Monday, June 29, 2020

1109. முதுகில் ஒரு தட்டு!

வத்சலா:
ஆறு மாசத்துக்கு மேல பழகிக்கிட்டிருக்கோம். ஆனா இந்த சந்திரன் இவ்வளவு மோசமானவனா இருப்பான்னு நான் எதிர்பாக்கவே இல்ல. 

ரெண்டு பேரும் ஒரே கட்டடத்திலதான் வேலை செய்யறோம், ஆனா வெவ்வேறு அலுவலகங்கள்ள. என் அலுவலகம் ஆறாவது மாடி, அவனோடது நாலாவது மாடி. 

ஒருநாள் அவசரமா ஓடி வந்து லிஃப்டில ஏறினான் அவன். அப்ப லிஃப்டில நான் மட்டும்தான் இருந்தேன். அவனைப் பாத்து சிரிச்சேன். அவனும் சிரிச்சான். அப்புறம் ஒருநாள் கேஃப்டீரியால தற்செயலா சந்திச்சோம். அப்பதான் எங்களை அறிமுகப்படுத்திக்கிட்டுப் பேசஆரம்பிச்சோம்.

என்னவோ தெரியல, சட்னு எனக்கு அவனைப் பிடிச்சிடுச்சு. அவனுக்கும் என்னைப் பிடிச்சுடுச்சு. அப்புறம் என்ன, சனி, ஞாயிறெல்லாம் சேர்ந்து சுத்த ஆரம்பிச்சோம். 

போன வாரம்தான் ரெண்டு பேர் வீட்டிலயும். சொல்லிட்டுக் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யச் சொல்லலாம்னு முடிவு செஞ்சோம். 

அதுக்குள்ளே இந்த நிகழ்ச்சி நடந்துடுச்சு.

சந்திரன்:
வத்சலா இவ்வளவு அல்பமா நடந்துப்பான்னு எதிர்பாக்கல. அன்னிக்கு ஒரு ரெஸ்டாரண்ட்ல நாங்க உக்காந்துக்கிட்டிருக்கச்சே, என் மேலதிகாரி சகுந்தலா அங்கே வந்தா. பேருக்குத்தான் அவ மேலதிகாரி. எல்லார்கிட்டயும் நட்போடதான் பழகுவா. அவளை எல்லாரும் சக்குன்னுதான் கூப்பிடணும்னு கட்டளை போட்டிருக்கா.

நாங்க எல்லாரும் வா போன்னுதான் பேசிப்போம். யார் மேலதிகாரி, யாரு கீழ வேலை செய்யறவங்கன்னே கண்டு பிடிக்க முடியாது. அதுதான் எங்க கம்பெனியோட ஒர்க் கல்ச்சர்!

சகுந்தலா என்னைப் பாத்துட்டு, "ஹாய் சந்த்!" என்றவள், வத்சலாவைப் பாத்துட்டு, "யார் இவங்க? காதலியா, இல்லை சும்மா ஃபிரண்ட்தான்னு சொல்லப் போறியா?" என்றாள்.

"இவ வத்சலா. நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு. இவங்க சகுந்தலா, என்னோட பாஸ்" ன்னு ரெண்டு பேரையும் ஒத்தருக்கொருத்தர் அறிமுகப்படுத்தி வச்சேன்.

"சகுந்தலா என்ன? சக்குன்னு சொல்லு. அப்படித்தானே நீ என்னைக் கூப்பிடுவ?" என்றவள் வத்சலாவைப் பார்த்து, "நீ ரொம்ப லக்கி வத்ஸ்! சந்த் ரொம்ப நல்ல பையன்" என்று சொல்லி விட்டு "என்ஜாய்!" என்று சொல்லி என் முதுகில தட்டிட்டுப் போனா.

அவ அந்தண்டை போனதுமே, வத்சலா என்னைப் பிடி பிடின்னு பிடிக்க ஆரம்பிச்சுட்டா. "யாரு இவ? உன்னை செல்லமா சந்த்னு கூப்பிடறா? முதுகிலே வேற தட்டறா!" என்றாள் கோபத்துடன்.

"அவ அப்படித்தான்! உன்னைக் கூட வத்ஸனு கூப்பிட்டா பாரு!" என்றேன் நான்.

