Sunday, April 28, 2024

1309. நிழலின் அருமை!

"உங்களுக்கு சமைக்கத் தெரியுங்கறதுக்காக என் சமையல்ல குத்தம் கண்டுபிடிச்சுக்கிட்டு இருக்காதீங்க. வேணும்னா நீங்க சமையுங்க. நான் உக்காந்து சாப்பிடறேன். ஆனா நீங்க செய்யற மாதிரி உங்க சமையல்ல நான் குத்தம் சொல்ல மாட்டேன்!" என்று வெடித்தாள் சௌம்யா.

"எனக்கு சமையல் செய்யறதில ஒண்ணும் பிரச்னை இல்ல. நான் பாக்கற ஐடி வேலையை நீ பாக்கறியா?" என்றான் பரத்.

"நானும் படிச்சிருக்கேன். நீங்க வேலைக்குப் போக வேண்டாம்னு சொன்னதாலதானே நான் வேலைக்குப் போகல? வேணும்னா நாளைக்கே என்னால ஒரு வேலை தேடிக்க முடியும். ஐடி வேலைதான் பாக்கணும்னாலும் ஒண்ணும் பிரச்னை இல்லை. இப்பல்லாம் கோடிங், டேடா சயன்ஸ் எல்லாம் ரெண்டு மூணு மாசத்திலேயே கத்துக்கலாம். அது மாதிரி கத்துக்கிட்டு ஐடி வேலைக்கே போறேன். நீங்க வீட்டில இருந்தே சமைக்கிறீங்களா?" 

பரத் பதில் பேசாமல் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டான். 

அதற்குப் பிறகு இரண்டு மூன்று நாட்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. பரத் வீட்டில் சாப்பிடுவதில்லை. சௌம்யாவும் அதைப் பொருட்படுத்தாமல் தனக்கு மட்டும் சமையல செய்து கொண்டாள்.

மூன்று நாட்கள் ஆன பிறகு சௌம்யாவின் மனதில இலேசாக ஒரு கவலை எழுந்தது. 

'இப்படியே எத்தனை நாள் ஓடும்? நான் கொஞ்சம் அதிகமாகப் பேசி விட்டேனோ? இன்று மாலை பரத் அலுவலகத்திலிருந்து வந்ததும் அவனிடம் மன்னிப்புக கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்!'

ஆனால் அன்று மாலை சௌம்யாவின் அம்மா ருக்மிணி அவளுக்கு ஃபோன் செய்தாள். ருக்மிணியின் தோழி அபிராமி ஊரிலிருந்து வருகிறாளாம். வந்து விட்டு உடனேயே ஒரு திருமண வரவேற்புக்குப் போய் விடுவாளாம். சௌம்யா குழந்தையாக இருந்ததிலிருந்தே அபிராமி அவளைப் பார்த்து வந்திருக்கிறாள். அவளுக்கு சௌம்யாவின் மீது ஒரு தனி அன்பு உண்டு. 

"அபிராமி உன்னைப் பாக்கணும்னு ஆசைப்படுவா. நீ கொஞ்ச நேரம் வந்துட்டுப் போறியா?" என்றாள் ருக்மிணி.

சௌம்யா யோசித்தாள். இரண்டு மூன்று நாட்களாக பரத் வீட்டுக்கு வரும்போதே சாப்பிட்டு விட்டு வந்து விடுகிறான். இன்றும் அப்படித்தான் வருவான். அதனால் அம்மா வீட்டுக்குப் போய் விட்டு வந்த பிறகு பரத்திடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவனை சமாதானப்படுத்தலாம் என்று நினைத்து அம்மா வீட்டுக்குக் கிளம்பினாள் சௌம்யா.

ஆனால் அம்மா வீட்டுக்குப் போய்க் காத்திருந்ததுதான் மிச்சம். அபிராமி வரவில்லை. நீண்ட நேரம் காத்திருந்த பிறகு, ருக்மிணி அபிராமிக்கு ஃபோன் செய்து கேட்டபோது நேரமாகி விட்டதால் நேராகத் திருமண வரவேற்புகுப் போய் விட்டதாகவும், இன்னொரு முறை வருவதாகவும் அபிராமி சொல்லி விட்டாள். 

