அதிகாரம் 120 - தனிப்படர் மிகுதி (தனியாக வருந்தும் துன்பத்தின் மிகுதி)

திருக்குறள்
காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 120
தனிப்படர் மிகுதி
(தனியாக வருந்தும் துன்பத்தின் மிகுதி) 

1191. விதையில்லா திராட்சை

தோழிகள் உணவு அருந்திக் கொண்டே தங்கள் காதல் அனுபவங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.

"என்னை ஒத்தன் துரத்தித் துரத்திக் காதலிக்கிறான். ஆனா அவனை எனக்குப் பிடிக்கலையே!" என்றாள் ரஞ்சிதா.

"என் விஷயத்திலேயும் முதல்ல அப்படித்தான் ஆச்சு. ரமேஷ் என் பின்னால அலைஞ்சுக்கிட்டிருந்தப்ப, ஆரம்பத்தில எனக்கு அவன் மேல அவ்வளவா ஈடுபாடு இல்ல. ஆனா கொஞ்ச நாள்ள எனக்கும் அவனைப் பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு! இப்ப நாங்க மனம் ஒத்த காதலர்கள்!" என்றாள் பிரியா.

"அவனை விட்டுட்டா வேற ஆள் கிடைக்க மாட்டான்னு நினைச்சு பயந்து அவனோட காதலையே ஏத்துக்கறதுங்கற முடிவுக்கு வந்திருப்ப!" என்றாள் மதுவந்தி.

"ஏய்!" என்று பொய்க் கோபத்துடன் கையை ஓங்கிய பிரியா, "சாப்பிட்டுட்டு வந்து உன்னை வச்சுக்கறேன்!" என்று கூறி, ஓங்கிய கையை இறக்கினாள்.

"நான் உங்களை மாதிரில்லாம் இல்லப்பா. நான்தான் ரகுவை முதல்ல விரும்பினேன். எனக்கு அவர் மேல ஈடுபாடு இருக்குன்னு தெரிஞ்சதும் அவரும் என்னை விரும்ப ஆரம்பிச்சுட்டாரு. இப்ப நாங்க எங்க கல்யாணத்தைப் பத்திப் பேசிக்கிட்டிருக்கோம்!" என்றாள் நந்தினி.

"அதான் எங்களை மாதிரில்லாம் காதலனை அவன் இவன்னு பேசாம ரொம்ப மரியாதையா அவர் இவர்னு பேசறே. சரியான தர்மபத்தினிதான் நீ!" என்ற ரஞ்சிதா, வாணியிடம் திரும்பி, "என்னடி, நாங்கள்ளாம் எங்க காதலைப் பத்திப் பேசிக்கிட்டிருக்கோம். நீ மட்டும் மௌனமா இருக்கே!" என்றாள்.

"அவ ரொம்ப மும்முரமா திராட்சைப் பழத்தை சாப்பிட்டிருக்கறதைப் பாத்தா அந்த திராட்சைப் பழம் ரொம்ப சுவையா இருக்கும் போலருக்கு. அதான் அதோட சுவையில ஈடுபட்டிருக்கா!" என்றபடியே அவள் முன்பிருந்த தட்டிலிருந்து ஒரு திராட்சையை எடுத்து வாயில் போட்டுக் கொண்ட நந்தினி, "ஆஹா! ரொம்ப இனிப்பா இருக்கே! சீட்லெஸ் வேற. எனக்கு திராட்சையில விதை இருந்தாலே பிடிக்காது. சீட்லெஸ் கிரேப்ஸ்தான் பெஸ்ட்!" என்று சொல்லி, இன்னொரு திராட்சையை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள்.

"உனக்கென்ன? உன் காதலும் இந்த விதையில்லா திராட்சை மாதிரி இனிப்பா, தடை இல்லாததா அமைஞ்சிடுச்சு!" என்ற வாணி, 'என்னை மாதிரியா? நான் விரும்பற காதலன் இன்னும் என்னை விரும்பலையேன்னு நான் ஏங்கிக்கிட்டிருக்கேன்! என் சோகத்தை நான் எப்படி உங்ககிட்ட பகிர்ந்துக்க முடியும்?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

எல்லோரையும் பொதுவாகப் பார்த்து, "உங்களை மாதிரியெல்லாம் எங்கிட்ட சொல்றதுக்கு எதுவும் இல்லை!" என்றாள் வாணி.

குறள் 1191
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.

பொருள்:
தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவார்.

1192. மழையினில் நனைந்து...

"நாலு மாசமா அவ பின்னால அலையறேன். திரும்பிக் கூடப் பாக்க மாட்டேங்கறா!" என்றான் விநாயக்.

"அப்ப அவளை விட்டுட்டு வேற பொண்ணைப் பாக்க வேண்டியதுதானே?" என்றான் கல்யாண்.

"இப்படியெல்லாம் பேசினா, உன்னை விட்டுட்டு வேற நண்பனைத் தேடிக்க வேண்டி இருக்கும்!" என்றான் விநாயக் கோபமாக.

