Sunday, April 14, 2024

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை.

அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போது "ஆமாம், என்னை ரொம்ப அழகுன்னு சொல்லிக்கிட்டிருக்கியே, அது உண்மைதானா?" என்றாள் வீணா.

"ஆமாம். அதில என்ன சந்தேகம்?" என்றான் அஜய்.

"அப்படின்னா என் அழகுக்காகத்தான் என்னைக் காதலிக்கறியா? என் குணத்துக்காக இல்லையா?"

சற்று யோசித்த அஜய், "இங்கே பாரு வீணா. முதல்ல ஒத்தரைப் பாக்கறப்ப நமக்குத் தெரியறது அவரோட தோற்றம்தான். அதை வச்சுத்தான் ஒத்தரைப் பிடிக்கிறதும் பிடிக்காததும். குணம் எல்லாம் பழகின அப்புறம்தானே தெரிய வரும்!" என்றான்.

"அப்படியா? அப்படின்னா, என்னை விட அழகான ஒரு பெண்ணேப் பார்த்தா என்னை விட்டுட்டு அவகிட்ட போயிடுவ இல்ல?" என்று சீண்டினாள் வீணா.

"அப்படிச் சொல்ல முடியாது. ஆனா ஐஸ்வர்யா ராய் மாதிரி அழகியா இருந்தா கொஞ்சம் யோசிக்க வேண்டியதுதான்!" என்றான் அஜய் விளையாட்டாக.

"அப்படின்னா அப்படி ஒரு பெண்ணைத் தேடிக்க!" என்று கோபமாகச சொல்லி விட்டு உரையாடலைத் துண்டித்து விட்டாள் வீணா.

அதற்குப் பிறகு, அஜய் வீணாவை ஃபோனில் அழைக்கப் பலமுறை  முயன்றான்.  அவள் ஃபோனை எடுக்கவில்லை.

"சாரி. விளையாட்டுக்குத்தான் அப்படிச் சொன்னேன். மன்னிச்சுடு!" என்றெல்லாம் ஐந்தாறு செய்திகள் அனுப்பினான். அவற்றுக்கும் பதில் இல்லை.

ன்றோடு ஐந்து நாட்கள் ஆகி விட்டன. வீணாவுடன் தனக்கு நிரந்தரப் பிரிவு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் அஜய்யின் மனதில் ஏற்படத் தொடங்கியது. அவளுடன் பழகிய இனிமையான தருணங்கள் நினைவுக்கு வந்தன. 

'எவ்வளவு அற்புதமான தருணங்கள் அவை! என்னுடைய விளையாட்டான, முட்டாள்தனாமான ஒரு பேச்சால் எல்லாவற்றையும் இழக்கப் போகிறேனா?

'இத்தனை நாள் பழகியும் வீணாவின் வீட்டு முகவரியை வாங்கி வைத்துக் கொள்ளவில்லை. அசோக் நகரில் இருக்கிறாள் என்பதுதான் தெரியும். அவளுடைய அபார்ட்மென்ட் பெயர் கூட மறந்து விட்டது. அவள் வீட்டை எப்படிக் கண்டுபிடிப்பது?'

அஜய்யின் தொலைபேசி அடித்தது. யாராக இருக்கும் என்று ஆர்வமில்லாமல் பார்த்தவனுக்கு இன்ப அதிர்ச்சி. வீணா!

"ஹலோ" என்றான் அஜய் அவசரமாக. 

"சாரி" என்றாள் வீணா.

"இல்லை. என் மேலதான் தப்பு!"

"தப்பு யார் பேரிலேயோ! ஆனா நாலஞ்சு நாள் உங்கிட்ட கோவிச்சுக்கிட்டுப் பேசாம இருந்தப்புறம் எனக்கு ஒரு பயம் வந்துடுச்சு!"

"என்ன பயம்?"

"நான் பேசாம இருந்ததால நீ என் மேல கோவிச்சுக்கிட்டு எங்கிட்டேந்து நிரந்தரமாப் பிரிஞ்சுடுவியோங்கற பயம். உன்னோட சந்தோஷமா இருந்த நாட்கள் மறுபடி வராதோன்னு பயம். அதனாலதான் நான் கால் பண்ணினேன். எங்கே சந்திக்கலாம், சொல்லு" என்றாள் வீணா.

கூடி இருந்த இன்பத்தை ஊடல் அழித்து விடுமோ என்று தனக்கு ஏற்பட்ட அச்சம் தன் காதலிக்கும் ஏற்பட்டிருப்பதை நினைத்து வியந்த அஜய், "உன் வீட்டு அட்ரஸை அனுப்பு. நான் அங்கே வந்து உன்னைக் கூட்டிக்கிட்டுப் போறேன். எங்கே போறதுன்னு அப்புறம் தீர்மானிக்கலாம். நீ ஃபோனை எடுக்கல. உன் அட்ரஸ் இல்லாததால உன்னை நேரிலேயும் தொடர்பு கொள்ள முடியல. இந்த ஒரு நிலைமை இனிமேயும் வரக் கூடாது. அதனால அட்ரஸ் ஃபர்ஸ்ட், மீட்டிங் நெக்ஸ்ட்!" என்றான் அஜய், பறிபோயிருந்த உற்சாகம் திரும்பக் கிடைத்தவனாக. 

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 131
புலவி (பொய்க் கோபம்)
குறள் 1307
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று.

பொருள்:
கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலிலும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கிறது.

குறள் 1308 (விரைவில்)
குறள் 1306

Saturday, April 13, 2024

1306. தங்கை மீது பொறாமை!

