Sunday, November 28, 2021

1138. தளபதியின் தடுமாற்றம்!

"இந்திர குமாரி! என்ன ஒரு பெயர்!" என்றான் படைத்தலைவன் கார்த்தவீரியன்.

"பெயரைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள் படைத்தலைவரே! என் பெயர்தான் இந்திரகுமாரி. ஆனால் என் தந்தை இந்திரர் அல்ல, உங்களைப் போல் போர்க்கலைகள் தெரிந்த தந்திரரும் அல்ல. சிறு இயந்திரங்களை வைத்துக்கொண்டு படைக்கலன்களைத் தயாரிக்கும் ஒரு எந்திரர், அவ்வளவுதான்!" என்றாள் இந்தரகுமாரி.

"உன் பேச்சைக் கேட்டால் உன் தந்தை தமிழில் தேர்ந்தவர் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. படைப்புக் கலையிலும் தேர்ந்தவர். போர்க்களத்தில் எனக்குத் துணை செய்ய இரும்பாலான படைக்கலன்களை உருவாக்குவது போல், வாழ்க்கையில் எனக்குத் துணை நிற்க பொன்னாலான இந்தக் கலத்தையும் அல்லவா உருவாக்கி இருக்கிறார்!"

கார்த்தவீரியனின் சொற்கள் இந்தரகுமாரிக்குப் புல்லரிப்பை ஏற்படுத்தின.

"என் தந்தையிடம் எப்போது இந்தப் பொற்கலத்தைக் கேட்டுப் பெறப் போகிறீர்கள்?"

"நான் ஒரு படைத்தலைவனாக இருந்தாலும் இது போன்ற விஷயங்களில் அதிகத் தயக்கம் உள்ளவன். உன் தந்தையிடம் பேச கொஞ்சம் தைரியத்தைத் திரட்டிக் கொள்ள சிறிது அவகாசம் கொடு."

"போருக்குப் போ என்று அரசர் உத்தரவிட்டால் கணத்தில் சைனியத்தைத் திரட்டும் ஆற்றல் பெற்ற தளபதி தைரியத்தைத் திரட்ட அவகாசம் கேட்கிறார்! உங்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது படைத்தலைவரே!" என்று சிரித்தாள் இந்தரகுமாரி.

ன்று அரசரைப் பார்க்க அரண்மனைக்குச் சென்ற கார்த்தவீரியனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அரசருடன் அரசி, இளவரசி, அமைச்சர் முதலியோர் இருந்தனர். இளவரசிக்குப் பின்னே அவளுடைய தோழிகள் இருவர் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருத்தி இந்திரகுமாரி!

இவள் இளவரசியின்  தோழி என்று சொல்லவே இல்லையே என்று யோசித்துக் கொண்டடே அரசன் கூறியவற்றை இயந்திரமயமாக் கேட்டுக் கொண்டிருந்தான் கார்த்தவீரியன்.

"நாட்டில் எதிரியின். ஒற்றர்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. அதனால் அரசகுலப் பெண்களுக்கு அதிகப் பாதுகாப்பு தேவைப்படுகிறது. மந்திரிகுமாரி திருமணத்துக்குப் பிறகு தன் கணவன் வீட்டுக்குப் போகப் போகிறாள். அவளுக்கு பலத்த பாதுகாப்பு தேவைப்படுகிறது. எனவே..."

"இந்திரகுமாரியை நானே பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறேன் அரசே!" என்றான் கார்த்தவீரியன்.

ஒரு கணம் அனைவரும் மௌனமாக விழிக்க, இளவரசி திரும்பித் தன் பின்னால் நின்ற இந்திரகுமாரியைப் பார்க்க, அவள் முகம் சிவந்து தலையைக் குனிந்து கொண்டாள். 

இதைப் பார்த்த அரசர் உட்பட அனைவரும் கார்த்தவீரியனின் காதலைப் புரிந்து கொண்டவர்களாக  கொல்லென்று சிரித்தனர்.

