"எனக்கு என்னவோ கடவுள் உன்னோட உடம்பில ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு பொருள்ளேந்து செஞ்சிருப்பார்னு தோணுது.''
''ஆரம்பிச்சுட்டியா? சரி, சொல்லு!''
''உன் கால்களை வாழைத் தண்டுலேந்து செஞ்சிருக்காரு.''
'''வாழைத் தோட்டம் போட்டது போல் கால்களிரண்டு அதில்
வட்டம் போட்டுத் திரிவதென்ன கண்களிரண்டு' ன்னு அலையற உன் கண்ணையும் சேத்து அன்னிக்கே பாடிட்டார் கண்ணதாசன்.''
'அப்புறம், உன் இடுப்பு இருக்கே அதை உடுக்கையிலேந்து செஞ்சிருப்பாரு.''
''ஐயே! இது நல்லாவா இருக்கு''
''உடுக்கை பாத்திருக்கியா? மேலேயும் கீழேயும் பருமனா, நடுவில மட்டும் குறுகலா. அது மாதிரி உன் குறுகிய இடை, அதுக்கு மேலே...''
''சரி, போதும்.''
''அப்புறம், உன் முகம் நிலாவேதான். அதில சின்னதா ரெண்டு குளம் வெட்டி ஒவ்வொண்ணிலேயும் ஒரு மீனை நீஞ்ச விட்ட மாதிரி கண்கள்.''
''அடக் கடவுளே!''
''கடவுள் உன்னை எப்படியெல்லாம் செஞ்சிருக்கார்னு நினைச்சு, நீயே ஆச்சரியப் படறே பாரு.''
''போதும்டா சாமி!''
''முக்கியமானதை மட்டும் சொல்லி முடிச்சுடறேன்''
''வேண்டாம். எனக்கு பயமா இருக்கு!''
''நீ நினைக்கிற மாதிரி இல்ல. உன் தோளை எதிலேந்து செஞ்சிருக்கார்னு தெரியுமா?''
''நீ மணிக்கணக்கா என் தோள்ளேயே சாஞ்சுக்கிட்டிருக்கறதைப் பாத்தா, அதை ஏதாவது மரத்திலதான் செஞ்சிருப்பார்னு நீ நினைக்கற போலிருக்கு!''
''நீ பாயின்ட்டுக்கு வந்துட்ட. ஆனா உன் முடிவு தப்பு. நான் ஒரு சேல்ஸ்மேன். தினமும் நுறு பேரைப் பாத்து, எங்க கம்பெனியோட தயாரிப்பை வாங்கிக்கங்கன்னு கெஞ்சிக் கூத்தாடி, பல பேர் கிட்ட விக்க முடியாம தோத்துப் போய், மேலதிகாரிகிட்ட திட்டு வாங்கி நொந்து போய், உயிரே போன மாதிரி உடம்பும் மனசும் சோர்ந்து போய் வந்து, உன் தோளை அணச்சுக்கிட்டா, போன உயிர் வந்த மாதிரி அப்படி ஒரு தென்பும், புத்துணர்வும் வருது. அமிர்தத்துக்குத்தான் இப்படிப்பட்ட சக்தி இருக்குன்னு சொல்லுவாங்க. அதனால, உன் தோளைக் கடவுள் அமிர்தத்திலேந்துதான் செஞ்சிருக்கணும்.''
அவள் தோளில் தன் தலையை அழுத்தமாக வைத்துச் சாய்ந்து கொண்டான் அவன்.
அவளுக்கு வலிக்கவில்லை!
களவியல்
அதிகாரம் 111
புணர்ச்சி மகிழ்தல்
.
குறள் 1106
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்குஅமிழ்தின் இயன்றன தோள்.
பொருள்
தழுவிக் கொள்ளும்போதெல்லாம் புத்துயிர் அளிப்பது போன்ற உணர்வைத் தருவதால், இவளுடைய தோள்கள் அமிர்தத்தினால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.