"அது வேற! முதல்ல பாக்கற ஒத்தரை வா போன்னு கூப்பிடறது, பேரைச் சுருக்கிக் கூப்பிடறது இதெல்லாம் என்ன மானர்ஸ்?" ,என்று பொரிந்து தள்ளினாள் வத்சலா.

"அவ அப்படித்தான் வத்சலா. நீ எனக்கு மனைவியாப் போறவன்னு கொஞ்சம் உரிமை எடுத்துக்கிட்டிருப்பா!" என்றேன் நான். உண்மை அதுதானே?

"நீ அவளை சக்குன்னு கூப்பிடுவியாமே! அதையும் அவளே சொல்றா? அதுக்கென்ன அர்த்தம்? நீயும் அவளும் நெருக்கமானவங்கன்னு எங்கிட்ட காட்டிக்கறாளா? முதுகிலே வேற தட்டறா! நீயும் பேசாம இருக்க!" என்றாள் கோபம் குறையாமல்.

அப்பதான் எனக்கும் கோபம் வந்து ஒரு வார்த்தை சொல்லிட்டேன். அதுதான் இந்த முறிவுக்கே காரணமாயிடுச்சு. 

வத்சலா:
அவனோட பாஸ் சக்கு (பேரைப்பாரு! சகுந்தலாங்கற நல்ல பேரை ஏன் இப்படி சுருக்கிக்கணும், கவர்ச்சியா இருக்கணுங்கறதுக்காகவா?) அவன் முதுகிலே தட்டினப்ப ஏன் சும்மா இருந்தேன்னு நான் கேட்டதுக்கு, சந்திரன், "வேற என்ன செஞ்சிருக்கணும்? பதிலுக்கு நான் செல்லமா அவ கன்னத்தில தட்டி இருக்கணுமா?" ன்னு சொல்றான்.

எனக்கு வந்ததே ஒரு கோபம்! அவளைப் பத்தி மனசில அப்படி ஒரு ஆசை இருந்ததாலதான் அப்படிச் சொல்லி இருக்கான்? 

"அந்த சக்குவையே கட்டிக்கிட்டு அழு"ன்னு சொல்லிட்டு எழுந்து வந்துட்டேன். அவன் கூப்பிட்டான். நான் காதிலேயே போட்டுக்கல. ரெஸ்டாரண்ட் வாசல்ல நின்னுக்கிட்டிருந்த ஒரு ஆட்டோவில ஏறி வீட்டுக்கு வந்துட்டேன்.

அப்புறம் அவன்கிட்டேந்து நிறைய மெஸேஜ் வந்தது. அதையெல்லாம் படிக்காமயே அழிச்சுட்டேன். நிறைய தடவை கால் பண்ணினான். நான் எடுக்கவே இல்லை. 

ஒரு தடவை என் அலுவலகத்துக்கு வந்து என்னைப் பாக்கணும்னு சொல்லி அனுப்பினான். 'இப்ப ஒரு கால்ல இருக்கேன். இப்ப பாக்க முடியாது'ன்னு செக்யூரிட்டி கிட்ட சொல்லி அனுப்பிட்டேன். பக்கத்தில இருந்தவங்கல்லாம் கூட ஒரு மாதிரியாப் பாத்தாங்க. ஏன்னா அப்ப நான் வேலை எதுவும் இல்லாம சும்மாதான் உக்காந்துக்கிட்டிருந்தேன்!

அப்புறம் அவன் கிட்டேந்து எந்த மெஸேஜும், காலும் வல்ல. விட்டது சனியன்னு நிம்மதியா இருந்தேன்.

சந்திரன்:
விளையாட்டாப் பேசறதா நினைச்சு ஒரு வார்த்தை சொன்னதை அவ தப்பா எடுத்துக்கிட்டு காதலையே முறிச்சுப்பான்னு நான் எதிர்பாக்கல. விர்ருனு எழுந்து போயிட்டா. 

அதுக்கப்பறம் அவளுக்கு எத்தனையோ மெஸேஜ் அனுப்பியும், கால் பண்ணியும் பாத்தேன். அவ ஃபோனையே எடுக்கல. என் மெஸேஜையெல்லாம் படிச்சிருப்பாளான்னு தெரியல. 

அவ அலுவலகத்துக்குப் போய் அவளைப் பாக்கவும் முயற்சி செஞ்சேன். ஏதோ கால்ல இருக்கறதா சொல்லி என்னைப் பாக்க மாட்டேன்னுட்டா. அவ பொய்தான் சொல்றான்னு எனக்குத் தெரிஞ்சுது.

