அதிகாரம் 132 - புலவி நுணுக்கம் (பொய்க் கோபம்)

திருக்குறள்
காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 132
புலவி நுணுக்கம் (பொய்க் கோபம்)

1311. கல்லூரிச்சாலை - நோ என்ட்ரி!

கல்பனாவின் கல்லூரிக்கு வந்து, அவளைத் தன் ஸ்கூட்டரின் பின்னே உட்கார வைத்துக் கொண்டு, அவர்கள் வழக்கமாகச் செல்லும் பூங்காவுக்குச் சென்றான் பார்த்திபன்.

பூங்காவில், ஒதுப்புறமாக ஒரு இடத்தில் இருவரும் அமர்ந்தனர்.

எப்போதும் உற்சாகமாகப் பேசும் கல்பனா, அன்று ஏதும் பேசாமல் மௌனமாக இருப்பதைக் கண்ட பார்த்திபன், "என்ன கல்பனா, ஏன் ஒரு மாதிரி இருக்கே? கிளாஸ் டெஸ்ட்ல உன்னை விட உன் ஃப்ரண்டஸ் யாராவது அதிகமா மார்க் வாங்கிட்டாங்களா?" என்றான், அவளைச் சீண்டும் விதமாக.

கல்பனா அவனை முறைத்துப் பார்த்து விட்டு, மௌனமாகவே இருந்தாள்.

சுற்றுமுற்றும் பார்த்த பார்த்திபன், தங்களை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு, கல்பனாவின் கையை மெதுவாகப் பற்றினான்.

சட்டென்று கையை உதறிய கல்பனா, "தொடாதே!" என்றாள் கோபமாக.

"ஏன், பார்க்ல நிறைய பேர் உக்காந்திருக்காங்களேன்னு பாக்கறியா? யாரும் நம்மை கவனிக்கல!" என்றான் பார்த்திபன்.

"நீயும் நானும் மட்டுமே இருந்தாக்கூட, நான் உன்னைத் தொட மாட்டேன்!"

"ஏன் அப்படி?"

"ஏனா? இனிமே என்னை அழைச்சுக்கிட்டுப் போக, என் காலேஜுக்கு வராதே!"

"என்ன கல்பனா, சம்பந்தம் இல்லாம பேசற? என்னைத் தொட மாட்டேன்னு சொன்ன. ஏன்னு கேட்டா, காலேஜுக்கு வராதேங்கற!"

"நீ காலேஜுக்கு வரப்ப என்ன நடக்குது தெரியுமா?"

"என்ன நடக்குது? உனக்கு இப்படிப்பட்ட அழகான காதலன் கிடைச்சிருக்கானேன்னு உன் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் பொறாமைப்படறாங்களா?"

"பொறாமைப்பட்டா நான் கவலைப்பட மாட்டேன். ஒவ்வொத்தியும் உன்னை அப்படியே கண்ணால முழுங்கற மாதிரி பாக்கறா. சில பேர் உங்கிட்ட வலுவில வந்து சிரிச்சுப் பேசறாங்க. நீயும் அவங்களோட சிரிச்சுப் பேசற!"

"என்னைப் பார்த்து 'ஹாய்'னு சொன்னா, பதிலுக்கு நானும் 'ஹாய்'னு சொல்றேன். அதில என்ன தப்பு?"

"தப்புதான். எனக்குச் சொந்தமான ஒரு பொருளை, ஏதோ பொதுச் சொத்து மாதிரி, என் தோழிகள் கண்ணால முழுங்கறதும், பேச்சுக் கொடுத்து நெருக்கமாக்கிக்க முயற்சி செய்யறதும், எனக்குப் பிடிக்கல. இனிமே, நீ என் காலேஜுக்கு வர வேண்டாம். என் காலேஜ் இருக்கற சாலைக்கே நீ வரக் கூடாது! நானே பஸ் பிடிச்சு, நேரா பார்க்குக்கு வந்துடறேன்!" என்றாள் கல்பனா.

"மகாராணியோட உத்தரவு எப்படியோ அப்படியே நடந்துக்கறேன். இனிமே, கல்லூரிச் சாலையில எனக்கு நோ என்ட்ரி!" என்றபடியே, கல்பனாவின் கையை எடுத்துத் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான் பார்த்திபன். 

இப்போது, கல்பனா தன் கையை விலக்கிக் கொள்ளவில்லை.

குறள் 1311
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு

பொருள்:
பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் ‌பொதுப் பொருளாகக் கொண்டு உன்னை நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன்.

 1312. ஏமாறப் போவதில்லை!

ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்த அரவிந்த், "ஏறிக்க!" என்றான்.

"இருங்க, இருங்க" என்று அவனைத் தடுத்தாள் கமலி.

"என்ன ஆச்சு?" 

"மொதல்ல ஸ்கூட்டரை ஆஃப் பண்ணிட்டு, மறுபடி ஸ்டார்ட் பண்ணுங்க!"

"எதுக்கு?"

"பூனை குறுக்கே போச்சே, பாக்கலியா?"

"அதுக்கு?"

"பூனை குறுக்கே போனா, நல்ல சகுனம் இல்ல. அதனாலதான் ஸ்கூட்டரை ஆஃப் பண்ணிட்டு, மறுபடி ஸ்டார்ட் பண்ணச் சொன்னேன். இருங்க. கீழே இறங்கிட்டு, மறுபடி ஏறி உக்காந்து அப்புறம் ஸ்டார்ட் பண்ணுங்க!"

"சரியாப் போச்சு!" என்றபடியே, அவள் சொன்னபடியே செய்தான் அரவிந்த்.

"இந்தக் காலத்தில இப்படிப்பட்ட மூட நம்பிக்கையெல்லாம் வச்சிருக்கியே!" என்றான் அரவிந்த், தொடர்ந்து.

"காலத்துக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. சில விஷயங்கள் எல்லாக் காலத்துக்கும பொருந்தும்!" என்றபடியே, ஸ்கூட்டரின் பின்னே அமர்ந்து கொண்டாள் கமலி.

