Wednesday, July 5, 2023

1214. கன்னத்தில் விழுந்த அறை!

மீராவைத் தூக்கத்திலிருந்து எழுப்ப முயன்றாள் அவள் அம்மா காமாட்சி.

எவ்வளவோ கூப்பிட்டும் மீரா எழுந்திருக்காததால், அவளைப் பிடித்து உலுக்கினாள் காமாட்சி.

கண் விழித்து எழுந்த மீரா, எதிர்பாராத விதமாகக் காமாட்சியின் கன்னத்தில் அறைந்து விட்டாள்.

அதிர்ச்சியடைந்த காமாட்சி, கன்னத்தைப் பிடித்துக் கொண்டு, "என்னடி இது? நான் உன் அம்மா. இப்படியா என்னை அடிப்பே?" என்றாள் சற்றுக் கோபத்துடன்.

அப்போதுதான் கண்களைக் கசக்கிக் கொண்டு இயல்பு நிலைக்கு வந்த மீரா, தான் அறைந்த அம்மாவின் கன்னத்தை வருடி, "மன்னிச்சுக்கம்மா! நல்லா தூங்கிக்கிட்டு இருக்கறப்ப என்னை உலுக்கி எழுப்பினதால, என்னை அறியாம கோபம் வந்து அடிச்சுட்டேன்!" என்றாள்.

"நல்லா அடிப்பேடி!" என்ற காமாட்சி, "உன் புருஷன் உங்கிட்ட கோவிச்சுக்கிட்டு உன்னை வீட்டை விட்டு அனுப்பினதிலேந்து நீ இப்படித்தான் இருக்கே. அவன் எப்ப கோபம் தணிஞ்சு உன்னை அழைச்சுக்கிட்டுப் போகப் போறானோ!" என்றாள், பெருமூச்சுடன்.

'நேரில எங்கிட்ட அன்பு செலுத்தாத மனுஷன், இன்னிக்குக் கனவில வந்து எங்கிட்ட அன்பு காட்டினாரு. என்னைத் தூக்கத்திலேந்து எழுப்பி, அந்த சுகமான கனவைப் பாதியில கலைச்சுட்டியே! அந்த ஆத்திரத்திலதானே என்னை அறியாமலேயே உன்னை அறைஞ்சுட்டேன்!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் மீரா.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 122
கனவுநிலை உரைத்தல்
குறள் 1214
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.

பொருள்:
நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டு வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Tuesday, July 4, 2023

1213. கனவில் வருபவன்

"என்னைக் காதலிக்கறதா சொன்னாரு. கல்யணம் பண்ணிப்பேன்னு கையிலஅடிச்சு சத்தியம் பண்ணினாரு. ஆனா, இப்ப ஆறு மாசமா அவரைக் கண்ணிலேயே காணல!" என்றாள் கார்த்திகா.

"எங்கே போயிட்டாரு? விசாரிச்சுப் பாத்தியா?" என்றாள் அவள் தோழி ராகினி.

"அவங்க வீட்டிலேயே கேட்டுட்டேன். அவங்களுக்கு எங்க காதலைப் பத்தித் தெரியுமே! நண்பர்களோட ஏதோ வெளிநாட்டுக்குப் போயிருக்காராம். எப்ப வருவார்னு அவங்களுக்கே தெரியாதுன்னு சொல்றாங்க!"

"எதுக்கு வெளிநாட்டுப் பயணம்?"

"அவர் அப்பா நிறையப் பணம் சம்பாதிச்சு வச்சிருக்காரு. அதை வச்சுக்கிட்டுக் கொஞ்ச நாள் எங்கேயாவது உல்லாசமாப் போகலாம்னு போயிருப்பார் போல இருக்கு!"

"சரி. அவர் வரப்ப வரட்டும். அதுக்காக நீ சாப்பிடாம, தூங்காம இருந்து உடம்பைக் கெடுத்துக்காதே!" என்றாள் ராகினி.

"சாப்பாடு பிடிக்காதததால, ஒழுங்கா சாப்பிடறது இல்லதான். ஆனா, தூங்காம இருக்க மாட்டேன்!" என்றாள் கார்த்திகா.

"ஆமாம். முழிச்சுக்கிட்டு இருக்கறப்ப எல்லாம் அவரையே நினைச்சுக்கிட்டிருக்கே. தூங்கும்போதாவது எல்லாத்தையும் மறந்துட்டு நிம்மதியா இருக்கலாம்."

