்ப எல்லாம் அவரையே நினைச்சுக்கிட்டிருக்கே. தூங்கும்போதாவது எல்லாத்தையும் மறந்துட்டு நிம்மதியா இருக்கலாம்."

"நான் தூங்கறது மறக்கறதுக்காக இல்லடி, நினைக்கறதுக்காக!" என்றாள் கார்த்திகா.

"என்னடி சொல்ற?" என்றாள் ராகினி.

"முழிச்சுக்கிட்டிருக்கறப்ப, அவர் நேரில வரலியே, என் மேலே அன்பு காட்டலியேன்னு வருத்தமாவும், ஏக்கமாவும் இருக்கும். ஆனா, தூங்கினா கனவு வரும். அந்தக் கனவில அவர் வருவாரு. எங்கிட்ட அன்பாப் பேசுவாரு. அதில கிடைக்கிற சந்தோஷத்தினாலதான் நான் உயிரோடயே இருக்கேன்!" என்றாள் கார்த்திகா.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 122
கனவுநிலை உரைத்தல்
குறள் 1213
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.

பொருள்:
நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...