"யார்கிட்டேந்து ஃபோன்? ரொம்ப நேரம் பேசிக்கிட்டிருந்தியே!" என்றான் தரணிதரன்.

"கலாகிட்டேந்துதான்" என்றாள் உமா சுருக்கமாக. கலா உமாவின் தங்கை.

"ஏதோ ஆறுதல் சொல்லிக்கிட்டிருந்தே போல இருக்கே!"

"அவ புருஷன் ரெண்டு மூணு நாளா அவகிட்ட பேசறது இல்லையாம். அதைச் சொல்லி வருத்தப்பட்டா. 'கவலைப்படாதே. புருஷன் பெண்டாட்டிக்குள்ள இதெல்லாம் சகஜம்தான். சீக்கிரமே சரியாயிடும்'னு ஆறுதல் சொன்னேன்.

"சகஜம்னு எப்படிச் சொல்ற? நமக்குக் கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் ஆச்சு. நமக்குள்ள சண்டையே வந்ததில்ல. உன் தங்கையும் அவ புருஷனும் கல்யாணம் ஆகி ஆறு மாசத்துக்குள்ள மூணு தடவை சண்டை போட்டுட்டாங்களே!"

"எல்லாரும் ஒரே மாதிரி இருப்பாங்களா?" என்றபோது உமாவின் குரலில் ஒரு சலிப்புத் தெரிந்தது.

ன்று மாலை உமாவுக்கு மீண்டும் அவள் தங்கையிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

அவள் பேசி முடித்ததும், "இப்ப என்ன? சண்டை முத்திப் போய் அடிதடியில இறங்கிட்டாங்களாமா?" என்றான் தரணிதரன் கேலியாக.

கணவனை முறைத்துப் பார்த்த உமா, "அதெல்லாம் இல்ல. அவ புருஷன் ஆஃபீஸ்லேந்து ஃபோன் பண்ணினாராம். ராத்திரி ஓட்டல்ல டின்னர் சாப்பிட்டுட்டு நைட் ஷோ போகலாம்னு சொன்னாராம். அவளுக்கு ஒரே சந்தோஷம். அதைச் சொல்லத்தான் ஃபோன் பண்ணினா!" என்றாள்.

"அடிச்சுக்கறது அப்புறம் சேந்துக்கறது! என்ன இது? நாம எப்படி இருக்கோம் பாரு! எனக்குப் பெருமையா இருக்கு!" என்றான் தரணிதரன்.

"சண்டை போட்டுக்கிட்டு சேர்ந்துக்கறதிலயும் ஒரு சந்தோஷம் இருக்கலாம் இல்ல?" என்ற உமா, 'எனக்கு நம்ம வாழ்க்கை உப்புச் சப்பில்லாம இருக்கற மாதிரி இருக்கு. கலாவைப் பார்த்தா பொறாமையா இருக்கு!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 131
புலவி (பொய்க் கோபம்)
குறள் 1306
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.

பொருள்:
பெரும்பிணக்கும், சிறுபிணக்கும் ஏற்பட்டு இன்பம் தரும் காதல் வாழ்க்கை அமையாவிட்டால் அது முற்றிப் பழுத்து அழுகிய பழம் போலவும், முற்றாத இளம் பிஞ்சைப் போலவும் பயனற்றதாகவே இருக்கும்.

1305. கொடுத்து வைத்தவன்!

"என்னடா, எப்ப கூப்பிட்டாலும் ஏதாவது சாக்கு சொல்லி எங்களை டபாய்ச்சுட்டு உன் காதலியோட சுத்திக்கிட்டிருப்ப. ரெண்டு நாளா எங்களோடயே இருக்க. காதலி ஊருக்குப் போயிருக்காளா?" என்றான் சபரீஷ்

"ஊர்லதான் இருக்கா!" என்றான் விஜய் சலிப்புடன்.

"அப்புறம் ஏன் அவளை போய்ப் பாக்கப் போகல? அவளுக்கு ஏதாவது எக்ஸாமா இப்ப?"

"அவளுக்கு எதுவும் இல்லை. எனக்குத்தான் எக்ஸாம்!"

"உனக்கு ஏதுடா எக்ஸாம்?" என்றான் சபரீஷ் புரியாமல்.

"டேய் டியூப் லைட்! அவனோட காதலி அவனை சோதிக்கறாளாம்! அதைத்தான் எக்ஸாம்கறான்! அப்படித்தானேடா?" என்றான் சிவா.

"கரெக்டா சொல்லிட்டியே! உனக்கும் இது மாதிரி சோதனையெல்லாம் நடந்திருக்கா என்ன?" என்றான் விஜய் சிரித்துக் கொண்டே.

"எனக்கு எப்படி நடக்கும்? எனக்குத்தான் காதலியே இல்லையே! உன்னை மாதிரி எல்லாரும் அதிர்ஷ்டக்காரங்களா இருப்பாங்களா என்ன?" என்றான் சிவா பெருமூச்சுடன்.

"டேய்! சோதனைன்னு பேசி நீங்க ரெண்டு பேரும் என் பொறுமையைத்தான் சோதிக்கிறீங்க! என்னடா சோதனை?" என்றான் சபரீஷ்.

"நீ ஒரு டியூப் லைட்டுங்கறதைத் திரும்பித் திரும்ப வெளிக்காட்டணுமா என்ன? காதலி அவனை சோதிக்கிறான்னா, காதலியோ ஏதோ சண்டைன்னு அர்த்தம். அப்படித்தானேடா?" என்றான் சிவா.

"ஆமாம். ஒரு சின்ன விஷயம். அதுக்குக் கோவிச்சுக்கிட்டு  எங்கிட்ட பேச மாட்டேன்னுட்டா. நான் அவளைப் போய்ப் பார்க்கவும் கூடாதாம்!" என்றான் விஜய்.