"அடேயப்பா! என்னையே தூக்கிப் போட்டுடுவேங்கற! காதல்ல அவ்வளவு ஈடுபாடா? 2023-இல இப்படி ஒரு காதலா?"

"நீ கிண்டலாச் சொன்னாலும் உண்மை அதுதான். உண்மையான காதல்ங்கறது எல்லாக் காலத்திலேயும் இருக்கும். கி.மு. 2023-இல மட்டும்தான் இருந்ததுன்னு நினைக்காதே. கி,பி. 2023-இலேயும் இருக்கு."

"சாரி. எனக்குத் தெரியாது. எனக்கு அந்த அனுபவமே இன்னும் வரல. சரி, ஒருவேளை அவ உன் காதலை ஏத்துக்கலேன்னா?" என்றான் கல்யாண்.

ஒரு நிமிடம் யோசித்த விநாயக், "தெரியல. மழை பேஞ்சாதான் உலகத்தில உள்ள உயிர்கள் எல்லாம் பிழைக்க முடியும். 'ஒருவேளை மழை பெய்யலேன்னா?'ன்னு கேட்டா என்ன பதில் சொல்ல முடியும்?" என்றான்.

"டேய் கல்யாண்! அவ என் காதலை ஏத்துக்கிட்டாடா!" என்றான் விநாயக் உற்சாகமாக.

"வாழ்த்துக்கள்!" என்ற கல்யாண், வெளியே பார்த்து விட்டு, "அன்னிக்கு 'உன் காதலை உன் காதலி ஏத்துக்கலேன்னா?'ன்னு நான் கேட்டதுக்கு, 'மழை பெய்யலேன்னா என்ன ஆகும்?'னு பதில் கேள்வி கேட்ட. இன்னிக்கு உன் காதலி உன் காதலை ஏத்துக்கிட்ட செய்தியை நீ எங்கிட்ட சொல்றப்ப மழை பெய்யுது. நல்ல பொருத்தம்தான்!" என்றான் விநாயக்.

"என் மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்தறதுன்னு தெரியல. மழையில நனையறதை விட மகிழ்ச்சியான விஷயம் வேற என்ன இருக்கு? அதனால நான் கொஞ்ச நேரம் மழையில நனைஞ்சு என் மகிழ்ச்சியைக் கொண்டாடிட்டு வரேன்!' என்றபடியே வெளியே ஓடினான்  விநாயக்.

குறள் 1192
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.

பொருள்:
தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உலகில் வாழ்பவர்களுக்கு மேகம் மழை பெய்து அவர்களைக் காப்பாற்றுதலைப் போன்றது.

(குறிப்பு; இந்தக் குறள் ஒரு பெண்ணைப் பற்றி எழுதப்பட்டிருந்தாலும், இந்த உணர்வு ஒரு ஆணுக்கும் பொருந்தும் என்ற அடிப்படையில் இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது.)

1193. செங்கமலத்தின் செருக்கு!

"செங்கமலத்தோட புருஷன் வியாபாரத்துக்கு வெளியூர் போயிருக்காரு இல்ல?"

"ஆமாம். அதுக்கு என்ன?"

"ஆனா அவளைப் பாத்தா கணவனைப் பிரிஞ்ச வருத்தம் கொஞ்சம் கூட இருக்கறவ மாதிரி தெரியலையே!"

"இல்லையே! வருத்தமாத்தான் இருக்கா. சரியா சாப்பிடறதில்ல, தூங்கறதில்லன்னு அவ அம்மா எங்கம்மாகிட்ட வருத்தப்பட்டு சொன்னாங்களே!"

"அவ அம்மா சொல்றது இருக்கட்டும். நீ அவகிட்ட பேசிப் பாத்திருக்கியா?"

"இல்லை. அவளை எனக்கு அவ்வளவு பழக்கம் கிடையாது. என் அம்மாவுக்கு அவங்க அம்மாவைத் தெரியும். ஒரு தடவை கோவில்ல என் அம்மாகிட்ட பேசினதைக் கேட்டதை வச்சு சொல்றேன்."

"அதானே பாத்தேன்.  நீ செங்கமலத்துக்கிட்ட பேசி இருந்தா உனக்குத் தெரிஞ்சிருக்கும்!"

"நீ பேசினியா? அவ என்ன சொன்னா?"

"ஒரு ஆறுதலுக்காக 'பாவம் உன் புருஷன் உன்னைத் தனியா விட்டுட்டுப் போயிட்டாரே!'ன்னு சொன்னேன். அதுக்கு அவ 'போனா என்ன? ரெண்டு மூணு மாசத்தில வந்துடப் போறாரு. அவரு வியாபாரத்துக்குத்தானே போயிருக்காரு! வீட்டில பொண்டாட்டி இருக்கறப்ப இன்னொரு காதலி வீட்டுக்கா போயிருக்காரு?' அப்படின்னு பதில் சொன்னா. என் புருஷனுக்கு இன்னொரு காதலி இருக்கறதை சொல்லிக் காட்டறாளாம்! எவ்வளவு திமிர் பாத்தியா!"

