அவள் நாடியைப் பார்த்து விட்டு, "கப நாடியோட துடிப்பு அதிகமா இருக்கே! சளி அதிகமா இருக்கு. எத்தனை நாளா சளி இருக்கு?" என்றார் வைத்தியர்.
"ஒரு மாசத்துக்கு மேல இருக்குங்க!" என்றாள் கோசலை.
"முதலிலேயே கவனிக்காம விட்டுட்டீங்க. சளி பிடிச்சா, தயிர், மோர், எலுமிச்சை, வெள்ளரி மாதிரி குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்க்கணும். சுடுநீர் குடிக்கணும். கவனமா இல்லாததால, இப்ப இருமல் வந்திருக்கு. அப்புறம், காய்ச்சல், உடல்வலின்னு நோய் முத்திக்கிட்டே இருக்கும். நான் கொடுக்கற சூரணத்தை மூணு வேளை சுடுநீர்ல கலந்து சாப்பிடுங்க. அதோட, நான் சொன்ன மாதிரி குளிர்ச்சியான உணவுப் பொருட்களை சாப்பிடாம இருங்க!"
வைத்தியர் சென்றதும், "வைத்தியர் சொல்றதைப் பாருடி. சளி பிடிக்கறதுல ஆரம்பிச்சு, இருமல், காய்ச்சல், உடல்வலின்னு எப்படி நோய் முத்துது பாரேன்!" என்றாள் கோசலை.
"இது பரவாயில்லைம்மா. இந்த நோய் முத்தறதுக்கு ஒரு மாசத்துக்கு மேல ஆகுதே. இன்னொரு நோய் இருக்கு. அது காலையில பூ அரும்பற மாதிரி இலேசா ஆரம்பிக்கும். பூ கொஞ்சம் கொஞ்சாமா விரியற மாதிரி, நாள் முழுக்க முத்திக்கிட்டே இருக்கும். சாயந்திரம் ஆனா, பூ முழுசா மலருகிற மாதிரி, இந்த நோய் முழுசா முத்தி, ஆளை வாட்டி எடுக்கும்!" என்றாள் கமலி.
"அது என்னடி அப்படி ஒரு நோய்? நான் கேள்விப்பட்டதே இல்லையே!" என்றாள் கோசலை, வியப்புடன்.
கணவனைப் பிரிந்திருப்பதால், தினமும் தன்னைப் பிடித்து வாட்டும் காம நோய்தான் அது என்பதைத் தாயிடம் எப்படிச் சொல்வது என்று தயங்கிய கமலி, "பெயர் ஞாபகம் இல்லை. ஏதோ ஒரு புத்தகத்தில படிச்சேன்" என்று சொல்லிச் சமாளித்தாள்.
கற்பியல்
பொழுது கண்டிரங்கல்
பொருள்:
காதல் துன்பமாகிய இந்தப் பூ காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப் பொழுதில் மலர்ந்து விடுகிறது.
No comments:
Post a Comment