Thursday, January 31, 2019

1087. அழகை மூடும் திரை

கதிரின் நண்பன் சின்னையன் திருவிழாவுக்குப் போகலாம் என்று அழைத்தபோது கதிர் அவ்வளவு உற்சாகம் காட்டவில்லை. ஆயினும் மறுக்க முடியாமல் ஒப்புக் கொண்டான்.

சின்னையனை அழைத்துப்போக அவன் வீட்டுக்குச் சென்றபோது கதிருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. சின்னையன் வீட்டுக்கு வந்திருந்த அவன் உறவுக்காரப் பெண் சுமதியும் திருவிழாவுக்கு வரக் கிளம்பித் தயாராக இருந்தாள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு சின்னையனுடன் அவள் தெருவில் நடந்து போனபோது அவளைக் கதிர் பார்த்தான். பார்த்ததுமே சட்டென்று அவளிடம் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. ஆயினும், நண்பன் வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருப்பவள் என்பதாலும், அவளைப் பற்றிய எந்த விவரமும் தெரியாதென்பதாலும்  அவளைப் பற்றி மேலே நினைக்காமல் இருந்தான்.

சின்னையன் கதிரை சுமதிக்குத் தன் நண்பன் என்று அறிமுகப்படுத்தியதும், "அன்னிக்குத் தெருவில நடந்து போகச்சே, அவரு வீட்டு வாசல்ல நின்னுக்கிட்டிருந்தாரே!" என்றாள் சுமதி அவனைப் பார்த்துச் சிரித்தபடி.

கதிரின் உடலில் குபீரென்று ஒரு உணர்வு பரவியது. அவளும் என்னை கவனித்திருக்கிறாள்! இதற்குப் பிறகு, கரை கடந்த உற்சாகத்துடன் கதிர் அவர்கள் இருவருடன் திருவிழாவுக்குச் சென்றான்.

திருவிழாவில் பல சந்தர்ப்பங்களில் தனக்கு கதிர் மீது இருக்கும் ஈடுபாட்டை சுமதி வெளிப்படுத்தினாள். மௌனமான பார்வை, காரணம் இல்லாமல் அவனைப் பார்த்துச் சிரித்தது, உரிமையான கிண்டல் என்று பல விதங்களில் அவனுக்கு மட்டும் புரியும்படி அவள் தன் விருப்பத்தை வெளிப்படுத்தியதாக அவனுக்குத் தோன்றியது.

"இந்த வருஷம் திருவிழாவில் ஒரு விசேஷம். வெளியூர்லேந்து யானை வரவழைச்சிருக்காங்க" என்றான் சின்னையன்.

"அப்படியா? எங்கே? நாம பாக்கவே இல்லையே?" என்றாள் சுமதி.

"கொஞ்ச நேரத்தில சாமி ஊர்வலம் வரும். அப்ப சாமிக்கு முன்னே யானை வரும்."

"அப்ப, இப்ப எங்க இருக்கு யானை?"

"மறைவா ஒரு இடத்தில வச்சு அலங்காரம் பண்ணிக்கிட்டிருக்காங்க" என்றான் சின்னையன்.

"யானைக்குக் கூட அலங்காரம் பண்ணுவாங்களா என்ன?" என்றாள் சுமதி.

"ஏன், பொண்ணுங்க மட்டும்தான் அலங்காரம் பண்ணிக்கணுமா?" என்றான் கதிர்.

"வேணும்னா, நீங்களும் பண்ணிக்கங்களேன்! யாரு வேண்டான்னாங்க?" என்றாள் சுமதி. மறுபடி அவனைப் பார்த்து ஒரு சிரிப்பு!

அவர்களை கவனிக்காமல் முன்னே பார்த்துக் கொண்டிருந்த சின்னையன், "உங்க சண்டையை நிறுத்திட்டு அங்கே பாருங்க. யானை வந்துக்கிட்டிருக்கு!" என்றான்.