"நான் தூங்கறது மறக்கறதுக்காக இல்லடி, நினைக்கறதுக்காக!" என்றாள் கார்த்திகா.

"என்னடி சொல்ற?" என்றாள் ராகினி.

"முழிச்சுக்கிட்டிருக்கறப்ப, அவர் நேரில வரலியே, என் மேலே அன்பு காட்டலியேன்னு வருத்தமாவும், ஏக்கமாவும் இருக்கும். ஆனா, தூங்கினா கனவு வரும். அந்தக் கனவில அவர் வருவாரு. எங்கிட்ட அன்பாப் பேசுவாரு. அதில கிடைக்கிற சந்தோஷத்தினாலதான் நான் உயிரோடயே இருக்கேன்!" என்றாள் கார்த்திகா.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 122
கனவுநிலை உரைத்தல்
குறள் 1213
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.

பொருள்:
நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Friday, June 30, 2023

1212. கண்களே உறங்குங்கள், நான் கனவு காண வேண்டும்!

"ஏண்டி மல்லிகா, வெளியூர் போன உன் புருஷன் எப்ப...டீ திரும்பி வருவான்?" என்றாள் ராக்காயி.

ஊர்வம்பு பேசுவதையே தொழிலாகக் கொண்டிருக்கும் இந்தக் கிழவிக்கு என்னைச் சீண்டிப் பார்க்காவிட்டால் தூக்கம் வராது போலிருக்கிறது. தினமுமா இதே கேள்வியைக் கேட்பாள்?

"அவர் வந்ததும், முதல்ல உங்ககிட்ட வந்து சொல்றேன், பாட்டி!" என்றபடியே அங்கிருந்து நகர்ந்தாள் மல்லிகா.

அவள் சிந்தனை ராக்காயின் கேள்வியைத் தொடர்ந்து ஓடியது.

'அவ எங்கே இருக்கார்னும் தெரியாது, எப்ப வருவார்னும் தெரியாது!'

திடீரென்று மல்லிகாவுக்கு ஒரு எண்ணம் தோன்றியது:

'ஒருவேளை, அவர் வராமலே போயிட்டா?

சேச்சே! அது எப்படி வராமப் போவாரு? நான் அவருக்காகக் காத்திருக்கறது அவருக்குத் தெரியாதா?

'ஒருவேளை, அவர் பிரிவைத் தாங்காம நான் உயிரை விட்டிருப்பேன்னு நினைச்சிருப்பாரோ? அப்படி நினைச்சு, வராமலே இருந்துட்டா?'

இந்த எண்ணம் மல்லிகாவுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தியது.

'நான் கல்நெஞ்சுக்காரி. அதனால, உங்க பிரிவைத் தாங்கிக்கிட்டு, இன்னும் உயிரோடதான் இருக்கேன். நீங்க எவ்வளவு காலம் கழிச்சுத் திரும்பி வந்தாலும், இந்த உயிரைப் பிடிச்சுக்கிட்டு உங்களுக்காகக் காத்துக்கிட்டிருப்பேன்!'

இந்தச் செய்தியை அவருக்கு எப்படித் தெரிவிப்பது? அவர் எந்த ஊரில் இருக்கிறார் என்று தெரிந்தால், அந்த ஊருக்குச் செல்லும் யாரிடமாவது சொல்லி அனுப்பலாம்! ஆனால், அவர் எந்த ஊரில் இருக்கிறார் என்றே தெரியவில்லையே!

ரவு வந்து விட்டது. வழக்கம் போல் உறக்கம் வரவில்லை.

'கண்களே! இன்று ஒரு நாளாவது உறங்குங்களேன்! அப்படி உறங்கினால், அந்த உறக்கத்தில் கனவு வரும். கனவு வந்தால், அதில் என் கணவர் வருவார். அவரிடம் நான் உயிருடன் இருக்கும் செய்தியைச் சொல்லுவேன். எனவே, கண்களே, என்னிடம் இரக்கம் காட்டிக் கொஞ்சம் உறக்கம் கொடுங்கள்!'

படுக்கையில் படுத்துக் கொண்டு, உறங்கும் முயற்சியில் கண்களை மூடிக் கொண்டாள் மல்லிகா.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 122
கனவுநிலை உரைத்தல்
குறள் 1212
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.

பொருள்:
நான் வேண்டுவதற்கு இணங்கி, என் மை எழுதிய கயல் விழிகள் உறங்கிடுமானால், அப்போது என் கனவில் வரும் காதலர்க்கு நான் இன்னமும் உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1211. நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது!

