Saturday, June 15, 2024

1326. மீண்டும் ஊடல்?

லதாவும் அவள் காதலன் தினேஷும், அதிக நடமாட்டம் இல்லாத அந்தச் சாலையில் நடந்து கொண்டிருந்தார்கள்.

"சாரி" என்றான் தினேஷ்.

"எதுக்கு?" என்றாள் லதா.

"உன்னோட சண்டை போட்டுக்கிட்டு, நாலு நாள் பேசாம இருந்ததுக்கு"

"நானும்தான் சாரி கேக்கணும்."

"என்னைப் பாக்காத இந்த நாலு நாளும் உனக்குக் கஷ்டமா இருந்ததா?"

லதா கொஞ்சம் யோசித்து விட்டு, "உண்மையைச் சொல்லட்டுமா?" என்றாள்.

"சொல்லு!"

"முதல் நாள் கொஞ்சம் கஷ்டமா இருந்தது. ஆனா, அதுக்கப்புறம் சந்தோஷமா இருந்தது!"

"என்னைப் பிரிஞ்சு இருந்தது உனக்கு சந்தோஷமா இருந்ததா?" என்றான் தினேஷ், சற்றுக் கோபத்துடன்.

"பாத்தியா, கோவிச்சுக்கறியே! அதுக்குத்தான் முதல்லேயே உண்மையைச் சொல்லட்டுமான்னு கேட்டேன்!" என்றாள் லதா.

"என்னைப் பிரிஞ்சு இருந்தது சந்தோஷமா இருந்ததுன்னு நீதானே சொன்னே?"

"சந்தோஷமா இருந்ததுன்னு சொன்னேன். உன்னைப் பிரிஞ்சு இருந்ததாலன்னு சொல்லல. தனியா இருந்தப்ப, நாம சேர்ந்து இருந்தப்ப கிடைச்ச சந்தோஷத்தை நினைச்சுப்பேன். அந்த நினைவே சந்தோஷமா இருக்கும். அதைத்தான் சொன்னேன்."

"எனக்குப் புரியல!"

சற்றுத் தொலைவில் படுத்திருந்த ஒரு மாட்டைக் கட்டிய லதா, "அந்த மாடு என்ன செய்யுது?" என்றாள்.

"அசை போடுது!"

"அதாவது, கொஞ்ச நேரம் முன்னே சாப்பிட்டதை, இப்ப வாய்க்குக் கொண்டு வந்து, மறுபடி அதை ரசிச்சு சாப்பிடுது. அது மாதிரிதான், நாம சேர்ந்து இருந்தப்ப கிடைச்ச சந்தோஷத்தை, பிரிஞ்சு இருந்தபோது அசை போட்டபோது, சந்தோஷமா இருந்ததுன்னு சொன்னேன். இதைப் புரிஞ்சுக்காம..." என்றாள் லதா, சற்றே கோபத்துடன்.

"சாரி லதா. இப்பதான் எனக்குப் புரியுது.  நாம ருசியா எதையாவது சாப்பிட்டா, சாப்பிட்டுக் கொஞ்ச நேரம் கழிச்சுக் கூட அந்த ருசி நாக்கில இருக்கும். அது மாதிரிதானே!"

"அப்பா! இப்பவாவது புரிஞ்சுதே! தெரியாத்தனமா, என் மனசில தோணினதை உங்கிட்ட சொல்லிட்டு, நீ அதைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டு, மறுபடியும் நமக்குள்ள சண்டை வந்துடுமோன்னு பயந்துட்டேன்!" என்றாள் லதா.

"வந்தா என்ன? அப்பவும் உன்னால சந்தோஷமா இருக்க முடியுமே! இந்த டெக்னிக்கை உங்கிட்டேந்து கத்துக்கிட்டதால, நானும் சந்தோஷமா இருக்க முடியும்" என்றான் தினேஷ்.

"அப்ப, மறுபடி சண்டை போட்டுக்கலாமா?" என்றாள் லதா.

இருவரும் சிரித்தனர்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 133
ஊடலுவகை (ஊடலில் விளையும் மகிழ்ச்சி)
குறள் 1326
உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

பொருள்:
உண்பதை விட, முன் உண்ட உணவு செரிப்பது இன்பமானது. அதுபோல், காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.
அறத்துப்பால்                                                         பொருட்பால்  

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...