திருமணமான ஆறு மாதங்களில், இது போல் பல நிகழ்வுகளைப் பார்த்து விட்டான் அரவிந்த். தினமும் அவன் அலுவலகத்துக்குக் கிளம்பும் முன், கமலி வீட்டுக்கு வெளியே வந்து, சகுனம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கூறிய பிறகுதான், அவன் கிளம்புவது என்பது வழக்கமாகி விட்டது.

ஆனால், கடந்த ஐந்தாறு நாட்களாக இது நடப்பதில்லை. ஒரு சிறிய விஷயம் குறித்து நடந்த விவாதத்தினால், கமலி அவனிடம் கோபித்துக் கொண்டு விட்டாள். அவனிடம் பேசுவதில்லை. அவன் அலுவலகத்துக்குக் கிளம்புமுன், வாசலுக்கு வந்து சகுனம் பார்ப்பதில்லை. சமைத்த உணவுகளை சாப்பாட்டு மேசையில் கொண்டு வந்து வைத்து விட்டுப் போய் விடுவாள். அவனே எடுத்துப் போட்டுக் கொண்டுதான் சாப்பிட வேண்டும்.

ன்று இரவு, உணவு மேசையில் அமர்ந்து உணவை உண்ணத் தயாரானபோது, அரவிந்துக்கு ஒரு பலமான தும்மல் வந்தது.

பக்கத்து அறையிலிருந்த கமலி, கணவனின் தும்மல் சத்தத்தைக் கேட்டு விட்டு, ஒருவேளை அவனுக்கு உடல்நிலை சரியில்லையோ என்று நினைத்து, என்னவென்று பார்க்க எண்ணி ஒரு அடி எடுத்து வைத்தாள். அப்போது, அவளுக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.

சில நாட்களுக்கு முன், ஒருமுறை அரவிந்த் தும்மியபோது, அருகிலிருந்த கமலி, 'தீர்க்காயுசு!' என்றாள்.

"அப்படின்னா?" என்றான் அரவிந்த்.

"தீர்க்காயுசுன்னா தெரியாதா? நீடூழி வாழ்கன்னு அர்த்தம்!"

"அது சரி. அதை எதுக்கு இப்ப சொல்ற?"

"ஒத்தர் தும்மும்போது, அவங்க வாயிலேந்து கெட்ட ஆவி வெளியில போகுமாம். அப்ப தீர்க்காயுசுன்னு சொன்னா, அந்தக் கெட்ட ஆவி அதைக் கேட்டு பயந்து, மறுபடி அவங்க பக்கமே வராதாம். அதனால, அவங்க நோய்நொடி இல்லாம, தீர்க்காயுசா இருப்பாங்களாம்!' என்று விளக்கினாள் கமலி.

அதைக் கேட்டுப் பெரிதாகச் சிரித்த அரவிந்த், "எந்த விஞ்ஞானியோட கண்டுபிடிப்பு இது?" என்றான்.

"எங்க பாட்டி சொல்லி இருக்காங்க. பெரியவங்க சொன்னா, பெருமாள் சொன்ன மாதிரி. அதனாலதான், நான் அதையெல்லாம் கடைப்பிடிக்கிறேன்!" என்றாள் கமலி.

'அந்தச் சம்பவத்தை மனதில் வைத்துக் கொண்டு, தும்மல் போட்டால், நான் உடனே வந்து 'தீர்க்காயுசு' என்று சொல்லுவேன், அப்புறம் எங்கள் ஊடல் சரியாகி விடும் என்று நினைத்துப் பொய்த் தும்மல் போடுகிறார் போலிருக்கிறது. ஆனால், நான் இதற்கு ஏமாறப் போவதில்லை' என்று நினைத்த கமலி, எடுத்த அடியைப் பின் வைத்து இருக்கையில் போய் அமர்ந்து கொண்டாள்.

குறள் 1312
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.

பொருள்:
ஊடல் கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து அவரை நீடுவாழ்க என வாழ்த்துவேன் என்று நினைத்து.

1313. கார்குழலியின் கோபம்!

காதலியைக் காணக் கிளம்பிய மதிமாறன், தன் உடைகளைச் சரிபார்த்துக் கொண்டான். 

சிகையை முடிந்து கொண்டதும், கையில் வேப்பெண்ணெய் வாடை அடித்தது. தலையில் உள்ள பொடுகு நீங்க, மருத்துவர் அளித்த ஆலோசனையின் பேரில், வேப்பெண்ணெய் தடவிக் கொண்டு வருகிறான். 

இந்த வாடை பற்றிக் கார்குழலி என்ன சொல்லப் போகிறாளோ என்ற இலேசான கவலையுடனேயே வீட்டை விட்டுக் கிளம்பினான் மதிமாறன்.

மதிமாறனும், கார்குழலியும் தாங்கள் சந்திப்பதற்காகத் தேர்ந்தெடுத்திருந்த, நகரின் ஒதுக்குப்புறத்திலிருந்த, அந்தப் பாழடைந்த வீட்டை நோக்கி மதிமாறன் நடந்து கொண்டிருந்தபோது, வழியில் ஒரு இடத்தில் நறுமணம் வீசியது. அருகில் இருந்த ஒரு மரத்தில் மலர்ந்திருந்த மலர்களின் நறுமணம்தான் அது என்று உணர்ந்ததும், மதிமாறன் அந்த மரத்துக்கு அருகே சென்றான். 

மஞ்சள் நிறத்தில், அழகான தோற்றத்துடன் இருந்த மலர்களிலிருந்துதான் அந்த நறுமணம் வந்து கொண்டிருந்தது. அந்த மலரின் பெயர் அவனுக்குத் தெரியவில்லை. அதில் ஒன்றைப் பறித்துச் சிகையில் செருகிக் கொண்டு பார்த்தான். தலையிலிருந்த மலரின் மணத்தை அவனால் நுகர முடிந்தது.

இந்த மலரை அணிந்து கொண்டால், வேப்பெண்ணெய் நாற்றம் தெரியாமல் இருக்குமோ என்று யோசித்தான். அவனைப் போன்ற இளைஞர்களில் பலர், தலையில் பூச்சுட்டிக் கொள்ளும் பழக்கத்தைக் கொண்டிருந்தாலும், மதிமாறன் தலையில் பூச்சூட்டிக் கொள்வதை விரும்பியதில்லை.