ருக்மிணி ஃபோனை வைத்ததும், "ஏம்மா ஃபோன்லேயாவது அபிராமி ஆன்ட்டிகிட்டப் பேசி இருப்பேனே!" என்றாள் சௌம்யா.

"அவ கல்யாண மண்டபத்தில இருக்கா. ஒரே சத்தமா இருக்கு. அவ பேசறதே சரியாக் கேக்கல. அதனாலதான் ஃபோனை வச்சுட்டேன்" என்றாள் ருக்மிணி.

வந்ததற்கு அம்மா வீட்டில் சாப்பிட்டு விட்டுப் போய் விடலாம் என்று நினைத்தாள சௌம்யா.

அதற்குள் ருக்மிணி, "அப்ப நீ கிளம்பு. உன் புருஷன் ஆ்பீஸ்லேந்து வரதுக்குள்ள அவருக்கு ஏதாவது சமைச்சு வைக்க வேண்டாமா?" என்று ருக்மிணி கூறியபோது, திருடனுக்குத் தேள் கொட்டியது போல் எதுவும் சொல்ல முடியாமல் கிளம்பினாள் சௌம்யா. வீட்டுக்குப் போய்த் தனக்காக ஏதேனும் சமைக்க வேண்டுமே என்று நினைத்தபோது சௌம்யாவுக்கு எரிச்சலாக வந்தது.

சௌம்யா விட்டுக்குப் போனபோது பரத் சோஃபாவில் அமர்ந்து மடிக்கணினியில் ஆழ்ந்திருந்தான். சௌம்யா உள்ளே நுழைந்ததை கவனித்தாலும் அவளை நிமிர்ந்து பார்க்காமல் வேலையில் ஆழ்ந்திருந்தான் 

பரத் காட்டிய அலட்சியத்தால் ஏற்பட்ட கோபத்துடனும், சமையல் செய்ய வேண்டுமே என்ற எரிச்சலுடனும் சமையலறைக்குள் நுழைந்தாள் சௌம்யா. பரத்திடம் மன்னிப்புக் கேட்டு அவனை சமாதானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அடியோடு போய் விட்டிருந்தது. 

சமையலறைக்குள் நுழைந்ததுமே ஏதோ வித்தியாசமாக உணர்ந்தாள். சமீபத்தில்தான் ஏதோ சமைக்கப்பட்டிருப்பது போன்ற மணம் வந்தது.

 மேடை மீது வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களை கவனித்து அவற்றைத் திறந்து பார்த்தாள். ஹாட்பேக்கில் பட்டர்நான், இரண்டு பாத்திரங்களில் சைட் டிஷ்கள்.

பரத்தான் சமைத்து வைத்திருக்கிறான்!

இன்ப அதிர்ச்சியுடன் ஹாலுக்குப் போவதற்காக சௌம்யா திரும்பியபோது அங்கே சத்தம் போடாமல் பரத் வந்து நின்று கொண்டிருந்தான்.

சட்டென்று அவளை அணைத்துக் கொண்ட பரத் "சாரி சௌம்யா!" என்றான்.

சௌம்யாவுக்கு அழுகை வந்து விடும் போல் இருந்தது.

"நான்தான் சாரி சொல்லணும். நான் ரொம்ப லக்கி!" என்றாள் சௌம்யா.

"எதுக்கு? ஒரு அருமையான ஷெஃப் புருஷனாக கிடைச்சதுக்கா?"

சௌம்யா வாய்விட்டுச் சிரித்தாள்.

"என்ன அபிராமி ஆன்ட்டி வந்திருந்தாங்களா?" என்றான் பரத், குறும்பாகச் சிரித்தபடி..

"இதெல்லாம் உங்க ஏற்பாடுதானா? என் அம்மாவும் இதுக்கு உடந்தையா?" என்றாள் சௌம்யா பொய்க் கோபத்துடன்.

"ஐயோ, மறுபடியும் கோவிச்சுக்கிட்டு எங்கிட்ட பேசாம இருந்துடாதே! ஆனா அப்படிக் கோவிச்சுக்கிட்டா கூட நல்லதுதான். நாம அன்பா இருக்கறவங்ககிட்ட சண்டை போட்டுட்டு மறுபடி சேந்துக்கறப்ப, வெயில்ல நடந்துட்டு வந்து ஒரு நீரோடையில இறங்கித் தண்ணி குடிக்கிற மாதிரி இருக்கு. அதுவும் அந்தத் தண்ணி ஒரு மர நிழலுக்குப் பக்கத்தில இருந்தா எவ்வளவு குளிர்ச்சியா இருக்கும்!" என்றான் பரத்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 131
புலவி (பொய்க் கோபம்)
குறள் 1309
நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.