மந்திரிகுமாரி என்று சொல்வதற்கு பதிலாக இந்திரகுமாரி என்று தன்னை அறியாமல் சொல்லித் தன் உள்ளக் கிடக்கையை அனைவர் முன்னும் வெளிப்படுத்தி விட்டது கார்த்தவீரியனுக்கு சற்று தாமதாமாகத்தான் புரிந்தது. 

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 114
நாணுத்துறவுரைத்தல்   

குறள் 1138
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.

பொருள்:
இவர் மனத்தில் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்; மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே!.

அறத்துப்பால்                                                                பொருட்பால்

Saturday, November 27, 2021

1137. ஊர்மிளையின் கோபம்?

"என்னைப் பிரிந்து கடல் கடந்து சென்று பொருள் ஈட்டத்தான் வேண்டுமா?" என்றாள் ஊர்மிளை.

"திருமணத்துக்குப் பிறகு நாம் மகிழ்ச்சியாக வாழப் பொருள் வேண்டாமா? நான் ஒரு வணிகன். பெரும் பொருள் ஈட்ட ஒரு வாய்ப்புக் கிடைக்கும்போது அதைத் தவற விடலாமா?" என்றான் வளவன்.

"இங்கேயே உன் வணிகம் நன்றாகத்தானே நடந்து கொண்டிருக்கிறது! நீ இங்கே ஈட்டும் பொருள் நம் இருவருக்கும் போதாதா?"

"நம் இருவருக்கும் போதும். ஆனால் நமக்குப் பிறக்கப் போகும் இருபது குழந்தைகளுக்கும் போதுமா?"

"இருபது குழந்தைகளா! அப்படியானால் எனக்குத் திருமணமே வேண்டாம்!"

"சரி. இரண்டு என்று வைத்துக் கொள்வோம். ஒரு ஆண்டுதான். ஓடி விடும்! ஓடி வந்து விடுவேன்."

"உனக்கு ஓடி விடும் ஏனென்றால் நீ ஓடிக் கொண்டிருப்பாய்! உன் வரவை எதிர்பார்த்து நாட்களை எண்ணிக் கொண்டிருக்கப் போகும் எனக்கு நாழிகைகள் நகர்வதே நத்தையின் நகர்வு போல்தான் இருக்கும்."

"கவலைப்படாதே! நான் போகும் இடத்திலிருந்து வணிகர்கள் பலர் இங்கே வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அங்கிருந்து வரும் ஒவ்வொரு மரக்கலத்திலும் யார் மூலமாகவாவது ஒரு மடல் எழுதி அனுப்புகிறேன். அவர்கள் மூலமே நீ எனக்கு பதிலும் அனுப்பலாம். அதனால் நாட்கள் நகர்வது கடினமாக இருக்காது."

ளவன் கிளம்பிச் சென்று சுமார் ஒரு மாதம் கழித்து அவனிடமிருந்து ஊர்மிளைக்கு ஒரு மடல் வந்தது. மடலில் தன் அன்பையும், காதலையும் கொட்டி எழுதியிருந்தான் வளவன்.

மடலை ஊர்மிளையிடம் கொடுத்த வணிகர், "இன்னும் 10 நாட்களில் நான் அங்கே திரும்பிச் செல்ல இருக்கிறேன், நீ அவனுக்கு பதில் மடல் எழுதி வை. கிளம்பு முன்  நான் வந்து பெற்றுக் கொள்கிறேன்" என்றார்.

ஆனால் அவர் திரும்பி வந்து கேட்டபோது, "மடல் எதுவும் இல்லை என்று வளவரிடம் சொல்லு விடுங்கள்" என்று சொல்லி விட்டாள் ஊர்மிளை..

மூன்று மாதங்களுக்குப் பிறகு வளவனிடமிருந்து இன்னொரு மடல் வந்தது. இன்னொரு வணிகர் மூலம் தன் இரண்டாவது மடலை அனுப்பி இருந்தான் வளவன். வழக்கமான காதல் வரிகளுக்குப் பிறகு, "நான் உன்னை விட்டுப் பிரிந்த கோபம் உனக்கு இன்னும் தீரவில்லை போலிருக்கிறது.இப்போதாவது கோபம் தீர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன்"  என்று மடலை முடித்திருந்தான் வளவன்.

