அதிகாரம் 111 - புணர்ச்சி மகிழ்தல் (கூடி இருப்பதில் மகிழ்ச்சி அடைதல்)

திருக்குறள்
காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 111
புணர்ச்சி மகிழ்தல்
(கூடி இருப்பதில் மகிழ்ச்சி அடைதல்)

1101. காதலில் விழுந்தேன்!

வார இறுதி நாட்களில் கோபாலைப் பிடிக்கவே முடியாது. ஹோட்டல், சினிமா என்று எங்காவது போய்க் கொண்டிருப்பான். 

கோபால் நல்ல வேலையில் இருந்து கை நிறையச் சம்பாதித்து வந்ததால், அவன் பெற்றோர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. நேரம் வரும்போது திருமணம் செய்து விட்டால், எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்துக் கொண்டார்கள். 

கோபால் பெரும்பாலும் வெளியில் சுற்றுவது அவன் நண்பன் செந்திலுடன்தான். ஆயினும், எல்லா வார இறுதி நாட்களிலும் கோபாலுடன் வெளியில் சுற்றுவது செந்திலுக்கு சற்று சிரமமாக இருந்தது. 

ஒருபுறம் பொருளாதார ரீதியாக செந்தில் அவ்வளவு வசதியானவன் இல்லை என்பதால், ஹோட்டல், சினிமா என்று ஒவ்வொரு வார இறுதியிலும் கணிசமான தொகையைச் செலவழிப்பது அவனுக்கு ஒரு சுமையாக இருந்தது என்றால், மறுபுறம் இந்தப் பழக்கத்தை அவன் பெற்றோர்கள் ஆதரிக்கவில்லை.

ஆயினும், கோபால் அவனை வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு போய் விடுவான். சில சமயம், செந்தில் வீட்டுக்குச் சென்று, அவன் பெற்றோர்களிடம் பேசிக் கூட செந்திலை அழைத்துச் செல்வான்.

"ஏண்டா இப்படி வெறி பிடிச்ச மாதிரி வாராவாரம் ஹோட்டல், சினிமான்னு சுத்தற" அதுவும் சனி, ஞாயிறு ரெண்டு நாள்ளேயும்! சனியோ, ஞாயிறோ ஒரு நாளைக்கு மட்டும் போனாலாவது பரவாயில்ல!" என்று செந்தில் அவனிடம் பல முறை சொல்லி விட்டான்.

"டேய்! வாழ்க்கையை அனுபவிக்கணும்டா! கடவுள் நமக்கு அஞ்சு புலன்களைக் கொடுத்திருக்கார். அந்த அஞ்சு புலன்களுக்கும் அனுபவ சுகத்தை நாம கொடுக்க வேண்டாமா? நல்ல தியேட்டருக்குப் போனா, படம் பாக்கறது கண்ணுக்கும், காதுக்கும் விருந்து, ஏசியோட இதமான குளிரும், சொகுசான சீட்டில இஷ்டப்படி சாஞ்சுக்கிட்டு உக்காந்துக்கறதும் உடம்புக்கு சுகம், ஏசி தியேட்டர்ல போடற பர்ஃப்யூமோட மணம் மூக்குக்கு சுகம், நல்ல ஹோட்டல்ல ருசியா சாப்பிடறது நாக்குக்கு சுகம். இதாண்டா வாழ்க்கையை அனுபவிச்சு வாழற வழி!" என்பான் கோபால்.

"சரியான ரசிகன்தாண்டா நீ?" என்பான் கோபால்.

 ரண்டு மூன்று வாரங்களாக, செந்திலால் கோபாலைப் பார்க்க முடியவில்லை. ஒரு வாரஇறுதியில், கோபால் தன் வீட்டுக்கு வருவான் என்று எதிர்பார்த்திருந்த செந்தில், அவன் வராததால் ஏமாற்றமடைந்தான்.

திங்கட்கிழமையன்று, செந்தில் கோபாலுக்கு ஃபோன் செய்து கேட்டபோது, ஏதோ முக்கியமான வேலை இருந்ததாகச் சொன்னான் கோபால்.

அடுத்த வாரஇறுதியிலும் கோபால் வரவில்லை. செந்தில் ஃபோன் செய்தபோது, கோபால் ஃபோனை எடுக்கவில்லை. 

முன்றாவது வாரஇறுதியில், செந்தில் கோபால் வீட்டுக்குப் போய்ப் பார்த்தான்.

"அவன் காலையிலேயே கிளம்பிப் போயிட்டானே! உன்னோடதான் எங்கேயோ போறான்னு நினைச்சேன்" என்றாள் கோபாலின் தாய்.

செந்தில் ஏமாற்றத்துடன் வீட்டுக்குத் திரும்பினான்.

அன்று இரவு, கோபால் செந்திலுக்கு ஃபோன் செய்தான். "வீட்டுக்கு வந்திருந்தியாமே? சாரிடா! உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். நாளைக்குக் காலையில நானே உன் வீட்டுக்கு வரேன்" என்றான்.

றுநாள் செந்தில் வீட்டுக்கு வந்த கோபால், அறைக்குள் இருவரும் தனிமையில் இருந்தபோது, "உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்டா! நான் ஒரு பெண்ணைக் காதலிக்கறேன்!" என்றான்.

"அடப்பாவி! எத்தனை நாளாடா?"

"ஒரு மாசமாத்தான்!"

"அதான் மூணு வாரமா வீக் எண்ட்ல என்னைக் கூப்பிடறதில்லையா? எனக்கு டிமிக்கி கொடுத்துட்டு, அவளோட சுத்தறியாக்கும்! எங்கிட்ட சொல்லியிருக்கலாம்ல? நான் உன்னை எதிர்பாத்து ஏமாறாம இருந்திருப்பேன்!" என்றான் செந்தில், குற்றம் சொல்வது போல்.

"சாரிடா! இதையெல்லாம் உடனே சொல்ல முடியுமா? முதல்ல நான் அதை உறுதிப்படுத்திக்கணும் இல்ல?"

"அதான் மூணு வாரமா அவளோட சுத்தறியே, இன்னும் என்ன உறுதிப்படுத்திக்கறது?" என்ற செந்தில், "அவளோடயும் சினிமா, ஹோட்டல்னுதானே சுத்தற? மால்ல பர்ச்சேஸ் எல்லாம் கூட இருக்குமே!" என்றான்.

"அதெல்லாம் இல்ல. அவளுக்கு தியேட்டருக்குப் போறது, ஹோட்டலுக்குப் போறதிலேல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல. கோவில், பார்க், மியூசியம், ஜூ, பீச்  இது மாதிரி இடங்களுக்குப் போகத்தான் அவளுக்கு விருப்பம். அதனால, இங்கெல்லாம்தான் போனோம். ஐயா சினிமா பாத்தே மூணு வாரம் ஆச்சு, தெரியுமா!" என்றான் கோபால், சிரிப்புடன்.

"ஐம்புலன்களாலேயும் இன்பங்களை அனுபவிக்கணும்னு சொல்லுவியே? அதெல்லாம் இப்ப போச்சா?" என்றான் செந்தில், கேலியாக.