கடல் தாண்டிச் சென்று வணிகம் செய்து, பெரும் பொருள் ஈட்டி வருவதாகச் சொல்லி, நீலாவின் கணவன் கதிரவன் அவளைப் பிரிந்து சென்று பல மாதங்கள் கடந்து விட்டன.

கதிரவன் எங்கே இருக்கிறான், எந்த நிலையில் இருக்கிறான், எப்போது திரும்பி வருவான் என்பவற்றை அறிய முடியாமல், பெரும் துயரத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாள் நீலா.

முறையான உணவு, சரியான உறக்கம் இவற்றை நீலா அனுபவித்து நீண்ட காலம் ஆகி விட்டது.

டலில் ஒரு கப்பல் விரைவாக வந்து கொண்டிருக்கிறது. அந்தக் கப்பலின் உச்சியில் கதிரவன் நின்று கொண்டு, கையை உயர்த்தி ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறான்.

 'அட, அவன் என்னைப் பார்த்துத்தான் பேசுகிறான்!'

என்ன பேசுகிறான் என்று உன்னிப்பாக கவனித்தாள் நீலா. 

'நான் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறேன். இன்னும் இரண்டு நாட்களில் உன்னிடம் வந்து சேர்ந்து விடுவேன்' என்று அவன் உரக்கக் கூவியது அலைகளின் இரைச்சல்களுக்கிடையே நீலாவின் காதில் கேட்டது.

சட்டென்று கண் விழித்தாள் நீலா.

இது கனவா?

வெளியில் அதிகாலை வெளிச்சம் தோன்றுவதற்கான அறிகுறிகள் தெரிந்தன.

விடியற்காலையில் கண்ட கனவு பலிக்கும் என்று சொல்வார்களே! 

அப்படியானால், கதிரவன் இரண்டு நாட்களில் வந்து விடுவானா? என் பிரிவுத் துயர் இரண்டு நாட்களில் முடிவுக்கு வந்து விடுமா?

கணவனின் தூதாக அவனிடமிருந்து இந்த நற்செய்தியைத் தாங்கி வந்த இந்தக் கனவுக்கு நான் விருந்து வைக்க வேண்டாமா?

விருந்தாக எத்தகைய அமுதைப் படைக்கலாம் என்று நினைத்தபடி அடுப்படியை நோக்கி விரைந்தாள் நீலா.

சரியான உணவில்லாமல் காய்ந்து கொண்டிருந்த அவள் வயிறு தனக்கு உணவு கிடைக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியில் ஒருமுறை சுருங்கி விரிந்தது.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 122
கனவுநிலை உரைத்தல்
குறள் 1211
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து

பொருள்:
(யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Wednesday, June 28, 2023

1210. நிலவுக்கு ஒரு வேண்டுகோள்!

'இவ்வளவு நாள் நெருக்கமா இருந்தவர், திடீர்னு காணாம போயிட்டாரே, ஏன்?'

அமுதா தன்னைத் தானே தினமும் கேட்டுக் கொள்ளும் கேள்வி இது.

இந்தக் கேள்வியை அவள் தன் தோழி வசந்தாவிடம் கேட்டபோது, "நான் சொன்னா உனக்கு வருத்தமாத்தான்  இருக்கும். பொம்பளைங்க நாம காதல வலுவா இருக்கற மாதிரி, ஆம்பளைங்க இருக்க மாட்டாங்க. உன் ஆள் இப்ப வேற ஒரு பொண்ணோட சுத்திக்கிட்டிருப்பார்னு நினைக்கிறேன்!" என்றாள் வசந்தா.

அதற்குப் பிறகு, அமுதா வசந்தாவிடம் இது பற்றிப் பேசவில்லை. வேறு யாரிடமும் கூடப் பேசவில்லை.

'பரவாயில்லை. என் காதலனை நானே தேடிக் கண்டு பிடிச்சுக்கறேன்!' என்ற உறுதியுடன், அவர்கள் வழக்கமாகச் சந்திக்கும் இடங்களுக்குத் திரும்பத் திரும்பச் சென்று தேடினாள் அமுதா.

"இவ ஏன் பைத்தியம் பிடிச்சவ மாதிரி அலைஞ்சுக்கிட்டிருக்கா?" என்று சிலர் அவள் காதுபடவே பேசினர். 

