Friday, September 24, 2021

1134. அவ்வை சண்முகி!

இரண்டு காவலர்கள் ஒரு இளைஞனின் கைகளைக் கட்டி அழைத்துக் கொண்டு காவலர் தலைவரிடம் வந்தனர்.

"தலைவரே! அந்தி மயங்கும் வேளையில் இவன் பெண் வேடமிட்டு மறைந்து மறைந்து சென்று கொண்டிருந்தான். ஒரு பெண் பயந்து பயந்து செல்கிறாளே, அவளுக்குப் பாதுகாப்பு கொடுத்து அழைத்துச் செல்லலாம் என்று நினைத்து அருகில் சென்றபோதுதான் இவன் பெண் வேடம் போட்ட ஒரு வாலிபன் என்று தெரிந்தது. பெண் வேடம் போட்டதற்கான காரணத்தை இவன் எங்களிடம் சொல்ல மறுக்கிறான். அதனால் இவனைத் தங்களிடம் அழைத்து வந்தோம்" என்றான் காவலர்களில் ஒருவன்.

"சொல்! எதற்கு இந்தப் பெண் வேடம்? ஏதாவது நாடகத்தில் நடிக்கப் போகிறாயா? அப்படி இருந்தால் கூட நாடகக் கொட்டகையில்தானே வேடம் போட்டுக் கொள்வார்கள்!" என்றார் காவலர் தலைவர் சிரித்தபடி.

"ஐயா! சொன்னால் நம்ப மாட்டீர்கள்! என் காதலியைப் பார்க்கத்தான் போய்க் கொண்டிருந்தேன்" என்றான் அந்த வாலிபன்.

"அதற்கு ஏன் பெண் வேடம்?"

"ஐயா! வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமல் அரசரின் போர்ப்படையில் சேர்ந்து நாட்டுக்குச் சேவை செய்வது என்று நானும் என் நண்பர்கள் சிலரும் சில நாட்கள் முன்பு ஒரு உறுதி எடுத்துக் கொண்டோம். ஆனால் ஒரு பெண்ணைச் சந்தித்ததும் எனக்கு அவள் மேல் உடனே காதல் ஏற்பட்டு விட்டது. அவளும் என் காதலை ஏற்றுக் கொண்டு விட்டாள். 

"இது என் நண்பர்களுக்குத் தெரிந்தால், "உன் உறுதிமொழி என்ன ஆயிற்று? இவ்வளவுதானா உன் ஆண்மை, வீரம் எல்லாம்?" என்று என்னை எள்ளி நகையாடுவார்களே என்று பயந்துதான் பெண் வேடமிட்டு என் காதலியைச் சந்தித்து வருகிறேன். என் காதலிக்குத் தன் பெற்றோர்களிடம் தன் காதலைப் பற்றிச் சொல்ல அச்சமாக இருப்பதால், அவளுக்கும் இந்த ஏற்பாடு பிடித்திருக்கிறது. தயவு செய்து என்னை விட்டு விடுங்கள். என் காதலி எனக்காகக் காத்திருப்பாள்."

"எங்கே காத்திருக்கிறாள் உன் காதலி?"

"அருகில் இருக்கும் பூங்காவில்தான்."

"சரி. காவலர்கள் உன்னுடன் வருவார்கள். உன் காதலி அங்கிருந்தால் உன்னை அவர்கள் அங்கே விட்டு விடுவார்கள். இல்லாவிட்டால் நீ கைதியாக இங்கேயே திரும்பி வர வேண்டியதுதான்!"

"அதற்கு அவசியம் இருக்காது ஐயா! எத்தனை நேரம் ஆனாலும் என் காதலி எனக்காகக் காத்திருப்பாள்" என்றான் வாலிபன் மகிழ்ச்சியுடன்.

"இவன் ஊர் பெயர் ஆகிய விவரங்களை வாங்கிக் கொண்டு இவன் சொல்லும் இடத்துக்கு இவனை அழைத்துச் செல்லுங்கள். இவன் காதலி அங்கு இல்லாவிட்டால் இவனைக் கைது செய்து சிறையில் அடைத்து விடுங்கள்!" என்றார் காவல் தலைவர் காவலர்களிடம்.

"ஐயா! என் பெயர் சண்முகம். என் ஊர் அருகிலுள்ள அவ்வைப்பட்டி" என்றான் வாலிபன்.

"அவ்வைப்பட்டி சண்முகம்! பெண் வேடம் போட்டதால் நீ அவ்வை சண்முகி!" என்று சொல்லிச் சிரித்தார் காவல் தலைவர்.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 114
நாணத்துறவுரைத்தல்

குறள் 1134
காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை..

பொருள்:
நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகிறது.

அறத்துப்பால்                                                                                                   பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...