Monday, July 31, 2023

1229. மாலினியின் சாபம்!

மாலை நேரத்தில் தன் வீட்டு வாசலில் வந்து நின்றபோது வழக்கமாக அந்த வேளையில் வரும் சோர்வு மாலினியைப் பற்றிக் கொண்டது. 

அவள் கணவன் அவளைப் பிரிந்து வெளியூர் சென்று விட்ட கடந்த நான்கு மாதங்களாவே இப்படித்தான்.

மாலைப் பொழுதைக் காணவே கூடாது என்று உள்ளே படுத்திருந்தால், "பொழுது சாயற நேரத்தில் வீட்டுக்குள்ளே படுத்துக் கிடந்தால் வீட்டுக்கு ஆகாது. வாசல்ல போய் நில்லுடி!" என்று சொல்லி அவள் அம்மா அவளை வெளியே துரத்தி விடுவாள்.

தினமும் இந்த மாலைப் பொழுது அளிக்கும் துன்பத்தைத் தாங்கிக் கொள்வது மாலினிக்குப் பெரும்பாடாக இருந்தது. 

'கணவன் எப்போது திரும்புவான், இந்தத் துயரத்திலிருந்து நான் எப்போது விடுபடுவேன்?'

தெருவில் போய்க் கொண்டிருந்தவர்களைப் பார்த்தாள் மாலினி.

பலரும் சிரித்துப் பேசியபடி உற்சாகமாகச் சென்று கொண்டிருந்தனர்.

'இந்த மாலைப் பொழுது இவர்களுக்கெல்லாம் மட்டும் எப்படி மகிழ்ச்சியூட்டுவதாக இருக்கிறது?'

தெருவில் மகிழ்ச்சியாகச் சிரித்துப் பேசிக் கொண்டு சென்றவர்களைப் பார்த்தபோது அவர்கள் மீது அந்தக் கணத்தில் ஏற்பட்ட பொறாமையினால் மாலினியின் மனதுக்குள் இந்த எண்ணம் தோன்றியது.

ஏ, ஊர் மக்களே! இந்த மாலைப் பொழுது அளிக்கும் துன்பத்தால் நான் வாடி வதங்கிக் கொண்டிருக்கும்போது நீங்கள் மட்டும் இந்த மாலைப் பொழுதில் உல்லாசமாக இருக்கிறீர்களே! நீங்களும் இந்த மாலைப் பொழுதால் துன்பத்துக்கு ஆளாகி வருந்தும் நாள் வரும்!' என்று தன் மனதுக்குள் சாபமிட்டள் மாலினி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 123
பொழுது கண்டிரங்கல்
குறள் 1229
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.

பொருள்:
அறிவு மயங்கும்படியாக மாலைப் பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Friday, July 28, 2023

1228. கொல்லும் குழலிசை!

இரவில் சரியாகத் தூங்காததால் சுமந்திரை பிற்பகலில் தன்னை அறியாமல் சற்றுக் கண்ணயர்ந்து விட்டாள்.

அது முழுத் தூக்கமாக இல்லை. விழிப்பா, தூக்கமா என்று இனங்காண முடியாத ஒருவகை மயக்க நிலை.

அந்த அரைத் தூக்க நிலையில் தூரத்திலிருந்து வந்த ஒரு ஒலி சுமந்திரையின் காதில் கேட்டது.

என்ன ஒலி அது?

அந்த ஒலி இன்னும் நெருங்கி வந்தபோது அது குழலோசையாக இருக்குமோ என்று தோன்றியது.

ஆம், குழலோசைதான் அது!

விழிப்பு வந்து சுமந்திரை விருட்டென்று எழுந்து உட்கார்ந்து கொண்டாள்.

ஓ, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று திரும்ப விட்டுக்கு அழைத்து வரும்போது வழக்கமாகச் செய்வது போல் புல்லாங்குழலை வாசித்தபடி வருகிறான் ஆயச் சிறுவன்.

அப்படியானால் மாலைப் பொழுது வந்து விட்டதா? சற்று நேரம் தன்னை அறியாமல் கண்ணயர்ந்திருந்த தன்னை மாலை வந்து விட்டது என்று நினைவூட்டும் விதமாக ஒலிக்கிறதே இந்தக் குழலோசை!

குழல் இனிது என்பார்கள். ஆனால் கணவனைப் பிரிந்திருக்கும் இந்தக் காலத்தில் என்னை வருத்துவதற்கென்றே வரும் மாலையை நினைவூட்டுவது போல் வரும் இந்தக் குழலிசை எனக்கு மனச் சோர்வைத்தானே அளிக்கிறது!

'ஆயச் சிறுவனே! உன்னுடைய குழலோசை மாலையின் தூதா அல்லது என்னைக் கொல்ல மாலை அனுப்பும் படையா?'

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 123
பொழுது கண்டிரங்கல்
குறள் 1228
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.

பொருள்:
ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும்‌ மாலைப் பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும்‌‌ படையாகவும் வருகின்றது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Wednesday, July 26, 2023

1227. காலையில் அரும்பி மாலையில் மலரும் பூ!

கமலியின் தாய் கோசலைக்கு விடாத இருமல் இருந்ததால் அவளைப் பார்க்க வைத்தியர் வந்தார்.

 அவள் நாடியைப் பார்த்து விட்டு, "கப நாடியோட துடிப்பு அதிகமா இருக்கே! சளி அதிகமா இருக்கு. எத்தனை நாளா சளி இருக்கு?" என்றார் வைத்தியர்.

"ஒரு மாசத்துக்கு மேல இருக்கும்ங்க!" என்றாள் கோசலை.

"முதல்லேயே கவனிக்காம விட்டுட்டீங்க. சளி பிடிச்சா, தயிர், மோர், எலுமிச்சை, வெள்ளரி மாதிரி குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்க்கணும். சுடுநீர் குடிக்கணும். கவனமா இல்லாததால இப்ப இருமல் வந்திருக்கு. அப்புறம் காய்ச்சல், உடல்வலின்னு நோய் முத்திக்கிட்டே இருக்கும். நான் கொடுக்கற சூரணத்தை மூணு வேளை சுடுநீர்ல கலந்து சாப்பிடுங்க. அதோட நான் சொன்ன மாதிரி குளிர்ச்சியான உணவுப் பொருட்களை சாப்பிடாதீங்க!"