"அப்படின்னா? உன் காதல் அவ்வளவுதானா? பலூன் மாதிரி வெடிச்சுடுச்சா?" என்றான் சபரீஷ்.

"உன்னை எத்தனை தடவை டியூப் லைட்னு சொல்றதுன்னு தெரியல! எனக்கு அலுத்தே போச்சு. காதலியோட சண்டை போட்டா காதல் முடிஞ்சு போச்சுன்னு அர்த்தமா? ஊடல்னு ஒரு வார்த்தை கேள்விப்பட்டதில்ல?" என்றான் சிவா.

"ஓ, அதுவா?" என்றான் சபரீஷ் சுருக்கமாக. மறுபடி ஏதாவது சொல்லித் தன்னை ஒரு டியூப் லைட் என்று மீண்டும் உறுதிப்படுத்த அவன் விரும்பவில்லை.

"எதுக்குடா அவளோட சண்டை போட்ட?" என்றான் சிவா.

"இவன் போட்டானோ, அவ போட்டாளோ!" என்றான் சபரீஷ்.

"இவனை மாதிரி ஒத்தனுக்கு ஒரு காதலி கிடைச்சதே ஒரு பெரிய அதிர்ஷ்டம். சண்டை போட்டு அதைக் கெடுத்துப்பானா என்ன? அவதான் போட்டிருப்பா. அப்படித்தானேடா?" என்றான் சிவா.

"இல்லை. நான்தான் சண்டை போட்டேன்!" என்றான் விஜய்.

"ஏண்டா? கொழுப்புதானே?" என்றான் சபரீஷ்.

"ஆறு மாசமா அவளைக் காதலிக்கறேன். இது வரையிலேயும் எங்களுக்குள்ள எந்தக் கருத்து வேறுபாடும் வரலை. ஒரு தடவையாவது சண்டை போட்டாத்தான் காதல்ல சுவாரசியம் இருக்கும்னு நினைச்சேன். அதோட அவளோட கோபத்தைப் பார்க்கணும்னு ஆசையா இருந்தது. அதனாலதான் சின்னதா ஒரு சண்டை போட்டேன். அவளும் கோவிச்சுக்கிட்டு என்னோட பேச மாட்டேன்னுட்டா!"

"ஏண்டா, முட்டாளாடா நீ? அவ உன் மேல நிரந்தரமாக் கோவிச்சுக்கிட்டு உங்க காதல் முறிஞ்சு போச்சுன்னா என்ன செய்வே?" என்ற சபரீஷ், ஒருவேளை தான் ஏதாவது தவறாகச் சொல்லி விட்டோமோ என்று நினைத்து சிவாவைப் பார்த்தான்.

"டேய் டியூப் லைட்!" என்று சிவா ஆரம்பப்பதற்குள் விஜய்யின் கைபேசி அடித்தது.

"அவதான்!" என்று சொல்லி விட்டு வாய் நிறையச் சிரிப்புடன் ஃபோனில் பேசுவதற்காகச் சற்று விலகிச் சென்றான் விஜய். 

ஒரு நிமிடம் கழித்து ஃபோன் பேசி விட்டுத் திரும்பிய விஜய்யின் முகத்தில உற்சாகம் கொப்பளித்தது.

"பைடா! மெரினாவுக்கு வரச் சொல்லி இருக்கா. நாளைக்குப் பாக்கலாம்!" என்று கூறி விட்டுக் கிளம்பினான் விஜய்.

"கொடுத்து வச்சவன்!" என்றான் சபரீஷ். 

அதை ஆமோதிப்பது போல் தலையசைத்தான் சிவா. 

"காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 131
புலவி (பொய்க் கோபம்)
குறள் 1305
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.

பொருள்:
நல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு மலர் போன்ற கண்களை உடைய மகளிரின் நெஞ்சில் விளையும் ஊடலின் சிறப்பே ஆகும்.

Saturday, March 23, 2024

1304. பூங்கொத்துடன் வந்தவன்!

"என்னடி, முரளி ரெண்டு நாளா உன்னைப் பாக்கவே வரல? " என்றாள் கற்பகம், தன் மகள் கவிதாவிடம்.

"வேற ஏதாவது வேலை இருந்திருக்கும்" என்றாள் கவிதா.

"என்ன வேலை இருந்தாலும் தினம் ஒரு தடவை உன்னைப் பார்க்க வராம இருக்க மாட்டாரே!"

தாய் கூறியதைக் கேட்டதும் கவிதாவுக்குத் தொண்டையை அடைப்பது போல் இருந்தது.

'ஏதோ, சண்டை வந்துடுச்சு. நானும் கோபத்தில இனிமே என்னைப் பார்க்க வராதீங்கன்னு சொல்லிட்டேன். அதுக்காக இப்படியா வீறாப்பா என்னை வந்து பாக்காம இருப்பாரு? ஒருவேளை வராமலே இருந்துடுவாரோ? சேச்சே! அது எப்படி? கல்யாணம்தான் நிச்சயம் ஆயிடுச்சே!'

"உங்களுக்குள்ள சண்டை எதுவும் இல்லையே! கல்யாணம் நிச்சயம் ஆனப்புறம் சண்டைஎதுவும் போட்டுக்காதீங்க!" என்றாள் கற்பகம் சிரித்தபடி.

'அம்மா விளையாட்டாகப் பேசுகிறாள். ஆனால் உண்மையாகவே நாங்கள் சண்டை போட்டுக் கொண்டு நான் அவரை இங்கே வர வேண்டாம் என்று சொல்லி, அதனால் இரண்டு நாட்களாக அவர் என்னைப் பார்க்க வராமல் இருக்கிறார் என்று தெரிந்தால் என்ன சொல்வாளோ!'