ஒரு நிமிடம் மௌனமாக இருந்த கோபால், "இல்லடா! ஐம்புலன்களுக்கான இன்பமும் அவ கிட்டயே இருக்குடா! அவள் முகத்தைப் பாக்கறதும், அவ பேச்சையும், அவள் வளையல் சத்தத்தையும் கேக்கறதும், அவ கையைப் பிடிச்சுக்கிட்டு நடக்கறதும், அவ தலையில இருக்கற பூவோட நறுமணத்தை அனுபவிக்கறதும், அப்புறம் எப்பவாவது..." என்று இழுத்தான் 

"புரியுது, புரியுது! முத்தக்காட்சியெல்லாம் சென்சார்ல கட்!" என்றான் செந்தில், சிரித்தபடி.

"எப்பவாவது ஒரே தின்பண்டத்தை ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடறதும்ன்னு சொல்ல வந்தேன்!" என்றான் கோபால். 

குறள் 1101
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

பொருள்:
கண்டும், கேட்டும், உண்டும், முகர்ந்தும், உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களின் இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடமே உள்ளன.

1102.  குருராஜனுக்கு வந்த நோய்

"என்னடா ஒரு மாதிரி இருக்கே? உடம்பு சரியில்லையா என்ன?"

கடந்த சில நாட்களாக குருராஜனைப் பார்த்துப் பலரும் கேட்கும் கேள்வி இது.

"இல்லையே! நல்லாத்தானே இருக்கேன்!" என்று குருராஜன் பதில் சொன்னாலும், தன்னிடம் ஒருசோர்வு இருப்பதை அவன் உணர்ந்துதான் இருந்தான். 

மருத்துவரிடம் சென்றான். அவர் அவனைப் பரிசோதித்து விட்டு, "உடம்பில ஒண்ணும் பிரச்னை இல்ல. நல்லாத்தான் இருக்கீங்க. ரெண்டு நாள் எங்கேயாவது வெளியூர் போயிட்டு வாங்க. சில சமயம் சின்ன இட  மாறுதல், சூழ்நிலை மாறுதல் உடம்புக்கும் மனசுக்கும் ஒரு சக்தியைக் கொடுக்கும்" என்றார்.  

ஒரு கிராமத்திலிருந்த அவன் நண்பன் ஒருவன், நீண்ட நாட்களாக குருராஜனைத் தன் ஊருக்கு வரும்படி அழைத்துக் கொண்டிருந்தான். மருத்துவரின் யோசனையைச் செயல்படுத்தும் விதமாக, நண்பனின் கிராமத்துக்குச் சென்றான் குருராஜன்.

கிராம சூழ்நிலை ரம்மியமாகத்தான் இருந்தது. நண்பனோடு இருந்ததும் மனதுக்கு உற்சாகமாகத்தான் இருந்தது. ஆயினும், அப்போதும் குருராஜன் சோர்வை உணர்ந்து கொண்டிருந்தான்.

நண்பன் கூட, "ஏண்டா ஒரு மாதிரி இருக்க? உடம்பு சரியில்லையா? எங்க ஊர்ல ஒரு நாட்டு வைத்தியர் இருக்காரு. அவரு நாடியைப் பாத்தே என்ன பிரச்னைன்னு சொல்லிடுவாரு" என்றான்.

நாட்டு வைத்தியரிடம் சென்றார்கள். அவர் நாடியைப் பார்த்து விட்டு,  "நாடி எல்லாம் நல்லாத்தான் இருக்கு. பட்டணத்துத் தம்பிக்கு கிராம வாழ்க்கை சலிப்பா இருக்கலாம். ஊருக்குப் போனவுடனே சரியாயிடும்!" என்றார் அவர்.

குருராஜனுக்கு சிரிப்புத்தான் வந்தது.

கிராமத்திலிருந்து ஊருக்குத் திரும்பிய பிறகும், குருராஜனின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. மருத்துவர்களால் கூடக் கண்டு பிடிக்க முடியாத பெரிய நோய் தனக்கு வந்திருக்குமோ என்ற அச்சம் குருராஜனுக்கு ஏற்பட்டது. 

ஒரு நாள் இரவு தூக்கம் பிடிக்காமல் யோசித்துக் கொண்டிருந்தபோது, அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. இத்தனை நாட்களாகத் தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோமோ என்று நினைத்தான்.

அடுத்த நாள் காலை, பஸ் பிடித்துப் பக்கத்து ஊரிலிருந்த அத்தை வீட்டுக்குப் போனான் குருராஜன்.

"என்னடா? இத்தனை நாளா, இந்த அத்தை இருக்கறதையே மறந்துட்டேன்னு  நெனச்சேன். திடீர்னு ஒரு நாள் வந்து நின்ன. ஒரு மாசம் கழிச்சு இப்ப மறுபடி வந்திருக்க. அத்தை மேல இப்பதான் பாசம் வர ஆரம்பிச்சிருக்கா உனக்கு?" என்றாள் அத்தை.

"என்ன அத்தை இது? சின்ன வயசிலேயே, என் அம்மா போயிட்டாங்க. இப்ப அப்பாவும் போயிட்டாரு. எனக்கு இருக்கற உறவு நீ மட்டும்தானே!" என்றான் குருராஜன்.

"உன் அப்பா போய் அஞ்சு வருஷம் ஆச்சு. இப்பதான் உனக்கு இது தோணிச்சாக்கும்!" என்றாள் அத்தை. 

சாப்பாட்டுக்குப் பிறகு, ஒரு குட்டித் தூக்கம் போடுவதற்காக, அத்தை உள்ளறைக்குப் போய் விட்டாள்.

தாழ்வாரத்தில் அவன் தனியே அமர்ந்திருந்தபோது, அத்தை பெண் வனஜா அங்கே வந்தாள். அவனுக்குப் பின்னே வந்து நின்று, அவன் தோளைத் தொட்டாள்.

வனஜாவின் ஸ்பரிசம் குருராஜின் உடலில் சிலீரென்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியது. திரும்பி அவளைப் பார்த்தான். 

"என்ன வனஜா! உன்னைப் பாக்கத்தான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன். இத்தனை நேரம் உன்னைக் கண்ணிலேயே காணோம்?" என்றான் குருராஜன்.

"ம்? நீ என்னைப் பாக்கவா வந்தே? உன் அத்தையைப் பாக்கத்தானே வந்தே?" என்றாள் வனஜா, குறும்பாகச் சிரித்தபடி.

"சொல்ல மாட்ட? உன்னைச் சின்னப் பொண்ணாதான் பாத்திருக்கேன். ரொம்ப நாள் கழிச்சு, அத்தையைப் பாக்க போன மாசம் வந்தப்பத்தான், முதல் தடவையா, உன்னைப் பெரிய பொண்ணாப் பாத்தேன். அப்ப உன்னைப் பாத்துப் பேசிட்டுப் போனப்பறம், இந்த ஒரு மாசமா, என் உடம்பும் மனசும் ஒரு மாதிரி ஆயிடுச்சு. பாக்கறவங்கள்ளாம் உனக்கு என்னடா ஆச்சுங்கறாங்க. சரி, மறுபடி உன்னைப் பாத்துப் பேசினாத்தான் சரியாப் போகும்னு நெனச்சு, ஆசையா ஓடி வந்திருக்கேன். அத்தையைப் பாக்கத்தானே வந்தேன்னு சொல்லிக் காட்டற?" என்றான் குருராஜன், பொய்க் கோபத்துடன். 

