Saturday, March 23, 2024

1304. பூங்கொத்துடன் வந்தவன்!

"என்னடி, ரெண்டு நாளா முரளி உன்னைப் பாக்கவே வரல? " என்றாள் கற்பகம், தன் மகள் கவிதாவிடம்.

"ஏதாவது வேலை இருந்திருக்கும்" என்றாள் கவிதா.

"என்ன வேலை இருந்தாலும், தினம் ஒரு தடவை உன்னைப் பார்க்க வராம இருக்க மாட்டாரே!"

தாய் கூறியதைக் கேட்டதும், கவிதாவுக்குத் தொண்டையை அடைப்பது போல் இருந்தது.

'ஏதோ சண்டை வந்துடுச்சு. நானும் கோபத்தில இனிமே என்னைப் பார்க்க வராதீங்கன்னு சொல்லிட்டேன். அதுக்காக, இப்படியா வீறாப்பா என்னை வந்து பாக்காம இருப்பாரு? ஒருவேளை. வராமலே இருந்துடுவாரோ? சேச்சே! அது எப்படி? கல்யாணம்தான் நிச்சயம் ஆயிடுச்சே!'

"உங்களுக்குள்ள சண்டை எதுவும் இல்லையே! கல்யாணம் நிச்சயம் ஆனப்புறம், சண்டைஎதுவும் போட்டுக்காதீங்க!" என்றாள் கற்பகம், சிரித்தபடி.

'அம்மா விளையாட்டாகப் பேசுகிறாள். ஆனால், உண்மையாகவே நாங்கள் சண்டை போட்டுக் கொண்டு, நான் அவரை இங்கே வர வேண்டாம் என்று சொல்லி, அதனால் இரண்டு நாட்களாக அவர் என்னைப் பார்க்க வராமல் இருக்கிறார் என்று தெரிந்தால், என்ன சொல்வாளோ!'

ன்று மாலை, "நானும், உன் அப்பாவும் கமலா அத்தை வீட்டுக்குப் போயிட்டு வரோம். எட்டு மணிக்கு வந்துடுவோம்" என்று சொல்லி விட்டுக் கிளம்பினாள் கற்பகம்.

கற்பகம் கிளம்பி ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, அழைப்பு மணி அடித்தது.

'அம்மாவாத்தான் இருக்கும். எப்பவுமே வெளியில கிளம்பறப்ப, எதையாவது மறந்துட்டுப் போறது, கொஞ்ச தூரம் போனப்பறம் நினைவு வந்து திரும்ப வந்து எடுத்துக்கிட்டுப் போறது! இதுவே அம்மாவுக்கு வழக்கமாப் போயிடுச்சு!' என்று நினைத்தபடியே கதவைத் திறந்த கவிதாவுக்கு இன்ப அதிர்ச்சி. 

வாசலில் முரளி நின்று கொண்டிருந்தான். கையில் ஒரு பூங்கொத்து வேறு!

கவிதா பேசாமல் உள்ளே வந்து, சோஃபாவில் அமர்ந்தாள். அவளைத் தொடர்ந்து வந்த முரளி, சோஃபாவில் அவள் அருகில் அமர்ந்து கொண்டு, அவளிடம் பூங்கொத்தைக் கொடுத்தான்.

"பூங்கொத்தெல்லாம் எதுக்கு? எனக்கு இன்னிக்குப் பிறந்த நாள் இல்லையே!" என்றாள் கவிதா, பூங்கொத்தை வாங்காமலே.

"நாம சண்டை போட்டுக்கிட்டதே உனக்கு வருத்தமா இருந்திருக்கும். என்னதான் கோபத்தில நான் உன்னைப் பார்க்க வர வேண்டாம்னு நீ சொன்னாலும், ரெண்டு நாளா நான் உன்னைப் பார்க்க வராதது உன் வருத்தத்தை இன்னும் அதிகமாத்தான் ஆக்கி இருக்கும். நீ சொன்னதுக்காக, நானும் ரெண்டு நாள் வராம இருந்தேன். இனிமேயும் உன் வருத்தத்தை நீடிக்க விடக் கூடாதுன்னுதான் இப்ப உன்னைப் பார்க்க வந்தேன்" என்றான் முரளி.

'இப்படிப்பட்ட நல்ல உள்ளவன் கொண்டவனை, ஏதோ கோபத்தில், 'என்னைப் பார்க்க வராதீர்கள்!' என்று சொல்லி விட்டோமே' என்று நினைத்த கவிதா, "சாரி!" என்றபடியே அவன் கொடுத்த பூங்கொத்தை மனநெகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 131
புலவி (சிறு ஊடல்)
குறள் 1304
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.

