Saturday, January 28, 2023

1170. நெஞ்சம் அங்கே, கண்கள் இங்கே!

"வைத்தியரே! என் பொண்ணு கொஞ்ச நாளா எப்ப பாத்தாலும் கண்ணை மூடிக்கிட்டு தியானம் பண்ற மாதிரி இருக்கா. கண்ணை முழிச்சதும் கண்ணில தண்ணியாக் கொட்டுது. என்னடி பிரச்னைன்னு கேட்டா பதில் சொல்லாம சிரிக்கறா. அவளுக்கு மூளை கலங்கிடுச்சோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு" என்றாள் பொன்னி.

"அப்படியெல்லாம் இருக்காது. ஆமாம் உங்க பொண்ணுக்கு அஞ்சாறு மாசம் முன்னாலதானே கல்யாணம் ஆச்சு? என்னைக் கூடக் கூப்பிட்டிருந்தீங்க. ஆனா என்னால வர முடியல. அவ புருஷனோடதானே இருக்கா?" என்றார் வைத்தியர்.

"ஆமாங்க கல்யாணம் ஆயிடுச்சு. ஆனா கல்யாணம் ஆன கொஞ்ச நாள்ளேயே  அவ புருஷன் மலைத்தோட்டத்தில வேலைக்குப் போயிட்டான். ஒரு வருஷம் கழிச்சுத்தான் வருவான். அதனால அவ இப்ப எங்க வீட்டிலதான் இருக்கா. கணவனைப் பிரிஞ்சிருக்கறதால அவளுக்கு புத்தி பேதலிச்சுடுச்சோன்னு எனக்கு பயமா இருக்கு!" என்றாள் பொன்னி.

"கணவனைப் பிரிஞ்சு இருக்கறதால ராத்திரியில சரியா தூங்காம இருந்திருப்பா. அதனால பகல் நேரத்தில கண் எரிச்சல்ல அப்பப்ப கண்ணை மூடிக்கிட்டு உக்காந்துக்கிட்டிருக்கான்னு நினைக்கறேன். கண் எரிச்சலினால கண்ணில தண்ணி வரது இயல்புதானே! உங்க பொண்ணு வந்திருக்காளா?" என்றார் வைத்தியர்.

"வந்திருக்கா. வாசல்ல உக்காரச் சொல்லி இருக்கேன்."

"உள்ள வரச் சொல்லுங்க. நான் அவகிட்ட பேசிப் பாக்கறேன்."

"நானும் கூட இருக்கலாமா?" என்றாள் பொன்னி.

"கண்டிப்பா. அப்பதான் அவ பிரச்னை என்னன்னு உங்களுக்குப் புரியும்!"

"உன் பேர் என்னம்மா?" என்றார் வைத்தியர்.

"யமுனா."

"அம்மா பேரு பொன்னி. மகள் பேரு யமுனா. நல்ல பெயர்ப் பொருத்தம்... ராத்திரி நல்லா தூங்கறியாம்மா?" 

"ஓ, தூங்கறேனே!" என்றாள் யமுனா.

வைத்தியர் தன் அனுமானம் தவறாகப் போனதை உணர்ந்து பொன்னியைப் பார்த்தார். பொன்னி மௌனமாக இருந்தாள்.

"அப்புறம் ஏன் பகல்ல அடிக்கடி கண்ணை மூடிக்கற? கண் எரிச்சலா இருக்கா?"

"என் புருஷன் ஏதோ ஒரு மலைத்தோட்டத்தில இருக்காரு. அது எங்கே இருக்குன்னு தெரியாது. ஆனா என் மனசு முழுக்க அவர்கிட்ட இருக்கு. கண்ணை மூடிக்கிட்டா மலைத்தோட்டத்தோட காட்சி என் மனசில தெரியுது. அதில அவர் வேலை செய்யற காட்சி தெரியுது. அவரைப் பாத்துக்கிட்டே இருக்கேன். அது மகிழ்ச்சியா இருக்கு. ஆனா கண்ணைத் திறந்தா அதைப் பாக்க முடியலியே! என் மனசால அவர் இடத்துக்குப் போக முடியுது, ஆனா என் கண்களால அங்கே போக முடியலியே! அதை நினைச்சுதான் கண்ணில  தண்ணி வருது!"