அதற்குப் பிறகு, இருவரும் ஒருவர் கையை மற்றவர் பற்றியபடி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். 

குறள் 1102
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.

பொருள்:
நோய்களுக்கு மருந்து வேறு பொருட்களாக இருக்கின்றன. ஆனால் அணிகலன் அணிந்த இவளால் விளைந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கிறாள்.

1103. தோள் கண்டேன் தோளே கண்டேன்!

அங்கே போவது விப்ரநாராயணர்தானே?" 

"ஆமாம். அவரேதான்." 

"ஆஹா! என்ன ஒரு இறை பக்தி! ஒரு குடலை நிறையப் பூக்களுடன் கிளம்பி விட்டாரே, அரங்கன் ஆலயத்துக்கு!"

"அவர் செல்வது அரங்கன் ஆலயத்துக்கல்ல! அரங்கன் ஆலயத்துக்குச் செல்வதென்றால், காலைப்பொழுதில்தானே பூக்களைப் பறித்து மாலையாகக் கட்டி எடுத்துச் செல்வார்? இது போல் இருட்டும் நேரத்திலா செல்வார்?"

"ஆமாம். உண்மைதான். பின்னே, வேறு எங்கு போகிறார்?"

"அவர் அரங்கனை மறந்துப் பல மாதங்கள் ஆகி விட்டன. இப்போது, தன்  குடிலையே தேவதேவியின் ஆலயமாக அல்லவா மாற்றி விட்டார் விப்ரநாராயணர்! இப்போது அவர் பூக்களை எடுத்துச் செல்வது அவருடைய அன்புக்குரிய தேவிக்குத்தான்!"

"அடப்பாவமே! அரங்கனின் அடியே கதி என்று இருந்தவர், இன்று ஒரு அணங்கின் மடியே கதியென்று கிடக்கிறார் என்று சொல்லுங்கள்!"

"பொழுது விடிந்து விட்டது அன்பரே, எழுங்கள்!" என்றாள் தேவதேவி.

"என்னால் முடியாது. நீ வேண்டுமானால் எழுந்து செல்!" என்றார் விப்ரநாராயணர்.

"ம்? நான் எப்படி எழுந்திருப்பது? என் தோளில் அல்லவா தாங்கள் தலை வைத்துப் படுத்திருக்கிறீர்கள், ஆதிசேஷன் மீது படுத்திருக்கும் அரங்கன் போல்!" 

விப்ரநாராயணர் சட்டென்று எழுந்து கொண்டார்.

"என்ன பிரபு, ஏன் எழுந்து விட்டீர்கள்?"

"நீ அரங்கன் பெயரைச் சொன்னதும், கொஞ்சம் அதிர்ந்து விட்டேன். அரங்கனை தரிசித்துப் பல வாரங்கள் ஆகி விட்டனவே!" என்றார் விப்ரநாராயணர்.

"அரங்கனை தரிசிக்க இப்போது கிளம்பிச் செல்லப் போகிறீர்களா?" என்றாள் தேவதேவி, எழுந்து அமர்ந்தபடி.

"இல்லை" என்ற விப்ரநாராயணர், தேவதேவியின் தோள்களைப் பிடித்து அழுத்தி, அவளை மஞ்சத்தில் தள்ளி, அவள் தோள்களில் மீண்டும் தலை வைத்துப் படுத்துக் கொண்டார். "உன் தோள்களில் சாய்ந்து உறங்குவதை விட, ஆதிசேஷனின் மீது பள்ளி கொண்டிருக்கும் தாமரைக்கண் கொண்ட அந்த அரங்கனின் உலகம் இனிமையானதா என்ன?" என்று சொல்லி விட்டுக் கண்களை மூடி, மீண்டும் உறங்கத் தலைப்பட்டார்.

"அடப்பாவி மனிதரே!" என்று நினைத்த தேவதேவி, "அரங்கநாதா! என்னிடம் பித்துக் கொண்டு, உன்னையே மறந்து விட்ட உன் பக்தருக்கு நீதான் அருள் புரிய வேண்டும்!" என்று வேண்டிக் கொண்டாள்.

அவள் வேண்டுதலுக்குச் செவி சாய்த்தது போல், அரங்கனின் ஆலய மணி ஒலித்தது. 

விப்ரநாராயணரின் மீது திருட்டுப் பட்டம் விழ வைத்து, அவரை ஆட்கொண்டு, மீண்டும் தன் பக்தராக்கித் தன் மீது திருமாலை என்ற பாமாலையும், திருப்பள்ளி எழுச்சி என்ற சுப்ரபாதமும் பாடி, தொண்டரடிப் பொடி ஆழ்வார் என்ற பெயர் பெற்று, வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் புகழ் பெற்றவராக ஆக்க அரங்கன் போட்டிருக்கும் திட்டம்  துவங்கப் போவதன் அறிவிப்புதான் அந்த மணி என்பதை தேவதேவி அப்போது அறிந்திருக்கவில்லை!   

குறள் 1103
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.

பொருள்:
தான் விரும்பும் காதலியின் மெல்லிய தோளில் சாய்ந்து துயில்வதை விட தாமரைக் கண்ணனின் உலகம் இனிமையானதா என்ன?

1104. வெப்பநிலை மாறுதல்!

"ஏண்டா இப்படிப் படுத்தற? இது டிசம்பர் மாசம். அதுவும், இந்த வருஷம் குளிர் அதிகமா இருக்கு. நான் ஃபேனே வேண்டாம்னுட்டு போத்திக்கிட்டுப் படுத்திருக்கேன். நீ என்னடான்னா, ஏசி போடணும்னு பிடிவாதம் பிடிக்கற? ஏசி போட்டா, நான் வெளியில போய்தான் படுத்துக்கணும்" என்றான் நிகில்.

"போய்ப் படுத்துக்க!" என்றான் கார்த்திக்.

"டேய்! இது என் வீடுடா!"

"இருந்தா என்ன? நான் உன்னோட கெஸ்ட். கெஸ்ட்டோட வசதிக்கு முன்னுரிமை கொடுக்கறதுதானே பண்பாடு?"

"வசதிக்கு முன்னுரிமை கொடுக்கலாம்டா. பைத்தியக்காரத்தனத்துக்கு முன்னுரிமை கொடுக்க முடியாது! நீ வேணும்னா கொஞ்சம் வெளியில போய்த் தெருவில நடந்து பாத்துட்டு வா. யார் வீட்டிலேயாவது ஏசி ஓடுதான்னு பாரு!" என்றான் நிகில்.

"டேய்! எனக்கு உடம்பு வேகுது, ஏசி போடுன்னு கேட்டா மத்தவங்க வீட்டில எல்லாம் ஏசி ஓடுதான்னு பாக்கச் சொல்ற?" என்றான் கார்த்திக்.

"நேத்து ராத்திரி ஃபேன் கூட வேண்டாம், குளிருதுன்னு சொன்னே! இன்னிக்கு என்ன ஆச்சு உனக்கு? உடம்பு சரியில்லையா? மத்தியானம் எங்கேயோ போயிட்டு வந்ததில, உனக்கு ஏதோ ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன். எங்கே போயிட்டு வந்தே?" 

"அதெல்லாம் சொல்ல முடியாது!" என்றான் கார்த்திக்.

ன்று பிற்பகல் நடந்த விஷயம் அவன் நினைவில் ஓடியது. 