"உன் புருஷனும், என் புருஷனும் ஊர்ல இருக்கறப்பவும் நம்மகிட்ட அன்பா இருக்க மாட்டாங்க. அவங்க வெளியூர் போயிட்டு வந்தாலும் முதல்ல தங்க காதலி வீட்டுக்குத்தான் போவாங்க. செங்கமலத்தோட கணவனுக்கு அவ மேல அவ்வளவு அன்பு இருக்கு. அவளுக்கு ஏன் திமிர் இருக்காது?"

குறள் 1193
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு.

பொருள்:
தாம் விரும்பும் கணவனால் விரும்பப்பட்ட பெண்ணுக்கே (எப்படியும் விரைவில் அவர் வருவார் என்ற உறுதியினால்) வாழ்வோம் என்னும் செருக்கு, பொருத்தமாக இருக்கும்.

1194. "கொடுத்து வைத்தவள்"

சுகன்யாவுக்குத் திருமணம் ஆனதிலிருந்தே பலரும் அவளிடம் அடிக்கடி கூறும் சொற்கள்: "நீ கொடுத்து வச்சவடி."

எடுப்பான தோற்றம், நல்ல வேலை, வசதியான பெற்றோருக்கு ஒரே பையன் ஆகிய தகுதிகளுடன் சதீஷ் அவளுக்கு மணமகனாக அமைந்தபோது, 'ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த, அதிகம் படிக்காத, வேலைக்குப் போகாத எனக்கு இப்படி ஒரு மாப்பிள்ளை எப்படிக் கிடைத்தார்? அவர் என்னைத் திருமணம் செய்து கொள்ள எப்படிச் சம்மதித்தார்? நான் என்ன அதிர்ஷ்டம் செய்திருக்கிறேனோ!' என்று மலைத்தாள் சுகன்யா.

எதிர்பார்த்தது போலவே சுகபோக வாழ்க்கை. பெரிய வீடு, வீட்டில் சமையல் உட்பட எல்லா வேலைகளுக்கும் ஆட்கள், சுகன்யா எங்காவது போக வேண்டுமென்றால் அவளுக்காக டிரைவருடன்  தயாராக இருக்கும் கார், அதற்கும் மேல் அவளிடம் அன்பு காட்டிய அவள் மாமியார் எல்லாம் அவள் நினைத்துப் பார்க்காத அளவில் அமைந்து விட்டன.

திருமணத்துக்குப் பிறகு சுகன்யா தன் பிறந்த வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் அவளுடைய அம்மா, அப்பா, தங்கை, அண்ணன் ஆகிய அனைவரும், "இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்!" என்று கூறுவார்கள்.

உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் ஆகியோரை அவள் சந்திக்க நேர்ந்தபோதெல்லாம் அவர்களும் இதையேதான் சொன்னார்கள்.

"ஏண்டி, கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆச்சு, இன்னும் உனக்குக் குழந்தை உண்டாகலியே! நீயும் உன் புருஷனும் ஒரு நல்ல டாக்டரைப் பாருங்களேன்!" என்றாள் அம்மா.

"அதெல்லாம் வேண்டாம்மா!" என்றபடியே முகத்தைத் திருப்பிக் கொண்டாள் சுகன்யா - தன் கண்களில் பெருக்கெடுக்கும் கண்ணீரை அம்மா பார்த்து விடக் கூடாதே என்று.

முதலிரவன்று தனக்கு ஒரு நல்ல கணவன் கிடைத்து விட்டான் என்ற களிப்பில் இருந்த தன்னிடம், "இங்கே பாரு சுகன்யா! நான் உன்னை விரும்பிக் கல்யாணம் செஞ்சுக்கல. நான் ஒரு பெண்ணைக் காதலிச்சேன். அவ வேற ஜாதிங்கறதால அவளை நான் கல்யாணம் செஞ்சுக்க என் அம்மா சம்மதிக்கல. அவங்க வற்புறுத்தலாலதான் நான் உன்னைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். வெளியுலகத்துக்கு மட்டும்தான் நாம் கணவன் மனைவி! மத்தபடி நம்ம ரெண்டு பேருக்கு நடுவில எந்த உறவும் கிடையாது!" என்று சதீஷ் கூறி விட்டதையும், அப்போதிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக மனதில் மகிழ்ச்சி இல்லாமல், 'இதுதான் என் விதி போலும்'  என்ற விரக்தியில் வாழ்ந்து கொண்டிருப்பதையும் தன் அம்மாவிடம் சொல்லி அவளுக்கு வருத்தம் ஏற்படுத்த விரும்பவில்லை சுகன்யா.

குறள் 1194
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.

பொருள்:
தாம் விரும்பும் கணவனால் விரும்பப்படாத நிலையில் மனைவி இருந்தால், அவள் தீவினை வசப்பட்டவளே.

1195. விரும்பியது கிடைத்தும்...

"வாழ்த்துக்கள் மலர்! பிடிவாதமா இருந்து, நீ காதலிச்சவரையே கைப்பிடிச்சுட்டியே!"

"அவ காதலிச்சு கைப்பிடிச்சது அவ அத்தை பையனைத்தானே? அதில என்ன ஆச்சரியம் இருக்கு?"