பொருள்:
ஊடல் புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்.
அறத்துப்பால்                                                         பொருட்பால்  

Sunday, March 17, 2024

1303. நளினியின் அச்சம்

"என்னடி, ரெண்டு மூணு நாளா ரொம்ப சோர்வா இருக்க? என்ன விஷயம்?" என்றாள் ருக்மிணி.

"ஒண்ணுமில்லையே!" என்றாள் நளினி.

"ஒண்ணுமில்லேன்னு உன் வாய்தான் சொல்லுது. உன் முகம் ஏதோ இருக்குன்னு இல்ல சொல்லுது?" என்ற ருக்மிணி, "கண்டுபிடிச்சுட்டேன். தினமும் காலேஜ் விடற நேரத்தில, காலேஜுக்கு வெளியில பைக்கை வச்சுக்கிட்டுக் காத்துக்கிட்டிருந்து, நீ வெளியில வந்ததும், உன்னை பைக்ல வச்சு அழைச்சுக்கிட்டுப் போவாரே உன் ஆளு, அவர் ரெண்டு நாளா வரலை போலருக்கு? என்ன ஆச்சு? எங்கேயாவது ஊருக்குப் போயிருக்காரா?" என்றாள் ருக்மிணி.

இதைக் கேட்டதும், நளினியின் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

"என்னடி ஆச்சு?" என்றாள் ருக்மிணி, பதட்டத்துடன்.

"சின்ன விஷயம். ஒரு விவாதத்தில ஆரம்பிச்சு, பெரிசாப் போயிடுச்சு. இனிமே உன் மூஞ்சியிலேயே முழிக்க மாட்டேன்னுட்டுப் போயிட்டாரு. சொன்னபடியே ரெண்டு நாளா வரலை. நிரந்தரமா என்னை ஒதுக்கிட்டாரோன்னு பயமா இருக்கு" என்று நளினி கண்ணீருக்கிடையில் கூறிக் கொண்டிருந்தபோதே, "உன் ஆளுக்கு நூறு வயசுடி. நீ அவரைப் பத்தி சொல்லிக்கிட்டு இருக்கறப்பவே அவர் வந்துட்டாரு பாரு!" என்றாள் ருக்மிணி, சிரித்தபடி. 

நளினி திரும்பிப் பார்த்தாள். கல்லூரியின் வெளிக்கதவுக்கு அருகே, மணிகண்டன் பைக்குடன் நின்று கொண்டிருப்பது தெரிந்தது.

"பைடி! நாளுக்குப் பார்க்கலாம்!" என்றபடியே வெளியே விரைந்தாள் நளினி.

 எதுவும் பேசாமல், மணிகண்டனின் பைக்கின் பின்னால் அமர்ந்து கொண்டாள் நளினி.

பைக் சற்று தூரம் சென்றதும், "ஏன் ரெண்டு நாளா வரலை? அன்னிக்கு என் மூஞ்சியிலேயே முழிக்க மாட்டேன்னு சொல்லிட்டுப் போனதால ரொம்ப பயந்துட்டேன்!" என்றாள் நளின்.

"ஏற்கெனவே நான் கோவிச்சுக்கிட்டு ரெண்டு நாள் வராம இருந்தது உன்னை ரொம்பக் கஷ்டப்படுத்தி இருக்கும். உன்னை மேற்கொண்டு வருத்தப்பட வைக்கக் கூடாதுன்னு இன்னிக்கு ஓடி வந்துட்டேன். இன்னிக்கு நாம ஒரு சினிமாவுக்குப் போகப் போறோம்" என்றான் மணிகண்டன்.

"என்ன சினிமா?"

"சினிமா எதுவா இருந்தா என்ன? பாக்ஸ்ல டிக்கட் வாங்கி இருக்கேன். அங்கே ரெண்டரை மணி நேரம் நாம மட்டும் தனியா இருக்கப் போறோம்!" என்று மணிகண்டன் கூறியபோது, அவன் முகத்தில் எத்தகைய குறும்பு உணர்ச்சி இருந்திருக்கும் என்பதை நளினியால் பைக்கின் பின்னால் அமர்ந்தபடியே காண முடிந்தது.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 131
புலவி (சிறு ஊடல்)

குறள் 1303
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.

பொருள்:
ஊடல் கொண்டவரின் ஊடல் நீக்கித் தழுவாமல் விடுதல் என்பது, ஏற்கனவே துன்பத்தால் வருந்துவோரை மேலும் துன்பநோய்க்கு ஆளாக்கி வருத்துவதாகும்.
அறத்துப்பால்                                                         பொருட்பால்  

1302. தோழியின் மூலம் வந்த செய்தி!