"அட! எவ்வளவு அழகா நடந்து வருது!" என்ற சுமதி, "ஆமாம். நீ சொன்ன மாதிரி அலங்காரம்லாம் பண்ணி இருக்காங்க.  அது என்ன நெத்தியை மறைக்கிற மாதிரி ஏதோ ஜரிகைத் துணி மாதிரி கட்டி இருக்காங்க?" என்றாள்.

"அது பேரு முகபடாம். யானையோட மத்தகத்தில - அதாவது நெத்தியிலேந்து தும்பிக்கை துவங்கற இடம்வரை உள்ள பகுதியில - அதைக் கட்டுவாங்க" என்றான் கதிர்.

"மதம் பிடிச்ச யானைக்குத்தானே இப்படி முகபடாம் போடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்?"

"ஆமாம். மதம் பிடிச்ச யானை தறி கேட்டு ஓடி எல்லாரையும் தாக்கக் கூடாதுங்கறதுக்காக, அதோட பார்வையைக் கொஞ்சம் குறைக்கறதுக்காக முகபடாம் போடுவாங்க. ஆனா அலங்காரத்துக்காகவும் போடுவாங்க."

"யானைக்கு மத்தகம்தான் அழகு. அதைத் துணியைப் போட்டு மறைப்பாங்களா?"

"சில சமயம் அழகை மறைக்க வேண்டியிருக்கும். அப்பத்தான் பாக்கறவங்களுக்கு மதம் பிடிக்காம இருக்கும்!" என்றபடியே கதிர் சிரிப்புடன் சுமதியைப் பார்த்தான்.

சுமதி சேலைத் தலைப்பால் தன்னை இன்னும் சற்று அதிகமாக மூடிக் கொண்டாள்.

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 109
தகையணங்குறுத்தல் (தலைவியின் அழகு தலைவனை வருத்துதல்)

குறள் 1087
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்

பொருள்:
அந்த மங்கை தன் நிமிர்ந்த மார்பகங்களின் மீது அணிந்திருக்கும் உடை மதம் பிடித்த யானையின் நெற்றியில் அணிவிக்கப்பட்ட முகபடாம் போன்று உள்ளது.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

Saturday, January 19, 2019

1086. கண்ணே காஞ்சனா!

"பியூட்டி பார்லருக்குப் போறியா? ஏன், அங்கே யாருக்காவது உன் அழகில  கொஞ்சம் கடன் கொடுக்கப் போறியா?" என்றான் குமரன்.

"இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல!" என்றாள் காஞ்சனா.

"இங்க பாரு, காஞ்சனா! உண்மையாத்தான் சொல்றேன். நீ பியூட்டி பார்லர்க்குப்போறது அனாவசியம். நீ ஏற்கெனவே அழகாத்தானே இருக்கே!"

"உலகத்தில எவ்வளவு விஷயங்கள் மாறினாலும், ஆண்கள் இப்படி எல்லாம் பேசிப் பெண்களை ஏமாத்தறது இன்னும் மாறல!"

"எவ்வளவுதான் பெண்கள் அழகுப் பொருட்கள் இல்லைன்னு வீர வசனம் பேசினாலும், பெண்கள் தங்களை அழகு படுத்திக்கறதை நிறுத்தறதில்ல."

"நான் பியூட்டி பார்லருக்குப் போறதில உனக்கு என்ன பிரச்னை?"

"என்ன பிரச்னையா? ஏற்கெனவே நான் உன் அழகில மயங்கி சுய சிந்தனை இல்லாம இருக்கேன்னு என் நண்பர்கள் எல்லாம் சொல்றாங்க. இதில நீ பியூட்டி பார்லருக்குப் போய் இன்னும் கொஞ்சம் அழகா ஆகிட்டு வந்தா என் கதி என்ன ஆகிறது?"