"இருக்கே! மலரோட காதலை அவ அத்தை பையன் அவ்வளவு சுலபமா ஏத்துக்கலையே! ஆனா இவ பிடிவாதமா இருந்து அவரைத் தன் காதலை ஏத்துக்க வச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டா!"

திருமண நிகழ்வில் தனிமையில் சிறிது நேரம் தோழிகளுடன் இருந்தபோது தோழிகள் இவ்வாறு பேசியதைக் கேட்க மலர்விழிக்குப் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.

லர்விழிக்குத் திருமணமாகிச் சில மாதங்கள் கழித்து அவள் நெருஙுகிய தோழி பல்லவி அவளைப் பார்க்க வந்தாள்.

"உன் கல்யாணத்துக்கு வர முடியல. சாரி!" என்றாள் பல்லவி.

"நீதான் கல்யாணம் ஆகி அமெரிக்கா போயிட்டியே, உன்னால எப்படி வர முடியும்"" என்றாள் மலர்விழி.

"ஏண்டி, மும்பையில இருந்துக்கிட்டு சென்னையில நடந்த உன்னோட திருமணத்துக்கு என்னால வர முடியலைங்கறதை சொல்லிக் காட்டறியா?" என்ற பல்லவி, "ஆமாம், ஏன் கிண்டலாப் பேசறப்ப கூட உன் முகம் இவ்வளவு சீரியஸா இருக்கு. உடம்பு சரியில்லையா?" என்றாள்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லையே!" என்று மலர்விழி சொல்லிக் கொண்டிருந்தபோதே, அவளிடமிருந்து ஒரு விம்மல் வெடித்தது. அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல், தோழியின் தோளில் சாய்ந்து தேம்பி அழ ஆரம்பித்தாள் மலர்விழி.

"என்னடி ஆச்சு? ஏன் அழறே?" என்றாள் பல்லவி திகைப்புடன்.

சில விநாடிகள் கழித்து, அழுது ஓய்ந்தபின், மெல்லத் தலையை நிமிர்த்தினாள் மலர்விழி. கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக் கொண்டு இயல்பு நிலைக்கு வர முயன்றாள்.

பல்லவி தோழியின் தோளை ஆதரவுடன் அணைத்தபடி மௌனமாக இருந்தாள்.

"உனக்குத் தெரியுமே என் அத்தை பையன் முரளியைத்தான் நான் கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்னு..." என்று ஆரம்பித்தாள் மலர்விழி.

"ஏன், உனக்கு அவரைக் கல்யாணம் பண்ணிக்கறதில விருப்பம் இல்லையா? உங்க அப்பா அம்மாவோட வற்புறுத்தலினாலதான் ஒத்துக்கிட்டியா?"

"வற்புறுத்தினது நான்தாண்டி! சின்ன வயசிலேந்தே முரளி மேல எனக்கு ஒரு ஈடுபாடு இருந்தது. ஆனா அவருக்கு என் மேல அந்த மாதிரி விருப்பம் எதுவும் இருந்ததில்ல போலருக்கு. என் விருப்பத்தை நான் என் அப்பாகிட்ட சொன்னப்ப, என் அப்பா முரளியைக் கேட்டாரு. ஆரம்பத்தில முரளி தனக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டாரு. ஆனா நான் அவரைத்தான் கல்யாணம் செஞ்சுக்கணும்னு பிடிவாதமா இருந்ததால, என் அப்பா என் அத்தைகிட்ட, அதான் முரளியோட அம்மாகிட்ட, பேசி இருக்காரு. தன்னோட அம்மாவும் வற்புறுத்ததினதால முரளி கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாரு போல இருக்கு. இப்ப கல்யாணத்துக்கப்புறம் ஏதோ கடமைக்காக என்னோட கணவனா இருக்கற மாதிரி நடந்துக்கறாரு. அவருக்கு என்கிட்ட அன்பு இருக்கற மாதிரி தெரியல. திருமண வாழ்க்கையில எனக்குக் கொஞ்சம் கூட மகிழ்ச்சியே இல்ல."

சொல்லி முடித்ததும் மலர்விழியின் கண்களில் மீண்டும் நீர் வழிய ஆரம்பித்தது.

"கவலைப்படாதேடி! கொஞ்ச நாள்ள எல்லாம் சரியாயிடும்!" என்றாள் பல்லவி ஆறுதலாக.

"எனக்கு அப்படித் தோணல!" என்றாள் மலர்விழி.

குறள் 1195
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.

பொருள்:
நாம் காதலித்தவர் நம்மைக் காதலிக்கவில்லை என்றால் நமக்கு எத்தகைய மகிழ்ச்சியைத் தருவார்?

1196. கவிதாவின் மனச்சுமை

தெருவில் காவடி தூக்கிச் சென்றவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் கவிதாவும் அவள் தோழி யாமினியும்.

"காவடி ரொம்ப எடை இருக்கும் இல்ல? எப்படி அதைத் தோளிலே சுமந்துக்கிட்டு நடக்கறாங்க? சில பேரு ஆடிக்கிட்டே வேற நடக்கறாங்க!" என்றாள் கவிதா.

