Monday, September 25, 2023

1236. சின்ன வளை!

"என்னடி, போன வாரம் பார்த்தப்ப, உன் வளையல்கள் எல்லாம் நழுவி விழற மாதிரி இருந்தது, இப்ப வளையல்கள் எல்லாம் இறுக்கமா இருக்கே! புது வளையல்களா?" என்றாள் குமரியின் தோழி யாமினி.

"ஆமாம்" என்ற குமரி, 'ஆனால் ஒரு சில நாட்களில் இந்த வளையல்களும் தளர்வானவை ஆகி விடும். அப்புறம் இன்னும் சிறிய வளையல்களைத்தான் வாங்கிப் போட்டுக் கொள்ள வேண்டும்!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

"உன் காதலனுக்குக் கெட்ட பேர் வந்துடக் கூடாதுங்கறதுக்காக ரொம்பவும்தான் முயற்சி செய்யற!" என்றாள் யாமினி.

"என்னடி சொல்ற?"

"ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்காதே! உன் காதலன் ஊருக்குப் போனதிலேந்து, அவன் பிரிவைத் தாங்க முடியாம, நீ இளைச்சுக்கிட்டே வரே! வளையல்கள் எல்லாம் தளர்வாப் போய்க்கிட்டே இருக்கு. உன் தோள்கள் இளைச்சு, எலும்பு தெரியுது. இதையெல்லாம் பாக்கறவங்க, 'பாவம் இந்தப் பொண்ணை இப்படித் தவிக்க விட்டுட்டுப் போயிட்டானே இவளோட காதலன்! அவன் ரொம்பக் கொடியவனாத்தான் இருக்கணும்'னு சொல்லிடக் கூடாதேங்கறதுக்காக, அடிக்கடி சின்ன வளையல், இன்னும் சின்ன வளையல்னு வாங்கிப் போட்டுக்கிட்டிருக்க. உன் தோள் எலும்பு தெரியாம இருக்க, உன் ரெண்டு தோளையும் சேலைத் தலைப்பால மூடிக்கிட்டிருக்க. எனக்குத் தெரியாதா இது?"

"என்னடி செய்யறது? என் காதலன் என்னைப் பிரிஞ்ச துயரத்தைக் கூடப் பொறுத்துப்பேன். ஆனா, அவரைக் கல் மனசுக்காரர்னு மத்தவங்க சொல்றதை என்னால பொறுத்துக்க முடியலையே!" என்றாள் குமரி, கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டே!

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 124
உறுப்பு நலனழிதல்
குறள் 1236
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.

பொருள்:
வளையல்கள் கழன்று, தோள்களும் மெலிவடைவதால், (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Saturday, September 9, 2023

1235. காட்டிக் கொடுத்த வளையல்கள்

செங்கமலத்தின் உறவினர்கள் சிலர் ஊரிலிருந்து வந்திருந்தனர். செங்கமலத்திடம் சற்று நேரம் உரையாடிய பின், "உன் பெண் கயல் எப்படி இருக்கா?" என்றனர்.

"இங்கேதான் இருக்கா. அவ புருஷன் வியாபாரத்துக்காகக் கப்பல்ல போயிருக்கறதால, ரெண்டு மாசமா எங்க வீட்டிலதான் இருக்கா. அறைக்குள்ள இருப்பா. கூப்பிடறேன்!" என்று செங்கமலம் கூறிக் கொண்டிருந்தபோதே, தன்னைப் பற்றிய பேச்சு காதில் விழுந்து, கயல்விழியே வெளியே வந்தாள்.

"எப்படி இருக்கீங்க?" என்றாள் கயல்விழி, வந்திருந்தவர்களைப் பார்த்து.

"நாங்க இருக்கிறது இருக்கட்டும். நீ ஏண்டி இப்படி இளைச்சுட்டே? போன தடவை பாக்கறப்ப, நல்ல தெம்பா, ஆரோக்கியமா, பப்பாளிப் பழம் மாதிரி இருந்தே. இப்ப கொத்தவரங்கா வத்தல் மாதிரி வாடி வதங்கி இருக்கியே!" என்றாள் மங்களம் என்ற பெண்.