வைத்தியர் சென்றதும், "வைத்தியர் சொல்றதைப் பாருடி. சளி பிடிக்கறதுல ஆரம்பிச்சு இருமல், காய்ச்சல், உடல்வலின்னு எப்படி நோய் முத்துது பாரேன்!" என்றாள் கோசலை.

"இது பரவாயில்லைம்மா. இந்த நோய் முத்தறதுக்கு ஒரு மாசத்துக்கு மேல ஆகுதே. இன்னொரு நோய் இருக்கு. அது காலையில பூ அரும்பற மாதிரி இலேசா ஆரம்பிக்கும். பூ கொஞ்சம் கொஞ்சாமா விரியற மாதிரி நாள் முழுக்க முத்திக்கிட்டே இருக்கும். சாயந்திரம் ஆனா பூ முழுசா மலருகிற மாதிரி இந்த நோய் முழுசா முத்தி ஆளை வாட்டி எடுக்கும்!" என்றாள் கமலி.

"அது என்னடி அப்படி ஒரு நோய்? நான் கேள்விப்பட்டதே இல்லையே!" என்றாள் கோசலை வியப்புடன்.

கணவனைப் பிரிந்திருப்பதால் தினமும் தன்னைப் பிடித்து வாட்டும் காம நோய்தான் அது என்பதைத் தாயிடம் எப்படிச் சொல்வது என்று தயங்கிய கமலி, "பெயர் ஞாபகம் இல்லை. ஏதோ ஒரு புத்தகத்தில படிச்சேன்" என்று சொல்லிச் சமாளித்தாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 123
பொழுது கண்டிரங்கல்
குறள் 1227
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.

பொருள்:
காதல் துன்பமாகிய இப்பூ காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப் பொழுதில் மலர்ந்து விடுகிறது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Monday, July 24, 2023

1226. கொடிது கொடிது மாலை கொடிது!

 செங்கமலத்துக்குத் திருமணம் ஆன புதிதில் ஒரு நாளின் சிறந்த பகுதி எது என்று அவளை யாராவது கேட்டிருந்தால் மாலை நேரம் என்று சொல்லி இருப்பாள்.

அந்த மாலை நேரத்தில்தான் அவள் கணவன் வேலை முடிந்து வீடு திரும்புவான் என்பது ஒரு கராணம் என்றாலும், அந்த மாலை நேரம் தந்த சுகம்தான் முக்கியமான காரணம். 

வெயிலின் கடுமை தணிந்து இனிமையான பொழுதாகத் திகழும் மாலை.

இதமாக உடலை வருடிச் சென்று இன்பமளிக்கும் தென்றல் காற்றைக் கொண்டு வரும் மாலை.

வீட்டு வாசலில் அமர்ந்தபடியோ, தெருவில் நடந்தபடியோ கணவனுடன் பேசிக் கொண்டிருக்கும் இனிய அனுபவத்தை அளிக்கும் மாலை.

எல்லாவற்றுக்கும் மேல் இரவில் கணவனுடன் தனிமையில் படுத்துறங்கும் இன்பமான அனுபவத்தை எதிர்நோக்க வைக்கும் மாலை!

செங்கமலம் வீட்டுக்கு வெளியே வந்தாள். அவள் தனிமையைச் சுட்டிக் காட்டி ஏளனம் செய்வது போல் மாலைப் பொழுது காட்சி அளித்தது.

'ஏன் இந்த மாலைப் பொழுது எனக்கு ஒரு நாளின் மோசமான பகுதியாக இருக்கிறது?' என்ற எண்ணம் எழுந்ததும் சில மாதங்ள் முன்பு வரை மாலைப் பொழுதை ஒரு நாளின் மிக இனிமையான பொழுதாகத் தான் கருதியது செங்கமலத்துக்கு நினைவு வந்தது.

'கணவனைப் பிரிந்திருக்கும் காலத்தில் இந்த மாலை இவ்வளவு கொடியதாக இருக்கக் கூடும் என்பது கணவனுடன் கூடியிருந்தபோது, எனக்குத தெரியாமல் போய் விட்டதே!'

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 123
பொழுது கண்டிரங்கல்
குறள் 1226
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.

பொருள்:
மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Thursday, July 20, 2023

1225. காலைப் பொழுதே வருக!

சாரதாவின் கணவன் அவளை விட்டுப் பிரிந்ததிலிருந்து அவள் அவனுடன் கனவில்தான் வாழ்ந்து வந்தாள்.

தினந்தோறும் வரும் கனவு. அதில் வந்து அவளுடன் அன்புடன் பேசி அவளை மகிழ்விக்கும் அவள் கணவன்.

துவக்கத்தில், காலையில் கண் விழித்ததும் எல்லாம் கனவுதானா என்ற ஏமாற்றம் ஏற்பட்டது. ஆனால் சில நாட்களுக்குப் பிறகு, காலையில் எழுந்ததும் கனவை நினைத்துப் பார்த்து மகிழ ஆரம்பித்து விட்டாள்.

அதனால் சாரதாவுக்குக் காலை நேம் ஒரு நாளின் அதிக மகிழ்ச்சியான பொழுதாக இருந்தது.

மாறாக மாலை வந்தாலே சாரதாவை ஒருவித ஏக்கமும், மனச் சோர்வும் பற்றிக் கொண்டன. மாலையில் கணவனுடன் மகிழ்ச்சியாகப் பேசிக் களித்த நாட்கள் நினைவு வந்து, இப்போது அப்படி இல்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்தின.

அதனால் மாலை நேரம் என்றாலே சாரதாவுக்கு மனவலியைத் தரும் நேரம் என்று ஆகி விட்டது.

ன்று இரவு உறங்கச் சென்றபோது சாரதாவின் மனதில் ஒரு சிந்தனை தோன்றியது.