"சரி. நான் பர்பெக்ட்டா இருக்கேன். ஒரு இம்ப்ரூவ்மென்ட் கூடத் தேவையில்லேன்னு உன்னால சொல்ல முடியுமா?"

"அது எப்படிச் சொல்ல முடியும்? உன் முன் பல்லு வளைஞ்சிருக்கு, மூக்கு நீளமாயிருக்கு, உதடு வீங்கின மாதிரி இருக்கு..."

காஞ்சனா கையை ஓங்கியபடி, "ஏய்!இப்பத்தானே, நான் பியூட்டி பார்லருக்கே போக வேண்டாம், என் அழகில நீ மயங்கி விழுந்து கிடக்கே அப்படின்னேல்லாம்  சொன்னே?" என்றாள், பொய்க் கோபத்துடன்.

"இந்த அழகுக்கே மயங்கிட்டேன்னு சொன்னேம்மா, ரதி தேவி! அதோட நான் சொன்ன விஷயங்களையெல்லாம் பியூட்டி பார்லர்ல போய் மாத்த முடியாதே!"

"இரு! நான் போயிட்டு வந்து வச்சுக்கறேன்!"

"அப்ப, பியூட்டி பார்லருக்குப் போகத்தான் போறியா? "

"ஆமாம்."

"அப்ப, எனக்காக ஒரே ஒரு மாறுதல் பண்ணிக்கிட்டு வரியா?"

"என்ன, இந்த மூஞ்சியை விட்டுட்டு வேற மூஞ்சியை வச்சுக்கிட்டு வரணுமா?"

"ம்..அப்படிச் செய்ய முடிஞ்சாத்தான் நல்லா இருக்குமே! அதெல்லாம் வேண்டாம். உன் புருவம் வளைவா இருக்குல்ல, அதை நேராக்கிக்கிட்டு வந்துடேன்!"

"ஏன்? புருவம் வளைஞ்சு இருக்கறதுதானே அழகும்பாங்க?"

"அழகுதான்! ஆனா, ஆபத்தா இல்ல இருக்கு எனக்கு?"

"ஆபத்தா? எப்படி?"

"உன் கண்ணைப் பாத்தாலே எனக்கு நடுக்கமா இருக்கு. இப்ப உன் புருவம் வளைஞ்சு இருக்கறதால, உன் பார்வை லென்ஸால ஃபோகஸ் பண்ணின  மாதிரி என் மேல நேராப் பாயுது! புருவம் நேரா இருந்தா ஓரளவுக்காவது உன் கண்களை மறைச்சு, உன் பார்வையோட உக்கிரத்திலேந்து என்னைக் காப்பாத்துமே, அதுக்குத்தான்!" என்றான் குமரன்.

இதற்கு பதில் சொல்லாமல் அவனை நேராகப் பார்த்த காஞ்சனாவின் பார்வையின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் அங்கிருந்து நகர்ந்தான் குமரன்  .
காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 109
தகையணங்குறுத்தல் (தலைவியின் அழகு தலைவனை வருத்துதல்)

குறள் 1086
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.

பொருள்:
இவள் வளைந்த புருவங்கள் நேராக இருந்து இவள் கண்களை மறைத்தால் இவள் கண்கள் என்னை நடுங்க வைக்கும் துன்பத்தை எனக்குச் செய்யாமல் இருக்குமே!
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

Friday, January 4, 2019

1085. இரண்டு கண்கள், மூன்று செயல்கள்

"டேய் கண்ணா,சிங்கப்பூர்லேந்து வந்திருக்கற ஒருத்தர் ஒரு த்ரீ இன் ஒன்  வாங்கிட்டு வந்திருக்காரு. புது செட். நல்ல கம்பெனி. குறைச்ச விலைக்கு வாங்கலாம். நீ வாங்கிக்கறயா?" என்றான் வையாபுரி.

"த்ரீ இன் ஒன்னா? நம்ம ஊர்ல சில பேரு டூ  இன் ஒன் வச்சிருக்காங்க. பாத்திருக்கேன். அது என்ன த்ரீ இன் ஒன்?" என்றான் கண்ணன்.