என்ன சொல்வதென்று தெரியாமல் ஒரு நிமிடம் மௌனமாக இருந்த வைத்தியர், "ஆமாம். ராத்திரி நல்லாத் தூங்கறேன்னியே, அவரை நினைச்சுத் தூக்கம் வராம போகலியா?" என்றார்.

"இல்லையே! தூங்கினா கனவில அவர்தானே வராரு? அதனாலதான்  படுத்தவுடனேயே தூங்கிடறேன்!" என்றாள் யமுனா.

சட்டென்று எழுந்த பொன்னி "வரேன் வைத்தியரே!" என்று வைத்தியரிடம் சொல்லி விட்டு,  "வாடி போகலாம்!" என்று மகளின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 117
படர் மெலிந்திரங்கல் (பிரிவுத் துயரால் உடல் மெலிதல்)

குறள் 1170
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.

பொருள்:
என் மனம் போலவே என் கண்களும் என்னவர் இருக்கும் ஊருக்குச் செல்ல முடியுமானால், அவை கண்ணீர் வெள்ளத்தில் நீந்த மாட்டா.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Thursday, January 26, 2023

1169. நீலாவின் கோபம்!

"ஹலோ! இப்பதாம்மா வேலைக்கு வந்திருக்கேன். சொல்லு, ஏதாவது முக்கியமான விஷயமா?" என்றான் மாணிக்கம்.

"உங்கிட்ட பேசணும். அதை விட முக்கியமான விஷயம் வேற என்ன வேணும்?" என்றாள் நீலா.

"நான் வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போனப்பறம் கூப்பிடறேனே! அப்ப நீயும் முழிச்சுக்கிட்டிருப்பே!"

"இப்ப  நான் என்ன தூங்கிக்கிட்டா இருக்கேன்?"

"ராத்திரி பன்னிரண்டு மணிக்கு எனக்கு ஃபோன் பண்றியே! உனக்கும் தூக்கம் கெடும். என்னாலயும் வேலை நேரத்தில அதிகம் பேச முடியாது. அதனாலதான் வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போனப்பறம் பேசறேன்னு சொன்னேன். நீயும் தூக்கத்தைக் கெடுத்துக்காம பகல் நேரத்தில பேசலாம்" என்றான் மாணிக்கம்.

"அப்ப உனக்கு ராத்திரிதானே? நீ தூங்க வேண்டாமா?"

"என்ன நீலா, முட்டாள் மாதிரி பேசற? பத்து மணிக்கு உங்கிட்ட பேசிட்டு அப்புறம் தூங்க முடியாதா? இப்ப எனக்கு வேலை இருக்கு. ஃபோனை வச்சுடு. ராத்திரி  நானே உனக்கு ஃபோன் பண்றேன்!" என்று கூறி ஃபோனை வைத்து விட்டான் மாணிக்கம்.

"என்ன நீலா இது? அங்க ரெண்டு மணி! இப்ப ஃபோன் பண்ற?" என்றான் மாணிக்கம்.

"இப்ப உனக்கு லஞ்ச் டைம்தானே? அதனாலதான் ஃபோன் பண்ணினேன்!" என்றாள் நீலா.

"எங்களுக்கெல்லாம் லஞ்ச் டைம்னு தனியா கிடையாதும்மா. உக்காந்து ஒரு கையால கம்ப்யூட்டர்ல வேலை செஞ்சுக்கிட்டே இன்னொரு கையால சாப்பிட வேண்டியதுதான். நடுப்பற பாஸ்கிட்டேந்து ஃபோன் வரும். 'இப்ப லஞ்ச் டைம்தானே, ஃப்ரீயாதானே இருக்கே, என் கேபினுக்குக் கொஞ்சம் வரியா?' ம்பாரு, ஏதோ நான் லஞ்ச் டயத்துல மத்தவங்களோட அரட்டை அடிச்சுக்கிட்டு உக்காந்திருக்கற மாதிரி! இதுல நீ வேற லஞ்ச் டைம்தானேன்னு கேக்கற!"

"சாப்பிட்டுக்கிட்டிருக்கேன்னா சொல்லு. பத்து நிமிஷம் கழிச்சு ஃபோன் பண்றேன். உன் பாஸ்கிட்ட பேசற மாதிரி ஒரு கையில ஃபோனை வச்சுக்கிட்டு எங்கிட்ட பேசிக்கிட்டே ஒரு கையால சாப்பிட வேண்டாம்!"

