Thursday, October 5, 2023

1237. நெஞ்சே நீ போய்ச் சேதியைச் சொல்லு!

பொருள் ஈட்டுவதற்காகத் தன்னைத் தனியாக விட்டு விட்டு வெளியூர் சென்றிருக்கும் காதலனுக்கு யார் மூலம் செய்தி சொல்லி அனுப்புவது என்று நீண்ட நேரம் யோசித்த மதி, இறுதியில் தன் நெஞ்சத்தையே தூதாக அனுப்புவது என்று முடிவு செய்தாள்.

அன்பால் இணைந்த இரு நெஞ்சங்களால் ஒன்றை ஒன்று தொடர்பு கொள்ள முடியாதா என்ன? இங்கிருக்கும் என் நெஞ்சம் எங்கோ தொலை தூரத்தில் இருக்கும் அவர் நெஞ்சத்தைச் சென்றடைவதற்கு தூரம் ஒரு தடையாக இருக்க முடியாதே!

"நெஞ்சே! என் காதலரிடம் என்ன சொல்ல வேண்டும் தெரியுமா?:

உங்கள் பிரிவால் மதி மிகவும் இளைத்து விட்டாள். எந்த அளவுக்கு இளைத்து விட்டாள் என்றால் அவள் தோள் எலும்புகள் தோலைத் துருத்திக் கொண்டு வெளியே வரப் போவது போல் இளைத்து விட்டன!

அவளைப் பார்ப்பவர் ஒவ்வொருவரையும் அவை தங்களைப் பற்றியே பேச வைக்கின்றன. நேற்று கூட ஒரு பெண்மணி, 'என்னடி மதி, உன் தோள் எலும்புக்கு மேல இருந்த சதையைக் காணோம்? காக்கா கொத்திக்கிட்டுப் போயிடுச்சா என்ன?' என்று மதியைக் கேலி செய்தாள்.

அது மட்டுமல்ல. மதி இவ்வளவு இளைத்ததைப் பார்த்துப் பலரும் அவளை இந்த நிலைக்கு ஆளாக்கிய அவள் காதலன் கொடியவனாகத்தான் இருக்க வேண்டும் என்று உங்களை இகழ்ந்து பேசுகிறார்கள்.

உங்கள் மீது உயிர்க் காதல் கொண்டுள்ள மதிக்கு இத்தகைய பேச்சுக்கள் எவ்வளவு மன வருத்தத்தைக் கொடுக்கும் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும் அல்லவா?

எனவே உடனே கிளம்பி வந்து மதியைச் சேர்ந்து அவள் மன வருத்தத்தையும், அதனால் அவள் உடலுக்கு ஏற்பட்டுள்ள வருத்தத்தையும் போக்கி, உங்கள் மீது ஊர் சுமத்தும் அவப்பெயரையும் போக்கிக் கொள்ளுங்கள்.

என் அருமை நெஞ்சே! நீ மட்டும் இந்தச் செய்தியை அவரிடம் சேர்த்து அவர் விரைவிலேயே திரும்ப வகை செய்து விட்டால், நீ பெருமை பெற்று விளங்குவாய்!"

சொல்ல வேண்டிய செய்தியைத் தன் நெஞ்சுக்குச் சொன்னதும் சில விநாடிகள் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள் மதி.

'மனோவேகம் என்கிறார்களே! அப்படியானால் என் நெஞ்சம் இதற்குள் இந்தச் செய்தியை என் காதலரின் நெஞ்சத்துக்குக் கொண்டு சேர்த்திருக்க வேண்டும். இந்தச் செய்தியைக் கேட்ட பிறகாவது அவர் உடனே கிளம்பி வருகிறாரா என்று பார்க்கலாம்!' என்று நினைத்துக் கொண்டாள் மதி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 124
உறுப்பு நலனழிதல்
குறள் 1237
பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து.

பொருள்:
நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ?.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...