Sunday, August 27, 2023

1233. அம்மா வீட்டுக்கு வந்தபோது...

"புருஷன் பிரிஞ்சு போன அப்புறமும் தனியா உன் வீட்டிலதான் இருப்பேன்னு பிடிவாதம் பிடிச்சுக்கிட்டிருந்தே. இப்பவாவது அம்மா வீட்டுக்கு வரணும்னு தோணிச்சே!" என்றபடியே மகள் ரேவதியை வரவேற்றாள் துர்க்கா.

மாலையில் பள்ளியிலிருந்து திரும்பிய ரேவதியின் தங்கை ரோகிணி ஓடி வந்து அக்காவை அணைத்துக் கொண்டாள்.

சற்று நேரம் கழித்து, ரேவதி வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது, உள்ளே ரோகிணி அம்மாவிடம் மெல்லிய குரலில் பேசியது ரேவதியின் காதில் விழுந்தது.

"ஏம்மா, அக்கா இவ்வளவு இளைச்சுப் போயிட்டா? தோள் எலும்பெல்லாம் தெரியுது. அவளைப் பின்னாலேந்து கட்டிக்கிட்டப்ப அவ தோள் எலும்பு என் கையில அழுந்தி வலிக்கிற மாதிரி இருந்தது!" என்றாள் ரோகிணி.

"அவ புருஷன் ஊருக்குப் போனதிலேந்து அவரை நினைச்சு நினைச்சு ரேவதி ரொம்ப இளைச்சுட்டா. எனக்கே அவளைப் பார்த்தப்ப, நம்ம ரேவதியா இவன்னு தோணிச்சு. என்ன செய்யறது? அவ புருஷன் திரும்பி வந்தப்புறம்தான் அவ பழையபடி ஆவா!" என்றாள் துர்க்கை.

கணவன் அவளுடன் இருந்தபோது, அவன் அடிக்கடி அவள் தோளில் தலையைச் சாய்த்துக் கொண்டு, "எவ்வளவு இதமா இருக்கு, மெத்தையில தலையை வைச்சுக்கிட்ட மாதிரி!" என்று சொன்னது ரேவதிக்கு நினைவு வந்தது.

'இப்போது சிறுமியான தங்கை கூட கவனிக்கும்படித் தோள் எலும்புகள் தெரியும் அளவுக்கு இளைத்து விட்டேனா என்ன?'

தெருவில் செல்லும் சிலர் தன்னை உற்றுப் பார்த்து விட்டுப் போவதாக ரேவதிக்குத் தோன்றியது.

ஒருவேளை அவர்கள் தன் தோள்கள் இளைத்திருப்பதைப் பார்த்துத் தன் காதலன் தன்னை விட்டுப் பிரிந்திருப்பதைத் தெரிந்து கொள்வார்களோ என்ற அச்சத்தில் தன் சேலைத் தலைப்பால் தோள்களை நன்றாக மூடிக் கொண்டாள் ரேவதி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 124
உறுப்பு நலனழிதல்
குறள் 1233
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.

பொருள்:
கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், ( இப்போது மெலிந்து) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவை போல் உள்ளன.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1232. ஏன் இப்படிக் கேட்கிறார்கள்?

பார்ப்பவர்கள் எல்லாம் இதையே கேட்கிறார்கள்.

"என்ன பூங்கொடி, உன் காதலனோட ஏதாவது பிணக்கா?"

"அதெல்லாம் இல்லையே!" என்று பூங்கொடி சமாளித்தாலும், கேள்வியில் இருந்த உண்மை அவள் மனதை நெருப்பாகச் சுட்டது.

ஆனால் ஏன் இப்படிக் கேட்கிறார்கள் என்பது பூங்கொடிக்குப் புரியவில்லை, அவள் காதலனோடு பிணக்கு ஏற்பட்டிருப்பது அவள் முகத்தில் எழுதப்பட்டிருக்கிறதா என்ன?