ஆனால், அத்தகைய பேச்சுக்களை அமுதா லட்சியம் செய்யவில்லை.

பல இடங்களுக்கு அலைந்து சோர்ந்து, அமுதா அந்தக் கோவில் வாசலில் அமர்ந்தபோது, பொழுது இருட்டத் தொடங்கி இருந்தது.

அப்போதுதான் அவளுக்கு அந்த எண்ணம் தோன்றியது.

'இத்தனை நாட்களாக, அவரைப் பகல் வேளைகளில் மட்டும்தான் தேடி இருக்கிறேன். இனி, இரவு வேளைகளில் தேடிப் பார்த்தால் என்ன? ஒருவேளை பகலில் நடமாடினால் என் கண்ணில் பட்டு விடுவோமோ என்று அஞ்சி, இரவில் மட்டுமே நடமாடுகிறாரோ என்னவோ!'

வானத்தைப் பார்த்தாள் அமுதா. வானத்தில் நிலவு அரைவட்டமாக இருந்தது. 'இந்த நிலவு இருக்கும் வரையில், வெளிச்சம் இருக்கும். ஆனால், நிலவு எவ்வளவு நேரம் இருக்கும் என்று தெரியவில்லையே!'

வானத்தை அண்ணாந்து பார்த்து, "ஏ நிலவே! பல நாட்கள் என்னைப் பிரியாமல் என்னுடன் இருந்த என் காதலர், இப்போது என்னைப் பிரிந்து எங்கோ சென்று விட்டார். நான் அவரைத் தேடிக் கண்டு பிடிக்கும் வரை, நீ வானிலிருந்து மறையக் கூடாது!" என்றாள் அமுதா.

அந்தப் பக்கம் போய்க் கொண்டிருந்த ஒருவயதான பெண், "இத்தனை நாளா, பித்துப் பிடிச்ச மாதிரி ஊரைச் சுத்திச் சுத்தி வந்துக்கிட்டிருந்தா. இப்ப வானத்தைப் பார்த்து ஏதோ பேசறா. பைத்தியம் ரொம்ப முத்திடுச்சு போல இருக்கு. இவ அம்மாக்காரிகிட்ட சொல்ல வேண்டியதுதான்!' என்று நினைத்துக் கொண்டாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 121 
நினைந்தவர் புலம்பல்
குறள் 1210
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.

பொருள்:
திங்களே! பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1209. ஈருடல் ஓருயிர்!

"ரெண்டு உடம்புக்குள்ள ஒரு உயிர் இருக்க முடியுமா?"

குணவதி இவ்வாறு கேட்டதும், அவளுடைய தோழி சந்திரா பெரிதாகச் சிரித்தாள்.

"ஏதாவது கவிதையில படிச்சியா என்ன?"

"இல்லை. என் காதலர்தான் அப்படிச் சொன்னாரு!"

"எச்சரிக்கையா இருந்துக்கடி. இப்படியெல்லாம் மிகையாப் பேசறவங்களை நம்பவே கூடாது!"

'அன்று சந்திரா விளையாட்டாகத் தன்னை எச்சரித்தது இன்று உண்மையாகி விட்டதே!' என்று நினைத்தபோது, ஏற்கெனவே பலவீனமடைந்திருந்த குணவதியின் உடல், மேலும் சோர்வடைந்தது.

சோமன் அவளைச் சந்தித்து இரண்டு மாதங்கள் ஆகி விட்டன. ஒருவேளை வெளியூர் போயிருப்பானோ என்று முதலில் நினைத்தாள் குணவதி. 

ஒருநாள், சற்றுத் தொலைவிலிருந்து அவள் அவனைப் பார்த்து விட்டு, அவனிடம் விரைந்தாள். ஆனால் அவளைப் பார்த்து விட்ட சோமன், வேகமாக வேறு புறம் சென்று விட்டான்.

அப்போதுதான் குணவதிக்குப் புரிந்தது, சோமன் தன் மீது வைத்திருந்த காதல் காற்றில் கரைந்து விட்டதென்று.

இன்னொரு நாள், குணவதி சோமனை வேறொரு பெண்ணுடன் பார்த்தாள். ஒருவேளை அவளிடமும், 'நாம் இருவரும் வெவ்வேறு உடல்கள் கொண்டிருந்தாலும், நம் இருவருக்கும் ஒரே உயிர்தான்' என்று சொல்லிக் கொண்டிருப்பானோ?