கல்லூரி விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த அவன் மாமா பெண் கமலி, விடுமுறையில் அவள் வீட்டுக்கு வந்திருக்கிறாள் என்று தெரிந்து, அவளைப் பார்க்க, அவள் வீட்டுக்குச் சென்றான் கார்த்திக். 

மாமா வீட்டில், கமலியின் அறையில், அவளிடம் ஒரு மணி நேரம் தனியே பேசச் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்வது என்று இருவரின் பெற்றோர்களும் முன்பே நிச்சயித்து விட்டதால், அவன் கமலியுடன் தனியே பேசுவதை அவள் பெற்றோர் அனுமதித்தார்கள். 

கமலியின் அறை மாடியில் இருந்தது. அதற்கு மேல் மொட்டை மாடி என்பதால், மாடியறையில் வெப்பம் அதிகமாக இருந்தது. டிசம்பர் மாதம் என்றால் கூட, சென்னையைப் பொருத்தவரை, பகல் வேளைகள் எப்போதுமே கோடைதானே! கமலியின் அறையில் ஏசி இருந்தது. ஆனால், அது வேலை செய்யவில்லை. எனவே ஃபேன் ஓடிக் கொண்டிருந்தது.

கமலியிடம் பேசிக் கொண்டிருந்த கார்த்திக், சற்று நேரத்துக்குப் பின், அவளிடம், "கமலி! குளிருதே! ஃபேனை அணைச்சுடறியா?" என்றான். 

"குளிருதா? ஃபேன் ஓடறப்பவே, எனக்கு ஒரே சூடா இருக்கு. உனக்கு ஜுரமா என்ன?" என்றாள் கமலி.

"இல்ல, முதல்ல எனக்கும் சூடாத்தான் இருந்தது. ஆனா, உன் பக்கத்தில உக்காந்து பேசிக்கிட்டிருக்கச்சே, சூடெல்லாம் போய் குளிர ஆரம்பிச்சுடுச்சு!" என்றான் கார்த்திக்.

கமலி அவனை முறைத்தாள், ஆனால், ஃபேனை அணைக்கவில்லை. அவளுடன் பேசிக் கொண்டிருந்த மீதி நேரமும், கார்த்திக்கிற்கு உடல் குளிருவதாகத்தான் தோன்றியது.

'குளிருகிறது, ஃபேனை அணை என்றால் கமலி கேட்கவில்லை. இப்போது என்னவென்றால், சூடாக இருக்கிறது ஏசி போடு என்றால், நண்பன் முடியாது என்கிறான்! என்ன ஆயிற்று இவர்களுக்கு?' என்று நினைத்துக் கொண்டான் கார்த்திக்.
 
குறள் 1104
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.

பொருள்:
நீங்கினால் சுடுகிறது, நெருங்கினால் குளிர்ச்சியாக இருக்கிறது. இத்தகைய புதுவிதமான தீயை இவள் எங்கிருந்து பெற்றாள்?

1105. மகிழ்ச்சி அளிக்கும் விஷயங்கள்!!

''இன்னிக்கு என்ன கதை சொல்லப் போற?' என்றாள் விமலா.

''அதான், நீ கதை சொல்லி முடிச்சுட்டியே!'' என்றான் கணேஷ்.

''அது நாம ரெண்டு பேரும் சேர்ந்து படிச்ச கதை. எப்பவும், அந்தக் கதை முடிஞ்சதும், நீ ஒரு கதை சொல்லுவியே, அதைக் கேட்டேன்''

''ஓ, ரொம்ப நேரம் உன் தோள்ள சாஞ்சு புலம்பிட்டு, அப்புறம்தானே எழுந்திருப்பேன், அதைச் சொல்றயா?''

''அதேதான்!'' என்றாள் விமலா.

''என்ன செய்யறது? உன்னை விட்டுப் பிரிய மனசில்லாம, உன் தோள்ள சாஞ்சுக்கிட்டிருப்பேன். உன் தோள் வலிக்கக் கூடாதேங்கறதுக்காக, உங்கிட்ட ஏதாவது பேசிக்கிட்டிருப்பேன். அதைக் கதைன்னு சொல்லிட்டியே!''

''நீ சொல்றதெல்லாம் கேக்க சுவாரசியமா இருக்கும். நீ என் தோள்ள சாஞ்சுக்கிட்டிருக்கற வலியே எனக்குத் தெரியாது. சுவாரசியமா இருக்கறதால, கதைன்னு சொன்னேன். அது தப்பா?'' என்றாள் விமலா.

''தப்பு இல்ல. ஆனா, இன்னிக்கு நான் சொல்லப் போறது ஒரு உண்மை'' என்றான் கணேஷ்.

''சொல்லு. ஒரு நாளைக்காவது உண்மையைச் சொல்லு!''

''சின்ன வயசில, அடிக்கடி என் அம்மா மடியில போய்ப் படுத்துப்பேன். கொஞ்சம் பெரியவனானப்பறம், என் அம்மா அதை நிறுத்தச் சொன்னாங்க. 'உன் மடியில படுத்துக்கிட்டா எனக்கு சந்தோஷமா இருக்கும்மா'ன்னு சொன்னேன். 'நீ பெரியவனாயிட்ட. இனிமே, என் மடியில படுத்துக்க முடியாது. உனக்கு சந்தோஷமா இருக்கற வேற விஷயத்தைக் கண்டுபிடின்னு சொன்னாங்க. அப்புறம், என் தாத்தாவையோ, பாட்டியையோ கதை சொல்லச் சொல்லிக் கேப்பேன். அது சந்தோஷமா இருந்தது. அப்புறம், நான் வளர வளர, நண்பர்கள்கிட்ட பேசறது, விளையாடறது, புத்தகம் படிக்கிறதுன்னு எனக்கு சந்தோஷம் கொடுக்கற பல விஷயங்களைக் கண்டுபிடிச்சேன். இப்ப...''

''இப்ப?"

'இப்பல்லாம் எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கறது உன்னோட தோள்கள்தான்!' என்ற கணேஷ், அவள் தோள்களிலிருந்து தலையை எடுத்து, திரும்பி அவள் முகத்தைப் பார்த்தான். அவள் நீண்ட கூந்தலில் சூடியிருந்த மல்லிகையின் வாசத்தை மூச்சை இழுத்து அனுபவித்தபடியே, ''ஆஹா! என்ன ஒரு மணம்!'' என்றபடியே, அவள் தோள்களை இரு கைகளாலும் அழுத்தினான்.

''அழுத்தாதையா! வலிக்குது. நீ தோள்ள ரொம்ப நேரம் சாஞ்சுக்கிட்டிருந்தப்ப கூட எனக்கு வலிக்கல!'' என்றாள் விமலா.
குறள் 1105
வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.

பொருள்
நமக்கு விருப்பமான பொருள் ஒன்று நாம் விரும்பும்போதெல்லாம் நமக்கு இன்பமளிப்பது போல், மலரணிந்த கூந்தலைக் கொண்ட இவளுடைய தோள்கள் எனக்கு இன்பமளிக்கின்றன.

1106. மூலப்பொருள்!

"எனக்கு என்னவோ கடவுள் உன்னோட உடம்பில ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வோரு பொருள்ளேந்து செஞ்சிருப்பார்னு தோணுது.''

''ஆரம்பிச்சுட்டியா? சரி, சொல்லு!''

