Sunday, May 19, 2024

1317. விநோதினியின் நம்பிக்கைகள்

"இன்னிக்கு சாயந்திரம் அஞ்சு மணிக்கு உன் வீட்டுக்கு வரேன். அங்கேந்து மாலுக்குப் போகலாம்" என்றான் ரவீந்திரன்.

"அஞ்சு மணிக்கு வேண்டாம். நாலரை மணிக்கு முன்னால வா. இல்லேன்னா, ஆறு மணிக்கு அப்புறம் வா!" என்றாள் விநோதினி.

"என்னால நாலு மணிக்கு மேலதான் கிளம்ப முடியும். ஏன், அஞ்சு மணிக்கு வந்தா என்ன?"

"டேய், முட்டாள்! இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. நாலரையிலேந்து ஆறு மணி வரையில ராகுகாலம். இது கூடத் தெரியாதா?"

"இந்த விஞ்ஞான உண்மை தெரியாத நான் முட்டாள்தான். ஞாபகம் வச்சுக்கறேன். ஐ ஏ எஸ் பரீட்சை எழுதறப்ப உபயோகமா இருக்கும்!"

"நீ ஐ ஏ எஸ் பரீட்சை எழுதப் போறியா? எங்கிட்ட சொல்லவே இல்லையே!"

"ஒருவேளை எழுதினா, உபயோகமா இருக்கும்னு சொன்னேன்! சரி. அப்ப,  அஞ்சு மணிக்கு மேல கிளம்பி வரேன்."

"ஐயையோ! ராகுகாலத்தில கிளம்ப வேண்டாம்!"

"அப்ப, ஆறு மணிக்கு மேல கிளம்பறேன். ஆனா, உன் வீட்டுக்கு வரப்ப ஏழு மணி ஆயிடுமே!"

"பரவாயில்லை" என்றாள் விநோதினி.

மாலில் சற்று நேரம் சுற்றிய பிறகு, இருவரும் அங்கிருந்த ஒரு உணவகத்துக்குச் சென்றனர். 

இருவரும் உணவருந்திக் கொண்டிருந்தபோது, ரவீந்திரனுக்கு திடீரென்று தும்மல் வந்தது. கைக்குட்டையால் வாயைப் பொத்திக் கொண்டு, ஒரு பெரிய தும்மல் போட்டான்.

"நூறாண்டு வாழ்க!" என்றாள் விநோதினி.

ரவீந்திரன் சுற்றுமுற்றும் பார்த்து விட்டு, "இங்கே யாராவது பிறந்த நாள் கொண்டாடறாங்களா என்ன? யாரை நூறாண்டு வாழ்கன்னு வாழ்த்தின?" என்றான்.

"உன்னைத்தான். யாராவது தும்மல் போட்டால், நூறாண்டு வாழ்கன்னு வாழ்த்தணும். அப்படி வாழ்த்தினா, அவங்களுக்கு ஆயுள் கூடும்!" என்றாள் விநோதினி, அவனை உற்றுப் பார்த்தபடி.

"ரெண்டு மணி நேரத்துக்குள்ள, ரெண்டு விஞ்ஞான உண்மைகளா! என்னால தாங்க முடியாதும்மா!" என்ற ரவீந்திரன், "ஏன் என்னை அப்படிப் பாக்கற? திடீர்னு சீரியசாயிட்ட!" என்றான், விநோதினியின் முகத்தைப் பார்த்து.

"பொதுவா, சாப்பிடும்போது தும்மல் போட்டா, நமக்கு நெருக்கமானவங்க யாரோ நம்மை நினைச்சுக்கறாங்கன்னு அர்த்தம். உனக்கு நெருக்கமானவங்க என்னைத் தவிர வேற யாராவது இருக்காங்களா என்ன? பொதுவாகவே, ஆண்கள் சபல புத்தி உள்ளவங்க. என்னை ஏமாத்திட மாட்டியே!" என்றாள் விநோதினி. 

ரவீந்திரன் அவள் முகத்தைப் பார்த்தபோது, அதில் ஒரு வாட்டம் இருப்பது போல் தெரிந்தது.

"அம்மா, விநோதினி! ஏதேதோ விஷயங்களையெல்லாம் நம்பற. உன் காதலனை நம்ப மாட்டியா? நீயே என்னை விரட்டி விட்டாலும், நான் உன்னை விட்டுப் போக மாட்டேன்!" என்றபடியே அவள் கையைப் பற்றினான் ரவீந்திரன்.

"சாரி. அவசரத்தில எச்சில் கையால தொட்டுட்டேன். அதுக்கு வேணும்னா, 'நம் காதல் நூறாண்டு வாழ்க'ன்னு சொல்லிடலாமா?" என்றான் ரவீந்திரன், தொடர்ந்து.

மேகமூட்டத்துக்கிடையே தோன்றும் நிலவொளி போல், விநோதினியின் வாடிய முகத்தில் ஒரு புன்னகை அரும்புவதற்கான அறிகுறி தெரிந்தது போல் ரவீந்திரனுக்குத் தோன்றியது.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 132
புலவி நுணுக்கம் (பொய்க் கோபம்)
குறள் 1317
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.

பொருள்:
யான் தும்மினேனாக; அவள் நூறாண்டு என வாழ்த்தினாள்; உடனே அதை விட்டு, யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்.
அறத்துப்பால்                                                         பொருட்பால் 

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...