ஆனால் இந்த முறையும் ஊர்மிளை பதில் மடல் அனுப்பவில்லை.

அதற்குப் பிறகு வளவனிடமிருந்து மடல் எதுவும் வரவில்லை.

ரு ஆண்டுக்குப் பிறகு வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்பிய வளவன் ஊர்மிளாவின் வீட்டுக்கு வந்தான். 

அவனை வரவேற்ற ஊர்மிளையின் தாயிடம், "ஊர்மிளை எப்படி இருக்கிறாள்?" என்றான் வளவன்.

"நீயே போய்ப் பார்!" என்றாள் அவள் விரக்தியான குரலில்.

உள்ளே சென்ற வளவன் அதிர்ந்து போய் நின்றான்.

கயிற்றுக் கட்டிலில் சேலை கட்டப்பட்ட எலும்புக் கூடு போல் படுத்திருப்பது ஊர்மிளாவா?

அறைக்குள் யாரோ வரும் அரவம் கேட்டு விழித்த ஊர்மிளை சட்டென்று எழுந்து கட்டிலின் மேல் அமர்ந்தாள். பிறகு ஏதோ வேகம் வந்தவள் போல் கட்டிலிலிருந்து  விரைந்து சில அடிகள் ஓடி வந்து வளவனை இறுக அணைத்தபடி அவன் மார்பில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள்.

"என்ன ஊர்மிளா, ஏன் இப்படி இளைத்து விட்டாய்? உன் உடம்புக்கு என்ன? என் மடல்களுக்கு ஏன் பதில் மடல் அனுப்பவில்லை? என் மீது அத்தனை கோபமா?" என்றான் வளவன் படபடப்புடன்.

தலையை நிமிர்த்தி வளவனைப் பார்த்த ஊர்மிளா, "கோபமா?  இந்த முகத்தைப் பார்க்காமல் இத்தனை நாள் எப்படி உயிரோடு இருந்தேன் என்று என் மேல்தான் கோபம்!" என்றாள்.

"அது சரி. என் மடலுக்கு பதில் மடல் அனுப்பி இருந்தால் நானும் மடல்கள் அனுப்பிக் கொண்டு இருந்திருப்பேன், அது உனக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும் அல்லவா?"

"நிச்சயமாக  ஆனால் வணிகத்துக்குச் சென்றிருக்கும் நீ வணிகத்தில் கவனம் செலுத்த வேண்டும். உன் முதல் மடலில் பொங்கி வழிந்த காதலைக் கண்டபோது என் பதில் மடல்கள் உன் காதல் நினைவுகளை அதிகமாக்கி உன் மனத்தை வணிகத்தில் முழுமையாக ஈடுபடச் செய்யாமல் செய்து விடும் என்று தோன்றியது. அதனால்தான் உனக்கு மடல் அனுப்பாமல் பிரிவுத் துயரை முழுவதுமாக அனுபவிக்க முடிவு செய்தேன். ஆனால் என் மனதுக்கு இருந்த உறுதி உடலுக்கு இல்லாததால் அது உன் பிரிவால் வாடி இளைத்து விட்டது. இப்போது நீ வந்து விட்டாய் அல்லவா? இனி என் உடல் நிலை தேறி விடும், இப்போதே பருக்க ஆரம்பித்து விட்டேன் என்று நினைக்கிறேன். என் உடை இறுக்கமாகி விட்டது போல் உணர்கிறேன்" என்று சொல்லிச் சிரித்தபடியே வளவனை மீண்டும் இறுகத் தழுவிக் கொண்டாள் ஊர்மிளா.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 114
நாணுத்துறவுரைத்தல்   

குறள் 1137
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்.

பொருள்:
கடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பைப் போல் பெருமை உடைய பிறவி இல்லை.

அறத்துப்பால்                                                                                                   பொருட்பால்

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை. அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போ...