Tuesday, July 18, 2023

1222. மயங்கிய மாலைப் பொழுது

 மதுவந்தி கண் விழித்தாள்.

'எப்போது தூங்கினேன்?' என்ற கேள்வி அவளுள் எழுந்தது. அத்துடன், 'இப்போது நான் விழித்துக் கொண்டிருக்கிறேனா?' என்ற கேள்வியும் வந்தது.

தன்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டாள். வலித்தது. 'அப்படியானால் விழித்துக் கொண்டுதான் இருக்கிறேன்!'

'ஒருவேளை இந்தக் கிள்ளிக் கொள்வது, வலியை உணர்வது எல்லாமே தூக்கத்தில் வரும் கனவில் நிகழ்வதாக இருந்தால்...?'

எழுந்து நடந்து வாசலுக்கு வந்தாள்.

'ஏன் எல்லாம் மங்கலாகத் தெரிகின்றன?

ஒருவேளை தூக்கத்தில் தெரியும் காட்சிகள் என்பதால்தான் எல்லாம் மங்கலாகத் தெரிகின்றனவோ?'

வாசல் திண்ணையில் அம்மா அம்ந்திருந்தாள்.

"தூங்கி எழுந்தியா? ராத்திரி முழுக்க தூங்காம மத்தியானம் உன்னை அறியாமலேயே தூங்கிட்டு சாயந்திரம் எழுந்து வர! பகல்ல சரியா சாப்பிடக் கூட இல்ல. இரு. உனக்குச் சாப்பிட ஏதாவது எடுத்துக்கிட்டு வரேன்!" என்று கூறியபடியே உள்ளே போனாள் அவள் அம்மா.

அவளைக் கடந்து போனபோது, "உன் புருஷன் ஊருக்குப் போனதிலேந்து கண்ணல்லாம் மங்கிப் போய் சோர்வாவே இருக்கே! அவன் எப்ப திரும்பி வரப் போறானோ, நீ எப்ப பழையபடி ஆகப்போறியோ?" என்று முணுமுணுத்துக் கொண்டே போனாள் அம்மா.

அம்மா சொன்ன பிறகுதான் அது மாலை நேரம் என்பது மதுவந்திக்குப் புரிந்தது.

'ஓ, இது மாலை நேரமா? அதுதான் இப்படி மங்கலாய் இருக்கிறாயா? நீ பகலைச் சேர்ந்தவளா அல்லது இரவைச் சேர்ந்தவளா? பாவம் அது தெரியாமல்தானே நீ இப்படி மயங்கி நிற்கிறாய்? ஏன் இந்த மயக்கம்? உன் காதலனும் என் காதலனைப் போல் கொடியவனோ? உன்னைத் தனியே விட்டு விட்டுப் போய் விட்டானோ? அதனால்தான் நீயும் என்னைப் போல் கண் பார்வை மங்கி நிற்கிறாயோ?'

"மது. உள்ளே வா! பலகாரம் எடுத்து வச்சிருகேன்!"

உள்ளிருந்து அம்மாவின் குரல் கேட்டது.

'அம்மாவின் குரல் கேட்பது கனவிலா அல்லது நனவிலா?'

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 123
பொழுது கண்டிரங்கல்
குறள் 1222
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.

பொருள்:
பகலும் இரவுமாய் மயங்கும் மாலைப்பொழுதே! என்னைப் போலவே நீயும் ஒளி இழந்த கண்ணோடு இருக்கிறாயே; உன் கணவரும் என் கணவரைப் போல் கொடியவரோ?

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...