கதாகாலட்சேபம் முடிந்து இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, "எப்படி இருந்தது கதாகாலட்சேபம்?" என்றாள் சினேகா.
"பரவாயில்ல. நான் பயந்த அளவுக்கு போரடிக்கல. ஆனா, இந்தப் புராணக் கதையில எல்லாம் எனக்கு ஆர்வம் இல்ல. உனக்கு எப்படி இதில திடீர்னு ஆர்வம் வந்ததுன்னு தெரியல!" என்றாள் சியாமளா.
"எனக்கும் இதிலெல்லாம் ஆர்வம் இல்ல. இவர் நல்லா சொல்லுவார்னு சொன்னாங்க. அதான் கேட்டுப் பாக்கலாம்னு வந்தேன். எனக்கு கம்பெனி கொடுத்துக்கு ரொம்ப தாங்க்ஸ்!"
"என்னடி தாங்க்ஸ் எல்லாம்? நீ கூப்பிட்டா நான் வர மாட்டேனா? அதுவும் நீ இப்ப இருக்கற நிலைமையில..." என்ற சியாமளா, தவறாகச் சொல்லி விட்டோமோ என்று நினைத்துப் பாதியிலேயே நிறுத்தினாள்.
தோழியை ஏறிட்டுப் பார்த்த சினேகா, "அது என்ன நிலைமை?" என்றாள்.
"இல்லை...சாரி. நீ குமரனோட சண்டை போட்டுட்டுத் தனியா இருக்கறதை சொன்னேன்! வருத்தமா இருக்கற உனக்கு, எங்கேயாவது போயிட்டு வந்தா ஆறுதலா இருக்கும்னுட்டுத்தானே கதாகாலட்சேபத்துக்குக் கிளம்பின? அதைத்தான் சொன்னேன்!"
"தனியா இருக்கேன், ஆனா வருத்தமா இல்ல!" என்றாள் சினேகா.
"என்னடி சொல்ற?"
"ஆமாண்டி. இந்த ஊடலை நான் எஞ்ஜாய் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன்!"
"எஞ்ஜாய் பண்றியா?"
"ஆமாண்டி. எங்களுக்குள்ள எப்பவுமே பிரிவு வராது. இந்த ஊடல்ங்கறது ஒரு சின்ன இடைவெளி. மறுபடி நாங்க சேரும்போது, முன்னை விட ரொம்ப நெருக்கமா இருப்போம். அதனாலதான், ஊடலை நான் எஞ்ஜாய் பண்றேன்னு சொன்னேன். இன்னிக்குக் கதாகாலட்சேபத்துக்குப் போகணும்னு ஏன் நினைச்சேன் தெரியுமா?"
"ஏன்?"
"நேத்திக்கு எங்க அம்மா இந்தக் கதாகாலட்சேபத்துக்குப் போயிட்டு வந்துட்டு, கிருஷ்ணருக்கும் சத்தியபாமாவுக்கும் இடையிலே ஏற்பட்ட ஊடலைப் பத்தி இன்னிக்கு சொல்லப் போறார்னு சொன்னாங்க. கடவுள் தம்பதிகிட்ட கூட ஊடல் இருந்திருக்கே! அந்தக் கதையைக் கேட்டுட்டு வரலாம்னுதான் கிளம்பினேன். எப்படி, கதை நல்லா இருந்தது இல்ல?" என்றாள் சினேகா.
"இருந்தது. நீ சொல்ற ஊடல் கதை அதை விட நல்லா இருக்கு. ஊடலுக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்குன்னு எனக்குத் தெரியாது!" என்றாள் சியாமளா.
"நீயும் காதலிச்சுப் பாரு. அப்ப உனக்குப் புரியும்!" என்றாள் சினேகா, சிரித்துக் கொண்டே.
கற்பியல்
No comments:
Post a Comment