"இப்ப புதுசா சி டின்னு வந்திருக்கில்ல, சின்ன கிராமஃபோன்  ரிகார்டு மாதிரி? புதுப் பாட்டெல்லாம் இப்ப சி டிலதானே வருது? சிடி,  டேப், ரேடியோ மூணும் சேந்ததுதான் த்ரீ இன் ஒன்!" என்று விளக்கினான் வையாபுரி.

"எனக்கு எதுக்கு அதெல்லாம்? அதோட நான் பழைய பாட்டு கேக்கற ஆளு. எனக்கு எதுக்கு சிடில்லாம்?"

"பழைய பாட்டெல்லாம் கூட சிடில வருதுடா. அவரே சிங்கப்பூர்லேந்து எம் ஜி ஆர் பாட்டு, சிவாஜி பாட்டு, சுசீலா பாட்டுன்னு அஞ்சாறு பழைய பாட்டு  சிடி வச்சிருக்காரு. கொஞ்ச நாள்ள இந்த சிடி எல்லாம் இங்கேயும் வர ஆரம்பிச்சுடும். நீதான் சரக்குப் பிடிக்க வாரா வாரம் மாயவரத்துக்குப் போவியே, அங்கேந்து சிடில்லாம் வாங்கிட்டு வரலாம்"  என்ற வையாபுரி, அவன் காதருகே வந்து, "இந்தசெட்டை நீ எடுத்துக்கிட்டுப் போயி, உன் ஆளுக்கு சிடியில் பாட்டுப் போட்டுக் காட்டினேன்னா, அவ எவ்வளவு நேரம் வேணும்னாலும் உன்கிட்ட பேசிக்கிட்டிருப்பாடா!" என்றான்.

"போடா!" என்றான் கண்ணன் சிரித்தபடி.

சாலையிலிருந்து சற்றுத் தள்ளி, செடிகள் அடர்ந்த பள்ளமான இடத்தில் கண்ணனுக்கு எதிரே அமர்ந்து கொண்டாள் காவேரி.

"ஆமாம், பொம்பளைங்கல்லாம் ஏன் ஆம்பளைங்க முகத்தைப் பாக்க வெக்கப்படறாங்க?" என்றான் கண்ணன்.

"அது வெட்கம் இல்ல கண்ணா! உங்க மேல உள்ள பரிதாபம்!" என்றாள்  காவேரி.

"எதுக்கு பரிதாபம்?" என்ற கண்ணன், "அதுக்கு முன்ன ஒரு விஷயம் சொல்லிடு. நீ என்னைக் கண்ணான்னு செல்லமாக் கூப்பிடறியா, இல்ல என் பேரைச் சொல்லிக் கூப்பிடறியா?" என்றான்.

"எப்படி வேணும்னா வச்சுக்க கண்ணா!" என்ற காவேரி,
"உங்க மேல பரிதாபப் பட்டுத்தான் நாங்க உங்களைப் பாக்காம இருக்கோம். ஏன்னா, எங்க பார்வையை நீங்க தாங்க மாட்டீங்க!" என்றாள்.

"அது சரிதான். நீ என்னை நேரா பாக்கறது எப்பவாவதுதான். ஆனா ஒவ்வொரு தடவையும் நீ என்னைப் பாக்கறச்சே சிவபெருமான் நெத்திக் கண்ணைத் திறந்து பாக்கற மாதிரி இருக்கு!"

"ஏன், நான்  உன்னைப் பாத்தா உன் உடம்பு எரியுதா என்ன?"

"அப்படிச் சொல்லல. ஆனா எதோ பண்ணுது. அதைத் தாங்க முடியல. எழுந்து  ஓடிடலாம் போல இருக்கு!"

"அப்படியா? சரி, நான் இப்ப உன்னை நேராப் பாக்கறேன். நீ எழுந்து ஓடறியான்னு பாக்கலாம்."