அதுக்கப்பறம் எனக்கு ரோஷம் வந்து, நானும் அவளைத் தொடர்பு கொள்ள முயற்சி பண்றதை விட்டுட்டேன். 

வத்சலா:
சந்திரனோட சண்டை போட்டுக்கிட்டுப் பிரிஞ்சு ரெண்டு மாசம் ஆச்சு. இப்ப கொஞ்ச நாளா மனசில ஏதோ ஒரு வருத்தம். அவனோட பழகின நாட்களை நினைச்சா எவ்வளவு சந்தோஷமா இருக்கு! எங்கிட்ட எவ்வளவு அன்பா இருந்தான் அவன்! 

இப்ப மட்டும் எங்கிட்ட அவனுக்கு அன்பு இல்லேன்னு சொல்ல முடியுமா? நான்தானே கோவிச்சுக்கிட்டு வந்தேன்? அதுக்கப்புறம் கூட அவன் எத்தனையோ தடவை என்னைத் தொடர்பு கொள்ள முயற்சி செஞ்சான்! என் அலுவலகத்துக்குக் கூட வந்திருந்தானே!

ஒரு தடவை அவனோட பேசியிருந்தா எல்லாம் சரியாயிருக்குமோ? ஆனா அந்த சக்கு விவகாரம்? அதை அவ்வளவு சுலபமா எடுத்துக்க முடியுமா? 

கேஃப்டீரியால உக்காந்து யோசிச்சுக்கிட்டிருக்கச்சே, அங்கே சக்கு வந்தா. அவ கூட நாலஞ்சு பேர் வந்தாங்க. எல்லாரும் ஆண்கள்தான் அவ அலுவலகத்தில வேலை செய்யறவங்களாத்தான் இருக்கும். அவங்கள்ள ஒத்தனோட தோள்ள கையைப் போட்டுப் பேசிக்கிட்டே வந்தா? அவன் அவளோட காதலனா, இல்லை எல்லார்கிட்டயும் அவ அப்படித்தான் நடந்துப்பாளா? 

அவங்க  ஒரு மேஜையைச் சுத்தி  உக்காந்துக்கிட்டாங்க.  கொஞ்ச நேரம் அவங்களைப் பாத்துக்கிட்டிருந்தேன். சக்கு அவங்க கையைப் பிடிச்சு அழுத்தறதும், முதுகிலேயோ, தோள்ளயோ தட்டிப் பேசறதையும் பாக்கச்சே அவ எல்லார் கிட்டயும் அப்படித்தான் நடந்துப்பான்னு புரிஞ்சுது. 

நான்தான் சந்திரன் விஷயத்தில அவசரப்பட்டுட்டேனோன்னு தோணுது.

சந்திரன்:
வத்சலாவைத் தொடர்பு கொள்றதை நிறுத்திட்டாலும் அவளை நினைக்காம இருக்க முடியல. எவ்வளவு அற்புதமான பொண்ணு அவ! ஒரு தடவை அவ கிட்ட ஃ போன்ல  பேசினாக் கூட சமாதானப்படுத்திடலாம். ஆனா அவ போனையே எடுக்க மாட்டேங்கறாளே!

ரெண்டு மாசம் ஆயிடுச்சு. ஒருவேளை இப்ப அவ மனசு மாறி இருக்கலாம். மறுபடி ஒரு தடவை ஃபோன் பண்ணிப் பாக்கலாமா? 

அவளுக்கு ஃபோன் பண்றதுக்காக போனைக் கையில எடுத்தப்ப, ஃபோன் அடிச்சது.

"ஹாய் சந்த்! ஐ ஆம் சாரி! தப்பு என் மேலதான்!" என்றாள் வத்சலா.

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 111
புணர்ச்சி மகிழ்தல்  
குறள் 1109
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.

பொருள்
 உடல், ஊடலின் காரணத்தைப் புரிந்து கொள்ளுதல், பிறகு இணைதல் ஆகியவை காதல் வாழ்வு  நிறைவேறப் பெற்றவர்  பெற்ற பயனாகும்.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

Wednesday, June 10, 2020

1108. காற்று வெளியிடை!

"காதல்னாலே பல பேர் அதுக்குக் குறுக்கே  வருவாங்க" என்றான் சுந்தர்.

