Sunday, May 19, 2024

1319. கலைவாணியின் கேள்வி!

மருதவாணனின்  மனைவி கலைவாணி அவனுடன் ஊடல் கொண்டு மூன்று நாட்கள் ஆகி விட்டன. ஊடல் கொண்ட மனைவியை சமாதானப்படுத்த மருதவாணன் செய்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.

பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்தான். கலைவாணி அவனைத் தன் அறைக்குள் வர அனுமதிக்காததால், பணிப்பெண் மூலம் அவற்றைக் கலைவாணிக்கு அனுப்பி வைத்தான் மருதவாணன். பணிப்பெண் மூலமே அவற்றைத் திருப்பி அனுப்பி விட்டாள் கலைவாணி.

போர்க்களத்தில் எதிரிகளைக் கலங்கடிக்கும் மாவீரனாக இருந்து என்ன பயன்? படைத்தளபதி என்ற சக்தி வாய்ந்த பதவியில் இருந்து என்ன பயன்? ஊடல் கொண்ட மனைவியை சமாதானப்படுத்த முடியவில்லை.

வெளியூர் சென்று திரும்பியதும், நேரே வீட்டுக்கு வராமல், அரண்மனைக்குச் சென்றதுதான் மருதவாணன் செய்த தவறு. அரண்மனையில் ஒரு முக்கிய ஆலோசனை இருந்ததால், வீட்டுக்குத் திரும்பாமல் அரண்மனையிலேயே தங்கி விட்டான். ஆலோசனை தொடர்ந்து நீடித்ததால், இரண்டாம் நாள் இரவும் அங்கேயே தங்கும்படி ஆகி விட்டது.

இதற்குத்தான், கணவன் மீது கோபம் கொண்டு, அவனைப் பார்க்க மறுத்துத் தன் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள் கலைவாணி.

மூன்றாம் நாள், மருதவாணன் ஒரு முடிவு செய்தான். மனைவி தன்னிடம் பேசும் வரை தான் உணவு அருந்தப் போவதில்லை என்பதைப் பணிப்பெண் மூலம் மனைவிக்குத் தெரிவித்து விட்டு, உணவு அருந்தாமல் இருந்தான்.

சில மணி நேரம் கழித்துத் தன் அறைக் கதவைத் திறந்து வெளியே வந்த கலைவாணி, அவன் கைகளைப் பற்றித் தன் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

அறைக்குள் சென்றதும், கதவைத் தாளிட்ட கலைவாணி, "அடேயப்பா! ஊடல் கொண்ட மனைவியை சமாதானப்படுத்த என்னவெல்லாம் செய்கிறீர்கள்! பட்டினி கிடந்து, உடலை வருத்திக் கொள்ளக் கூடத் துணிந்து விட்டீர்களே!" என்றாள், வியப்புடன்.

"உன் மேல் இருக்கும் அன்புக்காக நான் இதைக் கூடச் செய்ய மாட்டேனா?" என்று சொல்லியபடி அவளை அணைக்க வந்த மருதவாணனைக் கையை நீட்டித் தடுத்த கலைவாணி, "உண்மையைச் சொல்லுங்கள். உங்கள் மற்ற காதலிகளைச் சமாதானப்படுத்தவும் இதே வழிமுறைகளைக் கடைப்பிடிப்பீர்கள் அல்லவா?" என்றாள், கோபத்துடன். 

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 132
புலவி நுணுக்கம் (பொய்க் கோபம்)
குறள் 1319
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று.

பொருள்:
ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும், நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று ‌சொல்லிச் சினம் கொள்வாள்.

அறத்துப்பால்                                                         பொருட்பால் 


No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...