"ரவி உன்னை இன்னிக்கு சாயந்திரம் அஞ்சு மணிக்கு பார்க்குக்கு வரச் சொன்னான்" என்றாள் லதா.

"அப்படியா?" என்றாள் பார்கவி, மகிழ்ச்சியுடன். "நல்ல வேளை! எங்கே அவன் பேசாமலே இருந்துடுவானோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன். என் வயத்தில பாலை வார்த்த!" 

"ஆனா ஒண்ணு. ஆண்களுக்கு ஈகோ அதிகம். அவங்க இறங்கி வந்ததாக் காட்டிக்க மாட்டாங்க. அதனால, அவன் கூப்பிட்டு நீ போன மாதிரி இருக்கக் கூடாது. நீ தற்செயலா பார்க்குக்குப் போன மாதிரியும், எதிர்பார்க்காம அவனைச் சந்திச்ச மாதிரியும் இயல்பாப் பேசணும். அவன் உன்னை வரச் சொல்லி எங்கிட்ட சொல்லி அனுப்பினதாலதான் நீ வந்தேன்னு காட்டிக்கக் கூடாது!" என்றாள் லதா.

"ஓகே! சாரோட ஈகோவைத் திருப்திப்படுத்தற மாதிரியே நடந்துக்கறேன்!" என்றாள் பார்கவி, உற்சாகத்துடன்.

'முட்டாள் பெண்ணே! காதலனோட சண்டை போட்டுட்டு, நாலஞ்சு நாளா அவனைப் பார்க்காம, பேசாம தவிச்சுக்கிட்டிருந்த. அவனும் ஜம்பமா, நீ இறங்கி வந்தாதான் ஆச்சுன்னு பிடிவாதமா இருந்தான். ஊடல் அளவுக்கு மீறிப் போச்சுன்னா, நிரந்தரப் பிரிவில கொண்டு விடும்னு உங்க ரெண்டு பேருக்கும் புரியல. அதனால, அவன் வரச் சொன்னதா உங்கிட்ட சொல்லியும், நீ வரச் சொன்னதா அவன்கிட்ட சொல்லியும், ஒரு டிராமா போட்டு, உங்க ஊடலை நான் முடிச்சு வைக்க வேண்டி இருக்கு!' என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள் லதா.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 131
புலவி (சிறு ஊடல்)
குறள் 1302
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.

பொருள்:
உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது.
அறத்துப்பால்                                                         பொருட்பால்  

Monday, March 4, 2024

1301. இரண்டு நாள் தண்டனை!

"ரெண்டு நாள்ள வந்துடுவேன்னு சொல்லிட்டுப் போனீங்க. பத்து நாள் ஆயிடுச்சு!" என்றாள் மல்லிகா, கோபத்துடன்.

"என்ன செய்யறது, மல்லிகா? வியாபார விஷயமாப் போனா, வேலை முடிஞ்சப்புறம்தானே திரும்ப முடியும்?" என்றான் குமரன்.

"வரத்துக்கு லேட்டாகும்னா, லெட்டர் போட்டிருக்கலாம் இல்ல? வீட்டில ஒருத்தி காத்துக்கிட்டிருக்காங்கற நினைப்பே உங்களுக்கு இல்லையா?"

"வேலை மும்முரத்தில எதுவுமே செய்ய முடியல. போஸ்ட் ஆஃபீசுக்குப் போய், இன்லாண்ட் லெட்டர் வாங்கக் கூட நேரம் இல்ல. நான் தங்கி இருந்த ஓட்டல்லேந்து போஸ்ட் ஆஃபீஸ் ரொம்ப தூரம் வேற!"

"இந்த நொண்டிச் சாக்கெல்லாம் வேண்டாம். இன்லாண்ட் லெட்டர் எல்லாம் பெட்டிக் கடையிலேயே விப்பாங்களே! பத்து பைசா அதிகம் கொடுத்து வாங்கணும். அவ்வளவுதானே? உங்களுக்கு என் மேல கொஞ்சமாவது அக்கறை இருந்தா, எப்படியாவது லெட்டர் போட்டிருப்பீங்க!"

"ஐயோ, மல்லிகா! உனக்கு எப்படிப் புரிய வைக்கறதுன்னே தெரியலியே! தினமுமே, இன்னிக்கு வேலை முடிஞ்சுடும், ராத்திரியே ஊருக்குக் கிளம்பிடலாம்னுதான் நினைப்பேன். இப்படியே தள்ளிப் போய், பத்து நாள் ஆயிடுச்சு."