'ஆனால் என்னைப் பொருத்தவரை, ஈருடல் ஓருயிர் என்று சோமன் சொன்னது சரிதான். அவரைப் பிரிந்த பிறகு, என் உயிர் என்னை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறதே! எனவே, இந்த இரண்டு உயிர்களில், அவருடைய உயிர் மட்டும்தானே மிஞ்சி இருக்கப் போகிறது!' என்ற எண்ணம் குணவதியின் மனதில் தோன்றியபோதே, அவள் கூறுவதை ஆமோதிப்பது போல், அவள் கண்களிலிருந்து நீர்த்துளிகள் வெளிப்பட்டன.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 121
நினைந்தவர் புலம்பல்
குறள் 1209
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.

பொருள்:
நாம் இருவரும் வேறு அல்லேம் என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது என்னிடம் அன்பு இல்லாமல் இருப்பதை நினைத்து என் இனிய உயிர் அழிகின்றது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Tuesday, June 27, 2023

1208. அவருக்குத் தெரியும்!

"என்னடி, எப்பப் பார்த்தாலும் உன் புருஷனைப் பத்தின நினைப்புத்தானா? உலகத்தில வேற விஷயமே இல்லையா என்ன? நாங்கல்லாம் இருக்கிறது உன் கண்ணுக்குத் தெரியலியா?" என்றாள் வாசுகியின் தாய் மணியம்மை.

அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்த வாசுகியின் தோழி சிலம்பரசி, "வாசுகியை ரொம்பக் கோவிச்சுக்காதீங்கம்மா! அவ ஏற்கெனவே ரொம்ப வருத்தத்தல இருக்கா" என்றாள்.

"நான் கோவிச்சுக்கறது போதாது. நீயும் அவகிட்ட கடுமையாச் சொல்லு. அப்பவாவது அவ திருந்தறாளான்னு பாக்கலாம்!" என்றபடியே, உள்ளே சென்று விட்டாள் மணியம்மை.

"அம்மா சொல்லிட்டாங்க இல்ல? நீயும் உன் பங்குக்கு என்னைத் திட்டுடி!" என்றாள் வாசுகி, சிலம்பரசியிடம்.

"நான் யாருடி உன்னைத் திட்ட? உன் புருஷன் ஊர்லேந்து வந்தப்பறம், 'என் பெண்டாட்டியைத் திட்டினியா?'ன்னு என்னைக் கோவிச்சுக்கிட்டார்னா?" என்றாள் சிலம்பரசி, தோழியின் துயர மனநிலையைச் சற்றே மாற்றும் முயற்சியில்.

வாசுகி பதில் சொல்லவில்லை.

"அது சரி. நீ உன் புருஷனை அதிகம் நினைச்சுக்கிட்டே இருக்கேன்னு உங்கம்மாவும் மத்தவங்களும் கோவிச்சுக்கறது இருக்கட்டும். உன் புருஷனுக்கு இது தெரிஞ்சா, 'ஏன் என்னை ரொம்ப அதிகமா நினைச்சு உன்னைக் கஷ்டப்படுத்திக்கிட்டிருக்கே?'ன்னு உன்னைக் கோவிச்சுக்க மாட்டாரா?" என்றாள் சிலம்பரசி..

"நிச்சயமாக் கோவிச்சுக்க மாட்டாரு. ஏன்னா, அவரை நினைச்சுக்கிட்டிருக்கறதுதான் என் பிரிவுத் துன்பத்துக்கு மருந்துன்னு அவருக்குத் தெரியும். என் மனசைப் புரிஞ்சுக்காம, நான் அவரை அதிகமா நினைக்கறேன்னு என்னைக் குத்தம் சொல்றதுக்கு, அவர் உங்களை மாதிரி ஆள் இல்லையே!" என்றாள் வாசுகி.

அதைச் சொல்லும்போது வாசுகியின் முகம் மலர்ந்திருந்ததை சிலம்பரசி கவனித்தாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 121
நினைந்தவர் புலம்பல்
குறள் 1208
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.

பொருள்:
காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும், அவர் என்மேல் சினம் கொள்ள மாட்டார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ!

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1207. எப்போதும் உன் நினைவில்!

"காலையில கண் விழிச்சதுமே, என் முகத்தைத்தான் பாப்பாரு. அப்பதான் அவருக்கு அந்த நாள் மகிழ்ச்சியா அமையும்னு சொல்லுவாரு. இப்ப என்ன செய்யறாரோ தெரியல!" என்றாள் காஞ்சனா.