'காலை, மாலை இரண்டுமே ஒரு நாளின் இரு பகுதிகள்தானே? அவற்றில் காலை எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது, மாலையோ எனக்கு மனவேதனையைத்தான் தருகிறது.

'காலைப் பொழுது என்மீது அன்பு காட்டுகிறதென்றால் காலைப் பொழுதுக்கு நான் ஏதாவது நன்மை செய்திருக்க வேண்டும்.

'அதுபோல் மாலைப் பொழுது என்னை வாட்டி வதைக்கிறது என்றால் மாலைப் பொழுதுக்கு நான் ஏதேனும் தீங்கு இழைத்திருக்க வேண்டும்!

'ஆனால் காலைக்கு நான் செய்த நன்மை எது என்பதையும், மாலைக்கு நான் செயுத தீங்கு எது என்பதையும் என்னால் உணர முடியவில்லையே!'

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 123
பொழுது கண்டிரங்கல்
குறள் 1225
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.

பொருள்:
யான் காலைப் பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன?.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1224. மாலைப் பொழுது வந்து படை போலக் கொல்லும்!

ஒரு கொடிய கனவு கண்டு திடுக்கிட்டுக் கண் விழித்தாள் நாயகி.

அவள் தன் கணவனோடு ஒரு சோலையில் அமர்ந்திருக்கிறாள். அவள் கணவன் எழுந்து எங்கேயோ போய் விடுகிறான்.

நாயகி தனியே உட்கார்ந்திருக்கும்போது ஒரு பெண் தன் கையில் ஒரு வாளை ஓங்கியபடி நாயகியை நோக்கி வருகிறாள். நாயகி பயந்து போய் எழுந்து ஓடுகிறாள்.

ஓடிக் கொண்டிருக்கும்போதே கனவு கலைந்து கண் விழுத்தாள் நாயகி.

என்ன ஒரு பயங்கரமான கனவு!

விடியற்காலையில் கண்ட கனவு பலிக்கும் என்பார்களே!

அப்படியானால் அவளை யாராவது கொல்லப் போகிறார்களா? எதற்காக?

கணவனைப் பிரிந்திருக்கும் காலத்தில் இப்படி ஒரு கனவு ஏன் வருகிறது? யாரிடமாவது இந்தக் கனவுக்கு விளக்கம் கேட்கலாமா? யாரிடம் கேட்பது?

மாலை நேரத்தில் வாசலுக்கு வந்து திண்ணையில் அமர்ந்தாள் நாயகி.

மாலை நேரத்தில் கடந்த சில மாதங்களாகவே அவளுக்கு ஏற்பட்டு வந்த உணர்வு அன்றும் ஏற்பட்டது.

மனதில் இனம் புரியாத ஒரு வலியும் வேதனையும்.

ஏன் என் கணவரைப் பிரிந்ததிலிருந்து இந்த மாலை நேரம் என்னை இப்படித் துன்புறுத்துகிறது!

ஏ மாலையே! ஒருவேளை நீ என்னைப் போல் ஒரு பெண்ணாக இருந்தால் என் நிலையைப் புரிந்து கொண்டு என்னைத் துன்புறுத்தாமல் இருப்பாயோ என்னவோ!

இந்த எண்ணம் தோன்றியதுமே அன்று விடியற்காலை கனவில் வந்த பெண்ணின் உருவம் மனதில் வந்து போயிற்று.

'ஓ! மாலைப் பொழுது என்னை வருத்துவதை நினைத்துக் கொண்டே தூங்கியதால்தான் மாலைப் பொழுது ஒரு பெண் வடிவத்தில் வந்து என்னைக் கொல்ல வருவது போன்ற கனவு வந்திருக்கிறது!'

அந்தச் சோர்வான மனநிலையிலும் கனவு அளித்த பயம் நீங்கியது நாயகிக்குச் சற்றே ஆறுதலாக இருந்தது .

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 123
பொழுது கண்டிரங்கல்
குறள் 1224
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.

பொருள்:
காதலர் பிரிந்திருக்கும்போது வருகிற மாலைப் பொழுது கொலைக் களத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Wednesday, July 19, 2023

1223. மாதமோ மார்கழி!

வள்ளி தன் வீட்டு வாசலில் வந்து நின்றபோது பனிக் காற்று அவள் உடலைச் சுள்ளென்று தாக்கியது.

இது மாலை நேரம் ஆயிற்றே! இப்போதே ஏன் இப்படிக் குளிர்கிறது?

"மார்கழி  மாசம். முன்பனிக்காலம்னு சொல்லுவாங்க. பொழுது சாயற நேரத்திலேயே எப்படிக் குளிருது பாரு! இந்தக் குளிர் உடம்புக்கு ஒத்துக்காது. உள்ளே போயிடு!" என்று கூறிக் கொண்டே வெளியிலிருந்து வீட்டுக்குள் நுழைந்தாள் அவள் அம்மா.

'மார்கழி மாதம் என்பதாலா இந்த மாலை நேரத்தில் இவ்வளவு குளிர்கிறது?

'இல்லை. அதனால் இல்லை.

'சென்ற ஆண்டு மார்கழி மாத மாலை வேளையில் இது போன்ற குளிர் இல்லையே!

'ஓ! இப்போது காரணம் புரிகிறது.

'அப்போது என் காதலர் என் அருகில் இருந்தார். அதனால் என் முன் வரத் துணிவில்லாமல் பனியினால் மேனி கருத்து பசலை அடைந்து நடுங்கிக் கொண்டு வந்ததல்லவா இந்த மாலை!

'ஆனால் இன்று என்னிடம் பிணக்குக் கொண்டது போல் இப்படி என் மீது குளிரை வீசி என்னைத் துன்புறுத்துகிறதே இந்த மாலை! தினமும் இப்படி என்னைக் கொடுமைப்படுத்தி என் உயிரை வாட்டுவது என் அருகில் என் காதலன் இல்லை என்ற இளக்காரத்தினல்தானே?