ஆயினும், வேப்பெண்ணெய் வாடையை மறைக்க உதவும் என்பதால், இன்று இந்த மலரை அணிந்து கொள்ளலாம் என்று நினைத்து, சில மலர்களைக் கொய்து, அவற்றைத் தலையில் சரியாகப் பொருத்திக் கொண்டு, நடையைத் தொடர்ந்தான். 

மலர் சூடி இருப்பது நறுமணத்தை அளிப்பதுடன், தோற்றப் பொலிவையும் அளிக்கும் என்பதால், கார்குழலி இதனால் மகிழ்ச்சி அடைவாள் என்று தோன்றியது.

சந்திப்புக்கான இடத்தை மதிமாறன் அடைந்தபோது, கார்குழலி அங்கே முன்பே வந்து காத்திருந்தாள்.

"ஏன் இவ்வளவு தாமதம்? எத்தனை நேரமாகக் காத்திருக்கிறேன்!" என்று பொய்க் கோபத்துடன் சிணுங்கிய கார்குழலியின் முகம், மதிமாறனிடமிருந்து வந்த நறுமணத்தை நுகர்ந்ததும் சற்றே மாறியது.

"என்ன இது வாசனை?" என்று கேட்ட கார்குழலி, அவன் தலையில் மலர் சூடிக் கொண்டிருப்பதை கவனித்தாள்.

"என்ன இது, என்றைக்கும் இல்லாமல்.." என்று ஆரம்பித்தவள், "ஓகோ, அப்படியா?" என்றாள் , கோபத்துடன்.

"அப்படியா என்றால்?" என்றான் மதிமாறன், புரியாமல்.

"எப்போதும் சிகையில் மலர் சூட்டிக் கொள்ளாத நீங்கள், இன்று சூட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், அது ஏன்? இன்னொருத்திக்குக் காட்டுவதற்காக இந்த மலரைச் சூடிக் கொண்டு விட்டு, அவளைச் சென்று பார்த்து, உங்கள் சிகை அழகைக் காட்டி விட்டு, என்னைப் பார்க்க வரும்போது தாமதமாகி விட்டதால், அதை அகற்றி விட்டு வர வேண்டும் என்ற நினைவு கூட இல்லாமல் வந்திருக்கிறீர்கள். உங்களுக்காகக் காத்திருந்த நான்தான் ஏமாளி!"

கோபத்துடன் அங்கிருந்து கிளம்பினாள் கார்குழலி.

"கார்குழலி! நான் சொல்வதைக் கேள்!" என்றபடியே, அவள் பின்னால் சென்றான் மதிமாறன்,  காதலியை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று யோசித்தபடியே.

குறள் 1313
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.

பொருள்:
கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள்.

1314. மைவிழியின் சந்தேகம்!

மைவிழி மிகவும் அறிவுக் கூர்மை உடையவள் என்பதில் பரிதிக்குப் பெருமை உண்டு. 

பொதுவாக, ஆண்கள்தான் அறிவுசார்ந்த விவாதங்களில் கலந்து கொள்வார்கள். ஆனால் மைவிழி, ஆண்களுக்கு நிகராகப் பல விவாதங்களில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறாள்.

இவ்வளவு அறிவாளியான பெண் தன்னிடம் காதல் கொண்டிருப்பது பற்றிப் பரிதிக்குப் பெருமை உண்டு.

தான் ஒரு சாதாரண வியாபாரிதான், மைவிழியைப் போல் கல்வி அறிவோ, அறிவுக் கூர்மையோ இல்லாதவன் என்றபோதிலும், தன்னிடம் ஏதையோ கண்டு தன்னைக் காதலிக்கிறாளே இந்தப் பெண் என்று அடிக்கடி நினைத்து மகிழ்வான் பரிதி.

"நீங்கள் வியாபாரத்துக்காகப் பல இடத்துக்குப் போகிறவர். போகிற இடங்களில் பல பெண்களைச் சந்திக்கக் கூடும். அவர்கள் யாரிடமாவது மையல் கொண்டு விடாதீர்கள்!" என்றாள் மைவிழி, ஒருமுறை.

"சேச்சே! உன்னைத் தவிர இன்னொரு பெண்ணை நான் ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்!" என்றான் பரிதி.

"ஆண்கள் இப்படித்தான் சொல்வீர்கள். ஆனால் வேறொரு பெண் உங்களை விரும்பினால், உடனே உங்கள் மனம் அலைபாயத் தொடங்கி விடும்!"

"நான் அப்படி இல்லை!"

மைவிழி ஒரு பேச்சுக்காக அப்படிச் சொன்னதாகத்தான் முதலில் பரிதி நினைத்தான். ஆனால் ஒவ்வொரு முறை அவன் எங்காவது பயணம் சென்று விட்டு வந்தாலும், "அங்கே யாராவது பெண்ணைப் பார்த்தீர்களா?" என்று துருவித் துருவிக் கேட்பாள் மைவிழி.

'இவள் சந்தேகப்படும் இயல்பு கொண்டவள், இவளிடம் கவனமாக இருக்க வேண்டும்' என்று நினைத்துக் கொண்டான் பரிதி.

ருநாள் இரவு, நிலவொளியில், ஒரு நந்தவனத்தில் அமர்ந்து, இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அன்று மைவிழி அவன் மீது மிகவும் அன்பைப் பொழிந்து கொண்டிருந்தாள். 'இந்தப் பெண்ணின் காதலைப் பெற நான் என்ன பேறு செய்திருக்கிறேனோ!' என்று மீண்டும் நினைத்துக் கொண்டான் பரிதி.

சற்று நேர உரையாடலுக்குப் பிறகு, இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமாகி ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டனர்.

"மைவிழி! எந்தக் காதலர்களிடமும் இருக்கும் அன்பை விட நம் இருவரிடையே இருக்கும் அன்புதான் மிக அதிகம்!" என்றான் பரிதி, உணர்ச்சிப் பெருக்குடன்.