"நான் லஞ்ச் முடிச்சுட்டேன். நான் சொல்ல வந்ததை நீ புரிஞ்சுக்கல. இப்படி ராத்திரியில கண் முழிச்சு எங்கிட்ட பேசறதை விடக் காலையில ஃப்ரீயாப் பேசலாமேன்னுதான் சொல்றேன்!"

"முட்டாளாடா நீ?" என்றாள் நீலா கோபத்துடன். "உன் கம்பெனியில அமெரிக்காவுக்குப் போகச் சொன்னதும் நீ பாட்டுக்கு ஜாலியா போயிட்டே! உன்னைப் பிரிஞ்சு இருக்கறது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்குன்னு உனக்குத் தெரியுமா? உன் பிரிவைக் கூடப் பொறுத்துப்பேன். ஆனா இந்த ராத்திரி நேரத்தை என்னால பொறுத்துக்கவே முடியவே இல்லை. பகல்லன்னா ஏதாவது வேலை இருக்கும், யாராவது வருவாங்க, போவாங்க. ஒரு மாதிரி நேரம் ஓடிடும். ஆனா இந்த ராத்திரி வந்தா அது முடியவே மாட்டேங்குது! தூக்கம் வராம ராத்திரி பூரா கொட்டக் கொட்ட முழிச்சுக்கிட்டிருக்கறது எவ்வளவு நரகமா இருக்கு தெரியுமா? அதனாலதான் ராத்திரியில ரெண்டு மூணு தடவை உங்கிட்ட பேசி இந்த ராத்திரியோட கொடுமையிலேந்து கொஞ்சம் விடுபடலாம்னு பாத்தா, நீ அதைப் புரிஞ்சுக்காம எனக்கு அட்வைஸ் பண்ற! உனக்கெல்லாம் கொஞ்சம் கூட அறிவுங்கறதே கிடையாதா?"

திடீரென்று நீலா கோபத்தில் வெடித்த அதிர்ச்சியில் சில விநாடிகள் என்ன சொல்வதென்று தெரியாமல் மௌனமாக இருந்தான் மாணிக்கம்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 117
படர் மெலிந்திரங்கல் (பிரிவுத் துயரால் உடல் மெலிதல்)

குறள் 1169
கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்
நெடிய கழியும் இரா.

பொருள்:
இந்த இரவுகள் நீண்டு கொண்டே போவதுபோல் தோன்றும் கொடுமை இருக்கிறதே, அது காதலரின் பிரிவால் ஏற்படும் கொடுமையை விடப் பெரிதாக உள்ளது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Wednesday, January 25, 2023

1168. இரவுக்கு நான் மட்டும் காவல்

"ஏண்டி, எனக்கு ஃபிரண்டுன்னு நீ ஒருத்திதான் இருக்கே. கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருக்கலாம்னா, அதுக்குள்ள வீட்டுக்குக் கிளம்பறேங்கறியே!" என்றாள் உமா.

"இப்ப போனாத்தான் வீட்டுக்குப் போய் ராத்திரிக்கு சாப்பாடு செஞ்சு எல்லாருக்கும் போட்டுட்டு பத்து மணிக்குத் தூங்கப் போக முடியும். காலையில நாலு மணிக்கு எழுந்து பால் பூத்துக்குப் போய் பால் பாக்கெட்களை வாங்கிக்கிட்டு வந்து வீடுகளுக்குப் போட முடியும். உன்னை மாதிரி எட்டு மணி வரைக்கும் என்னால தூங்க முடியாது!" என்றாள் கலா.

"நான் எட்டு மணி வரைக்கும் தூங்கறேன்னு உனக்கு யார் சொன்னது?" என்றாள் உமா சற்று சங்கடத்துடன்.

"அன்னிக்குஃ காலையில எட்டு மணிக்கு நான் உன் வீட்டுக்கு வந்தப்ப உங்கம்மா சொன்னாங்ளே 'அவ இன்னும் தூங்கிக்கிட்டுத்தான் இருப்பா, போய் எழுப்பிக்கிட்டு வரேன்'னு!"

"இப்ப நான் எங்க அம்மா வீட்டில  இருக்கறதால சீக்கிரம் எழுந்திருக்க வேண்டாங்கறதால, சும்மா படுத்துக்கிட்டிருப்பேன். நான் தூங்கறதா எங்கம்மா நினைச்சுக்கிட்டிருப்பாங்க. எங்க வீட்டில இருந்தா நானும் அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்துடுவேன்!"