"காவடியோட எடை ரெண்டு பக்கமும் சமமா இருக்கும். மையப்பகுதியை தோளிலே வச்சுக்கிட்டிருக்கறதால, எடையோட அழுத்தம் ரெண்டு பக்கமும் சமாமாப் பரவி இருக்கும். நாம கடையில போய் பொருட்கள் வாங்கிக்கிட்டு வரச்சே, எல்லாப் பொருட்களையும் ஒரே பையில போட்டுத் தூக்கிக்கிட்டு வரதை விட, பொருட்களை ரெண்டு பையில போட்டு ரெண்டு கையிலேயும் பையோட நடந்தா எடையோட அழுத்தம் குறைவா இருக்கும் இல்ல? அது மாதிரி" என்று விளக்கினாள் யாமினி.

கவிதாவின் பார்வை காவடி சுமந்து நடந்து கொண்டிருந்தவர்களை விட்டு அகலவில்லை.

"என்னடி, அங்கேயே பாத்துக்கிட்டிருக்கே?" என்ற யாமினி, காவடி சுமந்து வருபவர்களை உற்றுப் பார்த்து விட்டு, "ஓ, உன்னோட ஆளும் காவடி தூக்கிக்கிட்டு  வராறா? நான் கவனிக்கலையே!" என்றாள்.

'என்னோட ஆளுன்னு நான்தான் நினைச்சுக்கிட்டிருக்கேன். ஆனா அவரு இன்னும் என்னோட காதலை ஏத்துக்கலையே! அப்படி ஏத்துக்கிட்டா எனக்கு மனச்சுமை இல்லாம இருக்கும். ஒருபக்கக் காதலை மனசில சுமந்துக்கிட்டு இருக்கறது எவ்வளவு பெரிய சுமை தெரியுமா?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் கவிதா.

குறள் 1196
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.

பொருள்:
காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.

1197. மன்மதன் அம்பு!

"இன்னிக்குக் காமன் பண்டிகை. ராத்திரி முழுக்க நடக்குமாம். வாடி, போயிட்டு வரலாம்!" என்று அழைத்தாள் வள்ளி.

"ராத்திரி முழுக்கவா? எப்படியும் ராத்திரி முழுக்க நான் தூங்கப் போறதில்ல. அங்கே போய்தான் உக்காந்துட்டு வரேனே!" என்று  கூறியபடியே வள்ளியுடன் கிளம்பினாள் மீனாட்சி.

இரவு முழுவதும் காமன் பண்டிகை நிகழ்ச்சிகளைப் பார்த்து விட்டுத் தோழிகள் இருவரும் விடிகாலையில் விடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

"பல நாள் தூங்காத அலுப்போ என்னவோ தெரியலை. விழாவைப் பாக்காம தூங்கி வழிச்சுக்கிட்டு இருந்த. 'என்ன இவ, சாமி ஆடற மாதிரி தலையை ஆட்டிக்கிட்டே இருக்கா!' ன்னு பக்கத்தில உக்காந்திருந்தவங்கல்லாம் கேலி செஞ்சாங்க!" என்றாள் வள்ளி.

"நான் உண்மையாகவே சாமி ஆடிக்கிட்டுத்தான் இருந்தேன். ஒத்தர் சாமி ஆடறப்ப அவங்க மேல சாமி வந்து பேசும்னு சொல்லுவாங்க. ஆனா நான்  சாமிகிட்ட பேசிக்கிட்டிருந்தேன். அவ்வளவுதான் வித்தியாசம்!" என்றாள் மீனாட்சி.

"சாமிகிட்ட பேசினியா? எந்த சாமிகிட்ட, என்ன பேசின?" என்றாள் வள்ளி கேலிச் சிரிப்புடன்.

"காமன் பண்டிகைன்னா என்ன சொல்லு பாக்கலாம்!"

"ஏண்டி, நீ நல்லாத் தூங்கிட்டு எங்கிட்ட கதை கேட்டு சமாளிக்கறியா? காமன்னா யாரு? மன்மதன்! மன்மதன்கிட்ட ஒரு வில் இருக்கும். அதைக் கரும்பு வில்னு சொல்லுவாங்க. அந்த வில்லிலேந்து அவன் யார் மேலயாவது அம்பை விட்டா அவங்க காதல்ல ஈடுபட்டுடுவாங்க. 'மன்மதன் அம்பு' ன்னு கமல் நடிச்ச ஒரு படம் கூட வந்திருக்கே! காமன் கணைன்னு இலக்கியங்கள்ள கூட வரும். 

"அந்த காமன் ஒரு  தடவவை சிவபெருமான் மேலேயே அம்பை விட்டுட்டான். அவருக்குக் கோபம் வந்து தன் நெற்றிக் கண்ணால காமனை அதாவது மன்மதனை எரிச்சுட்டாரு. அப்புறம் மன்மதனோட மனைவி ரதி கேட்டுக்கிட்டப்பறம் காமனை உயிர்ப்பிச்சாரு. 