ன்று மாலை, "நானும் உன் அப்பாவும் கமலா அத்தை வீட்டுக்குப் போயிட்டு வரோம். எட்டு மணிக்கு வந்துடுவோம்" என்று சொல்லி விட்டுக் கிளம்பினாள் கற்பகம்.

கற்பகம் கிளம்பி ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு அழைப்பு மணி அடித்தது.

'அம்மாவாத்தான் இருக்கும். எப்பவுமே வெளியில கிளம்பறப்ப எதையாவது மறந்துட்டுப் போறது, கொஞ்ச தூரம் போனப்பறம் நினைவு ந்து திரும்ப வந்து எடுத்துக்கிட்டுப் போறது! இதுவே அம்மாவுக்கு வழக்கமாப் போயிடுச்சு!' என்று நினைத்தபடியே கதவைத் திறந்த கவிதாவுக்கு இன்ப அதிர்ச்சி. 

வாசலில் முரளி நின்று கொண்டிருந்தான். கையில் ஒரு பூங்கொத்து வேறு!

கவிதா பேசாமல் உள்ளே வந்து சோஃபாவில் அமர்ந்தாள். அவளைத் தொடர்ந்து வந்த முரளி அவள் அருகில் சோஃபாவில் அமர்ந்து கொண்டு அவளிடம் பூங்கொத்தைக் கொடுத்தான்.

"பூங்கொத்தெல்லாம் எதுக்கு? எனக்கு இன்னிக்குப் பிறந்த நாள் இல்லையே!" என்றாள் கவிதா, பூங்கொத்தை வாங்காமலே.

"நாம சண்டை போட்டுக்கிட்டதே உனக்கு வருத்தமா இருந்திருக்கும். என்னதான் கோபத்தில உன்னைப் பார்க்க வர வேண்டாம்னு நீ சொன்னாலும், ரெண்டு நாளா நான் உன்னைப் பார்க்க வராதது உன் வருத்தத்தை இன்னும் அதிகமாத்தான் ஆக்கி இருக்கும். நீ சொன்னதுக்காக நானும் ரெண்டு நாள் வராம இருந்தேன். இனிமேயும் உன் வருத்தத்தை நீடிக்க விடக் கூடாதுன்னுதான் இப்ப உன்னைப் பார்க்க வந்தேன்" என்றான் முரளி.

'இப்படிப்பட்ட நல்ல உள்ளவன் கொண்டவனை ஏதோ கோபத்தில் என்னைப் பார்க்க வராதீர்கள் என்று சொல்லி விட்டோமே' என்று நினைத்த கவிதா, "சாரி!" என்றபடியே அவன் கொடுத்த பூங்கொத்தை மனநெகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டாள்.

கவிகாமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 131
புலவி (பொய்க் கோபம்)
குறள் 1304
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.

பொருள்:
ஊடல் புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்.

Sunday, March 17, 2024

1303. நளினியின் அச்சம்

"என்னடி ரெண்டு மூணு நாளா ரொம்ப சோர்வா இருக்க? என்ன விஷயம்?" என்றாள் ருக்மிணி.

"ஒண்ணுமில்லையே!" என்றாள் நளினி.

"ஒண்ணுமில்லேன்னு உன் வாய்தான் சொல்லுது. உன் முகம் ஏதோ இருக்குன்னு இல்ல சொல்லுது?" என்ற ருக்மிணி, "கண்டுபிடிச்சுட்டேன். தினமும் காலேஜ் விடற நேரத்தில காலேஜுக்கு வெளியில பைக்கை வச்சுக்கிட்டுக் காத்துக்கிட்டிருந்து நீ வெளியில வந்ததும் உன்னை பைக்ல வச்சு அழைச்சுக்கிட்டுப் போவாரே உன் ஆளு, அவரு ரெண்டு நாளா வரலை போலருக்கு? என்ன ஆச்சு? எங்கேயாவது ஊருக்குப் போயிருக்காரா?" என்றாள்

இதைக் கேட்டதும் நளினியின் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

"என்னடி ஆச்சு?" என்றாள் ருக்மிணி பதட்டத்துடன்.

"சின்ன விஷயம். ஒரு விவாத்தில ஆரம்பிச்சு பெரிசாப் போயிடுச்சு. இனிமே உன் மூஞ்சியிலேயே முழிக்க மாட்டேன்னுட்டுப் போயிட்டாரு. சொன்னபடியே ரெண்டு நாளா வரலை. நிரந்தரமா என்னை ஒதுக்கிட்டாரோன்னு பயமா இருக்கு" என்று நளினி கண்ணீருக்கிடையில் கூறிக் கொண்டிருந்தபோதே, "உன் ஆளுக்கு நூறு வயசுடி. நீ அவரைப் பத்தி சொல்லிக்கிட்டு இருக்கறப்பவே அவர் வந்துட்டாரு பாரு!" என்றாள் ருக்மிணி சிரித்தபடி. 

நளினி திரும்பிப் பார்த்தாள். கல்லூரியின் வெளிக்கதவுக்கு அருகே மணிகண்டன் பைக்குடன் நின்று கொண்டிருப்பது தெரிந்தது.

"பைடி! நாளுக்குப் பார்க்கலாம்!" என்றபடியே வெளியே விரைந்தாள் நளினி.

 எதுவும் பேசாமல் மணிகண்டனின் பைக்கின் பின்னால் அமர்ந்து கொண்டாள் நளினி.