''உன் கால்களை வாழைத் தண்டுலேந்து செஞ்சிருக்காரு.''

'''வாழைத் தோட்டம் போட்டது போல் கால்களிரண்டு அதில்
வட்டம் போட்டுத் திரிவதென்ன கண்களிரண்டு' ன்னு அலையற உன் கண்ணையும் சேத்து அன்னிக்கே பாடிட்டார் கண்ணதாசன்.''

'அப்புறம், உன் இடுப்பு இருக்கே அதை உடுக்கையிலேந்து செஞ்சிருப்பாரு.''

''ஐயே! இது நல்லாவா இருக்கு''

''உடுக்கை பாத்திருக்கியா? மேலேயும் கீழேயும் பருமனா, நடுவில மட்டும் குறுகலா. அது மாதிரி உன் குறுகிய இடை, அதுக்கு மேலே...''

''சரி, போதும்.'' 

''அப்புறம், உன் முகம் நிலாவேதான். அதில சின்னதா ரெண்டு குளம் வெட்டி ஒவ்வொண்ணிலேயும் ஒரு மீனை நீஞ்ச விட்ட மாதிரி கண்கள்.''

''அடக் கடவுளே!''

''கடவுள் உன்னை எப்படியெல்லாம் செஞ்சிருக்கார்னு நினைச்சு, நீயே ஆச்சரியப் படறே பாரு.''

''போதும்டா சாமி!'' 

''முக்கியமானதை மட்டும் சொல்லி முடிச்சுடறேன்''

''வேண்டாம். எனக்கு பயமா இருக்கு!''

''நீ நினைக்கிற மாதிரி இல்ல. உன் தோளை எதிலேந்து செஞ்சிருக்கார்னு தெரியுமா?''

''நீ மணிக்கணக்கா என் தோள்ளேயே சாஞ்சுக்கிட்டிருக்கறதைப் பாத்தா, அதை ஏதாவது மரத்திலதான் செஞ்சிருப்பார்னு நீ நினைக்கற போலிருக்கு!''

''நீ பாயின்ட்டுக்கு வந்துட்ட. ஆனா உன் முடிவு தப்பு. நான் ஒரு சேல்ஸ்மேன். தினமும் நுறு பேரைப் பாத்து, எங்க கம்பெனியோட தயாரிப்பை வாங்கிக்கங்கன்னு கெஞ்சிக் கூத்தாடி, பல பேர் கிட்ட விக்க முடியாம தோத்துப் போய், மேலதிகாரிகிட்ட திட்டு வாங்கி, நொந்து போய், உயிரே போன மாதிரி உடம்பும் மனசும் சோர்ந்து போய் வந்து, உன் தோளை அணச்சுக்கிட்டா, போன உயிர் வந்த மாதிரி அப்படி ஒரு தென்பும், புத்துணர்வும் வருது. அமிர்தத்துக்குத்தான் இப்படிப்பட்ட சக்தி இருக்குன்னு சொல்லுவாங்க. அதனால, உன் தோளைக் கடவுள் அமிர்தத்திலேந்துதான் செஞ்சிருக்கணும்.''

அவள் தோளில் தன் தலையை அழுத்தமாக வைத்துச் சாய்ந்து கொண்டான் அவன்.

அவளுக்கு வலிக்கவில்லை!
குறள் 1106
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.

பொருள்
தழுவிக் கொள்ளும்போதெல்லாம் புத்துயிர் அளிப்பது போன்ற உணர்வைத் தருவதால், இவளுடைய தோள்கள் அமிர்தத்தினால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

1107. அது மட்டும் முடியாது!

"எனக்கு பயமா இருக்கு!"

"என்ன பயம்?"

"கல்ணத்துக்கு முன்னால, நாம இவ்வளவு நெருக்கமா இருக்கறது சரிதானான்னு."

"நல்ல வேளை! நான் வேற பயமா இருக்குமோன்னு நினைச்சேன்."

"வேற என்ன பயமா இருக்கும்னு நினைச்சே?"

"வேண்டாம். நான் சொன்னா நீ கோப்பப்படுவ!"

"நீ சொல்லாமலேயே எனக்குப் புரிஞ்சுடுச்சு. நான் கோபமாத்தான் இருக்கேன்."

சற்று நேரம் மௌனம் நிலவியது.

"என் பயத்தை நீ புரிஞ்சுக்கல. நாம இவ்வளவு தூரம் பழகினப்பறம், நம்ப வீட்டில கல்யாணத்துக்கு சம்மதிக்கலேன்னா?"

"சம்மதிச்சா நல்லது. உன் வீட்டிலேயோ, என் வீட்டிலேயோ சம்மதிக்காட்டாலும், நீயும் நானும் கணவன் மனைவியாத்தான் ஆகப் போறோம். அதாவது நீ மனைவி, நான் கணவன்!"

"ரொம்பத்தான் குறும்பு உனக்கு!"

"இல்ல. நீயும் நானும் கணவனும் மனைவியும்னு சொன்னா, வரிசைப்படி நீ முதல்ல வரதால, இலக்கணப்படி நீதான் கணவன்னு ஆயிடும். அதுக்குத்தான் இந்த விளக்கம்!"

"இலக்கண வகுப்பு நடத்தினது போதும்! நம்ம ரெண்டு பேர் வீட்டிலேயும் ஒத்துக்காட்டாலும், நாம கணவன் மனைவின்னு ஆயிடுவோம்னு எப்படி இவ்வளவு உறுதியாச் சொல்ற?"

அவன் ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டான். பிறகு சொன்னான்.

"நான் வீட்டுக்குத் தெரியாம சிகரெட் பிடிக்கறேன். நான் சிகரெட் பிடிக்கறப்ப, என் அப்பாவோ அம்மாவோ வந்துட்டா, சிகரெட்டைக் கீழ போட்டுடுவேன். உன்னைக் காதலிக்கறதும், உன்னோட பழகறதும் திருட்டுத்தனமாத்தான். சிகரெட் பிடிக்கும்போது, யாராவது பாத்துடுவாங்களோன்னு ஒரு பயம் இருக்கும். ஆனா உன்னோட பழகறப்ப, யாராவது பாத்துடுவாங்களோங்கற பயம் எனக்கு இல்லை."

"ஏன் அப்படி?"

"ஏன்னா, உன்னைத் தொட்டுப் பேசறப்பல்லாம், எனக்கு என் வீட்டு சாப்பாட்டை சாப்படற மாதிரி இருக்கு. அதுவும், மத்தவங்களோட சேந்து. அப்ப எப்படி பயம் வரும்?"

"நீ சொல்றது எனக்கு சரியாப் புரியல. ஆனா, ஒண்ணு மட்டும் புரியுது."

"என்ன?"

"எங்க வீட்டில எனக்கு வேற யாரோடயாவது கல்யாணம் நிச்சயம் பண்ணினா, நீ என்னைத் தூக்கிக்கிட்டுப் போய்த் தாலி கட்டிடுவ. அப்படித்தானே?"

"அது மட்டும் என்னால முடியாது!"

"ஏன் முடியாது? இவ்வளவு வீறாப்பாப் பேசின?"

"இவ்வளவு பெரிய உடம்பை என்னால எப்படித் தூக்க முடியும்?"