சட்டென்று அவன் அணைப்பிலிருந்து விலகிய மைவிழி, "என்ன சொன்னீர்கள்?" என்றாள், கோபத்துடன்.

"தவறாக எதுவும் சொல்லவில்லையே! நம் இருவரிடையே உள்ள காதல்தான் மிக உயர்ந்தது என்றுதானே சொன்னேன்?" என்றான் பரிதி, பதட்டத்துடன்.

"இதன் பொருள் என்ன? உங்களுக்குப் பல காதலிகள் இருக்கிறார்கள். அவர்களிடம் உங்களுக்கு உள்ள காதலை விட, என்மீது உள்ள காதல் அதிகம் என்பதுதானே?"

"இல்லை. நான் மற்ற காதலர்களுடன்தான் நம்மை ஒப்பிட்டேன்."

"மற்ற காதலர்களிடையே உள்ள காதல் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? உங்களுக்கு உங்கள் மற்ற காதலிகளிடம் உள்ள காதலை விட, என்மீது அதிகக் காதல் என்பதைத்தான் உங்களை அறியாமலேயே வெளிப்படுத்தி விட்டீர்கள். நான் சந்தேகப்பட்டது சரியாகப் போய் விட்டது. யார் யாரிடமெல்லாம் உங்களுக்கு இருக்கும் காதலை விட என்னிடம் அதிகக் காதல் இருக்கிறது? சொல்லுங்கள்!" என்று கோபமும் அழுகையும் கலந்த குரலில் மைவிழி புலம்பியபோது, 'இவள் அறிவாளியா, முட்டாளா? அல்லது அறிவாளியாக இருப்பதால்தான் இப்படியெல்லாம் விபரீதமாகச் சிந்திக்கிறாளா?' என்ற சிந்தனை பரிதியின் மனதில் தோன்றியது. 

அதே சமயம் 'இவளை எப்படிச் சமாதானப்படுத்தப் போகிறேன்!' என்ற கவலையும் அவன் மனதில் எழுந்தது.

குறள் 1314
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.

பொருள்:
காதலர் எவரைக் காட்டிலும் நாம் மிகுந்த காதல் உடையவர்கள் என்றேன்; அதற்கு அவள் நான் பலரையும் காதலிப்பதாகவும், அவர்களுள் இவள்மீது அதிகக் காதல் உடையவன் என்று சொன்னதாகவும் எண்ணி, எவளைக் காட்டிலும் என் மீது காதல் உடையீர் என்று ஊடினாள்.

1315. பரிவாதினியின் பதற்றம்!

"இரண்டு ஆண்டுகளாகக் காதலிக்கிறோம். இன்னும் நமக்குத் திருமணம் ஆகவில்லை. எனக்குக் கவலையாக இருக்கிறது" என்றாள் பரிவாதினி.

"என்ன கவலை? வயதாகிக் கொண்டே இருக்கிறதே என்ற கவலையா?" என்றான் வீரவர்மன், சிரித்துக் கொண்டே.

"நீங்கள் தாமதிப்பதைப் பார்க்கும்போது, அந்தக் கவலையும் நியாயமானதுதான். ஆனால் என் கவலை என்னவென்று உங்களுக்குத் தெரியாதா?"

"பரிவாதினி! நம் இருவர் வீட்டிலும் நம் காதலை அங்கீகரித்து விட்டார்கள். நான் அமைச்சரின் அந்தரங்க உதவியாளனாக இருப்பதால், தேசப் பாதுகாப்பு தொடர்பாக அடிக்கடி வேறு நாடுகளுக்குச் செல்ல வேண்டி இருக்கிறது. ஒரு முக்கியமான வேலை முடிய வேண்டி இருக்கிறது. அது முடிந்ததும், எனக்கு இந்த ஊரிலேயே நிலையான வேலை என்று அமைச்சர் உறுதி அளித்திருக்கிறார். அவருக்கும் நம் காதல் பற்றியும், திருமணம் தாமதமாவது பற்றியும் தெரியும். 'உன் காதலியிடம் சொல். இன்னும் சில மாதங்கள்தான். அதற்குப் பிறகு, திருமணம் செய்து கொண்டு தலைநகரிலேயே இருக்கலாம். உன் மனைவியுடன் குடித்தனம் நடத்த ஒரு பெரிய வீடு ஏற்பாடு செய்து தருகிறேன்' என்று அவர் நேற்று கூட என்னிடம் கூறினார்." 

"அப்படியா? நீங்கள் இப்படிச் சொல்வது நிம்மதியாக இருக்கிறது. ஆனால், திருமணம் தாமதமாவது கவலை அளிக்கிறது. எங்கே நீங்கள் என்னைப் பிரிந்து விடுவீர்களோ என்ற அச்சம் எனக்கு இருந்து கொண்டே இருக்கிறது."

"கவலைப்படாதே, பரிவாதினி. உனக்கு ஒரு உறுதி தருகிறேன். இந்தப் பிறவியில் உன்னைப் பிரிய மாட்டேன். இது சத்தியம்."

இதைக் கேட்டதும், பரிவாதினி வீரவர்மனை உற்றுப் பார்த்தாள். அவள் கண்களில் நீர் தளும்பி இருந்ததை கவனித்த வீரவர்மன், "இன்னும் ஏன் கண்ணீர்?" என்றபடியே, அவள் கண்களைத் துடைக்க வந்தான்.

சட்டென்று விலகிப் பின்னால் சென்ற பரிவாதினி, "சொன்னதுதான் சொன்னீர்கள், 'இந்தப் பிறவியில் மட்டுமல்ல, இனி எந்தப் பிறவியிலும் உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்' என்று சொல்லி இருக்கலாமே. 'இவள் இந்தப் பிறவியோடு போதும், அடுத்த பிறவியில் வேறொரு பெண்ணுடன் உறவு கொள்ளலாம்' என்ற எண்ணம் உங்கள் மனதில் இருக்கிறது போலும்!" என்றாள் கோபத்துடன்.

