Sunday, May 19, 2024

1318. சந்தேக தாரிணி!

திருமணத்துக்குப் பிறகு, வாழ்க்கை நெடுஞ்சாலைப் பயணம் போல் தங்குதடையின்றி ஓடிக் கொண்டிருக்கும் என்றுதான் கோபால் எதிர்பார்த்தான்.

ஆனால், அவன் வாழ்க்கை அப்படி அமைய அவன் மனைவி தாரிணி அனுமதிக்கவில்லை.

ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு இருவருக்கும் அடிக்கடி சிறு சண்டைகள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. 

இதற்கு முக்கியமான காரணம் தாரிணியின் சந்தேகப்படும் இயல்புதான்.

அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்தால், ஆயிரம் கேள்விகள் - எங்கே போயிருந்தீர்கள், தாமதமாகும் என்று ஏன் முன்பே சொல்லவில்லை, வேறு யாராவது பெண்ணைச் சந்தித்துப் பேசி விட்டு வந்தீர்களா என்பவை போல்.

தாரிணியின் சந்தேக குணத்தால், கோபால் சில விஷயங்களை அவளிடம் சொல்வதைத் தவிர்க்க ஆரம்பித்தான். அது மேலும் பிரச்னைகளைக் கிளப்பியது.

அவன் சொல்லாமல் விட்ட விஷயம் தாரிணிக்குத் தெரிய வந்தால், 'ஏன் இதை மறைத்தீர்கள்?' 'சின்ன விஷயம்தான் என்றாலும், என்னிடம் சொல்லி இருக்கலாமே!' 'இது எனக்குத் தெரியக் கூடாது என்று நீங்கள் நினைத்ததற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா?' போன்ற கேள்விகளால் அவனைத் துளைத்து எடுத்து விடுவாள் தாரிணி.

எனவே, ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் தாரிணியிடம் சொல்லி விடுவது என்று வழக்கப்படுத்திக் கொண்டான் கோபால். அப்படியும், தாரிணி சந்தேகப்பட்டுக் கேள்விகள் கேட்பது நிற்கவில்லை.

ஒருமுறை, கோபால் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அவனுக்குத் தும்மல் வந்து விட்டது.

தும்மல் போட்டு விட்டு கோபால் சுதாரித்துக் கொண்டதும், "சாப்பிடறப்ப தும்மினா, யாரோ நமக்கு நெருக்கமானவங்க நம்மை நினைக்கிறாங்கன்னு அர்த்தம். உங்களை யார் நினைக்கறாங்க?" என்றாள் தாரிணி.

"என் அம்மாவாத்தான் இருக்கும். உன்னையும், அவங்களையும் விட்டா, எனக்கு வேற யாரு இருக்காங்க?" என்றான் கோபால்.

"உங்கம்மாதான் இப்ப உயிரோட இல்லையே!"

"ஒருவேளை, மேல் உலகத்திலேந்து நினைக்கிறாங்களோ என்னவோ?" 

அத்துடன் அந்தப் பேச்சு முடிந்து விட்டது.

கோபால் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். தாரிணி சமையற்கட்டில் இருந்தாள். கோபாலுக்குத் தும்மல் வருவது போல் இருந்தது. சாப்பிடும்போது தும்மினால், அதை வைத்து தாரிணி ஏதாவது சொல்வாளோ என்று பயந்து, கஷ்டப்பட்டுத் தும்மலை அடக்கிக் கொண்டான் கோபால்.

அப்போது, சமையற்கட்டிலிருந்து வெளியே வந்த தாரிணி, கோபால் தும்மலை அடக்கிக் கொள்வதை கவனித்து விட்டாள்.

"தும்மலை அடக்கினீங்களா?" என்றாள் தாரிணி.

"ஆமாம்" என்றான் கோபால், பலவீனமான குரலில்.

"ஏன் அடக்கினீங்க? தும்மல் வந்தா, தும்ம வேண்டியதுதானே?"

"இல்லை, தும்மினா, வாயில இருக்கற சாப்பாடு வெளியில தெறிச்சுடுமேனுதான்!"

"அது இல்லை காரணம். உங்களுக்கு வேற ஒரு காதலி இருக்கா. அவ உங்களை நினைச்சதாலதான் அன்னிக்கு நீங்க தும்மினீங்க. இன்னிக்கும் அப்படித்தான். அதை நான் கண்டுபிடிச்சுடுவேனேன்னுதானே தும்மலை அடக்கினீங்க?"

இவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், திகைத்தபடி அமர்ந்திருந்தான் கோபால்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 132
புலவி நுணுக்கம் (பொய்க் கோபம்)
குறள் 1318
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.

பொருள்:
அவளுடைய ஊடலுக்கு அஞ்சி, யான் தும்மலை அடக்கிக் கொள்ள, உம்மவர் உம்மை நினைப்பதை எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ என்று அழுதாள்.
அறத்துப்பால்                                                         பொருட்பால் 

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...