"ஐயையோ! எழுந்து ஓடறதுக்கா உன்னைப் பாக்க வந்திருக்கேன்? சரி, பாரு. என் மேல கொஞ்சம் கருணை வச்சு, என்னை எரிச்சுட்டாம பாரு" என்றான் கண்ணன்.

அவனை நேராகப் பார்த்த காவேரி, "என்ன கண்ணா இது? தலையை நல்லா படிய வார மாட்டியா? மூஞ்சில மூணு நாள் தாடி! உன்  சட்டை கலர் உனக்குப் பொருந்தவே இல்லை. பழுப்பு ஏறின வேட்டி. வேட்டி கட்டிக்கிட்டு கால்ல ஏன் பூட்ஸ் போட்டுக்கிட்டிருக்க?" என்றாள்.

"ஏண்டி, எதோ என் மூஞ்சியைப் பாருன்னு சொன்னா, ஒரு பார்வையிலேயே தலையிலேந்து கால் வரையிலும் பாத்துட்டியே. நான் இவ்வளவு நேரம் உன்னைப் பாத்துக்கிட்டிருக்கேன், உன் புடவை என்ன நிறம்னு கூட கவனிக்கல."

"அதான் கண்ணா ஆம்பளை பாக்கறதுக்கும், பொம்பளை பாக்கறதுக்கும் உள்ள  வித்தியாசம்! நாங்க ஒரு பார்வையிலேயே மொத்தமாப் பாத்துடுவோம். எங்க பார்வை அவ்வளவு வேகமா ஓடும்."

"நல்ல வேளை சொன்னியே! ஒங்கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும் போலருக்கு. ஆமாம், ஏன் இப்படி அடிக்கடி கண்ணைத் திருப்பி இங்கியும் அங்கியும் பாத்துக்கிட்டிருக்கே?"

"யாராவது நம்பளைப் பாத்துடுவாங்களோன்னு பயம். அதான் யாராவது வரங்களான்னு பாத்துக்கிட்டிருக்கேன்."

"பாத்தா என்ன, அதான் நாம கல்யாணம் பண்ணிக்கப்போறமே?"

"அதுக்காக பயப்படலை கண்ணா!  நாம பழகறதை மத்தவங்க பாத்தா வெக்கமாவும் சங்கடமாவும்தானே இருக்கும்?" என்றாள் காவேரி.

"வேடிக்கையா இருக்கு காவேரி. உன் கண் என்னை வாட்டி எடுக்குது. ஆனா அதுவே பயப்படவும் செய்யுது! போறாததுக்கு, வேகமா அங்கேயும் இங்கேயும் ஓடுது. என் நண்பன் வையாபுரிகிட்ட சொல்லணும்" என்றான் கண்ணன்.

"அவர்கிட்ட என்ன சொல்லப்போற?" என்றாள்  காவேரி மருட்சியுடன்.

"அவன் என்னை த்ரீ இன் ஒன் வாங்கச் சொல்லிக்கிட்டிருக்கான். என்கிட்டயே ஒரு த்ரீ இன் ஒன்  இருக்குன்னு சொல்லப் போறேன்."

"த்ரீ இன் ஒன்னா?"  செயல்கள்

"ஆமாம். மூணு விதமா செயல்படற உன்னோட பார்வை!" என்றான் கண்ணன்."

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 109
தகையணங்குறுத்தல் (தலைவியின் அழகு தலைவனை வருத்துதல்)

குறள் 1085
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து..

பொருள்:
என்னை வருத்துவதால், உயிர் குடிக்கும் கூற்றம், என் மீது பார்வை ஓடுவதால் இது  கண், மருட்சியுடன் இருப்பதால்  மான் என்று  இந்தப் பெண்ணின் பார்வை இந்த மூன்று இயல்புகளையும் கொண்டிருக்கிறது.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை. அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போ...