'ஏ, மாலைப் பொழுதே! அவர் திரும்பி வரட்டும். அப்போது உன்னை கவனித்துக் கொள்கிறேன்!'

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 123
பொழுது கண்டிரங்கல்
குறள் 1223
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்.

பொருள்:
அவர் என்னைப் பிரிவதற்கு முன்பு என்முன் வரவே நடுக்கம் எய்தி மேனி கறுத்து வந்த இந்த மாலைப் பொழுது இப்போது என் உயிரைப் பறிப்பது போல் தோன்றி, துன்பம் பெருகும்படி நாளும் வருகின்றது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Tuesday, July 18, 2023

1222. மயங்கிய மாலைப் பொழுது

 மதுவந்தி கண் விழித்தாள்.

'எப்போது தூங்கினேன்?' என்ற கேள்வி அவளுள் எழுந்தது. அத்துடன், 'இப்போது நான் விழித்துக் கொண்டிருக்கிறேனா?' என்ற கேள்வியும் வந்தது.

தன்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டாள். வலித்தது. 'அப்படியானால் விழித்துக் கொண்டுதான் இருக்கிறேன்!'

'ஒருவேளை இந்தக் கிள்ளிக் கொள்வது, வலியை உணர்வது எல்லாமே தூக்கத்தில் வரும் கனவில் நிகழ்வதாக இருந்தால்...?'

எழுந்து நடந்து வாசலுக்கு வந்தாள்.

'ஏன் எல்லாம் மங்கலாகத் தெரிகின்றன?

ஒருவேளை தூக்கத்தில் தெரியும் காட்சிகள் என்பதால்தான் எல்லாம் மங்கலாகத் தெரிகின்றனவோ?'

வாசல் திண்ணையில் அம்மா அம்ந்திருந்தாள்.

"தூங்கி எழுந்தியா? ராத்திரி முழுக்க தூங்காம மத்தியானம் உன்னை அறியாமலேயே தூங்கிட்டு சாயந்திரம் எழுந்து வர! பகல்ல சரியா சாப்பிடக் கூட இல்ல. இரு. உனக்குச் சாப்பிட ஏதாவது எடுத்துக்கிட்டு வரேன்!" என்று கூறியபடியே உள்ளே போனாள் அவள் அம்மா.

அவளைக் கடந்து போனபோது, "உன் புருஷன் ஊருக்குப் போனதிலேந்து கண்ணல்லாம் மங்கிப் போய் சோர்வாவே இருக்கே! அவன் எப்ப திரும்பி வரப் போறானோ, நீ எப்ப பழையபடி ஆகப்போறியோ?" என்று முணுமுணுத்துக் கொண்டே போனாள் அம்மா.

அம்மா சொன்ன பிறகுதான் அது மாலை நேரம் என்பது மதுவந்திக்குப் புரிந்தது.

'ஓ, இது மாலை நேரமா? அதுதான் இப்படி மங்கலாய் இருக்கிறாயா? நீ பகலைச் சேர்ந்தவளா அல்லது இரவைச் சேர்ந்தவளா? பாவம் அது தெரியாமல்தானே நீ இப்படி மயங்கி நிற்கிறாய்? ஏன் இந்த மயக்கம்? உன் காதலனும் என் காதலனைப் போல் கொடியவனோ? உன்னைத் தனியே விட்டு விட்டுப் போய் விட்டானோ? அதனால்தான் நீயும் என்னைப் போல் கண் பார்வை மங்கி நிற்கிறாயோ?'

"மது. உள்ளே வா! பலகாரம் எடுத்து வச்சிருகேன்!"

உள்ளிருந்து அம்மாவின் குரல் கேட்டது.

'அம்மாவின் குரல் கேட்பது கனவிலா அல்லது நனவிலா?'

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 123
பொழுது கண்டிரங்கல்
குறள் 1222
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.

பொருள்:
பகலும் இரவுமாய் மயங்கும் மாலைப்பொழுதே! என்னைப் போலவே நீயும் ஒளி இழந்த கண்ணோடு இருக்கிறாயே; உன் கணவரும் என் கணவரைப் போல் கொடியவரோ?

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Sunday, July 16, 2023

1221. இதுவல்ல மாலை!

 மாலைப் பொழுது என்றாலே கண்மணிக்குத் தனி மகிழ்ச்சிதான். 

கண்மணிக்கு மட்டுமல்ல, எல்லா இளம் பெண்களுக்கும்தான் - அதாவது காதலனுடன் சேர்ந்து வாழும் இளம் பெண்களுக்கு

மலர்ச் சோலைகளில் மலர்களுக்குப் போட்டியாகக் குழுமி இருக்கும் இளம் பெண்களும் அவர்களுடன் அன்புடன் உரையாடும் இளங்காளைகளும் என்று எத்தகைய களையுடன் இருக்கும் மாலைப் பொழுது!

மலர்ச்சோலைகள்தான் என்றில்லை, மரத்தோட்டங்ள், சாலை ஓரங்கள், நதிக்கரைகள், குளக்கரைகள், அல்லது விடுகளுக்குள்ளேயும் கூட உற்சாகத்தைக் கொண்டு வரும் பொழுதல்லவா மாலை!

என்னதான் நாள் முழுவதும் காதலரின் நினைவில் களிப்பாக இருந்தாலும், மாலைப் பொழுது அளிக்கும் இன்பம் தனிச் சுவை கொண்டதுதான். அவ்வாறு சிறப்பாக இன்பமளிக்க வேண்டுமென்று மாலைப் பொழுது இறைவனிடம் வரம் வாங்கிக் கொண்டு வந்திருக்கும் போலும்!.

சட்டென்று தலையை உலுக்கிக் கொண்டாள் கண்மணி.

'இதென்ன, இப்போது மாலைப் பொழுதைப் பற்றிய நினைவு -கடும் கோடையில் வசந்த காலத்தின் இனிமையைப் பற்றி நினைப்பது போல்? இப்போதுதான் மாலைப் பொழுது என்ற ஒன்று வருவதே இல்லையே!

மாலைப் பொழுதைப் பார்த்தே மாதங்கள் பல ஆகி விட்டன.