அவள் கையை ஓங்க, "வேண்டாண்டி! அணைக்க வேண்டிய கையால என்னை அடிக்காதே! உன் கை வேகமா என் முதுகில வந்து விழுந்தா, அந்தக் கையோட எடையை என் முதுகு தாங்காது!" என்று சொல்லி, அவள் கையைப் பிடித்துக் கொண்டான் அவன்.  
குறள் 1107
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.

பொருள்
மாநிறம் கொண்ட இந்தப் பெண்ணைத் தழுவிக் கொள்வது, நம் வீட்டில் இருந்து கொண்டு, நாம் ஈட்டிய பொருளை, நமக்கு நெருக்கமானவர்களுடன் பகிர்ந்து உண்பதைப் போன்றது.

1108. காற்று வெளியிடை!

"காதல்னாலே பல பேர் அதுக்குக் குறுக்கே  வருவாங்க" என்றான் சுந்தர்.

"யாரு பெற்றோர்கள்தானே? நாமதான் நம் பெற்றோர்கள் கிட்ட பேசி, அவங்களை நம் காதலுக்கு சம்மதிக்க வச்சுட்டமே?" என்றாள்  பிரியா. 

"பெற்றோர்கள் மட்டும் இல்ல. சமூகம்  கூட."

"சமூகம்னா?"

"சமூகம்னா, பல பேர். அக்கம் பக்கத்தில இருக்கறவங்க நம்மைப் பத்தி வம்பு  பேசுவாங்க. கிண்டல் பண்ணுவாங்க. அப்புறம், நம் நண்பர்கள், நம்மோட வேலை செய்யறவங்க இது மாதிரி சில பேர் நமக்கு நல்லது செய்யறதா நினைச்சுக்கிட்டு, நமக்கு உபதேசம் பண்ணுவாங்க. காதல் ஒரு மாயைன்னு சொல்லுவாங்க. காதலன் ஏமாத்திடுவான்னு, காதலியோட நண்பர்கள் அவகிட்ட சொல்வாங்க."

"ஆமாம். எங்கிட்ட கூட சில பேர் சொன்னாங்க. ஆனா, நான் அதைப் பொருட்படுத்தல. உன்கிட்டயும் சில பேர் அது மாதிரி சொல்லி இருப்பாங்களே!"

"ஆமாம். இந்தக் காலத்துப் பெண்கள் எல்லாம் ஒரே நேரத்தில பல ஆண்களைக் காதலிப்பாங்கன்னு சொன்னாங்க."

"அதுக்கு நீ என்ன சொன்னே?"

"ஒரே நேரத்தில பல பேரைக் காதலிக்காம, ஒருத்தருக்கப்புறம் இன்னொருத்தர்னு காதலிச்சா பரவாயில்லையான்னு கேட்டேன்!"

"என் காதலி அப்படிப்பட்டவ இல்லேன்னு சொல்லி இருக்க வேண்டாமா?"

"என் காதலி எப்படிப்பட்டவன்னு மத்தவங்ககிட்ட நான் ஏன் சொல்லணும்?"

"அப்புறம் வேற யாரு குறுக்கே வருவாங்க?"

"பார்க்லேயோ, பீச்லேயோ உக்காந்திருந்தா, சில சமயம் யாராவது போலீஸ்காரர் வந்து விசாரிப்பாரு. நல்ல வேளையா, நமக்கு அப்படி நடக்கல!"

"அது சரி. நாமதான் எல்லாத் தடைகளையும் தாண்டி வந்துட்டமே! காதலுக்குக் குறுக்கே வரவங்களைப் பத்தி, இப்ப ஏன் பேசிக்கிட்டிருக்கே?" என்றாள் பிரியா.

"காதலுக்குக் குறுக்கே வரவங்களை சமாளிச்சுட்டோம். இப்ப, காதலர்களான நமக்குக் குறுக்கே வரவங்களை சமாளிக்கணும்!" என்றான் சுந்தர்.

"நமக்குக் குறுக்கே யார் வரப் போறாங்க?"

"வந்துட்டாங்களே!"

"யாரு?"

"காத்துதான். காத்து, தென்றல் மாதிரி இதமா இருந்தாலும், நமக்கு நடுவிலே வீசி, நம்மைப் பிரிக்கிற மாதிரி இருக்கே!"

"அதுக்கென்ன செய்ய முடியும்? காத்தைத் தடுத்து நிறுத்தவா முடியும்?"

"அது முடியாது. அதனால, காத்து புகக் கூட இடைவெளி இல்லாத அளவுக்கு உன்னைத் தழுவிக்கப் போறேன்!" என்று சொல்லி, பிரியாவை இறுக்கமாக அணைத்துக் கொண்டான் சுந்தர்.

"மெதுவா. நீ அழுத்தற அழுத்தத்தில என் எலும்பெல்லாம் உடைஞ்சுடும்  போல இருக்கு" என்றாள் பிரியா.

குறள் 1108
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.

பொருள்
காற்று கூட இருவருக்கும் இடையில் புக முடியாதபடி இறுகத் தழுவிக் கொள்வது, காதலர் இருவருக்கும் மிக இனிமையானதாகும்.

1109. முதுகில் ஒரு தட்டு! 

வத்சலா:
ஆறு மாசத்துக்கு மேல பழகிக்கிட்டிருக்கோம். ஆனா, இந்த சந்திரன் இவ்வளவு மோசமானவனா இருப்பான்னு நான் எதிர்பாக்கவே இல்ல. 

ரெண்டு பேரும் ஒரே கட்டடத்திலதான் வேலை செய்யறோம், ஆனா வெவ்வேறு அலுவலகங்கள்ள. என் அலுவலகம் ஆறாவது மாடி, அவனோடது நாலாவது மாடி. 

ஒருநாள் அவசரமா ஓடி வந்து லிஃப்டில ஏறினான் அவன். அப்ப லிஃப்டில நான் மட்டும்தான் இருந்தேன். அவனைப் பாத்து சிரிச்சேன். அவனும் சிரிச்சான். அப்புறம் ஒருநாள் கேஃப்டீரியால தற்செயலா சந்திச்சோம். அப்பதான் எங்களை அறிமுகப்படுத்திக்கிட்டுப் பேசஆரம்பிச்சோம்.

என்னவோ தெரியல, சட்னு எனக்கு அவனைப் பிடிச்சிடுச்சு. அவனுக்கும் என்னைப் பிடிச்சுடுச்சு. அப்புறம் என்ன, சனி, ஞாயிறெல்லாம் சேர்ந்து சுத்த ஆரம்பிச்சோம். 

போன வாரம்தான் ரெண்டு பேர் வீட்டிலயும். சொல்லிட்டுக் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யச் சொல்லலாம்னு முடிவு செஞ்சோம். 

அதுக்குள்ளே இந்த நிகழ்ச்சி நடந்துடுச்சு.

சந்திரன்:
வத்சலா இவ்வளவு அல்பமா நடந்துப்பான்னு எதிர்பாக்கல. அன்னிக்கு ஒரு ரெஸ்டாரண்ட்ல நாங்க உக்காந்துக்கிட்டிருக்கச்சே, என் மேலதிகாரி சகுந்தலா அங்கே வந்தா. பேருக்குத்தான் அவ மேலதிகாரி. எல்லார்கிட்டயும் நட்போடதான் பழகுவா. அவளை எல்லாரும் சக்குன்னுதான் கூப்பிடணும்னு கட்டளை போட்டிருக்கா.