குளித்து விட்டு வந்து வேறு உடை உடுத்திக் கொண்டதும், "அவர் முதல்ல என்னைப் பாக்க வந்தப்ப, இந்தப் புடவைதான் உடுத்திக்கிட்டிருந்தேன்!" என்றாள்.

இதற்கு பதில் சொல்ல வாயெடுத்த அவள் தாய் சகுந்தலா பேசாமல் இருந்து விட்டாள்.

இரவு குழிப் பணியாரம் அருந்தும்போது, "அவருக்கு ரொம்பப் பிடிச்ச உணவு குழிப் பணியாரம்தான்!" என்றாள் காஞ்சனா.

"ஏண்டி, உன் புருஷன் சம்பாதிக்கறதுக்காகக் கடல் தாண்டிப் போயிருக்காரு. அவர் திரும்பி வர வரையில, பொறுமையாத்தான் இருக்கணும். காலையிலேந்து ராத்திரி வரைக்கும், எல்லா விஷயத்திலேயும் அவரைத் தொடர்புபடுத்திப் பேசிக்கிட்டே இருந்தா, உன்னோட பிரிவுத் துன்பம் அதிகமா இல்ல ஆகும்?" என்றாள் சகுந்தலா.

"நான் எப்பவும் அவரை நினைச்சுக்கிட்டிருக்கறதால, மனசளவிலேயாவது அவரோட சேந்து இருக்கேன். அப்படி இருக்கறப்பவே, என்னால பிரிவுத் துன்பத்தைத் தாங்க முடியல. அவரை நினைக்காம இருந்துட்டா, மனசளவில அவரோட ஒண்ணா இருக்கற சந்தோஷம் கூட இருக்காது. அப்ப, பிரிவுத் துன்பத்தைத் தாங்கறது இன்னும் கஷ்டமா இருக்குமே!" என்றாள் காஞ்சனா.

"என்னவோ, நீ சொல்றது எனக்கு ஒண்ணுமே புரியல!" என்றாள் சகுந்தலா.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 121
நினைந்தவர் புலம்பல்
குறள் 1207
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.

பொருள்:
மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும்போதே, பிரிவுத் துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! நினைக்காமல் மறந்து விட்டால், என்ன ஆகுமோ?

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Sunday, June 25, 2023

1206. திண்ணைப் பேச்சு!

"கட்டின பருஷன் இவளைக் கைவிட்டுட்டு, வேற ஒரு பொண்ணோட எங்கேயோ போயிட்டான். இவ கொஞ்சம் கூட வருத்தப்படாம, உல்லாசமா வாழ்ந்துக்கிட்டிருக்கா!"

தெருவில் நடந்து கொண்டிருந்த செல்வியின் காதில் இந்தப் பேச்சு விழுந்ததும், சட்டென்று திரும்பிய செல்வி, அவ்வாறு பேசிய அந்த நடுத்தர வயதுப் பெண்மணி அமர்ந்திருந்த திண்ணையை நோக்கி விரைந்தாள்.

அவளுடன் நடந்து வந்து கொண்டிருந்த அவள் தோழி காந்திமதி, "நில்லுடி! அவங்க கூடப் போய் சண்டை போடப் போறியா? வேண்டாண்டி!" என்று செல்வியைத் தடுக்க முயன்றாள்.

ஆனால், செல்வி தோழியின் பேச்சைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

செல்வி தங்களை நோக்கி வருவதைக் கண்டதும், திண்ணையில் அமர்ந்திருந்த அந்த இரண்டு பெண்களும் சற்றுப் பதட்டமடைந்தனர்.

"ஏம்மா, என் புருஷன் என்னை விட்டுட்டு ஓடிட்டார்னா, நான் உயிரோடயே இருக்கக் கூடாதா? தற்கொலை பண்ணிக்கணுமா?" என்றாள் செல்வி, தன்னைப் பற்றிப் பேசிய பெண்ணைப் பார்த்து.

"நான் அப்படிச் சொல்லல!" என்றாள் அந்தப் பெண், பதட்டமான குரலில்.

"உங்க புருஷன் இறந்துட்டாரு. அதுக்காக நீங்க உடன்கட்டை ஏறினீங்களா? நல்லா சாப்பிட்டுட்டுத் திண்ணையில உக்காந்துக்கிட்டு, தெருவில போறவங்களைப் பத்தி வம்பு பேசிக்கிட்டு சந்தோஷமாத்தானே இருக்கீங்க?"