"ஏன் உன் தோள்பட்டை எலும்புக் கூடு மாதிரி இருக்கு?" என்றாள் நாகம்மை என்ற பெண்.

"ஆமாம், ஏன் கையில வளையலே போட்டுக்கல?" என்றாள் இன்னொரு பெண்.

"அவ கொஞ்சம் இளைச்சுட்டாளா, அதனால, வளையல் எல்லாம் நழுவிக் கீழே விழுந்துடும் போல இருந்தது. அதனால, நான்தான் வளையல்களைக் கழற்றி வைக்கச் சொல்லிட்டேன். கொஞ்சம் சின்னதா, வேற வளையல்கள்தான் வாங்கிப் போடணும்" என்றாள் செங்கமலம், அவசரமாக.

"பாத்துடி! இவ இன்னும் இளைச்சு, அந்த வளையல்களும் நழுவிக் கீழே விழுந்துடப் போகுது!" என்று சொல்லிச் சிரித்தாள் மங்களம்.

"நீங்க பேசிக்கிட்டிருங்க. நான் கொஞ்சம் கடைக்குப் போயிட்டு வந்துடறேன்!" என்று அவர்களிடம் சொல்லி விட்டு விரைந்து வாசலுக்கு வந்தாள் கயல்விழி.

எங்கோ தொலைதுரத்தில் கப்பலில் பணிபுரிந்து கொண்டிருந்த கணவன் முகத்தை மனக்கண் முன் கொண்டு வந்து, 'கொடியவரே! நீங்க பாட்டுக்கு என்னை விட்டுட்டுப் போயிட்டீங்க. நான் உங்களைக் காட்டிக் கொடுக்கக் கூடாதுன்னு வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்தாலும், இளைச்சு அழகை இழந்த என் உடம்பும், எலும்பு தெரிய இளைச்ச தோளும், வளையல்கள் கழன்று விழுந்ததால வெறுமையா இருக்கிற என் கைகளும் நீங்க எனக்கு செஞ்ச கொடுமையை எல்லாருக்கும் காட்டிக் கொடுக்குதே! நான் என்ன செய்ய?' என்று அவனிடம் உரையாடியபடியே, பொங்கி வந்த கண்ணீரைச் சேலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டாள் கயல்விழி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 124
உறுப்பு நலனழிதல்
குறள் 1235
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.

பொருள்:
வளையல்களும் கழன்று, பழைய அழகும் கெட்டு, வாடிய தோள்கள் (என் துன்பம் உணராத) கொடியவரின் கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Friday, September 1, 2023

1234. பவளக்கொடியின் கண்ணீர் முத்துக்கள்!

"என்னடி இது, இப்படி இளைச்சுப் போயிருக்க, தோள் எலும்பு தெரியற மாதிரி!" என்றாள் கண்மணி.

"அதான் எனக்கும் சேர்த்து நீ பருத்திருக்கியே!" என்றாள் பவளக்கொடி.

"நான் ஒண்ணும் பருக்கல. உண்டாயிருக்கறதால, கொஞ்சம் பூசின மாதிரி தெரியறேன். அவ்வளவுதான்!"

"நீ கொடுத்து வச்சவடி! உன் புருஷனோட சந்தோஷமா இருக்க. குழந்தை வேற வரப் போகுது!"

"உன்னோட நிலைமையை நினைச்சா, எனக்கு வருத்தமாத்தான் இருக்கு. உன் புருஷன் எப்ப திரும்பி வருவாராம்?" என்றாள் கண்மணி, தோழியின் தோளைப் பரிவுடன் பற்றியபடி. பவளக்கொடியின் தோள் எலும்பு கையை அழுத்தியதால், உடனே கையை எடுத்து விட்டு, "ரொம்பதான் இளைச்சுட்ட. உன் தோள் எலும்பு என் கையைக் குத்துது!" என்றாள்.

பவளக்கொடி பதில் சொல்லாமல், தன் கையை ஆட்டி, அதில் இருந்த வளையல்களைச் சுழற்றிக் கொண்டிருந்தாள்.