"பத்து நாள் ஆயிடுச்சு இல்ல? இன்னும் ரெண்டு நாள் ஆனா, பரவாயில்ல."

"அப்படின்னா?"

"ரெண்டு நாளைக்கு என் பக்கத்திலேயே வராதீங்க!"

"ரெண்டு நாளா? ஓ, அதுவா? அது எப்படி? நான் கிளம்பறத்துக்கு முதல் நாள்தானே தலைக்குக் குளிச்ச?"

"அதுவும் இல்ல, இதுவும் இல்ல. நீங்க பத்து நாள் என்னைத் தவிக்க வச்சதுக்காக, உங்களுக்கு நான் கொடுக்கற தண்டனை இது!"

"என்ன மல்லிகா இது? சின்னக் குழந்தை மாதிரி!" என்றபடியே, மல்லிகாவின் அருகில் வந்தான் குமரன்.

"வராதீங்கன்னா, வராதீங்க! அவ்வளவுதான்!" என்றாள் மல்லிகா.

அவள் முகத்தில் பொங்கிய கோபத்தைக் கண்டு, குமரன் கொஞ்சம் பயந்து விட்டான்.

"சரி" என்றான் பலவீனமாக.

குமரன் முன்னறையில் நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, பின்பக்கமாக வந்து அவன் கழுத்தைத் தன் கைகளால் சுற்றி வளைத்தாள் மல்லிகா.

"அப்பா! கோபம் தீர்ந்து போச்சா? பயந்துட்டேன்!" என்றான் குமரன், மகிழ்ச்சியுடன்.

"கோபமெல்லாம் எதுவும் இல்ல. நான் பத்து நாளா உங்களைப் பிரிஞ்ச தவிச்ச மாதிரி, நீங்களும் தவிக்கறதைக் கொஞ்சநேரம் பாக்கணும்னு ஆசைப்பட்டேன். அவ்வளவுதான். நீங்க என் பக்கத்தில வர முடியாம தவிக்கறதைப் பாக்கறப்ப, எனக்கே பாவமா இருந்தது. அதனாலதான், ரெண்டு நாள்ங்கறதை ரெண்டு மணி நேரமாக் குறைச்சுட்டேன்!" என்றாள் மல்லிகா, சிரித்தபடி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 131
புலவி (சிறு ஊடல்)
குறள் 1301
புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.

பொருள்:
(ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக.
அறத்துப்பால்                                                         பொருட்பால்  

Sunday, March 3, 2024

1300. என் மனம் என் சொல்லைக் கேட்பதில்லை!

"ஏண்டி சகுந்தலையோட திருமணத்துக்கு வரலை?" என்றாள் அங்கயற்கண்ணி.

"உனக்குத்தான் என் நிலைமை தெரியுமே! நான் வீட்டை விட்டு எங்கேயும் வெளியிலேயே போறதில்ல" என்றாள் பங்கஜவல்லி.

"உன் கணவரைப் பிரிஞ்சருக்கறதால, நீ வருத்ததில இருக்கறது எல்லாருக்கும் தெரியும். அதுக்காக, தோழியோட திருமணத்துக்குக் கூட வராம இருக்கலாமா? சகுந்தலை உன் மேல வருத்தப்பட மாட்டாளா?"

"போன மாசம் நடந்த குமுதாவோட வளைகாப்புக்கு நான் போகாததுக்கே, குமுதா என் மேல ரொம்பக் கோபமா இருக்கா. அப்படி இருக்கறப்ப, தன்னோட திருமணத்துக்கு வராம இருந்ததுக்காக, சகுந்தலை கோபப்பட மாட்டாளா என்ன?"

"அப்புறம் ஏன் வரல? திருமணத்துக்கு வந்திருந்தா, உன் மனசுக்கு ஒரு மாறுதலா இருந்திருக்கும். சகுந்தலைக்கும் சந்தோஷமா இருந்திருக்கும் இல்ல?"

சற்று நேரம் மௌனமாக இருந்த பங்கஜவல்லி, "நானும் அப்படித்தான் சொன்னேன். அது கேக்கலையே!" என்றாள்.

"எது கேக்கல?"