அவள் மணவன் அவளைப் பிரிந்து வெளியூர் செல்வதற்கு முதல் நாள் அவளுடன் இனிமையாகப் பேசிக் கொண்டிருந்தானே, அந்த நாளுக்குப் பிறகு அவள் மாலைப் பொழுதையே பார்க்கவில்லேயே!

"கண்மணி. பொழுது சாஞ்சுடுச்சு பாரு. விளக்கேத்தி வை!"

உள்ளிருந்து அம்மாவின் குரல் கேட்டது.

இல்லை இது மாலைப் பொழுதல்ல. அம்மா தவறாகக் கூறுகிறாள். தினமும் எனக்கு அதிகத் துன்பத்தைக் கொடுக்கும் இந்தப் பொழுதை மாலை என்று எப்படிக் கூற முடியும்?

நான் மட்டுமா? என்போல் காதலனைப் பிரிந்து வாழும் என் தோழிகளும் இந்தப் பொழுதைத் தங்கள் உயிரைக் கொடிக்கும் கொடிய பொழுது என்றுதானே கூறுகிறர்கள்?

என் கணவர் என்னை விட்டுப் பிரிந்து சென்றபோது மாலைப் பொழுதும் அவருடன் சென்று விட்டது. இனி அவர் திரும்பி வரும்போதுதான் மாலையும் வரும்.

இது மாலை அல்ல, மாலை என்ற வேடத்தில் வந்து என்னைத் துன்புறுத்தும் பொல்லாப் பொழுது.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 123
பொழுது கண்டிரங்கல்
குறள் 1221
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.

பொருள்:
பொழுதே! நீ மாலைக் காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கின்றாய்!.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Monday, July 10, 2023

1220. பரிதாபப்படுகிறேன்!

"ஏற்கெனவே என் பொண்ணு கணவனைப் பிரிஞ்ச துயரத்தில இருக்கா. அது போதாதுன்னு ஊர்ல சில பேர் அவ புருஷனைப் பத்தி வேற அவதூறு பேசறாங்க. என்னால எவ்வளவுதான் தாங்கிக்க முடியும்?"

புலம்பிக் கொண்டே வீட்டுக்குள் நிழைந்தாள் செங்கமலம்.

"என்னம்மா ஆச்சு? என்ன பேசிக்கறாங்க?" என்றாள் கமலா.

"அதி ஒண்ணும்மில்லடி. உனக்கு அது தெரிய வேண்டாம்."

"எனக்குத் தெரிய வேண்டாம்னா, ஏன் எது காதுபடப் புலம்பிக்கிட்டே வந்தே சொல்லும்மா!"

"புதுப் பொண்டாட்டியை விட்டுட்டு வெளியூர் போன புருஷன் இப்படியா மாசக்கணக்கா பொண்டாட்டியைப் பிரிஞ்சு இருப்பான். அவனுக்கு என்ன கல் மனசான்னு பேசிக்கறாங்க."

"அவ்வளவுதானே? நீ அவதூறாப் பேசறாங்கன்னதும் என்னவோ ஏதோன்னு நினைச்சேன்!"

"ஏன், இப்படிப் பேசறவங்க மேல உனக்குக் கோபம் வரலையா?"

"கோபம் வரலைம்மா. பரிதாபம்தான் வருது!"

"பரிதாபமா? எதுக்கு?"

"பின்னே? நான் என் புருஷனை தினம் கனவில பாத்துக்கிட்டு அவரோட சந்தோஷமாப் பேசிக்கிட்டிருக்கேன். இது புரியாம என்னைப் பிரிஞ்சு இருக்கார்னு இவங்க என் புருஷன் மேல குற்றம் சாட்டினா, இவங்க யாரும் தன்னோட புருஷனைப் பிரிஞ்சிருந்த காலத்தில அவரை இவங்க கனவில பார்த்ததில்லேன்னுதானே அர்த்தம்? அந்தக் கொடுப்பினை கூட இல்லாதவங்களைப் பார்த்துப் பரிதாப்பபடாம வேற என்ன செய்ய முடியும்?" என்றாள் கமலா.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 122
கனவுநிலையுரைத்தல்
குறள் 1220
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.

பொருள்:
என் காதலர் என்னைப் பிரிந்திருப்பதாக அவரைக் குற்றம் சாட்டுகிறார்களே, இந்த ஊரார், பிரிந்து சென்ற தமது காதலனைக் கனவில் காண்பது கிடையாதோ?.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1219. எனக்கில்லை பிரிவுத் துயர்!

பரிமளாவைப் பார்க்க அவள் தோழி புஷ்பவல்லி வந்தபோது அவளுடன் நான்கைந்து இளம் பெண்கள் வந்தனர்.

"இவங்கள்ளாம் என் தோழிகள். உன்னைப் பார்க்கணும்னு வந்திருக்காங்க!" என்றாள் புஷ்பவல்லி.

'என்னை எதற்குப் பார்க்கணும்?' என்பது போல் தோழியைப் பார்த்தாள் பரிமளா.

"அஞ்சாறு மாசமா நீ உன் கணவனைப் பிரிஞ்சிருந்தாலும் உன் பிரிவுத் துயரத்தைக் காட்டாம அமைதியா இருக்கே, அதை இவங்ககிட்ட சொல்லி, 'நீங்க மட்டும் ஏன் இப்படித் துயரமா இருக்கீங்கன்னு?' கேட்டேன். அதான் உன்னைப் பாக்கணும்னு சொன்னாங்க. அழைச்சுக்கிட்டு வந்தேன்!" என்றாள் புஷ்பவல்லி.

பரிமளா மௌனமாக இருந்தாள்.

"உன் கணவனைப் பிரிஞ்ச வருத்தம் உனக்கு இல்லையா?" என்றாள் வந்திருந்தவர்களில் ஒருத்தி.

"பிரிஞ்சு இருக்கற வருத்தம் எல்லாருக்கும்தான் இருக்கும். எனக்கு மட்டும் எப்படி இல்லாம இருக்கும்?" என்றாள் பரிமளா.