"என்னடி இது! உன் புருஷனைப் பிரிஞ்சதைப் பத்தி உனக்கு வருத்தமே இருக்கற மாதிரி தெரியல. இளைச்சுட்டியேன்னு நான் பரிதாபப்பட்டுக் கேட்டா, நான் பருத்துட்டதைச் சொல்லிக் கேலி செய்யற. குழந்தை மாதிரி கையை ஆட்டி, வளையல்களைச் சுத்திக்கிட்டிருக்க!" என்றாள் கண்மணி.

கையை ஆட்டுவதைச் சட்டென்று நிறுத்தி விட்டுத் தோழியை உற்றுப் பார்த்த பவளக்கொடி, "எனக்கு வருத்தம் இல்லையா? எலும்பு தெரிய இளைச்சிருக்கேன்னு நீயே சொல்ற. அவர் எப்ப திரும்பி வருவார்னு எனக்கே தெரியாதபோது, உனக்கு எப்படி பதில் சொல்ல முடியும்? இந்த வளையல்களைப் பார்த்தியா? அவர் ஊருக்குப் போறதுக்கு முன்னால, இதெல்லாம் எவ்வளவு இறுக்கமா இருந்தது தெரியுமா? கையை அழுத்தற மாதிரி! அவர் கூடக் கேலி செய்வாரு - இந்த வளையல் எல்லாம் உன் கையை இறுக்கிக்கிட்டிருக்கறதைப் பார்த்தா, எந்த நேரத்திலேயும் வெடிச்சுச் சிதறிடற மாதிரி இருக்குன்னு! இப்ப பார், நான் கையை அசைச்சாலே, வளையல்கள் சுழலுது. அவ்வளவு இளைச்சிருக்கேன்! இந்த வளையல் எல்லாம் என் கையிலேந்து நழுவிக் கீழே விழுந்துடுமோன்னு பயந்து, அப்பப்ப கையைத் தூக்கிக்கறேன். எனக்கு வருத்தம் இல்லேன்னு நீ சொல்றியா?" என்றாள் படபடவென்று.

பேசிக் கொண்டிருக்கும்போதே, பவளக்கொடியின் கண்களிலிருந்து கண்ணீர் முத்துக்கள் தெறித்து அவள் கன்னங்களில் விழுந்தன. 

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 124
உறுப்பு நலனழிதல்
குறள் 1234
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.

பொருள்:
துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து, வளையல்களையும் கழலச் செய்கின்றன.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Sunday, August 27, 2023

1233. செய்தி சொல்லும் தோள்கள்!

"புருஷன் பிரிஞ்சு போன அப்புறமும் தனியா உன் வீட்டிலதான் இருப்பேன்னு பிடிவாதம் பிடிச்சுக்கிட்டிருந்தே. இப்பவாவது அம்மா வீட்டுக்கு வரணும்னு தோணிச்சே!" என்றபடியே, மகள் ரேவதியை வரவேற்றாள் துர்க்கா.

மாலையில் பள்ளியிலிருந்து திரும்பிய ரேவதியின் தங்கை ரோகிணி, ஓடி வந்து அக்காவை அணைத்துக் கொண்டாள்.

சற்று நேரம் கழித்து, ரேவதி வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது, உள்ளே ரோகிணி அம்மாவிடம் மெல்லிய குரலில் பேசியது ரேவதியின் காதில் விழுந்தது.

"ஏம்மா, அக்கா இவ்வளவு இளைச்சுப் போயிட்டா? தோள் எலும்பெல்லாம் தெரியுது. அவளைப் பின்னாலேந்து கட்டிக்கிட்டப்ப, அவ தோள் எலும்பு என் கையில அழுந்தி வலிக்கிற மாதிரி இருந்தது!" என்றாள் ரோகிணி.

"அவ புருஷன் ஊருக்குப் போனதிலேந்து அவரை நினைச்சு நினைச்சு ரேவதி ரொம்ப இளைச்சுட்டா. எனக்கே அவளைப் பார்த்தப்ப, நம்ம ரேவதியா இவன்னு தோணிச்சு. என்ன செய்யறது? அவ புருஷன் திரும்பி வந்தப்புறம்தான் அவ பழையபடி ஆவா!" என்றாள் துர்க்கை.

கணவன் அவளுடன் இருந்தபோது, அவன் அடிக்கடி அவள் தோளில் தலையைச் சாய்த்துக் கொண்டு, "எவ்வளவு இதமா இருக்கு, மெத்தையில தலையை வைச்சுக்கிட்ட மாதிரி!" என்று சொன்னது ரேவதிக்கு நினைவு வந்தது.