'இவள் உண்மையாகவே இப்படி நினைக்கிறாளா? இவளை எப்படிச் சமாதானப்படுத்துவது?' என்று புரியாமல் தவித்தான் வீரவர்மன்.

குறள் 1315
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.

பொருள்:
காதல் மிகுதியில், இந்தப் பிறவியில் நான் உன்னைப் பிரியேன் என்று சொன்னேன்; அப்படி என்றால், அடுத்த பிறவியில் பிரியப் போவதாக எண்ணிக் கண் நிறைய நீரினைக் கொண்டாள்.

1316. தோழி செய்த எச்சரிக்கை!

கல்லூரி வாசலில் சுந்தரின் பைக் வந்து நின்றபோது, கல்லூரி முடிந்து வெளியே வந்து கொண்டிருந்த சில மாணவிகள் அவனைப் பார்த்து விட்டுப் பேசாமல் கடந்து சென்றனர். 

ஒரு மாணவி மட்டும் சற்று தூரம் சென்று விட்டுத் திரும்ப வந்து, சுந்தர் அருகில் வந்து, அவனிடம் ஏதோ சொல்லி விட்டுத் திரும்பினாள்.

"என்னடி சொன்ன அவன்கிட்ட?" என்றாள் தோழிகளில் ஒருத்தி.

"அவன் ரம்யாவோட காதலன்."

"அதுதான் எல்லாருக்கும் தெரியுமே! நீ அவன்கிட்ட போய் என்ன பேசிட்டு வந்தேன்னுதான் கேக்கறோம்" என்றாள் முதலில் கேள்வி கேட்டவள்.

"ரம்யா இன்னிக்குக் காலேஜுக்கு வரலை இல்ல?"

"ஆமாம். அதனால அவளுக்கு பதிலா பார்க்குக்கோ பீச்சுக்கோ என்னை அழைச்சுக்கிட்டுப் போறீங்களான்னு கேட்டியா?" என்றாள் மற்றொரு தோழி.

இதைக் கேட்டதும் மற்றவர்கள் கொல்லென்று சிரிக்க, "சீ! என்னடி பேச்சு இது? ரம்யா ரொம்ப சென்சிடிவ். அவகிட்ட கவனமாப் பழகுங்கன்னு சொல்லிட்டு வந்தேன்!" என்றாள் சுந்தரிடம் சென்று பேசி விட்டு வந்த பெண்.

"அது அவ்வளவு முக்கியமா? எனக்கென்னவோ நீ அவனுக்குத் தூண்டில் போடறியோன்னுதான் சந்தேகமா இருக்கு!" என்றாள் இன்னொரு தோழி.

"போங்கடி! நீங்க என்ன வேணும்னா சொல்லிட்டுப் போங்க. நான் சொன்னது எவ்வளவு முக்கியமான விஷயம்னு அவன் புரிஞ்சுப்பான்."

"நீங்க ரம்யாவைக் காதலிக்கறது ரொம்ப நல்ல விஷயம். ரம்யா ரொம்ப நல்ல பொண்ணு. ஆனா, அவ ரொம்ப சென்சிடிவ். சென்சிடிவ்னா, நீங்க கற்பனை பண்ண முடியாத அளவுக்கு சென்சிடிவ்! அதனால, அவகிட்ட நீங்க ரொம்ப ஜாக்கிரதையா நடந்துக்கணும்" என்று அந்தப் பெண் சொல்லி விட்டுப் போனது சுந்தரைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.

ரம்யாவுடன் பழகிய வகையில், அவள் சென்சிடிவ் என்பது சுந்தருக்குத் தெரிந்ததுதான். ஆனால் 'நீங்கள் கற்பனை பண்ண முடியாத அளவுக்கு சென்சிடிவ்' என்று சொல்லி விட்டுப் போகிறாளே, அதன் பொருள் என்னவாக இருக்கும் என்று  அவன் யோசித்துக் கொண்டிருந்தான்.

இது நடந்து சில நாட்களுக்குப் பிறகு ஒருநாள், அன்று மாலை தன்னால் வர முடியாது என்று ரம்யாவுக்கு ஃபோன் செய்யலாம் என்று சுந்தர் நினைத்தபோது, ரம்யாவிடமிருந்தே ஃபோன் வந்தது.

"இப்பதான் உன்னைப் பத்தி நினைச்சேன். அதுக்குள்ள, நீயே ஃபோன் பண்ணிட்டே!" என்றான் சுந்தர், உற்சாகத்துடன்.

"என்னது, இப்பதான் என்னைப் பத்தி நினைச்சியா? அப்படின்னா, இவ்வளவு நேரம் என்னைப் பத்தி மறந்துட்டியா? நான் எப்பவும் உன்னையே நினைச்சுக்கிட்டிருக்கேன். ஆனா, நீ எப்பவாவதுதான் என்னை நினைப்பே போல இருக்கு!" என்று படபடவென்று பொரிந்து தள்ளி விட்டு,  ஃபோனை வைத்து விட்டாள் ரம்யா .

'என்ன இவள் இப்படிப் பேசுகிறாள்?' என்று திகைத்து நின்ற சுந்தருக்கு, 'நீங்க நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு சென்சிடிவ்' என்று அன்றொரு நாள் ரம்யாவின் தோழி தன்னிடம் சொல்லி விட்டுப் போனது நினைவுக்கு வந்தது.

குறள் 1316
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.

பொருள்:
நினைத்தேன் என்று கூறி‌னேன்; நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர் என்று என்னைத் தழுவாமல் ஊடினாள்.

1317. விநோதினியின் நம்பிக்கைகள்

"இன்னிக்கு சாயந்திரம் அஞ்சு மணிக்கு உன் வீட்டுக்கு வரேன். அங்கேந்து மாலுக்குப் போகலாம்" என்றான் ரவீந்திரன்.

"அஞ்சு மணிக்கு வேண்டாம். நாலரை மணிக்கு முன்னால வா. இல்லேன்னா, ஆறு மணிக்கு அப்புறம் வா!" என்றாள் விநோதினி.

"என்னால நாலு மணிக்கு மேலதான் கிளம்ப முடியும். ஏன், அஞ்சு மணிக்கு வந்தா என்ன?"