"இந்தக் கதையைத்தான் ராத்திரி பூரா தெருவில ஊர்வலம் போயும், நெருப்பு மூட்டியும் நடிச்சுக் காட்டினாங்க. நீதான் தூங்கி வழிஞ்சிக்கிட்டிருந்தியே, இல்லை, சாமி ஆடிக்கிட்டிருந்தியே, உனக்கு எப்படி கதை புரிஞ்சிருக்கும்?"

"புரிஞ்சதனாலதாண்டி கண்ணை மூடிக்கிட்டு அந்தக் காமன்கிட்ட வேண்டிக்கிட்டிருந்தேன்!" என்றாள் மீனாட்சி.

"என்ன வேண்டிக்கிட்டிருந்த?" என்றாள் வள்ளி.

"காமதேவனே! கடவுள்கிட்ட கூட உன் வேலையைக் காட்டற. ஆனா ஏன் என் காதலன் மேல உன் அம்பை வீச மாட்டேங்கற? என்னோட காதலைக் கண்டுக்காம அவன் அலட்சியமா இருக்கறதால, என்னைக் காதல் நோய் பிடிச்சு வாட்டறதும், என் மேனியில பசலை படறதும் உனக்குத் தெரியலியா?" என்று மீனாட்சி கூறும்போதே, அவள் கண்களில் நீர் படர்ந்தது.

"அதான் காமன் பண்டிகைக்கு வந்து காமன்கிட்ட வேண்டிக்கிட்டிருக்கியே, காமன் நிச்சயமா உன் வேண்டுதலை நிறைவேத்துவான்!" என்று கூறி, தோழியின் கைகளை ஆதரவுடன் பற்றிக் கொண்டாள் வள்ளி.

குறள் 1197
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்

பொருள்:
காமன் ஒரு பக்கமாக மட்டும் இருப்பதால், என்னைக் காதல் நோய் வருத்துவதையும், என் மேனியில் பசலை படர்வதையும் கண்டு கொள்ள மாட்டான் போலும்!

1198. எனக்கொரு காதலி இருக்கின்றாள்!

"இன்னிக்கு என் மாமியார் என்ன செஞ்சாங்க தெரியுமா?"

"போதும்டி, உன் மாமியார் கொடுமைப் புலம்பல்! தினமும் கேட்டு அலுத்துப் போச்சு. வேற ஏதாவது பேசுவோம். அங்கே தூண் பக்கத்தில நிக்கறாளே ஒரு பொண்ணு, அவ தினமும் கோவிலுக்கு வரா போலருக்கே! உனக்கு அவளைத் தெரியுமா?"

"தெரியாம என்ன? நம்ம குமுதா! பாவம், ரொம்ப நல்ல பொண்ணு!"

"ஏன் பாவம்கற? நல்லவளா இருக்கறது பாவமா என்ன?"

"நான் பாவம்னு சொன்னது அவளோட பரிதாப நிலைமைக்காக. புருஷன் மேல அவ்வளவு அன்பா இருக்கா. அவ தினமும் கோவிலுக்கு வரது கூடத் தன் புருஷனுக்காக வேண்டிக்கறதுக்காகத்தான் இருக்கும்."

"பரிதாப நிலைமைன்னு சொன்னியே?"

"தன் புருஷன் மேல அவ உயிரையே வச்சிருக்கா. ஆனா அவன் அவளைத் திரும்பியே பாக்க மாட்டேங்கறான்!"

"ஏன், கழுத்து வலியா?"

"அட போடி இவ ஒத்தி! நான் அவ கஷ்டத்தைப் பத்தி சொல்லிக்கிட்டிருக்கச்சே, பொருத்தமில்லாம ஜோக் அடிக்கறா!"

"சாரி, சொல்லு. அவ புருஷன் ஏன் அவளைத் திரும்பிப் பாக்க மாட்டேங்கறாரு?"

"அவனுக்கு அவளைப் பிடிக்கல!" 

"ஏன் பிடிக்கல? அழகா இருக்கா. புருஷன் மேல உயிரையே வச்சிருக்கான்னு சொல்ற. அப்புறம் ஏன் அவருக்கு அவளைப் பிடிக்கலையாம்?"

"அவன் வேற ஒரு பெண்ணைக் காதலிச்சான். ஆனா அவன் வீட்டில ஒத்துக்கல. அவங்க வற்புறுத்தலுக்காகத்தான் குமுதாவைக் கட்டிக்கிட்டான். ஆனா பழைய காதலை மறக்க முடியததாலயோ என்னவோ, குமுதாகிட்ட கொஞ்சம் கூட அன்பு காட்ட மாட்டேங்கறான்!"

"இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?"

"குமுதா எனக்குத் தெரிஞ்ச பொண்ணுதான். அவ பல தடவை இதையெல்லாம் எங்கிட்ட சொல்லி வருத்தப்பட்டு அழுதிருக்கா."

"அவங்ளுக்குக் கல்யாணம் ஆகி எவ்வளவு நாள் ஆச்சு?"

"ஒரு வுருஷத்துக்கு மேல ஆகியிருக்கும்!"

"உன் மாமியாரைக் கொடுமையானவங்கன்னு நீ அடிக்கடி சொல்ற. ஆனா அவங்க கூட குமுதாவை விடக் கொடுமையானவங்களா இருக்க மாட்டாங்கன்னு நினைக்கறேன்."