பைக் சற்று தூரம் சென்றதும், "ஏன் ரெண்டு நாளா வரலை? அன்னிக்கு என் மூஞ்சியிலேயே முழிக்க மாட்டேன்னு சொல்லிட்டுப் போனதால ரொம்ப பயந்துட்டேன்!" என்றாள் நளின்.

"ஏற்கெனவே நான் கோவிச்சுக்கிட்டு ரெண்டு நாள் வராம இருந்தது உன்னை ரொம்பக் கஷ்டப்படுத்தி இருக்கும். உன்னை மேற்கொண்டு வருத்தப்பட வைக்கக் கூடாதுன்னு இன்னிக்கு ஓடி வந்துட்டேன். இன்னிக்கு நாம ஒரு சினிமாவுக்குப் போகப் போறோம்" என்றான் மணிகண்டன்.

"என்ன சினிமா?"

"சினிமா எதுவா இருந்தா என்ன? பாக்ஸ்ல டிக்கட் வாங்கி இருக்கேன். அங்கே ரெண்டரை மணி நேரம் நாம மட்டும் தனியா இருக்கப் போறோம்!" என்று மணிகண்டன் கூறியபோது அவன் முகத்தில் எத்தகைய குறும்பு உணர்ச்சி இருந்திருக்கும் என்பதை நளினியால் பைக்கின் பின்னால் அமர்ந்தபடியே காண முடிந்தது.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 131
புலவி (பொய்க் கோபம்)
குறள் 1303
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.

பொருள்:
ஊடல் கொண்டவரின் ஊடல் நீக்கித் தழுவாமல் விடுதல் என்பது, ஏற்கனவே துன்பத்தால் வருந்துவோரை மேலும் துன்பநோய்க்கு ஆளாக்கி வருத்துவதாகும்.

1302. தோழியின் மூலம் வந்த செய்தி!

"ரவி உன்னை இன்னிக்கு சாயந்திரம் அஞ்சு மணிக்கு பார்க்குக்கு வரச் சொன்னான்" என்றாள் லதா.

"அப்படியா?" என்றாள் பார்க்கவி மகிழ்ச்சியுடன். "நல்லவேளை! எங்கே அவன் பேசாமலே இருந்துடுவானோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன். என் வயத்தில பாலை வார்த்த!" 

"ஆனா ஒண்ணு. ஆண்களுக்கு ஈகோ அதிகம். அவங்க இறங்கி வந்ததாக் காட்டிக்க மாட்டாங்க. அதனால அவன் கூப்பிட்டு நீ போன மாதிரி இருக்க் கூடாது. நீ தற்செயலா பார்க்குக்குப் போன மாதிரியும், எதிர்பார்க்காம அவனைச் சந்திச்ச மாதிரியும் இயல்பாப் பேசணும். அவன் உன்னை வரச் சொல்லி எங்கிட்ட சொல்லி அனுப்பினதாலதான் நீ வந்தேன்னு காட்டிக்கக் கூடாது!" என்றாள் லதா.

"ஓகே! சாரோட ஈகோவைத் திருப்திப்படுத்தற மாதிரியே நடந்துக்கறேன்!" என்றாள் பார்க்கவி உற்சாகத்துடன்.

'முட்டாள் பெண்ணே! காதலனோட சண்டை போட்டுட்டு நாலஞ்சு நாளா அவனைப் பார்க்காம, பேசாம தவிச்சுக்கிட்டிருந்த. அவனும் ஜம்பமா நீ இறங்கி வந்தாதான் ஆச்சுன்னு பிடிவாதமா இருந்தான். ஊடல் அளவுக்கு மீறிப் போச்சுன்னா நிரந்தரப் பிரிவில கொண்டு விடும்னு உங்க ரெண்டு பேருக்கும் புரியல. அதனால அவன் வரச் சொன்னதா உங்கிட்ட சொல்லியும், நீ வரச் சொனதா அவன்கிட்ட சொல்லியும் ஒரு டிராமா போட்டு உங்க ஊடலை நான் முடிச்சு வைக்க வேண்டி இருக்கு!' என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள் லதா.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 131
புலவி (பொய்க் கோபம்)
குறள் 1302
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.

பொருள்:
உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது.

Monday, March 4, 2024

1301. இரண்டு நாள் தண்டனை!

"ரெண்டு நாள்ள வந்துடுவேன்னு சொல்லிட்டுப் போனீங்க. பத்து நாள் ஆயிடுச்சு!" என்றாள் மல்லிகா கோபத்துடன்.

"என்ன செய்யறது மல்லிகா? வியாபார விஷயமாப் போனா வேலை முடிஞ்சப்புறம்தானே திரும்ப முடியும்?" என்றான் குமரன்.

"வரத்துக்கு லேட்டாகும்னா  போட்டுருக்கலாம் இல்ல? வீட்டில ஒருத்தி காத்துக்கிட்டிருக்காங்கற நினைப்பே உங்களுக்கு இல்லையா?"

"வேலை மும்முரத்தில எதுவுமே செய்ய முடியல. போஸ்ட் ஆஃபீசுக்குப் போய் இன்லாண்ட் லெட்டர் வாங்கக் கூட நேரம் இல்ல. நான் தங்கி இருந்த ஓட்டல்லேந்து போஸ்ட் ஆபீஸ் ரொம்ப தூரம் வேற!"

"இந்த நொண்டிச் சாக்கெல்லாம் வேண்டாம். இன்லாண்ட் லெட்டர் எல்லாம் பெட்டிக் கடையிலேயே விப்பாங்களே! பத்து பைசா அதிகம் கொடுத்து வாங்கணும். அவ்வளவுதானே? உங்களுக்கு என் மேல கொஞ்சமாவது அக்கறை இருந்தா எப்படியாவது லெட்டர் போட்டிருப்பீங்க!"