"யாரு பெற்றோர்கள்தானே? நாமதான் நம் பெற்றோர்கள் கிட்ட பேசி அவங்களை நம் காதலுக்கு சம்மதிக்க வச்சுட்டமே?" என்றாள்  பிரியா. 

"பெற்றோர்கள் மட்டும் இல்ல. சமூகம்  கூட."

"சமூகம்னா?"

"சமூகம்னா, பல பேர். அக்கம் பக்கத்தில இருக்கறவங்க  நம்மைப்  பத்தி வம்பு  பேசுவாங்க. கிண்டல் பண்ணுவாங்க. அப்புறம் நம்  நண்பர்கள்,  நம்மோட வேலை செய்யறவங்க இது மாதிரி சில பேர் நமக்கு  நல்லது செய்யறதா நினைச்சுக்கிட்டு நமக்கு உபதேசம் பண்ணுவாங்க. காதல் ஒரு மாயைன்னு சொல்லுவாங்க. காதலன் ஏமாத்திடுவான்னு காதலியோட நண்பர்கள் அவகிட்ட சொல்வாங்க."

" ஆமாம். எங்கிட்ட கூட சில பேர் சொன்னாங்க. ஆனா நான் அதைப் பொருட்படுத்தல. உன்கிட்டயும் அது மாதிரி சொல்லி இருப்பாங்களே!"

"ஆமாம். இந்தக் காலத்துப் பெண்கள் எல்லாம் ஒரே நேரத்தில பல ஆண்களைக் காதலிப்பாங்கன்னு சொன்னாங்க."

"அதுக்கு நீ என்ன சொன்னே?"

"ஒரே நேரத்தில பல பேரைக் காதலிக்காம ஒருத்தருக்கப்புறம் இன்னொருத்தர்னு காதலிச்சா பரவாயில்லையான்னு கேட்டேன்!"

"என் காதலி அப்படிப்பட்டவ இல்லேன்னு சொல்லி இருக்க வேண்டாமா?"

"என் காதலி எப்படிப்பட்டவன்னு மத்தவங்க கிட்ட நான் ஏன் சொல்லணும்?"

"அப்புறம் வேற யாரு குறுக்கே வருவாங்க?"

" பார்க்லேயோ, பீச்லேயோ உக்காந்திருந்தா சில சமயம் யாராவது போலீஸ்காரர் வந்து விசாரிப்பாரு. நல்ல வேளையா நமக்கு அப்படி நடக்கல!"

"அது சரி. நாமதான் எல்லாத் தடைகளையும் தாண்டி வந்துட்டமே! காதலுக்குக் குறுக்கே வரவங்களைப் பத்தி இப்ப ஏன் பேசிக்கிட்டிருக்கே?" என்றாள் பிரியா.

"காதலுக்குக்  குறுக்கே வரவங்களை சமாளிச்ச்சுட்டோம். இப்ப காதலர்களான நமக்குக் குறுக்கே வரவங்களை சமாளிக்கணும்!" என்றான் சுந்தர்.

"நமக்குக் குறுக்கே யார் வரப் போறாங்க?"

"வந்துட்டாங்களே!"

"யாரு?"

"காத்துதான். காத்து தென்றல் மாதிரி இதமா இருந்தாலும், நமக்கு நடுவிலே வீசி நம்மைப் பிரிக்கிற மாதிரி இருக்கே!"

"அதுக்கென்ன செய்ய முடியும்? காத்தைத் தடுத்து நிறுத்தவா முடியும்?"

"அது முடியாது. அதனால காத்து புகக் கூட இடைவெளி இல்லாத அளவுக்கு உன்னைத் தழுவிக்கப் போறேன்!" என்று சொல்லி பிரியாவை இறுக்கமாக அணைத்துக் கொண்டான் சுந்தர்.

"மெதுவா. நீ அழுத்தற அழுத்தத்தில என் எலும்பெல்லாம் உடைஞ்சுடும்  போல இருக்கு" என்றாள் பிரியா.

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 111
புணர்ச்சி மகிழ்தல்  
குறள் 1108
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.

பொருள்
காற்று கூட இருவருக்கும் இடையில் புக முடியாதபடி இறுகத் தழுவிக் கொள்வது, காதலர் இருவருக்கும் மிக இனிமையானதாகும்.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

Wednesday, June 3, 2020

1107. அது மட்டும் முடியாது!

"எனக்கு பயமா இருக்கு!"

