Monday, September 25, 2023

1236. சின்ன வளை!

"என்னடி, போன வாரம் பார்த்தப்ப உன் வளையல்கள் எல்லாம் நழுவி விழற மாதிரி இருந்தது, இப்ப வளையல்கள் எல்லாம் இறுக்கமா இருக்கே! புது வளையல்களா?" என்றாள் குமரியின் தோழி யாமினி.

"ஆமாம்" என்ற குமரி. 'ஆனால் ஒரு சில நாட்களில் இந்த வளையல்களும் தளர்வானவை ஆகி விடும். அப்புறம் இன்னும் சிறிய  வளையல்களைத்தான் வாங்கிப் போட்டுக் கொள்ள வேண்டும்!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

"உன் காதலனுக்குக் கெட்ட பேர் வந்துடக் கூடாதுங்கறதுக்காக ரொம்பவும்தான் முயற்சி செய்யற!" என்றாள் யாமினி.

"என்னடி சொல்ற?"

"ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்காதே! உன் காதலன் ஊருக்குப் போனதிலேந்து அவன் பிரிவைத் தாங்க முடியாம நீ இளைச்சுக்கிட்டே வரே! வளையல்கள் எல்லாம் தளர்வாப் போய்க்கிட்டே இருக்கு. உன் தோள்கள் இளைச்சு எலும்பு தெரியுது. இதையெல்லாம் பாக்கறவங்க, 'பாவம் இந்தப் பொண்ணை இப்படித் தவிக்க விட்டுட்டுப் போயிட்டானே இவளோட காதலன்! அவன் ரொம்பக் கொடியவனாத்தான் இருக்கணும்'னு சொல்லிடக் கூடாதேங்கறதுக்காக அடிக்கடி சின்ன வளையல், இன்னும் சின்ன வளையல்னு வாங்கிப் போட்டுக்கிட்டிருக்க. உன் தோள் எலும்பு தெரியாம இருக்க உன் ரெண்டு தோளையும் சேலைத் தலைப்பால மூடிக்கிட்டிருக்க. எனக்குத் தெரியாதா இது?"

"என்னடி செய்யறது? என் காதலன் என்னைப் பிரிஞ்ச துயரத்தைக் கூடப் பொறுத்துப்பேன். ஆனா அவரைக் கல் மனசுக்காரர்னு மத்தவங்க சொல்றதை என்னால பொறுத்துக்க முடியலையே!" என்றாள் குமரி கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டே!

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 124
உறுப்பு நலனழிதல்
குறள் 1236
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.

பொருள்:
வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Saturday, September 9, 2023

1235. காட்டிக் கொடுத்த வளையல்கள்

செங்கமலத்தின் உறவினர்கள் சிலர் ஊரிலிருந்து வந்திருந்தனர். செங்கமலத்திடம் சற்று நேரம் உரையாடிய பின், "உன் பெண் கயல் எப்படி இருக்கா?" என்றனர்.

"இங்கேதான் இருக்கா. அவ புருஷன் வியாபாரத்துக்காகக் கப்பல்ல போயிருக்கறதால ரெண்டு மாசமா எங்க வீட்டிலதான் இருக்கா. அறைக்குள்ள இருப்பா. கூப்பிடறேன்!" என்று செங்கமலம் கூறிக் கொண்டிருந்தபோதே தன்னைப் பற்றிய பேச்சு காதில் விழுந்து கயல்விழியே வெளியே வந்தாள்.

"எப்படி இருக்கீங்க?"என்றாள் கயல்விழி வந்திருந்தவர்களைப் பார்த்து.

"நாங்க இருக்கிறது இருக்கட்டும். நீ ஏண்டி இப்படி இளைச்சுட்டே? போன தடவை பாக்கறப்ப நல்ல தெம்பா ஆரோக்கியமா பப்பாளிப் பழம் மாதிரி இருந்தே. இப்ப கொத்தவரங்கா வத்தல் மாதிரி வாடி வதங்கி இருக்கியே!" என்றாள் மங்களம் என்ற பெண்.

"ஏன் உன் தோள்பட்டை எலும்புக்கூடு மாதிரி இருக்கு?" என்றாள் நாகம்மை என்ற பெண்.

"ஆமாம், ஏன் கையில வளையலே போட்டுக்கல?" என்றாள் இன்னொருத்தி.

"அவ கொஞ்சம் இளைச்சுட்டாளா! அதனால வளையல் எல்லாம் நழுவிக் கீழே விழுந்துடும் போல இருந்தது. அதனால நான்தான் வளையல்களைக் கழற்றி வைக்கச் சொல்லிட்டேன். கொஞ்சம் சின்னதா வேற வளையல்கள்தான் வாங்கிப் போடணும்" என்றாள் செங்கமலம் அவசரமாக.

"பாத்துடி! இவ இன்னும் இளைச்சு அந்த வளையல்களும் நழுவிக் கீழே விழுந்துடப் போகுது!" என்று சொல்லிச் சிரித்தாள் மங்களம்.

"நீங்க பேசிக்கிட்டிருங்க. நான் கொஞ்சம் கடைக்குப் போயிட்டு வந்துடறேன்!" என்று அவர்களிடம் சொல்லி விட்டு விரைந்து வாசலுக்கு வந்தாள் கயல்விழி.

