வசந்தமுல்லையின் நிலைமையைக் கண்டு கவலை கொண்ட அவள் தாய் மீனாம்பாள் அவளை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றா.
வசந்தமுல்லையின் நாடியைப் பரிசோதித்த மருத்துவர், "உடலுக்கு ஒன்றும் இல்லையம்மா. மனக்கவலையால்தான் உங்கள் மகளின் உடல் பாதிப்படைந்திருக்கிறது. மனத்தில் உள்ள துயரையோ, கவலையையோ மாற்றிக் கொண்டால் அவள் உடல் சரியாகி விடும்" என்றார் மீனாம்பாளிடம்..
"ஐயா! என் கணவர் என்னை விட்டுப் பிரிந்து தொலைதூரம் சென்றிருக்கிறார். அவர் திரும்பி வரப் பல மாதங்கள் ஆகும். என்னால் எப்படித் துயரப்படாமல் இருக்க முடியும்?" என்றாள் வசந்தமுல்லை.
"மருத்துவரிடம் பேசும் பேச்சா இது?" என்று மீனாம்பாள் மகளைக் கடிந்து கொண்டாள்.
"உங்கள் மகள் கேட்பதில் ஒன்றும் தவறில்லை அம்மா! அவளுக்கு நான் விளக்குகிறேன்" என்ற மருத்துவர், வசந்தமுல்லையிடம் திரும்பி, "உன் கணரின் பிரிவை எண்ணி உன்னால் துயரப்படாமல் இருக்க முடியாதுதான். ஆனால் உன் மனத்தை வேறு திசைகளில் திருப்பி உன்னால் உன் துயரைக் குறைத்துக் கொள்ள முடியும்" என்றார்.
வீட்டுக்கு வந்த வசந்தமுல்லை இரவு படுக்கச் செல்லுமுன், "மருத்துவர் என்ன சொன்னார் என்று கேட்டாய் அல்லவா? உன்னைத் திசைதிருப்பினால் என்னால் என் துயரைக் குறைத்துக் கொள்ள முடியுமாம். நானும் உன்னை வேறு திசைகளில் திருப்ப எவ்வளவோ முயற்சி செய்கிறேன். ஆனால் நீ பிடிவாதமாக என்னை விட்டு விட்டுப் போனவருடைய நினைவையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறாய். எனக்கு ஒரு துயரம் வரும்போது, நீ எனக்குத் துணையாக இல்லாமல், நான் எவ்வளவு முயன்றும் வேறு திசைகளில் உன் கவனத்தைச் செலுத்தாமல், அவருடைய நினைவுகளிலேயே ஆழ்ந்து என் துயரத்தை இன்னும் அதிகமாக அல்லவா ஆக்கிக் கொண்டிருக்கிறாய்! நீயே எனக்கு உதவாவிட்டால் பின் வேறு யார் எனக்கு உதவுவார்கள்?" என்றாள் தன் மனத்திடம்.
கற்பியல்
No comments:
Post a Comment