"என் மனசுதான்! அவர் என்னை விட்டுப் பிரிஞ்சதிலேந்து, நான் துயரத்திலதான் இருக்கணும்னு என் மனசு முடிவு பண்ணிடுச்சு. நான் கொஞ்ச நேரமாவது அந்தத் துயரத்தை மறந்துட்டு வேற எதிலேயாவது ஈடுபடலாம்னு முயற்சி செஞ்சா, என் மனசு அதை அனுமதிக்கிறதில்ல. மாட்டைக் கட்டிப் போட்டிருக்கறப்ப, அது கொஞ்சம் இந்தப் பக்கமோ, அந்தப் பக்கமோ அசைய முயற்சி பண்ணினா, அதைக் கட்டி இருக்கிற கயிறு அதைப் பிடிச்சு இழுக்கும் இல்ல, அது மாதிரி, என் மனசு என்னோடசோகத்திலேந்து என்னால கொஞ்சம் கூட விலக முடியாம, என்னைப் பிடிச்சு இழுத்துக்கிட்டே இருக்கு. என் மனசே எனக்கு விரோதமா நடந்துக்கறப்ப, எனக்கு நெருக்கமா இருக்கற மத்தவங்க என் மேல கோபமா இருக்கறதைப் பத்தி நான் என்ன சொல்ல முடியும்?" என்றாள் பங்கஜவல்லி, விரக்தியுடன்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 130
நெஞ்சொடு புலத்தல் (நெஞ்சிடம் கோபம் கொள்ளுதல்)

குறள் 1300
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.

பொருள்:
நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.

1299. வேறு யார் உதவுவார்கள்?

இரண்டு ஜாமங்கள் முடிந்து, மூன்றாம் ஜாமம் துவங்கிய பிறகும், வசந்தமுல்லைக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. கடந்த இரண்டு வாரங்களாகவே இப்படித்தான். இரவில் தூக்கம் இல்லாததால், பகலில் சோர்வு.

வசந்தமுல்லையின் நிலைமையைக் கண்டு கவலை கொண்ட அவள் தாய் மீனாம்பாள், அவளை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றாள்.

வசந்தமுல்லையின் நாடியைப் பரிசோதித்த மருத்துவர், "உடலுக்கு ஒன்றும் இல்லையம்மா. மனக்கவலையால்தான் உங்கள் மகளின் உடல் பாதிப்படைந்திருக்கிறது. மனத்தில் உள்ள துயரையோ, கவலையையோ மாற்றிக் கொண்டால், அவள் உடல் சரியாகி விடும்" என்றார் மீனாம்பாளிடம்.

"ஐயா! என் கணவர் என்னை விட்டுப் பிரிந்து தொலைதூரம் சென்றிருக்கிறார். அவர் திரும்பி வரப் பல மாதங்கள் ஆகும். என்னால் எப்படித் துயரப்படாமல் இருக்க முடியும்?" என்றாள் வசந்தமுல்லை.

"மருத்துவரிடம் பேசும் பேச்சா இது?" என்று மீனாம்பாள் மகளைக் கடிந்து கொண்டாள்.

"உங்கள் மகள் கேட்பதில் ஒன்றும் தவறில்லை, அம்மா! அவளுக்கு நான் விளக்குகிறேன்" என்ற மருத்துவர், வசந்தமுல்லையிடம் திரும்பி, "உன் கணவரின் பிரிவை எண்ணி உன்னால் துயரப்படாமல் இருக்க முடியாதுதான். ஆனால், உன் மனத்தை வேறு திசைகளில் திருப்பி, உன்னால் உன் துயரைக் குறைத்துக் கொள்ள முடியும்" என்றார்.

வீட்டுக்கு வந்த வசந்தமுல்லை, இரவு படுக்கச் செல்லுமுன், "மருத்துவர் என்ன சொன்னார் என்று கேட்டாய் அல்லவா? உன்னைத் திசைதிருப்பினால், என்னால் என் துயரைக் குறைத்துக் கொள்ள முடியுமாம். நானும் உன்னை வேறு திசைகளில் திருப்ப எவ்வளவோ முயற்சி செய்கிறேன். ஆனால், நீ பிடிவாதமாக என்னை விட்டு விட்டுப் போனவருடைய நினைவையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறாய். எனக்கு ஒரு துயரம் வரும்போது, நீ எனக்குத் துணையாக இல்லாமல், நான் எவ்வளவு முயன்றும், வேறு திசைகளில் உன் கவனத்தைச் செலுத்தாமல், அவருடைய நினைவுகளிலேயே ஆழ்ந்து, என் துயரத்தை இன்னும் அதிகமாக அல்லவா ஆக்கிக் கொண்டிருக்கிறாய்! நீயே எனக்கு உதவாவிட்டால், பின் வேறு யார் எனக்கு உதவுவார்கள்?" என்றாள், தன் மனத்திடம்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 130
நெஞ்சொடு புலத்தல் (நெஞ்சிடம் கோபம் கொள்ளுதல்)

குறள் 1299
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.

பொருள்:
ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே துணையாகா விட்டால், வேறு யார் துணையாவார்?

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...