"உன் பிரிவுத் துயரை நீ வெளியில காட்டிக்காம இருக்கறது பெரிய விஷயம்தான்" என்றாள் மற்றொரு பெண்.

"பிரிவுத் துயர் இருக்குதான். ஆனா அவரை அடிக்கடி சந்திக்கறதால அது அந்த அளவுக்கு என்னை அழுத்தறதில்லை!"

"அடிக்கடி சந்திக்கிறியா? எப்படி?" என்றாள் மற்றொரு பெண் வியப்புடன்.

"தினமும் என் கனவில அவர் வராறே! வந்து என்கிட்ட அன்பாப் பேசறாரே! அந்த மகிழ்ச்சியான அனுபவத்தாலதான் பிரிவுத் துயரோட அழுத்தத்தை என்னால தாங்கிக்க முடியுது!" என்ற பரிமளா, "ஆமாம். ஏன் உங்களுக்குக் கனவு வரதில்லையா, அல்லது கனவில உங்க காதலர் வரதில்லையா?" என்றாள் அந்தப் பெண்களைப் பார்த்து.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 122
கனவு நிலையுரைத்தல்
குறள் 1219
நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.

பொருள்:
கனவில் காதலரைக் காணாதவர்கள்தான் அவர் நேரில் வந்து காணவில்லையே என்று நொந்து கொள்வர்.

குறள் 1218
அறத்துப்பால்                                                               பொருட்பால்

Sunday, July 9, 2023

1218. காணாமல் போய்க் கிடைத்தவன்!

சாந்தினி கட்டிலில் படுத்துக் கொண்டு மேலே பார்த்துக் கொண்டிருந்தாள். நீண்ட நேரம் அவளுக்கு உறக்கம் வரவில்லை.

எப்போது உறங்கினாள் என்று அவளுக்குத் தெரியாது.

திடீரென்று ஒரு காட்சி தோன்றயது.

மேகவர்ணன் மேலே எங்கிருந்தோ இறங்கி வருகிறான். சாந்தினியின் அருகில் வருகிறான். அவள் தோள்களைப் பற்றுகிறான். பிறகு அவள் தோள்களின் மேல் சாய்ந்து கொள்கிறான்.

பிறகு...

சாந்தினிக்கு எங்கோ பறந்து செல்வது போன்ற உணர்வு ஏற்பட்டது.

அந்த உணர்வு எவ்வளவு நேரம் நீடித்ததென்று தெரியவில்லை, திடீரென்று தன் தோள்களை அழுத்திய சுமை இறங்கி விட்டாற்போல் இருந்தது.

எங்கே மேகவர்ணன்?

அவள் கண்களுக்குப் புலப்படவில்லை.

எங்காவது ஒளிந்து கொண்டிருப்பானோ என்று அவள் யோசித்தபோதே, அவள் கண்கள் திறந்து கொண்டன.

விருட்டென்று படுக்கையில் எழிந்து உட்கார்ந்து கொண்டாள் சாந்தினி.

இத்தனை நேரம் தன் தோள் மீது சாய்ந்து கொண்டிருந்த காதலன் எங்கே?

சுற்றுமுற்றும் பார்த்த சாந்தினி, திடீரென்று நினைவு வந்தவளாகத் தன் நெஞ்சில் கைவைத்துப் பார்த்தாள்.

உடனே அவள் முகம் மலர்ந்தது. மேகவர்ணன் எங்கேயும் போய் விடவில்லை. அவள் நெஞ்சுக்குள்தான் அமர்ந்திருக்கிறான்.

கூட வந்த குழந்தையைக் காணோமே என்று ஒரு கணம் பதைபதைத்த ஒரு தாய்க்கு குழந்தை தனக்கு அருகிலேயே இருப்பதைக் கண்டதும் ஏற்படும் நிம்மதி சாந்தினிக்கு ஏற்பட்டது.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 122
கனவுநிலையுரைத்தல்
குறள் 1218
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.

பொருள்:
தூக்கத்தில் கனவில் வந்து என் தோள் மீது சாய்ந்து இன்பம் தந்தவர், நான் கண் விழித்ததும், என் நெஞ்சில் தாவி அமர்ந்து கொண்டார்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Friday, July 7, 2023

1217. அன்புள்ள மன்னவனே, ஆசையில் ஓரு கடிதம்!

"பரிவாதினி! நம்ம முத்துப்பாண்டி உன் புருஷன் இருக்கற ஊருக்குத்தான் போறானாம். உன் புருஷனுக்கு ஏதாவது ஓலை கொடுக்கறதா இருந்தா அவன்கிட்ட கொடுத்தனுப்பு!" என்றாள் அன்னமயில்.

"வீட்டுக்குத் திரும்பணுங்கற சிந்தனையே இல்லாம வெளியூரிலேயே உக்காந்திருக்கிற மனுஷனுக்கு நான் என்ன ஓலை அனுப்பறது?" என்றாள் பரிவாதினி வெறுப்புடன்.

"அப்படின்னா ஓலை அனுப்பப் போறதில்லையா?"

"இல்ல, இல்ல. ஒரு ஓலை எழுதிக் கொடுக்கறேன் நான் ஒருத்தி இங்கே இருக்கேன்னு அவருக்கு ஞாபகப்படுத்த வேண்டாமா?"

ஓலையையும், எழுத்தாணியையும் எடுத்துக் கொண்டு உட்கார்ந்து என்ன எழுதுவதென்று யோசித்தாள் பரிவாதினி.

இரண்டு மூன்று முறை எழுதி, அடித்து ஓலைகள் கிழிந்ததுதான் மிச்சம். என்ன எழுதுவதென்றே தெரியவில்லை.

அலுப்பில் கண் அயர்ந்து தூக்கம் வருவது போல் இருந்தது.

தூக்கம்!

ஓலையில் என்ன எழுதுவதென்று பரிவாதினிக்குத் தெரிந்து விட்டது!