"என்னடி சொல்ற?"

"இந்த மாதிரி நிலையில இருந்தா, நான் உயிரையே விட்டிருப்பேன். ஆனா குமுதா இன்னும் உயிரோட இருக்காளே அதைச் சொல்றேன். நீ அவளைப் பாவம்னு சொன்னது சரிதான்!"

குறள் 1198
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

பொருள்:
தன்னால் விரும்பப்படும் கணவனிடமிருந்து ஓர் இன்சொல் கூடப் பெறாமல் உயிர் வாழும் மனைவியைப் போன்ற கொடியவர் இவ்வுலகத்தில் வேறு யாரும் இல்லை.

1199. இந்திர ஜாலம்!

விமான நிலையத்தில் விஜயாவும் அவள் அம்மாவும் விமானத்தில் ஏறுவதற்காகக் காத்திருந்தனர். தன் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணுடன் விஜயா பேச்சுக் கொடுத்தபோது, வந்தனா என்ற அந்தப் பெண் தான் மும்பையைச் சேர்ந்தவள் என்றும் சென்னையில் ஒரு பயிற்சிக்காக வந்து விட்டுத் திரும்பப் போவதாகவும் கூறினாள்.

"என்ன பயிற்சி?" என்றாள் விஜயா.

"மார்க்கெடிங்" என்றாள் வந்தனா.

"ஏன் மும்பையிலேயே நிறைய பயிற்சி கிடைக்குமே! ஏன் சென்னைக்கு வந்தீங்க? கம்பெனி ஸ்பான்ஸரா?"

"கம்பெனி ஸ்பான்ஸராவது! எனக்கு இன்னும் வேலையே கிடைக்கல. இந்தப் பயிற்சியில சேந்தா வேலை கிடைக்குங்கறதாலதான் என் சொந்தப் பணத்தில இந்தப் பயிற்சிக்கு வந்துட்டுப் போறேன்!"

விஜயாவின் அம்மா ஏதோ சைகை கொடுப்பது போல் விஜயாவின் காலை அழுத்தினாள். விஜயா அதைப் பொருட்படுத்தாமல், "யார் நடத்தற பயிற்சி அது?" என்றாள் வந்தனாவிடம்.

"இந்திரகுமார்னு ஒத்தர் நடத்தறாரு. சென்னையில அவர் ரொம்பப் பிரபலமாச்சே! நீங்க கூட கேள்விப்பட்டிருக்கலாம்."

"கேள்விப்பட்டிருக்கேன். ஆனா அவர் பயிற்சி சுமார்தான்னு சில பேரு சொன்னாங்களே!"

"தப்பா சொல்லி இருப்பாங்க. இல்லேன்னா யாராவது பொறைமையால அப்படிச் சொல்லி இருப்பாங்க. எனக்குத் தெரிஞ்சவங்க நாலைஞ்சு பேருக்கு இந்தப் பயிற்சி முடிச்சப்புறம் நல்ல வேலை கிடைச்சிருக்கு. அதனாலதான் நான் இதில சேர்ந்தேன்!" என்றாள் வந்தனா.

"எத்தனை நாள் பயிற்சி?"

"ரெண்டு வாரம்."

"மார்க்கெடிங் மானேஜ்மென்ட் கோர்ஸ்னா கல்லூரியில ரெண்டு வருஷம் படிக்கணும். ரெண்டு வாரப் பயிற்சியில என்ன சொல்லிக் கொடுக்க முடியும்?"

"இது படிப்பு இல்லை, பயிற்சி. மார்க்கெடிங் பயிற்சின்னு சொன்னாலும் இது ஒருவிதத்தில நம்மையே மாற்றக் கூடிய பயிற்சி."

"பர்சனாலிடி டெவலப்மென்ட் மாதிரியா?"

"அது மாதிரி. ஆனா அதுக்கும் மேல. சுருக்கமா சொல்றதுன்னா இந்தப் பயிற்சிக்கப்புறம் நம்மால நம்மையே மார்க்கெடிங் செய்ய முடியும்! பயிற்சியாளர் இந்திரகுமார் நமக்குள்ள ஒரு மாஜிக்கையே உண்டு பண்ணிடுவாரு. அவர் செய்யற மாயாஜாலத்தை இந்திரஜாலம்னு சொல்லலாம்! அவரை மாதிரி ஒரு பர்சனாலிடியை நான் பாத்ததே இல்லை. பயிற்சி முடிஞ்சப்புறம் எனக்குள்ள ஏற்பட்ட மாறுதலை என்னால உணர முடியுது. இப்பவே ஒரு நல்ல வேலையில சேந்துட்ட மாதிரி உணரறேன்!"

சில நிமிடங்களில் வந்தானா செல்ல வேண்டிய விமானத்தில் ஏறுவதற்கான அழைப்பு வந்ததால், அவள் விஜயாவிடம் விடைபெற்று எழுந்து சென்றாள்.