'இப்போது சிறுமியான தங்கை கூட கவனிக்கும்படி, தோள் எலும்புகள் தெரியும் அளவுக்கு இளைத்து விட்டேனா என்ன?'

தெருவில் செல்லும் சிலர் தன்னை உற்றுப் பார்த்து விட்டுப் போவதாக ரேவதிக்குத் தோன்றியது.

ஒருவேளை, அவர்கள் தன் தோள்கள் இளைத்திருப்பதைப் பார்த்துத் தன் காதலன் தன்னை விட்டுப் பிரிந்திருப்பதைத் தெரிந்து கொள்வார்களோ என்ற அச்சத்தில், தன் சேலைத் தலைப்பால் தோள்களை நன்றாக மூடிக் கொண்டாள் ரேவதி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 124
உறுப்பு நலனழிதல்
குறள் 1233
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.

பொருள்:
கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், (இப்போது மெலிந்து) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவை போல் உள்ளன.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1232. ஏன் இப்படிக் கேட்கிறார்கள்?

பார்ப்பவர்கள் எல்லாம் இதையே கேட்கிறார்கள்.

"என்ன பூங்கொடி, உன் காதலனோட ஏதாவது பிணக்கா?"

"அதெல்லாம் இல்லையே!" என்று பூங்கொடி சமாளித்தாலும், கேள்வியில் இருந்த உண்மை அவள் மனதை நெருப்பாகச் சுட்டது.

ஆனால் எல்லோரும் ஏன் இப்படிக் கேட்கிறார்கள் என்பது பூங்கொடிக்குப் புரியவில்லை, அவள் காதலனோடு பிணக்கு ஏற்பட்டிருப்பது அவள் முகத்தில் எழுதப்பட்டிருக்கிறதா என்ன?

அவள் மீது அன்பைப் பொழிந்து வந்த கந்தமாறன், ஏனோ சில நாட்களாக அவளிடம் பராமுகமாக இருக்கிறான். அவளை வந்து பார்ப்பதில்லை. அவன் வீட்டுக்கும், அவன் வேலை செய்யும் இடத்துக்கும் ஓரிரு முறை சென்று அவனைப் பார்க்க பூங்கொடி முயன்றபோதும், அவன் ஏதோ சாக்குச் சொல்லி அவளைப் பார்ப்பதைத் தவிர்த்து விட்டான்.

விளையாட்டுப் போல் இரண்டு மாதங்கள் ஓடி விட்டன.

கந்தமாறன் மீண்டும் தன்னிடம் முன்பு போல் அன்பு காட்டுவானா?

"என்னடி? உன் காதலனோட உனக்கு என்ன பிணக்கு?" என்றாள் பூங்கொடியின் தோழி கலையரசி.

பொங்கி வந்த அழுகையைச் சட்டென்று மறைத்துக் கொண்ட பூங்கொடி, "அதெல்லாம் ஒன்றுமில்லை!" என்றாள்.

"நீ ஒண்ணுமில்லைன்னு சொன்னாலும், உன் கண் காட்டிக் கொடுக்குதே!"

"என்ன காட்டிக் கொடுக்குது?"

"உன் கண்கள்ள பசலை வந்து வெளுத்துப் போயிருக்கு. கண்ணில எப்பவும் ஈரம் கசிஞ்சுக்கிட்டே இருக்கு. நீ கண்ணாடியைப் பாக்கறதே இல்லையா"

ஓ! இதை வைத்துத்தான் எல்லாரும் என்னிடம் கேட்கிறார்களா? அட, காட்டிக் கொடுத்த கண்களே!

"சொல்லுடி!" என்று கலைச்செல்வி அவள் முகவாயைப் பிடித்துக் கேட்டபோது, பூங்கொடியின் கண்களிலிருந்து நீர் பெருக்கெடுத்து வழிய ஆரம்பித்தது.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 124
உறுப்பு நலனழிதல்
குறள் 1232
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.

பொருள்:
பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை என்பதைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Friday, August 25, 2023

1231. மலர்களின் சிரிப்பு!

