படுக்கையிலிருந்து எழுந்து அவன் சமையலறைக்குள் சென்றபோது, குமாரி சமையல் செய்து கொண்டிருந்தாள்.
சந்திரனைப் பார்த்ததும், "சாருக்கு காப்பியா, பிரேக்ஃபாஸ்டா, லஞ்ச்சா, இல்லை பிரஞ்ச்சா?" என்றாள் குமாரி, கேலியாக.
"நீ எல்லாத்தையும் சேர்த்துக் கொடுத்தாலும் சாப்பிட்டுடுவேன். அவ்வளவு அலுப்பா இருக்கு உடம்பு!"
"ஏன் இருக்காது? ராத்திரி கொஞ்சமா ஆட்டம் போட்டீங்க, நாலு மணி வரையிலேயும் தூங்காம?"
"மேடம், நீங்க பிடிச்ச பிடிவாத்தினாலதானே, நான் அவ்வளவு நேரம் கண் முழிச்சு, உங்களை சமாதானப்படுத்த வேண்டி இருந்தது?"
"பொண்டாட்டி கோவிச்சுக்கிட்டா, 'சரிதான் போடி'ன்னுட்டுப் போக வேண்டியதுதானே? எதுக்கு ராத்திரி முழுக்கக் கண் முழிச்சு, அவளைக் கெஞ்சணும், சமாதானப்படுத்தணும்?"
"ஒருவேளை நான் உன்கிட்ட கோவிச்சுக்கிட்டா - அப்படி நடக்காது, ஒருவேளை நடந்தா - நீ வேணும்னா 'சரிதான் போடா'ன்னுட்டுப் போகலாம். நான் அப்படிப் போக மாட்டேன்" என்றபடி, குமாரியை அணைத்துக் கொள்ளப் போனான் சந்திரன்.
"விடுங்க. இது சமையலறை" என்றபடியே, அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட குமாரி, "சாரி. ராத்திரி ஏதோ அப்படிக் கோபமா நடந்துக்கிட்டேன். இனிமே அப்படி நடந்துக்க மாட்டேன்!" என்றாள், கனிவான குரலில்.
"ஐயையோ! இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடறியே! நேத்திக்கு நடந்ததை அனுபவிச்ச சந்தோஷத்தில, இனிமே நீ தினமும் ராத்திரி என்னோட சண்டை போடணும், ராத்திரி முழுக்க நான் உன்னை சமாதானப்படுத்தணும், அதுக்கு வசதியா, ராத்திரி நேரம் இன்னும் அதிகமாகணும்னுல்ல நான் எதிர்பார்த்துக்கிட்டிருக்கேன்? ஏன்னா, அதில கிடைக்கிற சந்தோஷத்துக்கு இணையே இல்லையே!" என்று சந்திரன் சொன்னபோது, அவன் உண்மையாகச் சொல்கிறானா, இல்லை தன்னைக் கேலி செய்கிறானா என்று புரியாமல், பொய்க் கோபத்துடன் அவனை முறைத்துப் பார்த்தாள் குமாரி.
கற்பியல்
No comments:
Post a Comment