Saturday, June 15, 2024

1328. அந்த ஒரு நாள் ஆனந்தத் திருநாள்!

சுமனுக்கு உடற்பயிற்சி செய்யும் பழக்கம் உண்டு. கர்லாக் கட்டையைத் தூக்கிச் சுழற்றுவது போன்ற கடுமையான உடற்பயிற்சிகளையும் அவன் செய்வான்.

ஒருநாள், சுமன் உடற்பயிற்சி செய்து முடித்தபோது, அங்கே வந்த அவன் மனைவி நிஷா, "என்ன இது நெத்தியில இவ்வளவு வியர்வை வழியுது! துடைச்சுக்க மாட்டீங்களா?" என்றபடி, ஒரு துண்டால் அவன் நெற்றியைத் துடைத்தாள்.

"இப்பதான் செஞ்சு முடிச்சேன்" என்றான் சுமன்.

"பொதுவாகவே, உங்களுக்கு வியர்வையை அப்பப்ப துடைச்சுக்கற பழக்கம் கிடையாது!"

சுமன் மனைவியின் முகத்தை உற்றுப் பார்த்தான்.

"என்ன அப்படிப் பாக்கறீங்க?"

"அன்னிக்கு ஒருநாள் ராத்திரி என் நெத்தியில இருந்த வியர்வையைத் துடைச்சுட்டு, 'என்ன இது? ஏசி ஓடிக்கிட்டிருக்கறப்ப கூட உங்களுக்கு இப்படி வியர்க்குது? இதுதான் நெத்தி வேர்வை சிந்த உழைக்கறதுங்கறதா?'ன்னு நீ என்னைக் கேலி செஞ்சியே ஞாபகம் இருக்கா?"

"அதுக்கென்ன இப்ப?" என்றாள் நிஷா, வெட்கத்துடன்.

"அன்னிக்கு நான் அவ்வளவு சந்தோஷமா இருந்ததுக்குக் காரணம் என்ன தெரியுமா?"

"என்ன காரணம்?"

"அதுக்கு முன்னால நாம  சண்டை போட்டுக்கிட்டு, அன்னிக்குத்தான் ஒண்ணு சேர்ந்தோம்."

"சரி. அதுக்கென்ன இப்ப?"

"இல்லை, மறுபடி அந்த மாதிரி வியர்த்துப் போற அளவுக்கு ஆகி சந்தோஷம் கிடைக்கணும்னா, மறுபடி நாம சண்டை போட்டுப் பிரிஞ்சுட்டு, அப்புறம் ஒண்ணு சேர்ந்தா நல்லா இருக்குமேன்னு ஏக்கமா இருக்கு!" என்றான் சுமன்.

"மறுபடி எங்கிட்ட சண்டை போட்டீங்கன்னா, நீங்க கையில வச்சுக்கிட்டு சுத்தறீங்களே, இந்த கர்லாக்கட்டையாலேயே உங்க தலையில போட்டுடுவேன்!" என்றபடி, தன் உள்ளங்கையால் அவன் தலையைத் தட்டினாள் நிஷா.
காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 133
ஊடலுவகை (ஊடலில் விளையும் மகிழ்ச்சி)
குறள் 1328
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.

பொருள்:
நெற்றி வியர்க்கும்படி கலவியில் தோன்றும் சுகத்தை இன்னுமொரு முறை இவளுடன் ஊடிப் பெறுவோமா?
அறத்துப்பால்                                                         பொருட்பால்  

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...