"உன் புருஷன் துபாய்லேந்து எப்ப வராரு?"

"இன்னும் ரெண்டு மாசம் ஆகுமாம்."

"அடிக்கடி கடுதாசி போடறாருல்ல?"

"எங்கே? எப்பவாவதுதான். அவருக்கு நேரம் கிடைக்கறதில்லையாம்! இங்கே ஃபோன் வசதி இருந்தா ஃபோனாவது பண்ணச் சொல்லலாம்! அதுக்கெல்லாம் நமக்கு வசதி ஏது?" என்றாள் உமா பெருமூச்சுடன்.

"கவலைப்படாதே! உன் புருஷன் துபாய்லேந்து நிறைய சம்பாதிச்சுட்டு வந்ததும், நீயும் கார் ஃபோன் எல்லாம் வச்சுக்கிட்டு வசதியா இருக்கலாம். அப்பல்லாம் என்னால உன்னை வந்து பாக்க முடியுமோ என்னவோ!" என்றாள் கலா சிரித்தபடி.

"போடி, நீ வேற?  பொண்டாட்டியைத் தனியா விட்டுட்டு அப்படி என்ன வெளிநாடு போய் சம்பாதிக்க வேண்டி இருக்குன்னு நான் ஏங்கிக்கிட்டிருக்கேன். யாருக்கு வேணும் வசதி எல்லாம்? அவரு என்னோட இருந்தா எனக்குப் போதும்!"

"என் புருஷனுக்கு வெளிநாடு போற வாய்ப்பு வந்தா நான் சந்தோஷமா அனுப்பி வச்சுடுவேன்.அவரு போய்ப் பணம் சம்பாதிச்சுட்டு வந்தா அப்புறம் வசதியா இருக்கலாம் இல்ல?"

"இப்ப இப்படித்தான் சொல்லுவ. அவரு நிஜமாகவே உன்னைத் தனியா விட்டுட்டுப் போனா அப்ப உணருவே!"

"எனக்கு நேரமாச்சு! நான் கிளம்பணும். ரொம்ப அலுப்பா இருக்கு,.காலையில எழுந்ததிலேந்தே ராத்திரி எப்ப வரும், எப்ப படுத்து நிம்மதியாத் தூங்கலாம்னு இருக்கு. அப்படி ஒரு அலுப்பு!" என்று கூறியபடியே கிளம்பினாள் கலா.

"நீ கொடுத்து வச்சவடி! தூக்கத்தை நல்லா அனுபவிக்கற" என்று முணுமுணுத்தாள் உமா.

டுக்கையில் படுத்து நீண்ட நேரம் ஆகி விட்டது. இன்னும் தூக்கம் வரவில்லை. மணி என்ன இருக்கும் என்று தெரியவில்லை. அலார்ம் வைத்த சிறிய கடிகாரம் முன்னறையில் இருந்தது. அங்கே போய் மணி பார்க்கலாம் என்றால் அம்மா காலடிச் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டு, "ஏண்டி சத்தம் போட்டு என்னை எழுப்பின?" என்று சத்தம் போடுவாள்.

இப்படியே ஏதாவது நினைத்துக் கொண்டு படுத்திருந்தால் எப்போதோ ஒரு சமயம் பொழுது விடிந்து விடும். ஆனால் அதற்குப் பிறகு பகல் முழுவதும் தூக்கக் கலக்கத்துடனும் கண் எரிச்சலுடனும்தான் இருக்க வேண்டும்!

இந்த இரவில் எல்லோரும் நிம்மதியாக உறங்குகுறார்கள் - கலாவைப்போல். ஆனால் நான் மட்டும் விழித்துக் கொண்டேதான் இருக்கிறேன். 

பாவம், இந்த இரவும் என்னைப் போல் தனியாகத்தானே இருக்கிறது! அதற்கு ஒரு துணை வேண்டாமா? அதனால்தான் என்னைத் துணையாக வைத்துக் கொண்டிருக்கிறது போலிருக்கிறது!

தான் அடிக்கடி நினைத்துப் பார்க்கும் பாட்டைத் தனக்குள் மெல்ல முணுமுணுத்தாள் கலா.

'இரவுக்கு நான் மட்டும் காவல்

எனக்கொரு துணை இந்தப் பாடல்.'