நாங்க எல்லாரும் வா போன்னுதான் பேசிப்போம். யார் மேலதிகாரி, யாரு கீழ வேலை செய்யறவங்கன்னே கண்டு பிடிக்க முடியாது. அதுதான் எங்க கம்பெனியோட ஒர்க் கல்ச்சர்!

சகுந்தலா என்னைப் பாத்துட்டு, "ஹாய் சந்த்!" என்றவள், வத்சலாவைப் பாத்துட்டு, "யார் இவங்க? காதலியா, இல்லை சும்மா ஃபிரண்ட்தான்னு சொல்லப் போறியா?" என்றாள்.

"இவ வத்சலா. நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு. இவங்க சகுந்தலா, என்னோட பாஸ்" ன்னு ரெண்டு பேரையும் ஒத்தருக்கொருத்தர் அறிமுகப்படுத்தி வச்சேன்.

"சகுந்தலா என்ன? சக்குன்னு சொல்லு. அப்படித்தானே நீ என்னைக் கூப்பிடுவ?" என்றவள், வத்சலாவைப் பார்த்து, "நீ ரொம்ப லக்கி வத்ஸ்! சந்த் ரொம்ப நல்ல பையன்" என்று சொல்லி விட்டு, "என்ஜாய்!" என்று சொல்லி, என் முதுகில தட்டிட்டுப் போனா.

அவ அங்கேந்து போனதுமே, வத்சலா என்னைப் பிடி பிடின்னு பிடிக்க ஆரம்பிச்சுட்டா. "யாரு இவ? உன்னை செல்லமா சந்த்னு கூப்பிடறா? முதுகிலே வேற தட்டறா!" என்றாள், கோபத்துடன்.

"அவ அப்படித்தான்! உன்னைக் கூட வத்ஸ்னு கூப்பிட்டா பாரு!" என்றேன் நான்.

"அது வேற! முதல்ல பாக்கற ஒத்தரை வா போன்னு கூப்பிடறது, பேரைச் சுருக்கிக் கூப்பிடறது இதெல்லாம் என்ன மானர்ஸ்?" என்று பொரிந்து தள்ளினாள் வத்சலா.

"அவ அப்படித்தான் வத்சலா. நீ எனக்கு மனைவியாப் போறவன்னு கொஞ்சம் உரிமை எடுத்துக்கிட்டிருப்பா!" என்றேன் நான். உண்மை அதுதானே?

"நீ அவளை சக்குன்னு கூப்பிடுவியாமே! அதையும் அவளே சொல்றா? அதுக்கென்ன அர்த்தம்? நீயும் அவளும் நெருக்கமானவங்கன்னு எங்கிட்ட காட்டிக்கறாளா? முதுகிலே வேற தட்டறா! நீயும் பேசாம இருக்க!" என்றாள், கோபம் குறையாமல்.

அப்பதான் எனக்கும் கோபம் வந்து, ஒரு வார்த்தை சொல்லிட்டேன். அதுதான் இந்த முறிவுக்கே காரணமாயிடுச்சு. 

வத்சலா:
அவனோட பாஸ் சக்கு (பேரைப்பாரு! சகுந்தலாங்கற நல்ல பேரை ஏன் இப்படி சுருக்கிக்கணும், கவர்ச்சியா இருக்கணுங்கறதுக்காகவா?) அவன் முதுகிலே தட்டினப்ப, ஏன் சும்மா இருந்தேன்னு நான் கேட்டதுக்கு, சந்திரன், "வேற என்ன செஞ்சிருக்கணும்? பதிலுக்கு நான் செல்லமா அவ கன்னத்தில தட்டி இருக்கணுமா?" ன்னு சொல்றான்.

எனக்கு வந்ததே ஒரு கோபம்! அவளைப் பத்தி மனசில அப்படி ஒரு ஆசை இருந்ததாலதானே, அப்படிச் சொல்லி இருக்கான்? 

"அந்த சக்குவையே கட்டிக்கிட்டு அழு"ன்னு சொல்லிட்டு எழுந்து வந்துட்டேன். அவன் கூப்பிட்டான். நான் காதிலேயே போட்டுக்கல. ரெஸ்டாரண்ட் வாசல்ல நின்னுக்கிட்டிருந்த ஒரு ஆட்டோவில ஏறி வீட்டுக்கு வந்துட்டேன்.

அப்புறம், அவன்கிட்டேந்து நிறைய மெஸேஜ் வந்தது. அதையெல்லாம் படிக்காமயே அழிச்சுட்டேன். நிறைய தடவை கால் பண்ணினான். நான் எடுக்கவே இல்லை. 

ஒரு தடவை, என் அலுவலகத்துக்கு வந்து, என்னைப் பாக்கணும்னு சொல்லி அனுப்பினான். 'இப்ப ஒரு கால்ல இருக்கேன், இப்ப பாக்க முடியாது'ன்னு செக்யூரிட்டிகிட்ட சொல்லி அனுப்பிட்டேன். பக்கத்தில இருந்தவங்கல்லாம் ஒரு மாதிரியாப் பாத்தாங்க. ஏன்னா, அப்ப நான் வேலை எதுவும் இல்லாம சும்மாதான் உக்காந்துக்கிட்டிருந்தேன்!

அப்புறம், அவன்கிட்டேந்து எந்த மெஸேஜோ, ஃபோன்காலோ வரல. விட்டது சனியன்னு நிம்மதியா இருந்தேன்.

சந்திரன்:
விளையாட்டாப் பேசறதா நினைச்சு ஒரு வார்த்தை சொன்னதை அவ தப்பா எடுத்துக்கிட்டு, காதலையே முறிச்சுப்பான்னு நான் எதிர்பாக்கல. விர்ருனு எழுந்து போயிட்டா. 

அதுக்கப்பறம், அவளுக்கு எத்தனையோ மெஸேஜ் அனுப்பியும், கால் பண்ணியும் பாத்தேன். அவ ஃபோனையே எடுக்கல. என் மெஸேஜையெல்லாம் படிச்சிருப்பாளான்னு தெரியல. 

அவ அலுவலகத்துக்குப் போய் அவளைப் பாக்கவும் முயற்சி செஞ்சேன். ஏதோ கால்ல இருக்கறதா சொல்லி, என்னைப் பாக்க மாட்டேன்னுட்டா. அவ பொய்தான் சொல்றான்னு எனக்குத் தெரிஞ்சுது.

அதுக்கப்பறம், எனக்கு ரோஷம் வந்து, நானும் அவளைத் தொடர்பு கொள்ள முயற்சி பண்றதை விட்டுட்டேன். 

வத்சலா:
சந்திரனோட சண்டை போட்டுக்கிட்டுப் பிரிஞ்சு ரெண்டு மாசம் ஆச்சு. இப்ப கொஞ்ச நாளா, மனசில ஏதோ ஒரு வருத்தம். அவனோட பழகின நாட்களை நினைச்சா, எவ்வளவு சந்தோஷமா இருக்கு! எங்கிட்ட எவ்வளவு அன்பா இருந்தான் அவன்! 

இப்ப மட்டும் எங்கிட்ட அவனுக்கு அன்பு இல்லேன்னு சொல்ல முடியுமா? நான்தானே கோவிச்சுக்கிட்டு வந்தேன்? அதுக்கப்புறம் கூட, அவன் எத்தனையோ தடவை என்னைத் தொடர்பு கொள்ள முயற்சி செஞ்சான்! என் அலுவலகத்துக்குக் கூட வந்திருந்தானே!