பொருள்:
நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்; அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக இருக்கும்.

குறள் 1310 (விரைவில்)
குறள் 1308

1308. பிரிவுத் துயர்?

"ஏண்டி, நீ என்ன சின்னக் குழந்தையா, புருஷன் ஊருக்குப் போனதை நினைச்சு இவ்வளவு வருத்தப்படற? ஒரு பதினைஞ்சு நாள் புருஷனை விட்டுட்டு இருக்க முடியாதா உன்னால?" என்றாள் கமலி.

"இல்லைடி. கல்யாணமான இந்த ஒரு வருஷத்தில அவரு என்னை விட்டு ஒருநாள் கூடப் பிரிஞ்சதில்ல. ஆனா இப்பதான் ரெண்டு வாரம் ஆஃபீஸ் டூர்னு போயிருக்காரு. போய் பத்து நாள ஆச்சு. இந்த பத்து நாள்ள ஒரே ஒரு லெட்டர்தான் போட்டாரு. அதுக்கு பதில போட்டேன். மறுபடியும் அவர்கிட்டேந்து பதில் வரல. அவரோட லெட்டரைப் படிச்சாலாவது கொஞ்சம் ஆறுதலா இருக்கும்" என்றாள் சுசீலா.

"எனக்கும்தான் கல்யாணம் ஆகி இருக்கு. எனக்கு என் புருஷன் ரெண்டு நாள் எங்கேயாவது போயிட்டு வர மாட்டாரான்னு இருக்கும். நீ என்னடான்னா..."

"உண்மையாவா சொல்ற? புருஷனை விட்டுப் பிரிஞ்சிருக்கறதில அவ்வளவு சந்தோஷமா உனக்கு?" என்றாள் சுசீலா வியப்புடன்.

"சில சமயம் அப்படித் தோணும். ஆனா அவர் ரெண்டு நாள் எங்கேயாவது போயிட்டு வந்தாக் கூட எப்ப திரும்பி வருவார்னு ஏக்கமாத்தான் இருக்கும்!" என்றாள் கமலி.

"பின்னே?"

"சும்மா உன்னை சீண்டிப் பாக்கறதுக்காக அப்படிச் சொன்னேன். கவலைப்படாதே! அவர்தான் நாலஞ்சு நாள்ள வந்துடுவாரே!"

ந்து நாட்கள் கழித்து சுகுமாரன் திரும்பி வந்தான். மாலையில் இருவரும் ஓய்வாக நடந்து கொண்டிருந்தபோது, "என்னங்க, பதினைஞ்சு நாள் என்னைப் பிரிஞ்சிருந்தது உங்களுக்கு எப்படி இருந்தது?" என்றாள் சுசீலா.

"உன் பிரிவுத் துயர் தாங்காம ஆஃபீஸ் வேலையைப் பாதியிலேயே விட்டுட்டு ஓடி வந்துடலாமான்னு நினைச்சேன்!" என்றான் சுகுமாரன்.

"உண்மையாவா?" என்றாள் சுசிலா, பொங்கி வந்த மகிழ்ச்சியுடன்.

"நீ வேற! நமக்குக் கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆச்சு. ஒத்தரை விட்டு ஒத்தர் கொஞ்ச நாள் பிரிஞ்சிருக்கறது ஒரு நல்ல மாறுதல் இல்லையா? எனக்கு அப்படித்தான் இருந்தது. உனக்கும் அப்படித்தானே இருந்திருக்கும்?"

"இல்லீங்க. எனக்கு நீங்க இல்லாத பத்து நாளும் ரொம்ப கஷ்டமா இருந்தது. உங்களை எப்ப பாக்கப் போறோம்னு ஏக்கமா இருந்தது" என்றாள் சுசீலா ஏமாற்றத்துடன்.

