Sunday, June 25, 2023

1206. கணவன் பிரிந்த பின்...

"கட்டின பருஷன் இவளைக் கைவிட்டுட்டு வேற ஒரு பொண்ணோட எங்கேயோ போயிட்டான். இவ கொஞ்சம் கூட வருத்தப்படாம உல்லாசமா வாழ்ந்துக்கிட்டிருக்கா!"

தெருவில் நடந்து கொண்டிருந்த செல்வியின் காதில் இந்தப் பேச்சு விழுந்ததும், சட்டென்று திரும்பிய செல்வி அவ்வாறு பேசிய அந்த நடுத்தர வயதுப் பெண்மணி அமர்ந்திருந்த திண்ணையை நோக்கி விரைந்தாள்.

அவளுடன் நடந்து வந்து கொண்டிருந்த அவள் தோழி காந்திமதி, "நில்லுடி! அவங்க கூடப் போய் சண்டை போடப் போறியா? வேண்டாண்டி" என்று செல்வியைத் தடுக்க முயன்றாள்.

ஆனால் செல்வி தோழியின் பேச்சைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

செல்வி தங்களை நோக்கி வருவதைக் கண்டதும் திண்ணையில் அமர்ந்திருந்த அந்த இரண்டு பெண்களும் சற்றுப் பதட்டமடைந்தனர்.

"ஏம்மா, என் புருஷன் என்னை விட்டுட்டு ஓடிட்டான்னா நான் உயிரோடயே இருக்கக் கூடாதா? தற்கொலை பண்ணிக்கணுமா?" என்றாள் செல்வி, தன்னைப் பற்றிப் பேசிய பெண்ணைப் பார்த்து.

"நான் அப்படிச் சொல்லல!" என்றாள் அந்தப் பெண் பதட்டமான குரலில்.

"உங்க புருஷன் இறந்துட்டாரு. அதுக்காக நீங்க உடன்கட்டை ஏறினீங்களா? நல்லா சாப்பிட்டுட்டுத் திண்ணையில உக்காந்து தெருவில போறவங்களைப் பத்தி வம்பு பேசிக்கிட்டு சந்தோஷமாத்தானே இருக்கீங்க?"

"போதும்டி. வா, போகலாம்" என்று செல்விழின் கையைப் பிடித்து இழுத்தாள் காந்திமதி.

காந்திமதியின் கையை உதறி விட்டு செல்வி தொடர்ந்து பேசினாள். 

"கோவலன் மாதவிகிட்ட போனதும் கண்ணகி உயிரை விட்டுடல. அவ உயிரோட இருந்ததாலதான் அவளால கோவலனோட மறுபடியும் சேர்ந்து வாழ முடிஞ்சுது!"

அந்தப் பெண் சமதானமாக ஏதோ சொல்ல முயல, அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் திரும்பி நடந்தாள் செல்வி. காந்திமதியும் அவளுடன் நடந்தாள்.

சற்று தூரம் நடந்ததும், "ஏண்டி செல்வி, உண்மையாவே உன் புருஷன் திரும்பி வருவாருங்கற நம்பிக்கையிலதான் நீ வாழ்ந்துக்கிட்டிருக்கியா?" என்றாள் காந்திமதி.

"அந்த நம்பிக்கையெல்லாம் எனக்குக் கொஞ்சம் கூட இல்லடி. சும்மா வீம்புக்காக அவங்ககிட்ட அப்படிச் சொன்னேன். உண்மையில என் புருஷனோட சேர்ந்து நான் சந்தோஷமாக இருந்த நாட்களை நினைச்சுத்தான் நான் வாழ்ந்துக்கிட்டிருக்கேன். மத்தபடி நான் உயிரோட இருக்கறதுக்கு எந்த அர்த்தமும் இல்லை!"

சொல்லிக் கொண்டிருக்கும்போதே நெஞ்சில் பொங்கி வந்த அழுகையை செல்வி கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டதை காந்திமதியால் உணர முடிந்தது.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 121
நினைந்தவர் புலம்பல்
குறள் 1206
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன்.

பொருள்:
நான் அவரோடு சேர்ந்திருந்த நாட்களை நினைத்துத் தான் உயிரோடு இருக்கிறேன்; வேறு எதை நினைத்து நான் உயிர் வாழ முடியும்?.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...