"என்ன பயம்/"

"கல்யணத்துக்கு முன்னால நாம இவ்வளவு நெருக்கமா இருக்கறது சரிதானான்னு."

"நல்ல வேளை! நான் வேற பயமா இருக்குமோன்னு நினைச்சேன்."

"வேற என்ன பயமா இருக்கும்னு நினைச்சே?"

"வேண்டாம். நான் சொன்னா நீ கோப்பப்படுவ!"

"நீ சொல்லாமலேயே எனக்குப் புரிஞ்சுடுச்சு. நான் கோபமாத்தான் இருக்கேன்."

சற்று நேரம் மௌனம் நிலவியது.

"என் பயத்தை நீ புரிஞ்சுக்கல. நாம இவ்வளவு தூரம் பழகினப்பறம் நம்ப வீட்டில கல்யாணத்துக்கு சம்மதிக்கலேன்னா?"

"சம்மதிச்சா நல்லது. உன் வீட்டிலேயோ, என் வீட்டிலேயோ சம்மதிக்காட்டாலும் நீயும் நானும் கணவன் மனைவியாத்தான் ஆகப் போறோம். அதாவது நீ மனைவி, நான் கணவன்!"

"ரொம்பத்தான் குறும்பு உனக்கு!"

"இல்ல. நீயும் நானும் கணவனும் மனைவியும்னு சொன்னா வரிசைப்படி நீ முதல்ல வரதால, இலக்கணப்படி நீதான் கணவன்னு ஆயிடும். அதுக்குத்தான் இந்த விளக்கம்!"

"இலக்கண வகுப்பு நடத்தினது போதும்! நம்ப வீட்டில ஒத்துக்காட்டலும் நாம கணவன் மனைவின்னு ஆயிடுவோம்னு எப்படி இவ்வளவு உறுதியாச் சொல்ற?"

அவன் ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டான். பிறகு சொன்னான்.

"நான் வீட்டுக்குத் தெரியாம சிகரெட் பிடிக்கறேன். நான் சிகரெட் பிடிக்கறப்ப என் அப்பாவோ அம்மாவோ வந்துட்டா, சிகரெட்டைக் கீழ போட்டுடுவேன். உன்னைக் காதலிக்கறதும், உன்னோட பழகறதும் திருட்டுத்தனமாத்தான். சிகரெட் பிடிக்கும்போது யாராவது பாத்துடுவாங்களோன்னு ஒரு பயம் இருக்கும். ஆனா உன்னோட பழகறப்ப யாராவது பாத்துடுவாங்களோங்கற பயம் எனக்கு இல்லை."

"ஏன் அப்படி?"

"ஏன்னா, உன்னைத் தொட்டுப் பேசறப்பல்லாம் எனக்கு என் வீட்டு சாப்பாட்டை சாப்படற மாதிரி இருக்கு. அதுவும் மத்தவங்களோட சேந்து. அப்ப எப்படி பயம் வரும்?"

"நீ சொல்றது எனக்கு சரியாப் புரியல. ஆனா ஒண்ணு மட்டும் புரியுது."

"என்ன?"

"எங்க வீட்டில எனக்கு வேற யாரோடயாவது கல்யாணம் நிச்சயம் பண்ணினா, நீ என்னைத் தூக்கிக்கிட்டுப் போய்த் தாலி கட்டிடுவ. அப்படித்தானே?"

"அது மட்டும் என்னால முடியாது!"

"ஏன் முடியாது? இவ்வளவு வீறாப்பாப் பேசின?"

"இவ்வளவு பெரிய உடம்பை என்னால எப்படித் தூக்க முடியும்?"

அவள் கையை ஓங்க, "வேண்டாண்டி! அணைக்க வேண்டிய கையால என்னை அடிக்காதே! உன் கை வேகமா என் முதுகில வந்து விழுந்தா அந்தக் கையோட எடையை என் முதுகு தாங்காது!" என்று சொல்லி அவள் கையைப் பிடித்துக் கொண்டான் அவன். 

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 111
புணர்ச்சி மகிழ்தல்  
குறள் 1107
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.

பொருள்
மாநிறம் கொண்ட இந்தப் பெண்ணைத் தழுவிக் கொள்வது, நம் வீட்டில் இருந்து கொண்டு நாம் ஈட்டிய பொருளை நமக்கு நெருக்கமானவர்களுடன் பகிர்ந்து உண்பதைப் போன்றது.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை. அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போ...