"பொதுவாகப் பெண்களோட கண்ணை மலருக்கு ஒப்பிடுவாங்க" என்றான் ராசேந்திரன்.

"ஆமாம். குவளை மலருக்கு ஒப்பிடுவாங்க!" என்றாள் குமுதினி.

"குவளை மலர் மட்டும் இல்ல, தாமரை மலர், அல்லி மலர் மாதிரி வேறு சில மலர்களுக்கும் ஒப்பிடுவாங்க. ஆனா, உன் கண்களை நான் மலர்களுக்கு ஒப்பிட மாட்டேன்!"

"ஏன், என்னோட கண்கள் அந்த அளவுக்கு அழகா இல்லையா?" என்றாள் குமுதினி, சற்றே கோபத்துடன்.

"இல்லை. உன் கண்களோட ஒப்பிடற அளவுக்கு அந்த மலர்களுக்கு அழகு போதாது!"

"இது ரொம்ப மிகையா இருக்கே!"

"மிகை இல்லை, உண்மைதான். இந்த மலர்களைப் பார். உன் கண்களைப் பார்த்துட்டு, அந்த அளவுக்கு நாம அழகா இல்லையேன்னு அதெல்லாம் தலை குனிஞ்சக்கிட்டு இருக்கிறதைப் பார்!"

பார்த்தாள். ஆமாம், அவை தலை குனிந்திருப்பது போல்தான் தோற்றமளித்தன. அதற்குக் காரணம் காற்றின் அழுத்தமும், அவற்றின் எடையின் அழுத்தமும்தான் என்பது குமுதினிக்குத் தெரியும். ஆயினும், கணவனின் புகழ்ச்சி அவளுக்கு மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அளித்தது.

ந்த அனுபவம் இன்று பழங்கதை ஆகி விட்டது.

பொருள் ஈட்டுவதற்காக ராசேந்திரன் வெளிநாட்டுக்குச் சென்றபின், அவன் கொடுத்து விட்டுப் போன பிரிவுத் துன்பத்தால் அழுது அழுது, குமுதினியின் கண்கள் வீங்கி விட்டன.

தன் வீட்டுத் தோட்டத்தில் வந்து நின்று, செடிகளில் பூத்துக் குலுங்கிய மலர்களைப் பார்த்தாள் குமுதினி.

அன்று அவளுடைய கண்களை ஏறெடுத்துப் பார்க்க முடியாமல் தலை குனிந்த மலர்களா இவை?

இன்று அந்த மலர்கள் நிமிர்ந்து கம்பீரமாக அவள் கண்களைப் பார்த்தன. அழுது வீங்கியதால் அழகிழந்து விட்ட அவள் கண்களைப் பார்த்து அந்த மலர்கள் ஏளனமாகச் சிரித்தது போல் தோன்றியது குமுதினிக்கு.

அவற்றின் ஏளனப் பார்வையைச் சந்திக்க முடியாமல், தன் கண்களை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் குமுதினி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 124
உறுப்பு நலனழிதல்
குறள் 1231
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.

பொருள்:
பிரிவுத் துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணி விட்டன.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Friday, August 4, 2023

1230. தோழியின் அழைப்பு

"அல்லி! உன் தோழி கலை வந்திருக்கா பாரு!" என்று கூவினாள் அல்லியின் தாய் சங்கரி.

அல்லி அறையிலிருந்து வெளியே வந்ததும், "வாடி! கொஞ்சம் வெளியில போயிட்டு வரலாம்" என்று அழைத்தாள் கலை.

"இந்த நேரத்திலேயா? வேண்டாம்" என்றாள் அல்லி, தலையை பலமாக ஆட்டியபடி.

"ஏண்டி, நான் என்ன உன்னை உச்சி வெயில் நேரத்திலேயா வெளியே கூப்பிடறேன்? வெயில் அடங்கிப் போன சாயங்கால வேளையிலதானே கூப்பிடறேன்?" என்றாள் கலை.

"உச்சி வெயில் நேரத்தில கூப்பிட்டா கூட, அவ வெளியே வருவா. சாயங்கால நேரத்தில வர மாட்டா. உள்ளேயே முடங்கிக் கிடக்கறா. நான் எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டேன். கேக்கறதில்லை" என்றாள் சங்கரி, உள்ளிருந்தே.