'கண்ணதாசன் இந்தப் பாட்டை எனக்காகவே எழுதின மாதிரி இருக்கு!' என்று நினைத்தபடியே கண்ணை மூடித் தூங்க முயன்றாள் உமா.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 117
படர் மெலிந்திரங்கல் (பிரிவுத் துயரால் உடல் மெலிதல்)

குறள் 1168
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை

பொருள்:
இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமல் இருக்கின்றது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Sunday, January 22, 2023

1167. செவ்வந்தியின் சந்தேகம்!

திருமணம் ஆகி ஆறு மாதங்கள் ஆகி விட்டன. ஆயினும் கோதைக்கு ஒவ்வொரு நாளும் ஒரு புது நாளாகத்தான் இருந்தது.

காலை எழுந்துடன் முதல்நாள் முழுவதும் கணவனுடன் கழித்த நேரத்தை எண்ணி அசை போட்டு மகிழ்ந்த பிறகும், அன்றுதான் தன் மண வாழ்க்கையின் முதல் நாள் என்பது போல் உணர்வாள் கோதை.

கணவன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அவன் தன்னிடம் காட்டும் அன்பை உணர்ந்து, தானும் தன் அன்பைப் பேச்சாலும், செயலாலும் வெளிப்படுத்தி, இரவு உறங்கும்போது, இருவரும் ஒருவர் மற்றவர் மீது வெளிப்படுத்தும் அன்பின் உச்சத்தை அனுபவித்து, காலை கண் விழுத்தால் மீண்டும் ஒரு புது நாளை எதிர்நோக்கும் புத்துணர்ச்சி அவளுக்கு ஏற்படும்.

இது என்ன விந்தை! இந்த அன்பு வெள்ளம் தினமும் பய்ந்து என்னை மூழ்கடிக்கிறதே! இந்த அன்பு வெள்ளத்துக்குக் கரையே கிடையாதா என்று நினைத்து நினைத்து மலைப்பாள் கோதை.

ஆறு மாதங்களுக்குப் பிறகு கோதையின் கணவன் வியாபார விஷயமாக வெளியூருக்குச் செல்ல வேண்டி இருந்தது. போவதற்கு முன் கோதையை அவள் தாய் வீட்டில் விட்டு விட்டு, தான் திரும்பி வரச் சில மாதங்கள் ஆகும் என்று சொல்லி விட்டுப் போனான் அவன்.

"ஏண்டி உன் கண் இப்படிச் சிவந்திருக்கு?" என்றாள் கோதையின் தோழி செவ்வந்தி.

"பின்ன சிவக்காம எப்படி இருக்கும்? ராத்திரி முழுக்க தூங்காம கொட்டக் கொட்ட விழிச்சுக்கிட்டுப் படுத்துக்கிட்டிருந்தா?" என்றாள் கோதையின் தாய் காவேரி.

"ஏண்டி, இப்படி? உடம்பு சரியில்லையா?" என்றாள் செவ்வந்தி.

"உடம்புக்கு ஒண்ணுமில்ல. ஊருக்குப் போன கணவனை நினைச்சுத் தூங்காம கண் முழிச்சுக்கிட்டிருக்கா. இத்தனைக்கும், அவன் இவளோட ஆறு மாசம் குடித்தனம் நடத்திட்டு அப்புறம்தான் போனான். உன் புருஷன் கல்யாணம் ஆகி ஒரு வாரத்திலேயே உன்னை விட்டுட்டு ஊருக்குப் போயிட்டான். நீ சமாளிச்சு தைரியமா இல்ல? இப்ப அவன் திரும்பி வந்துட்டான். நீ இதையெல்லாம் இயல்பா எடுத்துக்கற. ஆனா இவளுக்கு அது புரியலையே!" என்றாள் காவேரி.

காவேரி தன் பெண்ணைப் பற்றிக் குறை சொல்கிறாளா  அல்லது, 'என் பெண்ணைப் போல் உனக்கு உன் கணவனிடம் அந்த அளவு அன்பு இல்லையே!' என்று சொல்லிக் காட்டுகிறாளா?' என்று புரியாமல் தாய் மகள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள் செவ்வந்தி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 117
படர் மெலிந்திரங்கல் (பிரிவுத் துயரால் உடல் மெலிதல்)

குறள் 1167
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.

பொருள்:
காமம் என்னும்‌ வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை. அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போ...