வந்தனா சென்றதும், விஜயாவின் அம்மா, "ஏண்டி! கட்டின பெண்டாட்டியைக் கைவிட்டுட்டு இன்னொரு பெண்ணோட வாழ்ந்துக்கிட்டிருக்கறவன் அவன். அவனைப் பத்தித் தூண்டித் தூண்டிக் கேக்கற? இந்திரஜாலமாம்! இந்திரன் அகலிகை மேல ஆசைப்பட்ட மாதிரி இன்னொரு பெண்கிட்ட ஆசை வச்சவன்னு வேணும்னா சொல்லலாம். எனக்குப் பத்திக்கிட்டு வருது!" என்றாள் விஜயாவிடம் ஆற்றாமையுடன்.

"அவர் என்னை விட்டுப் பிரிஞ்சுட்டாரு. இனிமே நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழப்போறதில்ல. ஆனாலும் அவரை யாராவது புகழ்ந்து பேசறதைக் கேட்டா எனக்கு சந்தோஷமா இருக்கும்மா. அதனாலதான் அந்தப் பொண்ணு அவரைப் புகழ்ந்து சொன்னதை ஆவலாக் கேட்டேன்!" என்றாள் விஜயா பெருமூச்சுடன்.

குறள் 1199
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.

பொருள்:
என் அன்புக்குரியவர் என்னிடம் அன்பு காட்டாதவராகப் பிரிந்து இருப்பினும், அவரைப் பற்றிய புகழ் உரை என் செவிக்கு இனியதாகும்.

1200. அன்பே, அன்பே!

முகிலை முதல் முறையாகப் பார்த்ததுமே மலர்விழிக்கு அவன் மேல் ஒரு ஈடுபாடு வந்து விட்டது.

அடுத்த சந்திப்பிலேயே அது காதல் என்பது அவளுக்குப் புரிந்து விட்டது.

இருவரும் ஒரே கல்லூரியில் படித்ததால் அடிக்கடி சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது.

வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் மலர்விழி முகிலிடம் தன் காதலை வெளிப்படுத்தத் தவறவில்லை - முதலில் மறைமுகமாக, பிறகு மறைமுகமான முயற்சிகள் பலன் தரவில்லை என்றதும், நேரடியாகவே.

ஆனால் முகில் வெறுமனே சிரித்ததைத் தவிர வேறு பதில் சொல்லவில்லை.

கல்லூரியில் மற்ற பெண்களிடம் பழகுவது போல்தான் மலர்விழியிடம் பழகினான் முகில். அவள் மீது காதல் இருப்பதற்கான எந்த ஒரு அடையாளத்தையும் அவன் வெளிப்படுத்தவில்லை.

நான்கைந்து முறை முகிலிடம் தன் காதலை வெளிப்படுத்திய பிறகும், அவனிடமிருந்து சாதகமான பதில் வராததால் மலர்விழிக்கு மனச்சோர்வு ஏற்பட்டு விட்டது. தன் முயற்சியைத் தொடர வேண்டுமா என்று அவள் யோசிக்க ஆரம்பித்தாள்.

லர்விழியின் தோழி வசந்தி அதிகம் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உள்ளவள். புத்தகத்தில் ஏதாவது சுவையானதைப் படித்தால் அதை அவள் மலர்விழியிடம் பகிர்ந்து கொள்வாள்.

"மலர்! இதைப் பாரேன்! கனூட்னு ஒரு அரசன் இருந்தானாம். எவ்வளவு பெரிய அரசானா இருந்தாலும் அவனால இயற்கையைக் கட்டுப்படுத்த முடியாதுன்னு காட்டறதுக்காகத் தன் அமைச்சர்கள், அதிகாரிகளோட கடற்கரையில போய் நின்னுக்கிட்டு, கரையை நோக்கி வந்துக்கிட்டிருந்த ஒரு பெரிய அலையைப் பாத்து, 'ஏ அலையே! அரசனான நான் உத்தரவு போடறேன். நீ அங்கேயே நின்னுடு. கரைக்கு வந்து என் காலை நனைக்காதே' ன்னு சொன்னானாம். சுவாரசியமா இல்லை?" என்றாள் வசந்தி சிரித்தபடி.

"அதை விட கடல்லேந்து எல்லா நீரையும் இறைச்சு கடலையே தூர்த்திருக்கலாமே! அப்புறம் அலைகளே இல்லாம போயிருக்குமே!" என்றாள் மலர்விழி எங்கோ பார்த்தபடி.

"என்னடி உளரற? கடலை எங்கேயாவது தூர்க்க முடியுமா?"

'முகிலோட மனசில என் மேல அன்பை உண்டாக்க முயற்சி செஞ்சுக்கிட்டிருக்கேனே, கடலைத் தூர்க்கறது அதை விட சுலபமாத்தான் இருக்கும்!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட மலர்விழி, "சும்மா சொன்னேன்" என்றாள் தோழியிடம்.

குறள் 1200
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.

பொருள்:
நெஞ்சமே! நீ வாழி! அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த துன்பத்தைச் சொல்கின்றாய்! அதை விட எளிதாகக் கடலைத் தூர்ப்பாயாக.


                 அறத்துப்பால்                                                             பொருட்பால் 

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...