அல்லியின் கையைப் பரிவுடன் பற்றிக் கொண்ட கலை, "உன் பிரச்னை எனக்குப் புரியுது, அல்லி. என் வீட்டுக்காரர் என்னை விட்டுப் பிரிஞ்சபோது, எனக்கும் இப்படித்தான் இருந்தது" என்றாள்.

"உனக்கு எப்படி இருந்ததோ தெரியல. ஆனா, ஒவ்வொரு நாளும் மாலைப் பொழுது வந்தா, எனக்கு என் உயிரே போற மாதிரி இருக்கு. அதனாலதான், எழுந்து வரக் கூட சக்தி இல்லாம படுத்துக் கிடக்கேன். இன்னிக்கு நீ வந்ததால, எழுந்து வந்தேன். நீ என்னன்னா, என்னை வெளியே வரச் சொல்றே!"

கலை பேசாமல் இருந்தாள்.

"ஆனா, எனக்கு இது வேண்டியதுதான்!" என்றாள் அல்லி.

"என்னடி சொல்ற?"

"அவர் என்னை விட்டுப் பிரிஞ்சு போனப்பவே, இந்த உயிர் போயிருக்க வேண்டாமா? அப்படிப் போகாம, இப்ப  செத்துச் செத்துப் பிழைக்கற மாதிரி, தினமும் மாலை நேரத்தில என் உயிர் போயிட்டு போயிட்டு வருது!" என்று அல்லி கூறியபோது, அவள் கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் தன் சேலைத் தலைப்பால் துடைத்தாள் கலை.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 123
பொழுது கண்டிரங்கல்
குறள் 1230
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.

பொருள்:
பொருள் ஈட்டுவதற்கச் சென்றுள்ள காதலரைப் பிரிந்தபோது மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Monday, July 31, 2023

1229. மாலினியின் சாபம்!

மாலை நேரத்தில் தன் வீட்டு வாசலில் வந்து நின்றபோது, வழக்கமாக அந்த வேளையில் வரும் சோர்வு மாலினியைப் பற்றிக் கொண்டது. 

அவள் கணவன் அவளைப் பிரிந்து வெளியூர் சென்று விட்ட கடந்த நான்கு மாதங்களாவே இப்படித்தான்.

மாலைப் பொழுதைக் காணவே கூடாது என்று உள்ளே படுத்திருந்தால், "பொழுது சாயற நேரத்தில் வீட்டுக்குள்ளே படுத்துக் கிடந்தால் குடும்பத்துக்கு ஆகாது. வாசல்ல போய் நில்லுடி!" என்று சொல்லி, அவள் அம்மா அவளை வெளியே துரத்தி விடுவாள்.

தினமும் இந்த மாலைப் பொழுது அளிக்கும் துன்பத்தைத் தாங்கிக் கொள்வது மாலினிக்குப் பெரும்பாடாக இருந்தது. 

'கணவன் எப்போது திரும்புவான், இந்தத் துயரத்திலிருந்து நான் எப்போது விடுபடுவேன்?'

தெருவில் போய்க் கொண்டிருந்தவர்களைப் பார்த்தாள் மாலினி.

பலரும் சிரித்துப் பேசியபடி உற்சாகமாகச் சென்று கொண்டிருந்தனர்.

'இந்த மாலைப் பொழுது இவர்களுக்கெல்லாம் மட்டும் எப்படி மகிழ்ச்சியூட்டுவதாக இருக்கிறது?'

தெருவில் மகிழ்ச்சியாகச் சிரித்துப் பேசிக் கொண்டு சென்றவர்களைப் பார்த்தபோது, அவர்கள் மீது அந்தக் கணத்தில் ஏற்பட்ட பொறாமையினால், மாலினியின் மனதுக்குள் இந்த எண்ணம் தோன்றியது.

ஏ, ஊர் மக்களே! இந்த மாலைப் பொழுது அளிக்கும் துன்பத்தால் நான் வாடி வதங்கிக் கொண்டிருக்கும்போது, நீங்கள் மட்டும் இந்த மாலைப் பொழுதில் உல்லாசமாக இருக்கிறீர்களே! நீங்களும் இந்த மாலைப் பொழுதால் துன்பத்துக்கு ஆளாகி வருந்தும் நாள் வரும்!' என்று தன் மனதுக்குள் சாபமிட்டாள் மாலினி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 123
பொழுது கண்டிரங்கல்
குறள் 1229
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.