"போதும்டி. வா, போகலாம்" என்று செல்வியின் கையைப் பிடித்து இழுத்தாள் காந்திமதி.

காந்திமதியின் கையை உதறி விட்டு, செல்வி தொடர்ந்து பேசினாள். 

"கோவலன் மாதவிகிட்ட போனதும், கண்ணகி உயிரை விட்டுடல. அவ உயிரோட இருந்ததாலதான், அவளால கோவலனோட மறுபடியும் சேர்ந்து வாழ முடிஞ்சுது!"

அந்தப் பெண் சமதானமாக ஏதோ சொல்ல முயல, அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் திரும்பி நடந்தாள் செல்வி. காந்திமதியும் அவளுடன் நடந்தாள்.

சற்று தூரம் நடந்ததும், "ஏண்டி செல்வி, உண்மையாவே உன் புருஷன் திரும்பி வருவார்ங்கற நம்பிக்கையிலதான் நீ வாழ்ந்துக்கிட்டிருக்கியா?" என்றாள் காந்திமதி.

"அந்த நம்பிக்கையெல்லாம் எனக்குக் கொஞ்சம் கூட இல்லடி. சும்மா வீம்புக்காக அவங்ககிட்ட அப்படிச் சொன்னேன். உண்மையில, என் புருஷனோட சேர்ந்து நான் சந்தோஷமாக இருந்த நாட்களை நினைச்சுத்தான் நான் வாழ்ந்துக்கிட்டிருக்கேன். மத்தபடி, நான் உயிரோட இருக்கறதுக்கு எந்த அர்த்தமும் இல்லை!"

சொல்லிக் கொண்டிருக்கும்போதே, நெஞ்சில் பொங்கி வந்த அழுகையை செல்வி கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டதை காந்திமதியால் உணர முடிந்தது.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 121
நினைந்தவர் புலம்பல்
குறள் 1206
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன்.

பொருள்:
நான் அவரோடு சேர்ந்திருந்த நாட்களை நினைத்துத்தான் உயிரோடு இருக்கிறேன்; வேறு எதை நினைத்து நான் உயிர் வாழ முடியும்?

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Thursday, June 22, 2023

1205. நெஞ்சினிலே நினைவு முகம்!

"நாம ஆசைப்படற விஷயம் நமக்குக் கிடைக்கலேன்னா, அதை விட்டுடணும்!" என்றாள் பூங்கொடி, தன் தோழி அருணாவிடம்.

"ஆறு மாசமா என்னோட காதலை அவருக்கு நான் எப்படியெல்லாமோ வெளிப்படுத்திட்டேன். ஆனா, அவ தன் மனசில எனக்கு இடம் கொடுக்க மாட்டேங்கறாரு. நாம ஆசைப்படற விஷயம் கிடைக்கலேன்னா, அதை விட்டுடணும்னு நீ சுலபமா சொல்லிட்ட!" என்றாள் அருணா.

பூங்கொடி தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

"நீ சொன்னபடி செய்யறது சுலபம் இல்லேன்னு நான் சொன்னா, அதுக்கு நீ ஏன் என் மேல கோவிச்சுக்கிட்டு உன் முகத்தைத் திருப்பிக்கற?" என்றபடியே, தோழியின் முகத்தைத் தனக்கு நேரே திருப்பிய அருணா, தோழியின் கண்களில் பெருகி வழிந்து கொண்டிருந்த கண்ணீரைக் கண்டு திடுக்கிட்டு, "நீ ஏண்டி அழற?" என்றாள்.

"நான் சுலபமா சொல்லல. என் அனுபவத்தை வச்சுத்தான் சொல்றேன். நானும் ஒத்தரைக் காதலிச்சு, அவர் என் காதலை ஏத்துக்காததால, வேற வழியில்லாம, என் முயற்சிகளைக் கைவிட்டவதான். அதானாலதான் சொன்னேன், ஆசைப்படற விஷயம் நமக்குக் கிடைக்கலேன்னா, அதை விட்டுடணும்னு!" என்றாள் பூங்கொடி, கண்ணீரைத் துடைத்தபடி.

"அடிப்பாவி! எங்கிட்ட கூட சொல்லாம இருந்துட்டியே! அது சரி. அவர் மேல ஆசையை விட்டுட்டேன்னா, ஏன் உன் கண்ல கண்ணீர் வருது?"

