Saturday, June 15, 2024

1327. வென்றவர் யார்?

"நான் இதை எதிர்பாக்கல!" என்றான் பாஸ்கர்.

"எதை எதிர்பாக்கல?" என்றாள் கவிதா.

"நீ உன்னோட தப்புக்கு மன்னிப்புக் கேட்டு, நம் ஊடலை முடிச்சு வப்பேன்னு!"

"ஏன் எதிர்பாக்கல?"

"நீ ரொம்பப் பிடிவாதக்காரியாச்சே! ஒரு சின்ன விவாதத்தில கூட, உன்னோட நிலையை மாத்திக்க மாட்டியே, அப்படி இருக்கறப்ப, எப்படி இறங்கி வந்தே?"

"யாராவது ஒத்தர் இறங்கி வந்துதானே ஆகணும்? அதோட, என் மேலயும் தப்பு இருக்குனு தோணிச்சு. அதை ஒத்துக்கிட்டு மன்னிப்புக் கேக்கறதில எனக்கு என்ன தயக்கம்? அதுவும், நீங்க என் கணவர். உங்ககிட்ட மன்னிப்புக் கேக்கறதில, எனக்கு என்ன தயக்கம் இருக்க முடியும்?"

என்ன சொல்வதென்று தெரியாமல், மனைவியை இறுக அணைத்துக் கொண்டான் பாஸ்கர்.

"நான் தப்புக் கணக்குப் போட்டுட்டேன்!" என்றான் பாஸ்கர்.

"என்ன தப்புக் கணக்குப் போட்டீங்க?"

"நாம சண்டை போட்டுடுக்கிட்டுப் பேசாம இருந்தப்ப, நீ இறங்கி வந்து எங்கிட்ட மன்னிப்புக் கேட்டதும், நான் ஜெயிச்சுட்டதா நினைச்சேன்!"

"அது சரிதானே? நான்தானே மன்னிப்புக் கேட்டேன்! அப்படின்னா, ஜெயிச்சது நீங்கதானே?"

"இந்த ஒரு வாரமா, நம்ம நெருக்கம் முன்னை விட அதிகமா இருக்கறதைப் பாக்கறப்ப, நீதான் ஜெயிச்சேன்னு தோணுது!"

"அது எப்படிங்க? மன்னிப்புக் கேட்டவங்கதானே தோத்தவங்க?"

"அது பொதுவான விதியா இருக்கலாம். ஆனா, காதலைப் பொருத்தவரையிலும், ஊடலை யாரு முடிச்சு வக்கறாங்களோ, அவங்கதான் ஜெயிச்சவங்கன்னு இப்ப எனக்குப் புரியுது. அதனால, ஊடல்ல தோக்கறவங்க காதல்ல வெற்றி பெற்றவங்களா ஆறாங்க. அதனால, நீதான் வெற்றி நாயகி!" என்றான் பாஸ்கர். 

கவிதா பெருமையுடன் கணவனைப் பார்த்தாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 133
ஊடலுவகை (ஊடலில் விளையும் மகிழ்ச்சி)
குறள் 1327
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.

பொருள்:
ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை, ஊடல் முடிந்த பின் கூடி மகிழும் நிலையில் உணரப்படும்.
அறத்துப்பால்                                                         பொருட்பால்  

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...