பொருள்:
அறிவு மயங்கும்படியாக மாலைப் பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி, என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Friday, July 28, 2023

1228. கொல்லும் குழலிசை!

இரவில் சரியாகத் தூங்காததால், சுமந்திரை பிற்பகலில் தன்னை அறியாமல் சற்றுக் கண்ணயர்ந்து விட்டாள்.

அது முழுத் தூக்கமாக இல்லை. விழிப்பா, தூக்கமா என்று இனம் காண முடியாத ஒருவகை மயக்க நிலை.

அந்த அரைத் தூக்க நிலையில், தூரத்திலிருந்து வந்த ஒரு ஒலி சுமந்திரையின் காதில் கேட்டது.

என்ன ஒலி அது?

அந்த ஒலி இன்னும் நெருங்கி வந்தபோது, அது குழலோசையாக இருக்குமோ என்று தோன்றியது.

ஆம், குழலோசைதான் அது!

விழிப்பு வந்து, சுமந்திரை விருட்டென்று எழுந்து உட்கார்ந்து கொண்டாள்.

ஓ, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று, திரும்ப வீட்டுக்கு அழைத்து வரும்போது, வழக்கமாகச் செய்வது போல், புல்லாங்குழலை வாசித்தபடி வருகிறான் ஆயச் சிறுவன்.

அப்படியானால், மாலைப் பொழுது வந்து விட்டதா? தன்னை அறியாமல், சற்று நேரம் கண்ணயர்ந்திருந்த தனக்கு, மாலை வந்து விட்டது என்று நினைவூட்டும் விதமாக ஒலிக்கிறதே இந்தக் குழலோசை!

குழல் இனிது என்பார்கள். ஆனால் கணவனைப் பிரிந்திருக்கும் இந்தக் காலத்தில், என்னை வருத்துவதற்கென்றே வரும் மாலையை நினைவூட்டுவது போல் வரும் இந்தக் குழலிசை எனக்கு மனச் சோர்வைத்தானே அளிக்கிறது!

'ஆயச் சிறுவனே! உன்னுடைய குழலோசை என்னை வருத்துவதற்காக மாலை அனுப்பும் தூதா, அல்லது என்னைக் கொல்ல மாலை அனுப்பும் படையா?'

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 123
பொழுது கண்டிரங்கல்
குறள் 1228
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.

பொருள்:
ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும்‌ மாலைப் பொழுதிற்குத் தூதாகி, என்னைக் கொல்லும்‌‌ படையாகவும் வருகின்றது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Wednesday, July 26, 2023

1227. காலையில் அரும்பி மாலையில் மலரும் பூ!

கமலியின் தாய் கோசலைக்கு விடாத இருமல் இருந்ததால், அவளைப் பார்க்க வைத்தியர் வந்தார்.

 அவள் நாடியைப் பார்த்து விட்டு, "கப நாடியோட துடிப்பு அதிகமா இருக்கே! சளி அதிகமா இருக்கு. எத்தனை நாளா சளி இருக்கு?" என்றார் வைத்தியர்.

"ஒரு மாசத்துக்கு மேல இருக்குங்க!" என்றாள் கோசலை.

"முதலிலேயே கவனிக்காம விட்டுட்டீங்க. சளி பிடிச்சா, தயிர், மோர், எலுமிச்சை, வெள்ளரி மாதிரி குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்க்கணும். சுடுநீர் குடிக்கணும். கவனமா இல்லாததால, இப்ப இருமல் வந்திருக்கு. அப்புறம், காய்ச்சல், உடல்வலின்னு நோய் முத்திக்கிட்டே இருக்கும். நான் கொடுக்கற சூரணத்தை மூணு வேளை சுடுநீர்ல கலந்து சாப்பிடுங்க. அதோட, நான் சொன்ன மாதிரி குளிர்ச்சியான உணவுப் பொருட்களை சாப்பிடாம இருங்க!"