"இதெல்லாம் ஒரு கற்பனைதான். ஈருடல், ஓருயிர்னெல்லாம், நாவல்களில படிச்சுட்டும், சினிமாவில கேட்டுட்டும்  நீயா கற்பனை பண்ணிக்கிட்டிருக்க. உண்மையில, நான் பதினைஞ்சு நாள் இல்லாம இருந்தது உனக்கு ஒரு பெரிய ரிலீஃபாத்தான் இருந்திருக்கும். இந்தப் பதினைஞ்ச நாள்ள நீ ஒரு சுற்றுப் பெருத்திருக்கியே!" என்றான் சுகுமாரன், சிரித்துக் கொண்டே.

சுசீலா அடிபட்டவள் போல் கணவன் முகத்தைப் பார்த்தாள். அவன் இதை விளையாட்டுக்குச் சொல்லவில்லை, உண்மையாகவே அவன் அப்படித்தான் நினைக்கிறான் என்பதை உணர்ந்தபோது, தன்னைப் பிரிந்திருந்தது கணவனுக்கு வருத்தத்தை அளிக்காவிட்டாலும் அவனைப் பிரிந்திருந்தது தனக்கு வருத்தம் அளித்திருக்கிறது என்பதை அவன் புரிந்து கொள்ளாதது அவளுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 131
புலவி (பொய்க் கோபம்)
குறள் 1308
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி.

பொருள்:
காதலி (அல்லது காதலர்) தனக்காக வருந்தினார் என்று புரிந்து கொள்ளக் கூடிய அன்பரைப் பெறாதபோது, ஒருவர் வருந்துவதால் என்ன பயன்?

குறள் 1309(விரைவில்)
குறள் 1307

Sunday, April 14, 2024

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை.

அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போது "ஆமாம், என்னை ரொம்ப அழகுன்னு சொல்லிக்கிட்டிருக்கியே, அது உண்மைதானா?" என்றாள் வீணா.

"ஆமாம். அதில என்ன சந்தேகம்?" என்றான் அஜய்.

"அப்படின்னா என் அழகுக்காகத்தான் என்னைக் காதலிக்கறியா? என் குணத்துக்காக இல்லையா?"

சற்று யோசித்த அஜய், "இங்கே பாரு வீணா. முதல்ல ஒத்தரைப் பாக்கறப்ப நமக்குத் தெரியறது அவரோட தோற்றம்தான். அதை வச்சுத்தான் ஒத்தரைப் பிடிக்கிறதும் பிடிக்காததும். குணம் எல்லாம் பழகின அப்புறம்தானே தெரிய வரும்!" என்றான்.

"அப்படியா? அப்படின்னா, என்னை விட அழகான ஒரு பெண்ணேப் பார்த்தா என்னை விட்டுட்டு அவகிட்ட போயிடுவ இல்ல?" என்று சீண்டினாள் வீணா.

"அப்படிச் சொல்ல முடியாது. ஆனா ஐஸ்வர்யா ராய் மாதிரி அழகியா இருந்தா கொஞ்சம் யோசிக்க வேண்டியதுதான்!" என்றான் அஜய் விளையாட்டாக.

"அப்படின்னா அப்படி ஒரு பெண்ணைத் தேடிக்க!" என்று கோபமாகச சொல்லி விட்டு உரையாடலைத் துண்டித்து விட்டாள் வீணா.

அதற்குப் பிறகு, அஜய் வீணாவை ஃபோனில் அழைக்கப் பலமுறை  முயன்றான்.  அவள் ஃபோனை எடுக்கவில்லை.

"சாரி. விளையாட்டுக்குத்தான் அப்படிச் சொன்னேன். மன்னிச்சுடு!" என்றெல்லாம் ஐந்தாறு செய்திகள் அனுப்பினான். அவற்றுக்கும் பதில் இல்லை.

ன்றோடு ஐந்து நாட்கள் ஆகி விட்டன. வீணாவுடன் தனக்கு நிரந்தரப் பிரிவு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் அஜய்யின் மனதில் ஏற்படத் தொடங்கியது. அவளுடன் பழகிய இனிமையான தருணங்கள் நினைவுக்கு வந்தன. 

'எவ்வளவு அற்புதமான தருணங்கள் அவை! என்னுடைய விளையாட்டான, முட்டாள்தனாமான ஒரு பேச்சால் எல்லாவற்றையும் இழக்கப் போகிறேனா?