"ஆசையை விட்டேன்னு எங்கே சொன்னேன்? அவர்கிட்ட என் காதலைத் தெரிவிக்கிற முயற்சிகளை விட்டுட்டேன், அவ்வளவுதான். அவர் உருவம் என் நெஞ்சிலே இருந்துக்கிட்டு, என்னை வாட்டிக்கிட்டேதானே இருக்கு?"

"ஏண்டி, உன் காதலை ஏத்துக்காதவரை உன் மனசில வச்சுக்கிட்டிருக்கியே, உனக்கு வெக்கமா இல்லை?" என்றாள் அருணா.

"நான் ஏன் வெட்கப்படணும். என்னை அவர் தன்னோட இதயத்துக்குள்ள விடாம வெளியே நிறுத்தி வச்சுக்கிட்டு, அவர் மட்டும் என் நெஞ்சுக்குள்ள வந்து உக்காந்திருக்கறதுக்கு அவர்தானே வெட்கப்படணும்?" என்றாள் பூங்கொடி, கோபத்துடன்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 121
நினைந்தவர் புலம்பல்
குறள் 1205
தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்.

பொருள்:
தம்முடைய நெஞ்சில் எம்மை வர விடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வருவதைப் பற்றி நாண மாட்டாரோ?

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1204. எந்தன் நெஞ்சில் நீங்காத...

தமயந்தி தன் தோழி திலகாவின் வீட்டுக்குச் சென்றபோது, அங்கிருந்த ஒரு படத்தைப் பார்த்தாள்.

அதில். அனுமார் தன் மார்பைப் பிளந்து காட்ட, அவர் மார்பில் ராமரும், சீதையும் இருந்தனர்.

"புதுசா வாங்கினியா?" என்றாள் தமயந்தி.

"ஆமாம். நான் ராமரோட பக்தையாச்சே!" என்றாள் திலகா.

"அப்ப, ராமர் படத்தைன்னா வாங்கி இருக்கணும்? உன்னோட படத்தை வாங்கி இருக்கே!"

"அடிச்சேன்னா!" என்று விளையாட்டாகக் கையை ஓங்கிய திலகா, "இந்தப் படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நம் மனசில ஒத்தர் இருக்கார்ங்கறதை நம்மாலயும் இப்படித் திறந்து காட்ட முடிஞ்சா, நல்லா இருக்கும் இல்ல?" என்றாள்.

"ஓ, நீ அப்படி வரியா? நீ உன் மனசில எப்பவும் உன் காதலன் சுந்தரைத்தான் நினைச்சுக்கிட்டிருக்கேங்கறதை அவர் நம்ப மாட்டாரா? நீ இதயத்தைத் திறந்து காட்டினாத்தான் நம்புவாரா?" 

"உனக்குக் காதல் வந்தாதான் இது புரியும்!"

"வேண்டவே வேண்டாம். என்னால நெஞ்சத்தைக் கிழிச்செல்லாம் காட்ட முடியாதும்மா!" என்ற தமயந்தி, "இந்தப் படத்தைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஒண்ணு தோணும்" என்றாள், தொடர்ந்து.

"என்ன தோணும்?"

"நீ ராமர் பக்தையாச்சே! கோவிச்சுக்க மாட்டியே?"

"என்னடி, ஏதாவது தப்பா சொல்லப் போறியா?" என்றாள் திலகா.

"இல்லை. அனுமார் தன்னோட நெஞ்சைக் கிழிச்சு, அதில ராமர் இருக்கார்னு காட்டி இருக்காரே, ராமர் எப்பவாவது தன் நெஞ்சைக் கிழிச்சு, அதில அனுமார் இருக்கார்னு காட்டி இருக்காரா?"

திலகா மௌனமாக இருந்தாள்.

"என்னடி? கோவிச்சுக்கிட்டு, என்னைத் திட்டுவேன்னு நினைச்சேன். பேசாம இருக்க. ரொம்பக் கோபமா?" என்றாள் தமயந்தி, பாதி விளையாட்டாகவும், பாதி உண்மையாகவும்.

'என் மனசில எப்பவும் சுந்தர் இருக்கான். அது மாதிரி சுந்தர் மனசில எப்பவும் நான் இருப்பேனா?' என்ற சிந்தனையை தமயந்தியின் கேள்வி, திலகாவின் மனதில் ஏற்படுத்தி விட்டதை தமயந்தி உணரவில்லை.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 121
நினைந்தவர் புலம்பல்
குறள் 1204
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.

பொருள்:
எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! (அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோ‌மோ?

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...