Tuesday, June 27, 2023

1207. எப்போதும் உன் நினைவில்!

"காலையில கண் விழிச்சதுமே என் முகத்தைத்தான் பாப்பாரு. அப்பதான் அவருக்கு அந்த நாள் மகிழ்ச்சியா அமையும்னு சொல்லுவாரு. இப்ப என்ன செய்யறாரோ தெரியல!" என்றாள் காஞ்சனா.

குளித்து விட்டு வந்து வேறு உடை உடுத்திக் கொண்டதும், "அவரு முதல்ல என்னைப் பாக்க வந்தப்ப இந்தப் புடவைதான் உடுத்திக்கிட்டிருந்தேன்!" என்றாள்.

இதற்கு பதில் சொல்ல வாயெடுத்த அவள் தாய் சகுந்தலா பேசாமல் இருந்து விட்டாள்.

இரவு குழிப் பணியாரம் அருந்தும்போது, "அவருக்கு ரொம்பப் பிடிச்ச உணவு குழிப் பணியாரம்தான்!" என்றாள் காஞ்சனா.

"ஏண்டி, உன் புருஷன் சம்பாதிக்கறதுக்காகக் கடல் தாண்டிப் போயிருக்காரு. அவரு திரும்பி வர வரையில பொறுமையாத்தான் இருக்கணும். காலையிலேந்து ராத்திரி வரைக்கும் எல்லா விஷயத்திலேயும் அவரைத் தொடர்பு படுத்திப் பேசிக்கிட்டே இருந்தா உன்னோட பிரிவுத் துன்பம் அதிகமா இல்ல ஆகும்?" என்றாள் சகுந்தலா.

"நான் எப்பவும் அவரை நினைச்சுக்கிட்டிருக்கறதால மனசளவிலேயாவது அவரோட சேந்து இருக்கேன். அப்படி இருக்கறப்பவே என்னால பிரிவுத் துன்பத்தைத் தாங்க முடியல. அவரை நினைக்காம இருந்துட்டா மனசளவில அவரோட ஒண்ணா இருக்கற சந்தோஷம் கூட இருக்காது. அப்ப பிரிவுத் துன்பத்தைத் தாங்கறது இன்னும் கஷ்டமா இருக்குமே!" என்றாள் காஞ்சனா.

"என்னவோ நீ சொல்றது எனக்கு ஒண்ணுமே புரியல!" என்றாள் சகுந்தலா.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 121
நினைந்தவர் புலம்பல்
குறள் 1207
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.

பொருள்:
மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்குபோதே பிரிவுத் துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆகுமோ?

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...