'இத்தனை நாள் பழகியும் வீணாவின் வீட்டு முகவரியை வாங்கி வைத்துக் கொள்ளவில்லை. அசோக் நகரில் இருக்கிறாள் என்பதுதான் தெரியும். அவளுடைய அபார்ட்மென்ட் பெயர் கூட மறந்து விட்டது. அவள் வீட்டை எப்படிக் கண்டுபிடிப்பது?'

அஜய்யின் தொலைபேசி அடித்தது. யாராக இருக்கும் என்று ஆர்வமில்லாமல் பார்த்தவனுக்கு இன்ப அதிர்ச்சி. வீணா!

"ஹலோ" என்றான் அஜய் அவசரமாக. 

"சாரி" என்றாள் வீணா.

"இல்லை. என் மேலதான் தப்பு!"

"தப்பு யார் பேரிலேயோ! ஆனா நாலஞ்சு நாள் உங்கிட்ட கோவிச்சுக்கிட்டுப் பேசாம இருந்தப்புறம் எனக்கு ஒரு பயம் வந்துடுச்சு!"

"என்ன பயம்?"

"நான் பேசாம இருந்ததால நீ என் மேல கோவிச்சுக்கிட்டு எங்கிட்டேந்து நிரந்தரமாப் பிரிஞ்சுடுவியோங்கற பயம். உன்னோட சந்தோஷமா இருந்த நாட்கள் மறுபடி வராதோன்னு பயம். அதனாலதான் நான் கால் பண்ணினேன். எங்கே சந்திக்கலாம், சொல்லு" என்றாள் வீணா.

கூடி இருந்த இன்பத்தை ஊடல் அழித்து விடுமோ என்று தனக்கு ஏற்பட்ட அச்சம் தன் காதலிக்கும் ஏற்பட்டிருப்பதை நினைத்து வியந்த அஜய், "உன் வீட்டு அட்ரஸை அனுப்பு. நான் அங்கே வந்து உன்னைக் கூட்டிக்கிட்டுப் போறேன். எங்கே போறதுன்னு அப்புறம் தீர்மானிக்கலாம். நீ ஃபோனை எடுக்கல. உன் அட்ரஸ் இல்லாததால உன்னை நேரிலேயும் தொடர்பு கொள்ள முடியல. இந்த ஒரு நிலைமை இனிமேயும் வரக் கூடாது. அதனால அட்ரஸ் ஃபர்ஸ்ட், மீட்டிங் நெக்ஸ்ட்!" என்றான் அஜய், பறிபோயிருந்த உற்சாகம் திரும்பக் கிடைத்தவனாக. 

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 131
புலவி (பொய்க் கோபம்)
குறள் 1307
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று.

பொருள்:
கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலிலும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கிறது.

Saturday, April 13, 2024

1306. தங்கை மீது பொறாமை!

"யார்கிட்டேந்து ஃபோன்? ரொம்ப நேரம் பேசிக்கிட்டிருந்தியே!" என்றான் தரணிதரன்.

"கலாகிட்டேந்துதான்" என்றாள் உமா சுருக்கமாக. கலா உமாவின் தங்கை.

"ஏதோ ஆறுதல் சொல்லிக்கிட்டிருந்தே போல இருக்கே!"

"அவ புருஷன் ரெண்டு மூணு நாளா அவகிட்ட பேசறது இல்லையாம். அதைச் சொல்லி வருத்தப்பட்டா. 'கவலைப்படாதே. புருஷன் பெண்டாட்டிக்குள்ள இதெல்லாம் சகஜம்தான். சீக்கிரமே சரியாயிடும்'னு ஆறுதல் சொன்னேன்.

"சகஜம்னு எப்படிச் சொல்ற? நமக்குக் கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் ஆச்சு. நமக்குள்ள சண்டையே வந்ததில்ல. உன் தங்கையும் அவ புருஷனும் கல்யாணம் ஆகி ஆறு மாசத்துக்குள்ள மூணு தடவை சண்டை போட்டுட்டாங்களே!"

"எல்லாரும் ஒரே மாதிரி இருப்பாங்களா?" என்றபோது உமாவின் குரலில் ஒரு சலிப்புத் தெரிந்தது.