"ஐயோ, மல்லிகா! உனக்கு எப்படி் புரிய வைக்கறதுன்னே தெரியலியே! தினமுமே இன்னிக்கு வேலை முடிஞ்சுடும், ராத்திரியே ஊருக்குக் கிளம்பிடலாம்னுதான் நினைப்பேன். இப்படியே தள்ளிப் போய் பத்து நாள் ஆயிடுச்சு."

"பத்து நாள் ஆயிடுச்சு இல்ல? இன்னும் ரெண்டு நாள் ஆனாப் பரவாயில்ல."

"அப்படின்னா?"

"ரெண்டு நாளைக்கு என் பக்கதிலேயே வராதீங்க!"

"ரெண்டு நாளா? ஓ, அதுவா? அது எப்படி? நான் கிளம்பறத்துக்கு முதல் நாள்தானே தலைக்குக் குளிச்ச?"

"அதுவும் இல்ல, இதுவும் இல்ல. நீங்க பத்து நாள் என்னைத் தவிக்க வச்சதுக்காக உங்களுக்கு நான் கொடுக்கற தண்டனை இது!"

"என்ன மல்லிகா இது? சின்னக் குழந்தை மாதிரி!" என்றபடியே மல்லிகாவின் அருகில் வந்தான் குமரன்.

"வராதீங்கன்னா, வராதீங்க! அவ்வளவுதான்!" என்றாள் மல்லிகா.

அவள் முகத்தில் பொங்கிய கோபத்தைக் கண்டு குமரன் கொஞ்சம் பயந்து விட்டான்.

"சரி" என்றான் பலவீனமாக.

குமரன் முன்னறையில் நாற்காலியில் அமர்ந்திருந்தபோது பின்பக்கமாக வந்து அவன் கழுத்தைத் தன் கைகளால் சுற்றி வளைத்தாள் மல்லிகா.

"அப்பா! கோபம் தீர்ந்து போச்சா? பயந்துட்டேன்!" என்றான் குமரன் மகிழ்ச்சியுடன்.

"கோபமெல்லாம் எதுவும் இல்ல. நான் பத்து நாளா உங்களைப் பிரிஞ்ச தவிச்ச மாதிரி நீங்களும் தவிக்கறதைக் கொஞ்சநேரம் பாக்கணும்னு ஆசைப்பட்டேன். அவ்வளவுதான். நீங்க என் பக்கத்தில வர முடியாம தவிக்கறதைப் பாக்கறப்ப எனக்கே பாவமா இருந்தது. அதனாலதான் ரெண்டு நாள்ங்கறதை ரெண்டு மணி நேரமாக் குறைச்சுட்டேன்!" என்றாள் மல்லிகா சிரித்தபடி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 131
புலவி (பொய்க் கோபம்)
குறள் 1301
புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.

பொருள்:
(ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக.

Sunday, March 3, 2024

1300. என் மனம் என் சொல்லைக் கேட்பதில்லை!

"ஏண்டி சகுந்தலையோட திருமணத்துக்கு வரலை?" என்றாள் அங்கயற்கண்ணி.

"உனக்குத்தான் என் நிலைமை தெரியுமே! நான் வீட்டை விட்டு எங்கேயும் வெளியிலேயே போறதில்ல" என்றாள் பங்கஜவல்லி.

"உன் கணவரைப் பிரிஞ்சருக்கறதால நீ வருத்ததில இருக்கறது எல்லாருக்கும் தெரியும். அதுக்காக தோழியோட திருமணத்துக்குக் கூட வராம இருக்கலாமா? சகுந்தலை உன் மேல வருத்தப்பட மாட்டாளா?"

"போன மாசம் நடந்த குமுதாவோட  வளைகாப்புக்கு நான் போகாத்துக்கே அவ ன் மேல ரொம்ப கோவமா இருக்கா. அப்படி இருக்கறப்ப தன்னோட திருமணத்துக்கு வராம இருந்ததுக்காக சகுந்தலை கோபப்பட மாட்டாளா என்ன?"

"அப்புறம் ஏன் இப்படி இருக்கே? திருமணத்துக்கு வந்திருந்தா உன் மனசுக்கு ஒரு மாறுதலா இருந்திருக்கும். சகுந்தலைக்கும் சந்தோஷமா இருந்திருக்கும் இல்ல?"

சற்று நேரம் மௌனமாக இருந்த பங்கஜவல்லி, "நானும் அப்படித்தான் சொன்னேன். அது கேக்கலையே!" என்றாள்.

"எது கேக்கல?"

"என் மனசுதான்! அவர் என்னை விட்டுப் பிரிஞ்சதிலேந்து நான் துயரத்திலதான் இருக்கணும்னு என் மனசு முடிவு பண்ணிடுச்சு. நான் கொஞ்ச நேரமாவது அந்தத் துயரத்தை மறந்துட்டு வேற எதிலேயாவது ஈடுபடலாம்னு முயற்சி செஞ்சா என் மனசு அதை அனுமதிக்கிறதில்ல. மாட்டைக் கட்டிப் போட்டிருக்கறப்ப, அது கொஞ்சம் இந்தப் பக்கமோ, அந்தப் பக்கமோ அசைய முயற்சி பண்ணினா, அதைக் கட்டி இருக்கிற கயிறு அதைப் பிடிச்சு இழுக்கும் இல்ல, அது மாதிரிதான் என் மனசு என்னோடசோகத்திலேந்து என்னால கொஞ்சம் கூட விலக முடியாம என்னைப் பிடிச்சு இழுத்துக்கிட்டே இருக்கு. என் மனசே எனக்கு விரோதமா நடந்துக்கறப்ப எனக்கு நெருக்கமா இருந்த மத்தவங்க என் மேல கோவமா இருக்கறதைப் பத்தி நான் என்ன சொல்ல முடியும்?" என்றாள் பங்கஜவல்லி விரக்தியுடன்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 130
நெஞ்சொடு புலத்தல்
குறள் 1300
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.