எங்கோ தொலைதுரத்தில் கப்பலில் பணிபுரிந்து கொண்டிருந்த கணவன் முகத்தை மனக்கண் முன் கொண்டு வந்து, 'கொடியவரே! நீங்க பாட்டுக்கு என்னை விட்டுட்டுப் போயிட்டீங்க. நான் உங்களைக் காட்டிக் கொடுக்கக் கூடாதுன்னு வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்தாலும் இளைச்சு அழகை இழந்த என் உடம்பும், எலும்பு தெரிய இளைச்ச தோளும், வளையல்கள் கழன்று விழுந்ததால வெறுமையா இருக்கிற என் கைகளும் நீங்க எனக்கு செஞ்ச கொடுமையை எல்லாருக்கும் காட்டிக் கொடுக்குதே! நான் என்ன செய்ய?' என்று உரையாடியபடியே பொங்கி வந்த கண்ணீரைச் சேலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டாள் கயல்விழி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 124
உறுப்பு நலனழிதல்
குறள் 1235
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.

பொருள்:
வளையல்களும் கழன்று பழைய அழகும் கெட்டு, வாடிய தோள்கள் (என் துன்பம் உணராத) கொடியவரின் கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Friday, September 1, 2023

1234. பவளக்கொடியின் கண்ணீர் முத்துக்கள்!

"என்னடி இது, இப்படி இளைச்சுப் போயிருக்க, தோள் எலும்பு தெரியற மாதிரி!" என்றாள் கண்மணி.

"அதான் எனக்கும் சேர்த்து நீ பருத்திருக்கியே!" என்றாள் பவளக்கொடி.

"நான் ஒண்ணும் பருக்கல. உண்டாயிருக்கறதால கொஞ்சம் பூசின மாதிரி தெரியறேன். அவ்வளவுதான்!"

"நீ கொடுத்து வச்சவடி! உன் புருஷனோட சந்தோஷமா இருக்க. குழந்தை வேற வரப் போகுது!"

"உன்னோட நிலைமையை நினைச்சா எனக்கு வருத்தமாத்தான் இருக்கு. உன் புருஷன் எப்ப திரும்பி வருவாராம்?" என்றாள் கண்மணி தோழியின் தோளைப் பரிவுடன் பற்றியபடி. பவளக்கொடியின் தோள் எலும்பு கையை அழுத்தியதால் உடனே கையை எடுத்து விட்டு, "ரொம்பத்தான் இளைச்சுட்ட. உன் தோள் எலும்பு என் கையைக் குத்துது" என்றாள்.

பவளக்கொடி பதில் சொல்லாமல் தன் கையை ஆட்டி அதில் இருந்த வளையல்களைச் சுழற்றிக் கொண்டிருந்தாள்.

"என்னடி இது! உன் புருஷனைப் பிரிஞ்சதைப் பத்தி உனக்கு வருத்தமே இருக்கற மாதிரி தெரியல. இளைச்சுட்டியேன்னு நான் பரிதாபமாக் கேட்டா நான் பருத்துட்டதைச் சொல்லிக் கேலி செய்யற. குழந்தை மாதிரி கையை ஆட்டி வளையல்களைச் சுத்திக்கிட்டிருக்க!" என்றாள் கண்மணி.

கையை ஆட்டுவதைச் சட்டென்று நிறுத்தி விட்டுத் தோழியை உற்றுப் பார்த்த பவளக்கொடி, "எனக்கு வருத்தம் இல்லையா! எலும்பு தெரிய இளைச்சிருக்கேன்னு நீயே சொல்ற. அவரு எப்ப திரும்பி வருவார்னு எனக்கே தெரியாதபோது உனக்கு எப்படி பதில் சொல்ல முடியும்? இந்த வளையல்களைப் பார்த்தியா? அவரு ஊருக்குப் போறதுக்கு முன்னால இதெல்லாம் எவ்வளவு இறுக்கமா இருந்தது தெரியுமா? கையை அழுத்தற மாதிரி! அவரு கூடக் கேலி செய்வாரு - இந்த வளையெல்லாம் உன் கையை இறுக்கிக்கிட்டிருக்கறதைப் பார்த்தா எந்த நேரத்திலேயும் வெடிச்சுச் சிதறிடற மாதிரி இருக்குன்னு! இப்ப பார்! நான் கையை அசைச்சாலே வளையல்கள் சுழலுது! அவ்வளவு இளைச்சிருக்கேன்! இந்த வளையல் எல்லாம் என் கையிலேந்து நழுவிக் கீழே விழுந்துடுமோன்னு பயந்து அப்பப்ப கையைத் தூக்கிக்கறேன். எனக்கு வருத்தம் இல்லேன்னு நீ சொல்றியா?" என்றாள் படபடவென்று.

பேசிக்கொண்டிருக்கும்போதே பவளக்கொடியின் கண்களிலிருந்து கண்ணீர் முத்துக்கள் தெறித்து அவள் கன்னங்களில் விழுந்தன. 

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 124
உறுப்பு நலனழிதல்
குறள் 1234
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.

பொருள்:
துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களையும் கழலச் செய்கின்றன.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை. அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போ...