Friday, June 14, 2024

1325. அழுது கொண்டே சிரிக்கின்றேன்!

"அவ மேல எவ்வளவு அன்பு வச்சிருக்கேன்! காரணமே இல்லாம என் மேல கோவிச்சுக்கிட்டு, எங்கிட்ட பேச மாட்டேன்னுட்டாடா!" என்றான் சுரேன்.

"இந்தப் பெண்களே இப்படித்தான். என் வீட்டில அடிக்கடி நடக்கறதுதான் இது!" என்றான் அவன் நண்பன் மாறன்.

"டேய்! நீ சொல்றது வேற, நான் சொல்றது வேற. நீ அப்பா அம்மா பாத்து நிச்சயம் பண்ணின பொண்ணைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டவன். உனக்குக் காதலைப் பத்தி என்ன தெரியும்?"

"ஆமாம், ஆமாம். என் பிரச்னை வேற, உன் பிரச்னை வேற. காதலி சண்டை போட்டுக்கிட்டுப் பேசாம இருந்தா, நீ ரெண்டு நாள் நிம்மதியா இருக்கலாம். ஆனா, என் மனைவி சண்டை போட்டுக்கிட்டு எங்கிட பேசாம இருந்தாலும், நான் அவளோட அதே வீட்டிலதானே இருக்கணும்! அந்தக் கொடுமையெல்லாம் கல்யாணம் ஆன அப்புறம்தான் உனக்குத் தெரியும்!" என்றான் மாறன்.

"ஏண்டா, காதலி சண்டை போட்டுக்கிட்டு உன்னோட பேசாம இருந்தா, ரெண்டு நாள் நிம்மதியா இருக்கலாம்னு நான் ஒரு பேச்சுக்குச் சொன்னேன். நீ நிஜமாகவே அப்படித்தான் இருக்க போலருக்கு. அவ்வளவுதான் உன் காதலா?" என்றான் மாறன்.

"ரெண்டு மூணு நாளா அவகிட்ட பேசாம இருக்கறது மனசை உறுத்திக்கிட்டேதான் இருக்கு. ஆனா, அதையும் மீறி, அவளைப் பாக்காம, அவளோட பேசாம இருக்கறதில ஒரு இன்பம் இருக்கத்தான் செய்யுது!" என்றான் சுரேன்.

"அது எப்படிடா? அவளை விட்டுப் பிரிஞ்சிருக்கறது மனசுக்கு உறுத்தலா இருக்குங்கற, அதில ஒரு இன்பமும் இருக்குங்கற! இது என்ன அழுது கொண்டே சிரிக்கின்றேன் மாதிரியா?"

"நீதான் கல்யாணம் ஆனவனாச்சே! உனக்கு இந்த அனுபவம் வந்திருக்கணுமே!"

"நீதான் சொல்லிட்டியே, காதல் வேற, அப்பா அம்மா நிச்சயம் பண்ணின பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கறது வேறன்னு! அப்படி இருக்கும்போது, உனக்குக் கிடைச்ச அனுபவம் எனக்கு எப்படிக் கிடைக்கும்?"

"அது சரிதான். உங்களுக்குள்ள சண்டை வந்தா, சண்டை முடிஞ்சு மனைவி மறுபடியும் பேச ஆரம்பிச்சுடுவாளேன்னு கவலைப்படற ஆளு நீ!"

"சார் எப்படி? உன்னைப் பாத்தா, சண்டை முடிஞ்சு காதலி எப்ப பேசுவாங்கற எதிர்பார்ப்போட இருக்கற ஆளு மாதிரி தெரியலியே! நீதான் பிரிவில இன்பம் இருக்குன்னு சொல்றியே!"

சுரேன் ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டான்.

"ஏண்டா கண்ணை மூடிக்கற? புத்தர் மாதிரி ஞானியாக முடியுமான்னு பாக்கறியா?"

"இல்லை. என் காதலியோட நான் சேர்ந்து இருந்தப்ப இருந்த சந்தோஷத்தை ஒரு நிமிஷம் கண்ணை மூடிக்கிட்டு நினைச்சுப் பார்த்தேன்!"

"அப்ப, அந்த சந்தோஷம் இப்ப இல்லையேங்கற வருத்தம்தானே இருக்கணும்?" என்று சுரேனை மடக்கினான் மாறன்.

"இருக்கு. அதோட நாங்க மறுபடி ஒண்ணு சேரும்போது, அதே சந்தோஷம் மறுபடியும் கிடைக்குமேங்கற எதிர்பார்ப்பும் இருக்கு. இந்த எதிர்பார்ப்புதான் எனக்கு ஒரு இனம் தெரியாத இன்பத்தைக் கொடுக்குதுன்னு நினைக்கறேன். பரவாயில்லை. என் மேல தப்பு இல்லாம இந்தப் பிரிவு ஏற்பட்டாலும், அதில ஒரு இன்பம் இருக்கறது நல்ல விஷயம்தானே!" என்றான் சுரேன்.

"அப்ப சரி. சிரிச்சுக்கிட்டே அழு, இல்லை அழுதுகிட்டே சிரி!" என்றான் மாறன், சலிப்புடன்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 133
ஊடலுவகை (ஊடலில் விளையும் மகிழ்ச்சி)
குறள் 1325
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.

பொருள்:
தன் மேல் தவறு இல்லாதபோதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது.
அறத்துப்பால்                                                         பொருட்பால்  

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...