"டேய் முட்டாள், இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. நாலரையிலேந்து ஆறு மணி வரையில ராகுகாலம். இது கூடத் தெரியாதா?"

"இந்த விஞ்ஞான உண்மை தெரியாத நான் முட்டாள்தான். ஞாபகம் வச்சுக்கறேன். ஐ ஏ எஸ் பரீட்சை எழுதறப்ப, உபயோகமா இருக்கும்!"

"நீ ஐ ஏ எஸ் பரீட்சை எழுதப் போறியா? எங்கிட்ட சொல்லவே இல்லையே!"

"ஒருவேளை எழுதினா, உபயோகமா இருக்கும்னு சொன்னேன்! சரி. அப்ப,  அஞ்சு மணிக்கு மேல கிளம்பி வரேன்."

"ஐயையோ! ராகுகாலத்தில கிளம்ப வேண்டாம்!"

"அப்ப, ஆறு மணிக்கு மேல கிளம்பறேன். ஆனா, உன் வீட்டுக்கு வரப்ப ஏழு மணி ஆயிடுமே!"

"பரவாயில்லை" என்றாள் விநோதினி.

மாலில் சற்று நேரம் சுற்றிய பிறகு, இருவரும் அங்கிருந்த ஒரு உணவகத்துக்குச் சென்றனர். 

இருவரும் உணவருந்திக் கொண்டிருந்தபோது, ரவீந்திரனுக்கு திடீரென்று தும்மல் வந்தது. கைக்குட்டையால் வாயைப் பொத்திக் கொண்டு, ஒரு பெரிய தும்மல் போட்டான்.

"நூறாண்டு வாழ்க!" என்றாள் விநோதினி.

ரவீந்திரன் சுற்றுமுற்றும் பார்த்து விட்டு, "இங்கே யாராவது பிறந்த நாள் கொண்டாடறாங்களா என்ன? யாரை நூறாண்டு வாழ்கன்னு வாழ்த்தின?" என்றான்.

"உன்னைத்தான். யாராவது தும்மல் போட்டால், நூறாண்டு வாழ்கன்னு வாழ்த்தணும். அப்படி வாழ்த்தினா, அவங்களுக்கு ஆயுள் கூடும்!" என்றாள் விநோதினி, அவனை உற்றுப் பார்த்தபடி.

"ரெண்டு மணி நேரத்துக்குள்ள, ரெண்டு விஞ்ஞான உண்மைகளா! என்னால தாங்க முடியாதும்மா!" என்ற ரவீந்திரன், "ஏன் என்னை அப்படிப் பாக்கற? திடீர்னு சீரியசாயிட்ட!" என்றான், விநோதினியின் முகத்தைப் பார்த்து.

"பொதுவா, சாப்பிடும்போது தும்மல் போட்டா, நமக்கு நெருக்கமானவங்க யாரோ நம்மை நினைச்சுக்கறாங்கன்னு அர்த்தம். உனக்கு நெருக்கமானவங்க என்னைத் தவிர வேற யாராவது இருக்காங்களா என்ன? பொதுவாகவே, ஆண்கள் சபல புத்தி உள்ளவங்க. என்னை ஏமாத்திட மாட்டியே!" என்றாள் விநோதினி. 

ரவீந்திரன் அவள் முகத்தைப் பார்த்தபோது, அதில் ஒரு வாட்டம் இருப்பது போல் தெரிந்தது.

"அம்மா விநோதினி. ஏதேதோ விஷயங்களையெல்லாம் நம்பற. உன் காதலனை நம்ப மாட்டியா? நீயே என்னை விரட்டி விட்டாலும், நான் உன்னை விட்டுப் போக மாட்டேன்!" என்றபடியே அவள் கையைப் பற்றினான் ரவீந்திரன்.

"சாரி. அவசரத்தில எச்சக்கையால தொட்டுட்டேன். அதுக்கு வேணும்னா 'நம் காதல் நூறாண்டு வாழ்க'ன்னு சொல்லிடலாமா?" என்றான் ரவீந்திரன், தொடர்ந்து.

மேகமூட்டத்துக்கிடையே தோன்றும் நிலவொளி போல், விநோதினியின் வாடிய முகத்தில், ஒரு புன்னகை அரும்புவதற்கான அறிகுறி தெரிந்தது போல் ரவீந்திரனுக்குத் தோன்றியது.

குறள் 1317
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.

பொருள்:
யான் தும்மினேனாக; அவள் நூறாண்டு என வாழ்த்தினாள்; உடனே அதை விட்டு, யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்.

1318. சந்தேக தாரிணி!

திருமணத்துக்குப் பிறகு, வாழ்க்கை, நெடுஞ்சாலைப் பயணம் போல், தங்குதடையின்றி ஓடிக் கொண்டிருக்கும் என்றுதான் கோபால் எதிர்பார்த்தான்.

ஆனால், அவன் வாழ்க்கை அப்படி அமைய, அவன் மனைவி தாரிணி அனுமதிக்கவில்லை.

ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு, இருவருக்கும் அடிக்கடி சிறு சண்டைகள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. 

இதற்கு முக்கியமான காரணம் தாரிணியின் சந்தேகப்படும் இயல்புதான்.

அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்தால், ஆயிரம் கேள்விகள் - எங்கே போயிருந்தீர்கள், தாமதமாகும் என்று ஏன் முன்பே சொல்லவில்லை, வேறு யாராவது பெண்ணைச் சந்தித்துப் பேசி விட்டு வந்தீர்களா என்பது போல்.

தாரிணியின் சந்தேக குணத்தால், கோபால் சில விஷயங்களை அவளிடம் சொல்வதைத் தவிர்க்க ஆரம்பித்தான். அது மேலும் பிரச்னைகளைக் கிளப்பியது.

அவன் சொல்லாமல் விட்ட விஷயம் தாரிணிக்குத் தெரிய வந்தால், 'ஏன் இதை மறைத்தீர்கள்?' 'சின்ன விஷயம்தான் என்றாலும், என்னிடம் சொல்லி இருக்கலாமே!' 'இது எனக்குத் தெரியக் கூடாது என்று நீங்கள் நினைத்ததற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா?' போன்ற கேள்விகளால் அவனைத் துளைத்து எடுத்து விடுவாள் தாரிணி.