அவள் மீது அன்பைப் பொழிந்து வந்த கந்தமாறன் ஏனோ சில நாட்களாக அவளிடம் பராமுகமாக இருக்கிறான். அவளை வந்து பார்ப்பதில்லை. அவன் வீட்டுக்கும், அவன் வேலை செய்யும் இடத்துக்கும் ஓரிரு முறை சென்று அவனைப் பார்க்க பூங்கொடி முயன்றபோதும் அவன் ஏதோ சாக்குச் சொல்லி அவளைப் பார்ப்பதைத் தவிர்த்து விட்டான்.

விளையாட்டுப் போல் இரண்டு மாதங்கள் ஓடி விட்டன.

கந்தமாறன் மீண்டும் தன்னிடம் முன்பு போல் அன்பு காட்டுவானா?

"என்னடி? உன் காதலனோட உனக்கு என்ன பிணக்கு?" என்றாள் பூங்கொடியின் தோழி கலையரசி.

பொங்கி வந்த அழுகையைச் சட்டென்று மறைத்துக் கொண்ட பூங்கொடி, "அதெல்லாம் ஒன்றுமில்லை!" என்றாள்.

"நீ ஒண்ணுமில்லைன்னு சொன்னாலும் உன் கண் காட்டிக் கொடுக்குதே!"

"என்ன காட்டிக் கொடுக்குது?"

"உன் கண்கள்ள பசலை வந்து வெளுத்துப் போயிருக்கு. கண்ணில எப்பவும் ஈரம் கசிஞ்சுக்கிட்டே இருக்கு. நீ கண்ணாடியைப் பாக்கறதே இல்லையா"

ஓ! இதை வைத்துத்தான் எல்லாரும் என்னிடம் கேட்கிறார்களா? அட, காட்டிக் கொடுத்த கண்களே!

"சொல்லுடி!" என்று கலைச்செல்வி அவள் முகவாயைப் பிடித்துக் கேட்டபோது, பூங்கொடியின் கணிகளிலிருந்து நீர் பெருக்கெடுத்து வழிய ஆரம்பித்தது.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 124
உறுப்பு நலனழிதல்
குறள் 1232
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.

பொருள்:
பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை என்பதைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன.

குறள் 1233 (விரைவில்)
அறத்துப்பால்                                                               பொருட்பால்

Friday, August 25, 2023

1231. மலர்களின் சிரிப்பு!

"பொதுவாகப் பெண்களோட கண்ணை மலருக்கு ஒப்பிடுவாங்க" என்றான் ராசேந்திரன்.

"ஆமாம். குவளை மலருக்கு ஒப்பிடுவாங்க!" என்றாள் குமுதினி.

"குவளை மலர் மட்டும் இல்ல, தாமரை மலர், அல்லி மலர் மாதிரி வேறு சில மலர்களுக்கும் ஒப்பிடுவாங்க. ஆனா உன் கண்களை நான் மலர்களுக்கு ஒப்பிட மாட்டேன்!"

"ஏன், என்னோட கண்கள் அந்த அளவுக்கு அழகா இல்லையா?" என்றாள் குமுதினி சற்றே கோபத்துடன்.

"இல்லை. உன் கண்களோட ஒப்பிடற அளவுக்கு அந்த மலர்களுக்கு அழகு போதாது!"

"இது ரொம்ப மிகையா இருக்கே!"

"மிகை இல்லை, உண்மைதான். இந்த மலர்களைப் பார். உன் கண்களைப் பார்த்துட்டு அந்த அளவுக்கு நாம அழகா இல்லையேன்னு அதெல்லாம் தலை குனிஞ்சக்கிட்டு இருக்கிறதைப் பார்!"

பார்த்தாள். ஆமாம் அவை தலை குனிந்திருப்பது போல்தான் தோற்றமளித்தன. அதற்குக் காரணம் காற்றின் அழுத்தமும், அவற்றின் எடையின் அழுத்தமும்தான் என்பது குமுதினிக்குத் தெரியும். ஆயினும் கணவனின் புகழ்ச்சி அவளுக்கு மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அளித்தது.

ந்த அனுபவம் இன்று பழங்கதை ஆகி விட்டது.