உடனே புதிதாக ஒரு ஓலையை எடுத்து விறுவிறுவென்று எழுத ஆரம்பித்தாள்:

அன்புள்ளவரே!
எனக்கு தினமும் கனவு வருகிறது, கனவில் நீங்கள் வருகிறீர்கள். என்மீது அன்பு செலுத்துகிறீர்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் கனவு முடிந்ததும், 'இது கனவுதானா, அவர் உண்மையிலேயே வரவில்லையா?' என்ற உணர்வு எனக்கு அளிக்கும் ஏமாற்றத்தையும், மனவருத்தத்தையும் என்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. எனவே நான் உங்களுக்கு வைக்கும் வேண்டுகோள் ஒன்றுதான். தயவு செய்து என் கனவில் வந்து என்னை வருத்தாதீர்கள். அடுத்த முறை நான் உங்களைச் சந்திப்பது நனவில் நிகழ்வதாக இருக்கட்டும்.

தாங்கள் தினமும் கனவில் வருவதால் வருந்தும்

பரிவாதினி!

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 122
கனவுநிலையுரைத்தல்
குறள் 1217
நனவினால் நல்காக் கொடியார் கனவினால்
என்எம்மைப் பீழிப் பது.

பொருள்:
நேரில் வந்து அன்பு செய்யாத இந்தக் கொடிய மனிதர் கனவில் மட்டும் நாளும் வந்து என்னை வருத்துவது ஏன்?

குறள் 1218 (விரைவில்)
அறத்துப்பால்                                                               பொருட்பால்

Thursday, July 6, 2023

1216. நனவு ஏன் வந்தது?

ருக்மிணி சமையலறையில் இருந்தபோது அங்கே கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்தாள் வசந்தி.

"எங்கேம்மா அவரு?" என்றாள் வசந்தி.

"யாரு? உங்கப்பாவா? வெளியே போயிருக்காரு."

"நான் 'உன் அவரை'க் கேக்கலம்மா. 'என் அவரை'க் கேக்கறேன்."

"ஏண்டி? தூக்கத்திலேந்து முழிச்சுட்டியா, இல்லை தூக்கத்தில நடந்து வந்து கேக்கறியா? உன் புருஷன் வெளியூர் போய் மூணு மாசம் ஆச்சு. காலையில எழுந்து வந்து அவர் எங்கேன்னு கேக்கற?" என்றாள் ருக்மிணி எரிச்சலுடன்.

"இப்ப இருந்தாரேம்மா. என்னோட இத்தனை நேரம் பேசினாரே அம்மா?" 

"முதல்ல போய் முகத்தைக் கழுவிக்கிட்டு வாடி. தூக்கக் கலக்கம் கலையாம பேசற குழந்தை மாதிரி பேசிக்கிட்டு!"

கண்களைத் தேய்த்துக் கொண்ட வசந்தி, "கனவுதான் போல இருக்கு. ஆனா நேரில நடக்கற மாதிரியே இருந்தது. எங்கிட்ட எவ்வளவு அன்பாப் பேசினாரு! இந்த நனவுங்கற ஒண்ணு இல்லாம இருந்தா, கனவிலேயே அவரோட ஆனந்தமாப் பேசிக்கிட்டிருப்பேன் இல்ல?" என்றாள் விரக்தியுடன்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 122
கனவுநிலையுரைத்தல்
குறள் 1216
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.

பொருள்:
நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பார்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1215. மகள் சொன்ன தத்துவம்!

"வீட்டில எப்பவும் சோகமா உக்காந்திருக்க. வா, ஆன்மீகச் சொற்பொழிவுக்குப் போயிட்டு வரலாம்" என்று மகளை அழைத்தாள் லட்சுமி.

முதலில் சற்றுத் தயங்கினாலும் பிறகு தாயுடன் சென்றாள் கிரிஜா.

சொற்பொழிவு முடிந்து வீட்டுக்கு வந்ததும், ஆன்மீகச் சொற்பொழிவுன்னா ஏதாவது புராணக் கதை சொல்லுவாரு, சுவாரசியமா இருக்கும்னு நினைச்சுக்கிட்டுப் போனா வெறும் தத்துவத்தைப் பேசி அலுப்புத் தட்டும்படி பண்ணிட்டாரு. உன்னை வேற அழைச்சுகிட்டுப் போனேனே!" என்றாள் லட்சுமி சோர்வுடன்.

"ஏம்மா, நல்லாத்தானே சொன்னாரு?" என்றாள் கிரிஜா.

"என்னடி சொல்ற? அவர் சொன்ன தத்துவமெல்லாம் உனக்குப் புடிச்சிருந்ததா?" என்றாள் லட்சுமி வியப்புடன்.

"புடிச்சுது, புடிக்கலேன்னு இல்லை. அவர் சொன்னதில இருந்த உண்மை புரிஞ்சுது."

"என்ன உண்மையைப் புரிஞ்சுக்கிட்டே?" என்றாள் லட்சுமி கேலியாக.

"நிலையாமையைப் பத்திப் பேசினாரும்மா. நிலையாமைன்னா என்ன? எது நடந்தாலும் அந்தச் சமயம் மட்டும்தான். அப்புறம் அது இருக்காதுன்னுதானே அர்த்தம்?"

"ஆமாம். இதில நீ என்ன புதுசாப் புரிஞ்சுக்கிட்ட?"

"என் புருஷன் என்னோட இருந்தப்ப நான் சந்தோஷமா இருந்தேன். இப்ப அவரு என்னைப் பிரிஞ்சு எங்கேயோ தொலைதூத்தில இருக்காரு. இப்ப அவர் என்னோட இல்லாதப்ப அந்த சந்தோஷம் இல்லை. அது மாதிரி..."

"அது மாதிரி?"

"என் கனவில அவர் வரப்ப சந்தோஷம் இருக்கு. ஆனா கனவு முடிஞ்சு கண் முழிச்சப்பறம் அந்த சந்தோஷம் இல்ல. அதாவது அவர் என்னோட இருந்தப்ப எனக்கு இருந்த சந்தோஷம் அந்த சமயத்தில மட்டுமே இருந்த மாதிரி, கனவில அவர் வரப்ப கிடைக்கற சந்தோஷமும் கனவு காணும்போது மட்டும்தான் இருக்கு! இதைத்தானே அம்மா வாழ்க்கையில நடக்கறது எல்லாமே நீர்க்குமிழி மாதிரி அந்தச் சமயத்தில மட்டும்தான் இருக்கும்னு அந்தச் சொற்பொழிவாளர் சொன்னாரு?"