எனவே, ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் தாரிணியிடம் சொல்லி விடுவது என்று வழக்கப்படுத்திக் கொண்டான் கோபால். ஆனால், அப்படியும், தாரிணி சந்தேகப்பட்டுக் கேள்விகள் கேட்பது நிற்கவில்லை.

ஒருமுறை, கோபால் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அவனுக்குத், தும்மல் வந்து விட்டது.

தும்மல் போட்டு விட்டு, கோபால் சுதாரித்துக் கொண்டதும், "சாப்பிடறப்ப தும்மினா, யாரோ நமக்கு நெருக்கமானவங்க நம்மை நினைக்கிறாங்கன்னு அர்த்தம்? உங்களை யார் நினைக்கறாங்க?" என்றாள் தாரிணி.

"என் அம்மாவாத்தான் இருக்கும். உன்னையும் அவங்களையும் விட்டா, எனக்கு வேற யாரு இருக்காங்க?" என்றான் கோபால்.

"உங்கம்மாதான் இப்ப உயிரோட இல்லையே!"

"ஒருவேளை, மேல் உலகத்திலேந்து நினைக்கிறாங்களோ என்னவோ?" 

அத்துடன் அந்தப் பேச்சு முடிந்து விட்டது.

கோபால் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். தாரிணி சமையற்கட்டில் இருந்தாள். கோபாலுக்குத் தும்மல் வருவது போல் இருந்தது. சாப்பிடும்போது தும்மினால், அதை வைத்து தாரிணி ஏதாவது சொல்வாளோ என்று பயந்து, கஷ்டப்பட்டுத் தும்மலை அடக்கிக் கொண்டான் கோபால்.

அப்போது, சமையற்கட்டிலிருந்து வெளியே வந்த தாரிணி, கோபால் தும்மலை அடக்கிக் கொள்வதை கவனித்து விட்டாள்.

"தும்மலை அடக்கினீங்களா?" என்றாள் தாரிணி.

"ஆமாம்" என்றான் கோபால், பலவீனமான குரலில்.

"ஏன் அடக்கினீங்க? தும்மல் வந்தா, தும்மிட வேண்டியதுதானே?"

"இல்லை, தும்மினா, வாயில இருக்கற சாப்பாடு வெளியில தெறிச்சுடுமேனுதான்!"

"அது இல்லை காரணம். உங்களுக்கு வேற ஒரு காதலி இருக்கா. அவ உங்களை நினைச்சதாலதான், அன்னிக்கு நீங்க தும்மினீங்க. இன்னிக்கும் அப்படித்தான். அதை நான் கண்டுபிடிச்சுடுவேனேன்னுதானே தும்மலை அடக்கினீங்க?"

இவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், திகைத்தபடி அமர்ந்திருந்தான் கோபால்.

குறள் 1318
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.

பொருள்:
அவளுடைய ஊடலுக்கு அஞ்சி யான் தும்மலை அடக்கிக் கொள்ள, உம்மவர் உம்மை நினைப்பதை எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ என்று அழுதாள்.

1319. கலைவாணியின் கேள்வி!

மருதவாணனின்  மனைவி கலைவாணி அவனுடன் ஊடல் கொண்டு, மூன்று நாட்கள் ஆகி விட்டன. ஊடல் கொண்ட மனைவியை சமாதானப்படுத்த, மருதவாணன் செய்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.

பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்தான். கலைவாணியின் அறைக்குள் வர, அவள் அவனை அனுமதிக்காததால், பணிப்பெண் மூலம் அவற்றைக் கலைவாணிக்கு அனுப்பி வைத்தான். பணிப்பெண் மூலமே அவற்றைத் திருப்பி அனுப்பி விட்டாள் கலைவாணி.

போர்க்களத்தில் எதிரிகளைக் கலங்கடிக்கும் மாவீரனாக இருந்து என்ன பயன்? படைத்தளபதி என்ற சக்தி வாய்ந்த பதவியில் இருந்து என்ன பயன்? ஊடல் கொண்ட மனைவியை சமாதானப்படுத்த முடியவில்லை.

வெளியூர் சென்று திரும்பியதும், நேரே வீட்டுக்கு வராமல், அரண்மனைக்குச் சென்றதுதான் மருதவாணன் செய்த தவறு. அரண்மனையில் ஒரு முக்கிய ஆலோசனை இருந்ததால், வீட்டுக்குத் திரும்பாமல், அரண்மனையிலேயே தங்கி விட்டான். ஆலோசனை தொடர்ந்து நீடித்ததால், இரண்டாம் நாள் இரவும் அங்கேயே தங்கும்படி ஆகி விட்டது.

இதற்குத்தான், கணவன் மீது கோபம் கொண்டு, அவனைப் பார்க்க மறுத்துத் தன் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள் கலைவாணி.

மூன்றாம் நாள், மருதவாணன் ஒரு முடிவு செய்தான். மனைவி தன்னிடம் பேசும் வரை, தான் உணவு அருந்தப் போவதில்லை என்பதைப் பணிப்பெண் மூலம் மனைவிக்குத் தெரிவித்து விட்டு, உணவு அருந்தாமல் இருந்தான்.

சில மணி நேரம் கழித்துத் தன் அறைக் கதவைத் திறந்து வெளியே வந்த கலைவாணி, அவன் கைகளைப் பற்றித் தன் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

அறைக்குள் சென்றதும், கதவைத் தாளிட்ட கலைவாணி, "அடேயப்பா! ஊடல் கொண்ட மனைவியை சமாதானப்படுத்த, என்னவெல்லாம் செய்கிறீர்கள்! பட்டினி கிடந்து, உடலை வருத்திக் கொள்ளக் கூடத் துணிந்து விட்டீர்களே!" என்றாள், வியப்புடன்.

