Tuesday, June 27, 2023

1208. காதலர் கோபிப்பாரா?

"என்னடி எப்பப் பார்த்தாலும் உன் புருஷனைப் பத்தின நினைப்புத்தானா? உலகத்தில வேற விஷயமே இல்லையா என்ன? நாங்கல்லாம் இருக்கிறது உன் கண்ணுக்குத் தெரியலியா?" என்றாள் வாசுகியின் தாய் மணியம்மை.

அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்த வாசுகியின் தோழி சிலம்பரசி, "வாசுகியை ரொம்ப கோவிச்சுக்காதீங்கம்மா! அவ ஏற்கெனவே ரொம்ப வருத்தத்தல இருக்கா" என்றாள்.

"நான் கோவிச்சுக்கறது போதாது. நீயும் அவகிட்ட கடுமையாச் சொல்லு. அப்பவாவது அவ திருந்தறாளான்னு பாக்கலாம்!" என்றபடியே உள்ளே சென்று விட்டாள் மணியம்மை.

"அம்மா சொல்லிட்டாங்க இல்ல? நீயும் உன் பங்குக்கு என்னைத் திட்டுடி!" என்றாள் வாசுகி சிலம்பரசியிடம்.

"நான் யாருடி உன்னைத் திட்ட? உன் புருஷன் ஊர்லேந்து வந்தப்பறம், 'என் பெண்டாட்டியைத் திட்டினியா?'ன்னு என்னைக் கோவிச்சுக்கிட்டார்னா?" என்றாள் சிலம்பரசி தோழியின் துயர மனநிலையைச் சற்றே மாற்றும் முயற்சியில்.

வாசுகி பதில் சொல்லவில்லை.

"அது சரி. நீ உன் புருஷனை அதிகம் நினைச்சுக்கிட்டே இருக்கேன்னு உங்கம்மாவும் மத்தவங்களும் கோவிச்சுக்கறது இருக்கட்டும். உன் புருஷனுக்கு இது தெரிஞ்சா 'ஏன் என்னை ரொம்ப அதிகமா நினைச்சு உன்னைக் கஷடப்படுத்திக்கிட்டிருக்கே?'ன்னு உன்னைக் கோவிச்சுக்க மாட்டாரா?" என்றாள் சிலம்பரசி..

"நிச்சயமா கோபிச்சுக்க மாட்டாரு. ஏன்னா அவரை நினைச்சுக்கிட்டிருக்கறதுதான் என் பிரிவுத் துன்பத்துக்கு மருந்துன்னு அவருக்குத் தெரியும். என் மனசைப் புரிஞ்சுக்காம நான் அவரை அதிகமா நினைக்கறேன்னு என்னைக் குத்தம் சொல்றதுக்கு அவரு உங்களை மாதிரி ஆள் இல்லையே!" என்றாள் வாசுகி.

அதைச் சொல்லும்போது வாசுகியின் முகம் மலர்ந்திருந்ததை சிலம்பரசி கவனித்தாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 121
நினைந்தவர் புலம்பல்
குறள் 1208
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.

பொருள்:
காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல் சினம் கொள்ள மாட்டார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ!

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...