கொருள் ஈட்டுவதற்காக ராசேந்திரன் வெளிநாட்டுக்குச் சென்றபின், அவன் கொடுத்து விட்டுப் போன பிரிவுத் துன்பத்தால் அழுது அழுது அவள் கண்கள் வீங்கி விட்டன.

தன் வீட்டுத் தோட்டத்தில் வந்து நின்று, செடிகளில் பூத்துக் குலுங்கிய மலர்களைப் பார்த்தாள் குமுதினி.

அன்று அவளுடைய கண்களை ஏறெடுத்துப் பார்க்க முடியாமல் தலை குனிந்த மலர்களா இவை?

இன்று அந்த மலர்கள் நிமிர்ந்து கம்பீரமாக அவள் கண்களைப் பார்த்தன. அழுது வீங்கியதால் அழகிழந்து விட்ட அவள் கண்களைப் பார்த்து அந்த மலர்கள் ஏளனமாகச் சிரித்தது போல் தோன்றியது குமுதினிக்கு.

அவற்றின் ஏளனப் பார்வையைச் சந்திக்க முடியாமல் தன் கண்களை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் குமுதினி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 124
உறுப்பு நலனழிதல்
குறள் 1231
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.

பொருள்:
பிரிவுத் துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணி விட்டன.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Friday, August 4, 2023

1230. தோழியின் அழைப்பு

"அல்லி! உன் தோழி கலை வந்திருக்கா பாரு!" என்று கூவினாள் அல்லியின் தாய் சங்கரி.

அல்லி அறையிலிருந்து வெளியே வந்ததும், "வாடி! கொஞ்சம் வெளியில போயிட்டு வரலாம்" என்று அழைத்தாள் கலை.

"இந்த நேரத்திலேயா? வேண்டாம்" என்றாள் அல்லி தலையை பலமாக ஆட்டியபடி.

"ஏண்டி, நான் என்ன உன்னை உச்சி வெயில் நேரித்திலேயா வெளியே கூப்பிடறேன்? வெய்யில் அடங்கிப் போன சாயங்கால வேளையிலதானே கூப்பிடறேன்?" என்றாள் கலை.

"உச்சி வெயில் நேரத்தில கூப்பிட்டா கூட அவ வெளியே வருவா. சாயங்கால நேரத்தில வர மாட்டா. உள்ளேயே முடங்கிக் கிடக்கறா. நான் எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டேன். கேக்கறதில்லை" என்றாள் சங்கரி உள்ளிருந்தே.

அல்லியின் கையைப் பரிவுடன் பற்றிக் கொண்ட கலை, "உன் பிரச்னை எனக்குப் புரியுது அல்லி. என் வீட்டுக்காரர் என்னை விட்டுப் பிரிஞ்சபோது எனக்கும் இப்படித்தான் இருந்தது" என்றாள்.

"உனக்கு எப்படி இருந்ததோ தெரியல. ஆனா ஒவ்வுரு நாளும் மாலைப் பொழுது வந்தா எனக்கு என் உயிரே போற மாதிரி இருக்கு. அதனாலதான் எழுந்து வரக் கூட சக்தி இல்லாம படுத்துக் கிடக்கேன். இன்னிக்கு நீ வந்ததால எழுந்து வந்தேன். நீ என்னன்னா என்னை வெளியே வரச் சொல்றே!"

கலை பேசாமல் இருந்தாள்.

"ஆனா எனக்கு இது வேண்டியதுதான்!" என்றாள் அல்லி.

"என்னடி சொல்ற?"

"அவர் என்னை விட்டுப் பிரிஞ்சு போனப்பவே இந்த உயிர் போயிருக்க வேண்டாமா? அப்படிப் போகாம இப்ப  செத்துச் செத்துப் பிழைக்கற மாதிரி தினமும் மாலை நேரத்தில என் உயிர் போயிட்டு போயிட்டு வருது!" என்று அல்லி கூறியபோது அவள் கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் தன் சேலைத் தலைப்பால் துடைத்தாள் கலை.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 123
பொழுது கண்டிரங்கல்
குறள் 1230
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.

பொருள்:
பொருள் ஈட்டுவதற்கச் சென்றுள்ள காதலரைப் பிரிந்தபோது மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை. அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போ...