வைத்தியர் சென்றதும், "வைத்தியர் சொல்றதைப் பாருடி. சளி பிடிக்கறதுல ஆரம்பிச்சு, இருமல், காய்ச்சல், உடல்வலின்னு எப்படி நோய் முத்துது பாரேன்!" என்றாள் கோசலை.

"இது பரவாயில்லைம்மா. இந்த நோய் முத்தறதுக்கு ஒரு மாசத்துக்கு மேல ஆகுதே. இன்னொரு நோய் இருக்கு. அது காலையில பூ அரும்பற மாதிரி இலேசா ஆரம்பிக்கும். பூ கொஞ்சம் கொஞ்சாமா விரியற மாதிரி, நாள் முழுக்க முத்திக்கிட்டே இருக்கும். சாயந்திரம் ஆனா, பூ முழுசா மலருகிற மாதிரி, இந்த நோய் முழுசா முத்தி, ஆளை வாட்டி எடுக்கும்!" என்றாள் கமலி.

"அது என்னடி அப்படி ஒரு நோய்? நான் கேள்விப்பட்டதே இல்லையே!" என்றாள் கோசலை, வியப்புடன்.

கணவனைப் பிரிந்திருப்பதால், தினமும் தன்னைப் பிடித்து வாட்டும் காம நோய்தான் அது என்பதைத் தாயிடம் எப்படிச் சொல்வது என்று தயங்கிய கமலி, "பெயர் ஞாபகம் இல்லை. ஏதோ ஒரு புத்தகத்தில படிச்சேன்" என்று சொல்லிச் சமாளித்தாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 123
பொழுது கண்டிரங்கல்
குறள் 1227
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.

பொருள்:
காதல் துன்பமாகிய இந்தப் பூ காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப் பொழுதில் மலர்ந்து விடுகிறது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Monday, July 24, 2023

1226. கொடிது கொடிது மாலை கொடிது!

செங்கமலத்துக்குத் திருமணம் ஆன புதிதில், ஒரு நாளின் சிறந்த பகுதி எது என்று அவளை யாராவது கேட்டிருந்தால், மாலை நேரம் என்று சொல்லி இருப்பாள்.

அந்த மாலை நேரத்தில்தான் அவள் கணவன் வேலை முடிந்து வீடு திரும்புவான் என்பது ஒரு காரணம் என்றாலும், அந்த மாலை நேரம் தந்த சுகம்தான் முக்கியமான காரணம். 

வெயிலின் கடுமை தணிந்து, இனிமையான பொழுதாகத் திகழும் மாலை.

இதமாக உடலை வருடிச் சென்று இன்பமளிக்கும் தென்றல் காற்றைக் கொண்டு வரும் மாலை.

வீட்டு வாசலில் அமர்ந்தபடியோ, தெருவில் நடந்தபடியோ, கணவனுடன் பேசிக் கொண்டிருக்கும் இனிய அனுபவத்தை அளிக்கும் மாலை.

எல்லாவற்றுக்கும் மேல், இரவில் கணவனுடன் தனிமையில் படுத்துறங்கும் இன்பமான அனுபவத்தை எதிர்நோக்க வைக்கும் மாலை!

செங்கமலம் வீட்டுக்கு வெளியே வந்தாள். அவள் தனிமையைச் சுட்டிக் காட்டி ஏளனம் செய்வது போல் மாலைப் பொழுது காட்சி அளித்தது.

'ஏன் இந்த மாலைப் பொழுது எனக்கு ஒரு நாளின் மோசமான பகுதியாக இருக்கிறது?' என்ற எண்ணம் எழுந்ததும், சில மாதங்கள் முன்பு வரை, மாலைப் பொழுதை ஒரு நாளின் மிக இனிமையான பொழுதாகத் தான் கருதியது செங்கமலத்துக்கு நினைவு வந்தது.

'கணவனைப் பிரிந்திருக்கும் காலத்தில், இந்த மாலை இவ்வளவு கொடியதாக இருக்கக் கூடும் என்பது கணவனுடன் கூடியிருந்தபோது, எனக்குத தெரியாமல் போய் விட்டதே!'

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 123
பொழுது கண்டிரங்கல்
குறள் 1226
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.

பொருள்:
மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...