பொருள்:
நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.

1299. வேறு யார் உதவுவார்கள்?

இரண்டு ஜாமங்கள் முடிந்து மூன்றாம் ஜாமம் துவங்கிய பிறகும் வசந்தமுல்லைக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. கடந்த இரண்டு வாரங்களாகவே இப்படித்தான். இரவில் தூக்கம் இல்லாததால் பகலில் சோர்வு.

வசந்தமுல்லையின் நிலைமையைக் கண்டு கவலை கொண்ட அவள் தாய் மீனாம்பாள் அவளை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றா.

வசந்தமுல்லையின் நாடியைப் பரிசோதித்த மருத்துவர், "உடலுக்கு ஒன்றும் இல்லையம்மா. மனக்கவலையால்தான் உங்கள் மகளின் உடல் பாதிப்படைந்திருக்கிறது. மனத்தில் உள்ள துயரையோ, கவலையையோ மாற்றிக் கொண்டால் அவள் உடல் சரியாகி விடும்" என்றார் மீனாம்பாளிடம்..

"ஐயா! என் கணவர் என்னை விட்டுப் பிரிந்து தொலைதூரம் சென்றிருக்கிறார். அவர் திரும்பி வரப் பல மாதங்கள் ஆகும். என்னால் எப்படித் துயரப்படாமல் இருக்க முடியும்?" என்றாள் வசந்தமுல்லை.

"மருத்துவரிடம் பேசும் பேச்சா இது?" என்று மீனாம்பாள் மகளைக் கடிந்து கொண்டாள்.

"உங்கள் மகள் கேட்பதில் ஒன்றும் தவறில்லை அம்மா! அவளுக்கு நான் விளக்குகிறேன்" என்ற மருத்துவர், வசந்தமுல்லையிடம் திரும்பி, "உன் கணரின் பிரிவை எண்ணி உன்னால் துயரப்படாமல் இருக்க முடியாதுதான். ஆனால் உன் மனத்தை வேறு திசைகளில் திருப்பி உன்னால் உன் துயரைக் குறைத்துக் கொள்ள முடியும்" என்றார்.

வீட்டுக்கு வந்த வசந்தமுல்லை இரவு படுக்கச் செல்லுமுன், "மருத்துவர் என்ன சொன்னார் என்று கேட்டாய் அல்லவா? உன்னைத் திசைதிருப்பினால் என்னால் என் துயரைக் குறைத்துக் கொள்ள முடியுமாம். நானும் உன்னை வேறு திசைகளில் திருப்ப எவ்வளவோ முயற்சி செய்கிறேன். ஆனால் நீ பிடிவாதமாக என்னை விட்டு விட்டுப் போனவருடைய நினைவையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறாய். எனக்கு ஒரு துயரம் வரும்போது, நீ எனக்குத் துணையாக இல்லாமல், நான் எவ்வளவு முயன்றும் வேறு திசைகளில் உன் கவனத்தைச் செலுத்தாமல், அவருடைய நினைவுகளிலேயே ஆழ்ந்து என் துயரத்தை இன்னும் அதிகமாக அல்லவா ஆக்கிக் கொண்டிருக்கிறாய்! நீயே எனக்கு உதவாவிட்டால் பின் வேறு யார் எனக்கு உதவுவார்கள்?" என்றாள் தன் மனத்திடம்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 130
நெஞ்சொடு புலத்தல்
குறள் 1299
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.

பொருள்:
ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே துணையாகா விட்டால், வேறு யார் துணையாவார்?

Monday, February 19, 2024

1298. ஒரு வீரனின் பெருமைகள்!

"அவர் எப்படிப்பட்ட வீரர் தெரியுமா? போர்க்களத்தில வாளைச் சுழட்டிக்கிட்டுப் போனார்னா எதிரிங்கள்ளாம் அலறி அடிச்சுட்டு ஓடுவாங்களாம்!"

"இதை யார் சொன்னது? ஓடிப் போன எதிரிகள்ள யாராவது சொன்னாங்களா?"

"என்ன கேலியா? அவரு மார்பில இருந்த விழுப்புண்களைப் பாத்திருக்க இல்ல?"

"பாத்திருக்கேன். நான் பாக்காம வேற யார் பாப்பாங்க? ஆனா எதிரிங்கள்ளாம் பயந்து ஓடினாங்கன்னு சொல்ற. அப்ப அவரைக் காயப்படுத்தினது யாரு? ஒருவேளை தன்னோட வாளாலேயே தெரியாம குத்திக்கிடாரோ?"

"அதை விடு. அவருடைய குணங்களைப் பத்திப் பேசுவோமா? அவரு எவ்வளவு கருணை உள்ளவர் தெரியுமா?"

'அந்தக் கருணையை இந்தக் காதலிகிட்டேயும் கொஞ்சம் காட்டி இருக்கலாம்!'

"என்ன முணுமுணுக்கற?"

"இல்ல. மேல சொல்லு!"

"அவரோட கருணையைப் பத்தி எவ்வளவு பேரு புகழ்ந்திருக்காங்க தெரியுமா?"

"அதுதான் சொல்லிட்டியே! அப்புறம்?"

"அப்புறம் அவரோட கொடை!"