ஒரு தடவை அவனோட பேசியிருந்தா, எல்லாம் சரியாயிருக்குமோ? ஆனா, அந்த சக்கு விவகாரம்? அதை அவ்வளவு சுலபமா எடுத்துக்க முடியுமா? 

கேஃப்டீரியால உக்காந்து யோசிச்சுக்கிட்டிருக்கச்சே, அங்கே சக்கு வந்தா. அவ கூட நாலஞ்சு பேர் வந்தாங்க. எல்லாரும் ஆண்கள்தான். அவ அலுவலகத்தில வேலை செய்யறவங்களாத்தான் இருக்கும். அவங்கள்ள ஒத்தனோட தோள்ள கையைப் போட்டுப் பேசிக்கிட்டே வந்தா. அவன் அவளோட காதலனா, இல்லை எல்லார்கிட்டயும் அவ அப்படித்தான் நடந்துப்பாளா? 

அவங்க  ஒரு மேஜையைச் சுத்தி  உக்காந்துக்கிட்டாங்க. கொஞ்ச நேரம் அவங்களைப் பாத்துக்கிட்டிருந்தேன். சக்கு அவங்க கையைப் பிடிச்சு அழுத்தறதும், முதுகிலேயோ, தோள்ளயோ தட்டிப் பேசறதையும் பாத்தப்ப, அவ எல்லார்கிட்டயும் அப்படித்தான் நடந்துப்பான்னு புரிஞ்சுது. 

நான்தான் சந்திரன் விஷயத்தில அவசரப்பட்டுட்டேனோன்னு தோணுது.

சந்திரன்:
வத்சலாவைத் தொடர்பு கொள்றதை நிறுத்திட்டாலும், அவளை நினைக்காம இருக்க முடியல. எவ்வளவு அற்புதமான பொண்ணு அவ! ஒரு தடவை அவகிட்ட ஃ போன்ல பேசினாக் கூட சமாதானப்படுத்திடலாம். ஆனா, அவ ஃபோனையே எடுக்க மாட்டேங்கறாளே!

ரெண்டு மாசம் ஆயிடுச்சு. ஒருவேளை, இப்ப அவ மனசு மாறி இருக்கலாம். மறுபடி ஒரு தடவை ஃபோன் பண்ணிப் பாக்கலாமா? 

அவளுக்கு ஃபோன் பண்றதுக்காக போனைக் கையில எடுத்தப்ப, ஃபோன் அடிச்சது.

"ஹாய் சந்த்! ஐ ஆம் சாரி! தப்பு என் மேலதான்!" என்றாள் வத்சலா.
குறள் 1109
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.

பொருள்
 உடல், ஊடலின் காரணத்தைப் புரிந்து கொள்ளுதல், பிறகு இணைதல் ஆகியவை காதல் வாழ்வு நிறைவேறப் பெற்றவர் பெற்ற பயனாகும்.

1110. லதாவின் கவலை! 

லதா முதன் முதலாக சேகரின் வீட்டுக்கு வந்தபோது, அவன் வீட்டில் பல இடங்களிலும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் பார்த்து விட்டு, "என்ன இப்படி வீடு முழுக்க புத்தகங்களைப் போட்டு வச்சிருக்கீங்க? பழைய பேப்பர் கடை மாதிரி இருக்கு!" என்றாள்.  

"என் அம்மா சொல்ற மாதிரியே சொல்றியே!" என்றான் சேகர். "என் வீடு சின்ன வீடுதான். அதில இத்தனை புத்தகங்களை ஒரே இடத்தில வைக்கற மாதிரி இடம் இல்லை. அதனாலதான், நிறைய இடங்கள்ள வச்சிருக்கேன்" என்றான், தொடர்ந்து.

லதாவின் மனதில் மெலிதாக ஒரு கவலை எழுந்தது. 

"ங்க வீட்டுக்கு முதல் தடவையா வந்தப்ப, உங்களைக் கல்யாணம் செஞ்சுக்கணுங்கற என் முடிவு சரிதானான்னு எனக்கு ஒரு கவலை வந்தது" என்றாள் லதா, சேகரின் தலையைக் கோதியபடி.

"ஏன், வீடு ரொம்ப சின்னதா இருக்கேன்னு பாத்தியா?"

"அதைப் பத்தி இல்ல. வீடு பூரா இருந்த புத்தகங்களைப் பாத்து!"

"ஏன்? புத்தகங்கள் எல்லா இடங்களையும் ஆக்கிரமிச்சுக்கறதால, உன்னோட பொருட்களை வைக்க இடம் இருக்காதுன்னு பயந்தியா?"

"இவ்வளவு புத்தகங்கள் படிச்சும் இப்படி மக்கா இருக்கீங்களே!" என்று செல்லமாக சேகரின் தலையில் குட்டினாள் லதா. "'இவரு ஒரு புத்தகப் புழுவா இருப்பாரு போலருக்கே, இவருக்கு என்னை கவனிக்க நேரம் இருக்குமா?'ன்னு கவலைப்பட்டேன்."

"ஆனா, இப்ப?"

"இப்பவா?" என்று அவன் முகத்தைப் பார்த்துக் கையால் பிடித்தபடி சிரித்த லதா, "'என்னைக் கொஞ்சறதைத் தவிர இவருக்கு வேற வேலையே இல்லையா'ன்னு நான் நினைக்கிற அளவுக்கு என்னைத் திணற அடிக்கறீங்க!" என்றாள், சற்றே வெட்கத்துடன். 

"என்னைப் பொருத்தவரையிலும் நீயும் ஒரு புத்தகம்தான். புத்தகங்களைப் படிச்சா அறிவு வளரும்னு சொல்லுவாங்க. ஆனா, நான் ஒரு புத்தகத்தைப் படிச்சா, நமக்குத் தெரியாத விஷயங்கள் இவ்வளவு இருக்கேன்னு பிரமிப்புதான் எனக்கு ஏற்படும். நீ சொன்னியே அது மாதிரி, இதெல்லாம் தெரியாம இப்படி ஒரு மக்கா இருக்கேனேன்னு நினைச்சுப்பேன். இன்னும் நிறையப் படிக்கணும்னு ஆசை வரும். ஒவ்வொரு தடவை உன்னைப் படிக்கறப்பவும், ஒரு புதுப் புத்தகத்தைப் படிக்கிற மாதிரி பிரமிப்பாதான் இருக்கு. திரும்பத் திரும்பப் படிக்கணும் போல இருக்கு. இவகிட்ட இன்னும் எவ்வளவோ இருக்கும் போலருக்கேன்னு நினைக்க நினைக்க, உன் மேல் காதல் அதிகமாகிக்கிட்டேதான் இருக்கு!" என்று சொல்லி, அவளை இறுக அணைத்தான் சேகர். 

குறள் 1110
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.

பொருள்
 செந்நிற அணிகலன்களை அணிந்திருக்கும் இவளோடு கூடும்போது ஏற்படும் காதல், நூல்களை படித்துப் பொருள் அறிய அறிய, அறியாதவற்றை உணர்வது போல் உள்ளது.


அறத்துப்பால்                                                                     பொருட்பால்   

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...