மகள் இதைப் புரிந்து சொல்கிறாளா அல்லது விரக்தியில் சொல்கிறாளா என்று புரிந்து கொள்ளும் முயற்சியில் கிரிஜாவின் முகத்தை உற்றுப் பார்த்தாள் லட்சுமி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 122
கனவுநிலையுரைத்தல்
குறள் 1215
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.

பொருள்:
முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்‌பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Wednesday, July 5, 2023

1214. கன்னத்தில் விழுந்த அறை!

மீராவைத் தூக்கத்திலிருந்து எழுப்ப முயன்றாள் அவள் அம்மா காமாட்சி.

எவ்வளவோ கூப்பிட்டும் மீரா எழுந்திருக்காததால் அவளைப் பிடித்து உலுக்கினாள் காமாட்சி.

கண் விழித்து எழுந்த மீரா எதிர்பாராத விதமாக காமாட்சியின் கன்னத்தில் அறைந்து விட்டாள்.

அதிர்ச்சியடைந்த காமாட்சி கன்னத்தைப் பிடித்துக் கொண்டு, "என்னடி இது? நான் உன் அம்மா. இப்படியா என்னை அடிப்பே?" என்றாள் அதிர்ச்சியுடன்.

அப்போதுதான் கண்களைக் கசக்கிக் கொண்டு இயல்பு நிலைக்கு வந்த மீரா, தான் அறைந்த அம்மாவின் கன்னத்தை வருடி, "மன்னிச்சுக்கம்மா! நல்லா தூங்கிக்கிட்டிருப்ப என்னை உலுக்கி எழுப்பினதால என்னை அறியாம கோபம் வந்து அடிச்சுட்டேன்!" என்றாள்.

"நல்லா அடிப்பேடி!" என்ற காமாட்சி, "உன் புருஷன் உன் மேல கோவிச்சுக்கிட்டு உன்னை வீட்டை விட்டு அனுப்பினதிலேந்து நீ இப்படித்தான் இருக்கே. அவன் எப்ப கோபம் தணிஞ்சு உன்னை அழைச்சுக்கிட்டுப் போகப் போறானோ!" என்றாள் பெருமூச்சுடன்.

'நேரில எங்கிட்ட அன்பு செலுத்தாத மனுஷன் இன்னிக்குக் கனவில வந்து எங்கிட்ட அன்பு காட்டினாரு. என்னைத் தூக்கத்திலேந்து எழுப்பி அந்த சுகமான கனவைப் பாதியில கலைச்சுட்டியே! அந்த ஆத்திரத்திலதானே என்னை அறியாமலேயே உன்னை அறைஞ்சுட்டேன்!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் மீரா.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 122
கனவுநிலையுரைத்தல்
குறள் 1214
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.

பொருள்:
நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டு வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது.

குறள் 1215 (விரைவில்)
அறத்துப்பால்                                                               பொருட்பால்

Tuesday, July 4, 2023

1213. கனவில் வருபவன்

"என்னைக் காதலிக்கறதா சொன்னாரு. கல்யணம் பண்ணிப்பேன்னு கையை அடிச்சு சத்தியம் பண்ணினாரு. ஆனா இப்ப ஆறு மாசமா அவரைக் கண்ணிலேயே காணல!" என்றாள் கார்த்திகா.

"எங்கே போயிட்டாரு? விசாரிச்சுப் பாத்தியா?" என்றாள் அவள் தோழி ராகினி.

"அவங்க வீட்டிலேயே கேட்டுட்டேன். அவங்களுக்கு எங்க காதலைப் பத்தித் தெரியுமே! நண்பர்களோட ஏதோ வெளிநாட்டுக்குப் போயிருக்காராம். எப்ப வருவார்னு அவங்களுக்கே தெரியாதுன்னு சொல்றாங்க!"

"எதுக்கு வெளிநாட்டுப் பயணம்?"

"அப்பா அம்மா கிட்ட நிறையக் காசு இருக்கு. அதை வச்சுக்கிட்டு கொஞ்சநாள் எங்கேயாவது உல்லாமாப் போகலாம்னு போயிருப்பாரு போல இருக்கு!"

"சரி. அவரு வரப்ப வரட்டும். அதுக்காக நீ சாப்பிடாம, தூங்காம இருந்து உடம்பைக் கெடுத்துக்காதே!" என்றாள் ராகினி.

"சாப்பாடு சரியா ஏறரது இல்லதான். ஆனா தூங்காம இருக்க மாட்டேன்!" என்றாள் கார்த்திகா.

"ஆமாம். முழிச்சுக்கிட்டு இருக்கறப்ப எல்லாம் அவரையே நினைச்சுக்கிட்டிருக்கே. தூங்கும்போதாவது எல்லாத்தையும் மறந்துட்டு நிம்மதியா இருக்கலாம்."

"நான் தூங்கறது மறக்கறதுக்காக இல்லடி, நினைக்கறதுக்காக!" என்றாள் கார்த்திகா.

"என்னடி சொல்ற?" என்றாள் ராகினி.

"முழிச்சுக்கிட்டிருக்கறப்ப, அவரு நேரில வரலியே, என் மேலே அன்பு காட்டலியேன்னு வருத்தமாவும், ஏக்கமாவும் இருக்கும். ஆனா தூங்கினார கனவு வரும். அந்தக் கனவில அவர் வருவாரு. எங்கிட்ட அன்பாப் பேசுவாரு. அதில கிடைக்கிற சந்தோஷத்தினாலதான் நான் உயிரோடயே இருக்கேன்!" என்றாள் கார்த்திகா.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 122
கனவுநிலையுரைத்தல்
குறள் 1213
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.

பொருள்:
நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை. அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போ...