"உன் மேல் இருக்கும் அன்புக்காக, நான் இதைக் கூடச் செய்ய மாட்டேனா?" என்று சொல்லியபடி அவளை அணைக்க வந்த மருதவாணனைக் கையை நீட்டித் தடுத்த கலைவாணி, "உண்மையைச் சொல்லுங்கள். உங்கள் மற்ற காதலிகளைச் சமாதானப்படுத்தவும் இதே வழிமுறைகளைக் கடைப்பிடிப்பீர்கள் அல்லவா?" என்றாள் கோபத்துடன். 

குறள் 1319
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று.

பொருள்:
ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும், நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று ‌சொல்லிச் சினம் கொள்வாள்.

1320. ஏன் இந்தப் பார்வை?

பின்புறத்திலிருந்து தன் முதுகை யாரோ தட்டியதும், சட்டென்று திரும்பிப் பார்த்தான் கவுதம்.

அங்கே நின்று கொண்டிருந்த பெண்ணைப் பார்த்ததும், அவனுக்கு வியப்பும், மகிழ்ச்சியும் ஒருங்கே ஏற்பட்டன.

"நீங்களா?" என்றான்.

"நீங்களான்னா? என்னை உனக்கு முன்னாலேயே தெரியுமா என்ன?" என்றாள் அந்தப் பெண்.

"இல்லை. பாத்திருக்கேன்."

"பாத்திருக்கேன்னு சொல்லாதே. பாத்துக்கிட்டே இருக்கேன்னு சொல்லு. நாலு நாளா, நான் இந்த பார்க்குக்கு வர அதே நேரத்துக்கு, நீயும் வரே. நான் எங்கே உக்காந்திருந்தாலும், கொஞ்சம் தள்ளி நின்னு என்னை முறைச்சுப் பாத்துக்கிட்டே இருக்கே. என் ஃப்ரண்ட்ஸ் கூடக் கேட்டாங்க 'யாருடி அவன், உன்னையே பாத்துக்கிட்டிருக்கான்?'னு. அவன் என்னைப் பாக்கலே, வேற எங்கேயோ பாக்கறான்னு சொல்லிச் சமாளிச்சேன். இன்னிக்கு என் ஃப்ரண்ட்ஸ் யாரும் வரலை. அதனாலதான், உன்னை நேருக்கு நேர் கேக்கலாம்னு வந்திருக்கேன். சொல்லு, ஏன் என்னை முறைச்சுப் பாத்துக்கிட்டிருக்கே?"

"நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. அதான் உங்களைப் பாத்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு!"

"அப்ப, எந்தப் பொண்ணு அழகா இருந்தாலும், இப்படித்தான் பாப்பியா?"

"ஐயையோ! அப்படி இல்ல. ம்... வந்து... நான் உங்களைக் காதலிக்கறேன். அதான்!" என்றான் கவுதம்.

"காதலிக்கறேன்னா, அதை நேரடியா சொல்லணும். முதல்ல, என்னை வாங்க போங்கன்னு பேசறதை நிறுத்து. நான் உன்னை வா போன்னுதானே பேசறேன். பை தி வே, என் பேரு வனிதா. உன் பேரு?"

"கவுதம்" என்றான் கவுதம்.

து நடந்து ஆறு மாதங்கள் ஆகி விட்டன. இப்போது கவுதமும், வனிதாவும் காதலர்கள். விரைவிலேயே திருமணம் செய்து கொள்ளப் போகிறவர்கள்.

அன்று, கடற்கரையில் கவுதம் அமர்ந்து கொண்டு, வனிதாவுக்காக் காத்திருந்தான்.

அப்போதுதான் வந்த வனிதா, அவன் முதுகைத் தட்டினாள். கவுதமுக்கு அவர்கள் முதல் சந்திப்பின்போது, வனிதா அவன் முதுகைத் தட்டியது நினைவுக்கு வந்தது.

வனிதாவை உற்றுப் பார்த்த கவுதம், "உன்னை எவ்வளவு தடவை பார்த்தாலும் பாத்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு!" என்றான்.

"இருக்கும்டா. அப்படிப் பாத்தாத்தானே, அந்தப் பொண்ணை விட நான் அழகா இருக்கேனான்னு ஒப்பிட்டுப் பார்க்க முடியும்?" என்றாள் வனிதா, கோபத்துடன்.

"எந்தப் பொண்ணோட?" என்றான், கவுதம் புரியாமல்.

"நான் வரதுக்கு முன்னாடி உத்துப் பாத்துக்கிட்டிருந்தியே, அந்தப் பொண்ணோட" என்று கவுதமுக்கு முன்புறமாகக் கையை நீட்டிச் சுட்டிக் காட்டினாள் வனிதா.

கடல் அலைகளில் காலை நனைத்தபடி நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணை அப்போதுதான் கவனித்த கவுதம், "அந்தப் பொண்ணை நான் இப்பதான் கவனிக்கிறேன். நான் கடலைத்தான் பாத்துக்கிட்டிருந்தேன்" என்றான்.

"பொய் சொல்லாதே! நீ முதல்ல என்னைத் திரும்பத் திரும்பப் பாத்ததே, வேற ஒரு பொண்ணோட என்னை ஒப்பிட்டுப் பார்க்கத்தான். அது தெரியாம, நீ என்னைக் காதலிக்கறதா நினைச்சு, நான் ஏமாந்துட்டேன். இப்பதான் உன் குணம் புரியுது!" என்று கூறியபடி எழுந்து செல்ல யத்தனித்த வனிதாவின் கைகளைப் பற்றி, "நான் சொல்றதைக் கேளு வனிதா. நீ நினைக்கிற மாதிரி இல்ல!" என்று அவளை சமாதானப்படுத்த முயன்றான் கவுதம்.

குறள் 1320
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.

பொருள்:
ஒப்பற்ற அவளுடைய அழகை நினைத்து, அவளையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாலும், யாருடன் என்னை ஒப்பிட்டு உற்றுப் பார்க்கிறீர் என்று கோபம் கொள்வாள்.

அதிகாரம் 133 - ஊடல் உவகை
அதிகாரம் 131 - புலவி

அறத்துப்பால்                                                         பொருட்பால் 


No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...