ன்று மாலை உமாவுக்கு மீண்டும் அவள் தங்கையிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

அவள் பேசி முடித்ததும், "இப்ப என்ன? சண்டை முத்திப் போய் அடிதடியில இறங்கிட்டாங்களாமா?" என்றான் தரணிதரன் கேலியாக.

கணவனை முறைத்துப் பார்த்த உமா, "அதெல்லாம் இல்ல. அவ புருஷன் ஆஃபீஸ்லேந்து ஃபோன் பண்ணினாராம். ராத்திரி ஓட்டல்ல டின்னர் சாப்பிட்டுட்டு நைட் ஷோ போகலாம்னு சொன்னாராம். அவளுக்கு ஒரே சந்தோஷம். அதைச் சொல்லத்தான் ஃபோன் பண்ணினா!" என்றாள்.

"அடிச்சுக்கறது அப்புறம் சேந்துக்கறது! என்ன இது? நாம எப்படி இருக்கோம் பாரு! எனக்குப் பெருமையா இருக்கு!" என்றான் தரணிதரன்.

"சண்டை போட்டுக்கிட்டு சேர்ந்துக்கறதிலயும் ஒரு சந்தோஷம் இருக்கலாம் இல்ல?" என்ற உமா, 'எனக்கு நம்ம வாழ்க்கை உப்புச் சப்பில்லாம இருக்கற மாதிரி இருக்கு. கலாவைப் பார்த்தா பொறாமையா இருக்கு!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 131
புலவி (பொய்க் கோபம்)
குறள் 1306
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.

பொருள்:
பெரும்பிணக்கும், சிறுபிணக்கும் ஏற்பட்டு இன்பம் தரும் காதல் வாழ்க்கை அமையாவிட்டால் அது முற்றிப் பழுத்து அழுகிய பழம் போலவும், முற்றாத இளம் பிஞ்சைப் போலவும் பயனற்றதாகவே இருக்கும்.

1305. கொடுத்து வைத்தவன்!

"என்னடா, எப்ப கூப்பிட்டாலும் ஏதாவது சாக்கு சொல்லி எங்களை டபாய்ச்சுட்டு உன் காதலியோட சுத்திக்கிட்டிருப்ப. ரெண்டு நாளா எங்களோடயே இருக்க. காதலி ஊருக்குப் போயிருக்காளா?" என்றான் சபரீஷ்

"ஊர்லதான் இருக்கா!" என்றான் விஜய் சலிப்புடன்.

"அப்புறம் ஏன் அவளை போய்ப் பாக்கப் போகல? அவளுக்கு ஏதாவது எக்ஸாமா இப்ப?"

"அவளுக்கு எதுவும் இல்லை. எனக்குத்தான் எக்ஸாம்!"

"உனக்கு ஏதுடா எக்ஸாம்?" என்றான் சபரீஷ் புரியாமல்.

"டேய் டியூப் லைட்! அவனோட காதலி அவனை சோதிக்கறாளாம்! அதைத்தான் எக்ஸாம்கறான்! அப்படித்தானேடா?" என்றான் சிவா.

"கரெக்டா சொல்லிட்டியே! உனக்கும் இது மாதிரி சோதனையெல்லாம் நடந்திருக்கா என்ன?" என்றான் விஜய் சிரித்துக் கொண்டே.

"எனக்கு எப்படி நடக்கும்? எனக்குத்தான் காதலியே இல்லையே! உன்னை மாதிரி எல்லாரும் அதிர்ஷ்டக்காரங்களா இருப்பாங்களா என்ன?" என்றான் சிவா பெருமூச்சுடன்.

"டேய்! சோதனைன்னு பேசி நீங்க ரெண்டு பேரும் என் பொறுமையைத்தான் சோதிக்கிறீங்க! என்னடா சோதனை?" என்றான் சபரீஷ்.

"நீ ஒரு டியூப் லைட்டுங்கறதைத் திரும்பித் திரும்ப வெளிக்காட்டணுமா என்ன? காதலி அவனை சோதிக்கிறான்னா, காதலியோ ஏதோ சண்டைன்னு அர்த்தம். அப்படித்தானேடா?" என்றான் சிவா.

"ஆமாம். ஒரு சின்ன விஷயம். அதுக்குக் கோவிச்சுக்கிட்டு  எங்கிட்ட பேச மாட்டேன்னுட்டா. நான் அவளைப் போய்ப் பார்க்கவும் கூடாதாம்!" என்றான் விஜய்.