"கொடைங்கறதும் கருணைக்குக் கீழே வந்துடுமே!"

"நீ என்ன சொல்ல வர? உன் காதலரைப் பத்திப் பெருமையா எதுவுமே பேசக் கூடாதுங்கறியா?"

"ஓ, அவர் என்னோட காதலரா? நீ எத்தனை நேரம் பேதைப் பார்த்தா அவர் உன்னோட காதலர் மாதிரி இல்ல இருந்தது?"

"உன்னோட காதலர்னாலும் அவர்கிட்ட எனக்குத்தானே நெருக்கம் அதிகம்?"

"ஆமாண்டி. அவரைத் தூக்கி என் நெஞ்சில வச்சேன் இல்ல, அதுதான் நீயே அவரை சொந்தம் கொண்டாட ஆரம்பிச்சுட்ட!"

"உன்னைப் பிரிஞ்சிருக்கார்ங்கறதால அவர் மேல உனக்கு இருக்கற கோபம் எனக்குப் புரியுது. அவரோட பிரிவு உன்னை விட என்னைத்தானே அதிகம் பாதிக்கும்? ஆனா அவரைக் குறை சொன்னா அது என்னை நானே தாழ்த்திக்கற மாதிரிங்கறதாலதானே அவரோட பெருமைகளைப் பேசிக்கிட்டிருக்கேன்!"

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 130
நெஞ்சொடு புலத்தல்
குறள் 1298
எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு

பொருள்:
பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

Sunday, February 18, 2024

1297. நெஞ்சே, நீசொல்!

திருமணம் ஆன ஒரு மாதத்திலேயே சுரஞ்சனியை  விட்டுப் பிரிந்து வியாபாரத்துக்காக வெளியூர் சென்று விட்ட அவள் கன் சத்யகீர்த்தி ஊர் திரும்பப் போகிறான் என்பதுதான் அந்தச் சிற்றூரில் அன்றைய முக்கியச் செய்தி.

சத்யகீர்த்திடன் சென்ற அவன் நண்பன் குணாளன் முதல்நாளே ஊர் திரும்பி விட்டான். அவன் கொண்டு வந்த செய்திதான் அது. 

சத்யகீர்த்தி மட்டும் அருகிலிருந்த நகரத்தில் தன் நண்பன் வீட்டில் தங்கி விட்டு சுரஞ்சனிக்கும் மற்றவர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொண்டு அடுத்த நாள் மாலை ஊருக்குத் திரும்புவான் என்று ச்ரஞ்சனியின் வீட்டில் வந்து தெரிவித்து விட்டுப் போயிருந்தான் குணாளன்.

கணவனைப் பிரிந்த இத்தனை மாதங்களும் சரியாக உண்ணாமல், உறங்காமல், அலங்காரம் செய்து கொள்ளாமல் பொலிவிழந்து வாழ்ந்து கொண்டிருந்த சுரஞ்சனி காதலன் வருகிறான் என்றதும் தன்னைச் சிறப்பாக அலங்கரித்துக் கொண்டு தயாராக இருந்தாள்.

மாலை வந்ததும் தன் வீட்டு வாசலில் வந்து நின்றாள் சுரஞ்சனி. தெருவில் பல வீடுகளிலிருந்தும் அவளைப் பார்த்த சிலர் அவளைக் கேலி செய்து பேசத் தொடங்கினர். அவற்றைப் பொருட்படுத்தாமல் தெருமுனையைப் பார்த்தபடியே நின்றாள் சுரஞ்சனி.

தெருமுனையில் சத்யகீர்த்தியின் கம்பீரமான உருவம் தெரிந்தது.

தன் வீட்டு வாசலில் நின்றிருந்த சுரஞ்சனி வேகமாகத் தெருமுனைக்கு ஓடினாள். காதலன் அருகில் சென்றதும் அவனைக் கட்டித் தழுவிக் கொண்டு அவன் மார்பில் முகம் புதைத்து அவன் மார்பைத் தன் கண்ணீரால் நனைத்தாள்.

சத்யகீர்த்தி அவளை ஆதரவுடன் அணைத்தபடி வீட்டுக்கு அழைத்து வந்தான்.

வீட்டுக்கு வந்ததும் சத்யகீர்த்தி முகம் கழுவிக் கொள்ளப் பின்கட்டுக்குச் சென்றதும், சுரஞ்சனியின் தாய், "ஏண்டி, இப்படியா வெட்கத்தை விட்டு நடந்துப்ப? தெருவில எல்லாரும் பார்த்துக் கேலி பண்றாங்க பாரு! உன் பெண்ணுக்கு வெக்கம் இல்லையான்னு எங்கிட்ட கேப்பாங்க. அவங்களுக்கு நான் என்ன பதில் சொல்றது?" என்று தன் மகளைக் கடிந்து கொண்டாள்.

தலையைக் குனிந்து தன் நெஞ்சைப் பார்த்த சுரஞ்சனி, "ஏ,நெஞ்சே! அம்மா கேக்கறாங்க பாரு. பதில் சொல்லு. உன்னோட சேர்ந்து நானும் இல்லாம வெக்கம் இல்லாம நடந்துக்கிட்டேன்?' என்றாள்.

 தன் செய்கையை நினைத்து வெட்கப்பட்டுத் தலையைக் குனிந்து கொண்டதாக நினைத்த சுரஞ்சனியின் தாய் "சரி,பரவாயில்ல. விடு" என்றாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 130
நெஞ்சொடு புலத்தல்
குறள் 1297
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.

பொருள்:
காதலனை மறக்க முடியாத என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சினோடு சேர்ந்து, மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்து விடடேன்.

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை. அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போ...