குணவதி இவ்வாறு கேட்டதும், அவளுடைய தோழி சந்திரா பெரிதாகச் சிரித்தாள்.
"ஏதாவது கவிதையில படிச்சியா என்ன?"
"இல்லை. என் காதலர்தான் அப்படிச் சொன்னாரு!"
"எச்சரிக்கையா இருந்துக்கடி. இப்படியெல்லாம் மிகையாப் பேசறவங்களை நம்பவே கூடாது!"
'அன்று சந்திரா விளையாட்டாகத் தன்னை எச்சரித்தது இன்று உண்மையாகி விட்டதே!' என்று நினைத்தபோது, ஏற்கெனவே பலவீனமடைந்திருந்த குணவதியின் உடல், மேலும் சோர்வடைந்தது.
சோமன் அவளைச் சந்தித்து இரண்டு மாதங்கள் ஆகி விட்டன. ஒருவேளை வெளியூர் போயிருப்பானோ என்று முதலில் நினைத்தாள் குணவதி.
ஒருநாள், சற்றுத் தொலைவிலிருந்து அவள் அவனைப் பார்த்து விட்டு, அவனிடம் விரைந்தாள். ஆனால் அவளைப் பார்த்து விட்ட சோமன், வேகமாக வேறு புறம் சென்று விட்டான்.
அப்போதுதான் குணவதிக்குப் புரிந்தது, சோமன் தன் மீது வைத்திருந்த காதல் காற்றில் கரைந்து விட்டதென்று.
இன்னொரு நாள், குணவதி சோமனை வேறொரு பெண்ணுடன் பார்த்தாள். ஒருவேளை அவளிடமும், 'நாம் இருவரும் வெவ்வேறு உடல்கள் கொண்டிருந்தாலும், நம் இருவருக்கும் ஒரே உயிர்தான்' என்று சொல்லிக் கொண்டிருப்பானோ?
'ஆனால் என்னைப் பொருத்தவரை, ஈருடல் ஓருயிர் என்று சோமன் சொன்னது சரிதான். அவரைப் பிரிந்த பிறகு, என் உயிர் என்னை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறதே! எனவே, இந்த இரண்டு உயிர்களில், அவருடைய உயிர் மட்டும்தானே மிஞ்சி இருக்கப் போகிறது!' என்ற எண்ணம் குணவதியின் மனதில் தோன்றியபோதே, அவள் கூறுவதை ஆமோதிப்பது போல், அவள் கண்களிலிருந்து நீர்த்துளிகள் வெளிப்பட்டன.
நினைந்தவர் புலம்பல்
பொருள்:
நாம் இருவரும் வேறு அல்லேம் என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது என்னிடம் அன்பு இல்லாமல் இருப்பதை நினைத்து என் இனிய உயிர் அழிகின்றது.
No comments:
Post a Comment