"அப்படின்னா? உன் காதல் அவ்வளவுதானா? பலூன் மாதிரி வெடிச்சுடுச்சா?" என்றான் சபரீஷ்.

"உன்னை எத்தனை தடவை டியூப் லைட்னு சொல்றதுன்னு தெரியல! எனக்கு அலுத்தே போச்சு. காதலியோட சண்டை போட்டா காதல் முடிஞ்சு போச்சுன்னு அர்த்தமா? ஊடல்னு ஒரு வார்த்தை கேள்விப்பட்டதில்ல?" என்றான் சிவா.

"ஓ, அதுவா?" என்றான் சபரீஷ் சுருக்கமாக. மறுபடி ஏதாவது சொல்லித் தன்னை ஒரு டியூப் லைட் என்று மீண்டும் உறுதிப்படுத்த அவன் விரும்பவில்லை.

"எதுக்குடா அவளோட சண்டை போட்ட?" என்றான் சிவா.

"இவன் போட்டானோ, அவ போட்டாளோ!" என்றான் சபரீஷ்.

"இவனை மாதிரி ஒத்தனுக்கு ஒரு காதலி கிடைச்சதே ஒரு பெரிய அதிர்ஷ்டம். சண்டை போட்டு அதைக் கெடுத்துப்பானா என்ன? அவதான் போட்டிருப்பா. அப்படித்தானேடா?" என்றான் சிவா.

"இல்லை. நான்தான் சண்டை போட்டேன்!" என்றான் விஜய்.

"ஏண்டா? கொழுப்புதானே?" என்றான் சபரீஷ்.

"ஆறு மாசமா அவளைக் காதலிக்கறேன். இது வரையிலேயும் எங்களுக்குள்ள எந்தக் கருத்து வேறுபாடும் வரலை. ஒரு தடவையாவது சண்டை போட்டாத்தான் காதல்ல சுவாரசியம் இருக்கும்னு நினைச்சேன். அதோட அவளோட கோபத்தைப் பார்க்கணும்னு ஆசையா இருந்தது. அதனாலதான் சின்னதா ஒரு சண்டை போட்டேன். அவளும் கோவிச்சுக்கிட்டு என்னோட பேச மாட்டேன்னுட்டா!"

"ஏண்டா, முட்டாளாடா நீ? அவ உன் மேல நிரந்தரமாக் கோவிச்சுக்கிட்டு உங்க காதல் முறிஞ்சு போச்சுன்னா என்ன செய்வே?" என்ற சபரீஷ், ஒருவேளை தான் ஏதாவது தவறாகச் சொல்லி விட்டோமோ என்று நினைத்து சிவாவைப் பார்த்தான்.

"டேய் டியூப் லைட்!" என்று சிவா ஆரம்பப்பதற்குள் விஜய்யின் கைபேசி அடித்தது.

"அவதான்!" என்று சொல்லி விட்டு வாய் நிறையச் சிரிப்புடன் ஃபோனில் பேசுவதற்காகச் சற்று விலகிச் சென்றான் விஜய். 

ஒரு நிமிடம் கழித்து ஃபோன் பேசி விட்டுத் திரும்பிய விஜய்யின் முகத்தில உற்சாகம் கொப்பளித்தது.

"பைடா! மெரினாவுக்கு வரச் சொல்லி இருக்கா. நாளைக்குப் பாக்கலாம்!" என்று கூறி விட்டுக் கிளம்பினான் விஜய்.

"கொடுத்து வச்சவன்!" என்றான் சபரீஷ். 

அதை ஆமோதிப்பது போல் தலையசைத்தான் சிவா. 

"காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 131
புலவி (பொய்க் கோபம்)
குறள் 1305
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.

பொருள்:
நல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு மலர் போன்ற கண்களை உடைய மகளிரின் நெஞ்சில் விளையும் ஊடலின் சிறப்பே ஆகும்.

1309. நிழலின் அருமை!

"உங்களுக்கு சமைக்கத் தெரியுங்கறதுக்காக என் சமையல்ல குத்தம் கண்டுபிடிச்சுக்கிட்டு இருக்காதீங்க. வேணும்னா நீங்க சமையுங்க. நான் உக்காந்து ...