Tuesday, May 26, 2020

1105. மகிழ்ச்சி அளிக்கும் விஷயங்கள்!!

''இன்னிக்கு என்ன கதை சொல்லப் போற?' என்றாள் விமலா.

''அதான், நீ கதை சொல்லி முடிச்சுட்டியே!'' என்றான் கணேஷ்.

''அது நாம ரெண்டு பேரும் சேர்ந்து படிச்ச கதை. எப்பவும், அந்தக் கதை முடிஞ்சதும், நீ ஒரு கதை சொல்லுவியே, அதைக் கேட்டேன்''

''ஓ, ரொம்ப நேரம் உன் தோள்ள சாஞ்சு புலம்பிட்டு, அப்புறம்தானே எழுந்திருப்பேன், அதைச் சொல்றயா?''

''அதேதான்!'' என்றாள் விமலா.

''என்ன செய்யறது? உன்னை விட்டுப் பிரிய மனசில்லாம, உன் தோள்ள சாஞ்சுக்கிட்டிருப்பேன். உன் தோள் வலிக்கக் கூடாதேங்கறதுக்காக, உங்கிட்ட ஏதாவது பேசிக்கிட்டிருப்பேன். அதைக் கதைன்னு சொல்லிட்டியே!''

''நீ சொல்றதெல்லாம் கேக்க சுவாரசியமா இருக்கும். நீ என் தோள்ள சாஞ்சுக்கிட்டிருக்கற வலியே எனக்குத் தெரியாது. சுவாரசியமா இருக்கறதால, கதைன்னு சொன்னேன். அது தப்பா?'' என்றாள் விமலா.

''தப்பு இல்ல. ஆனா, இன்னிக்கு நான் சொல்லப் போறது ஒரு உண்மை'' என்றான் கணேஷ்.

''சொல்லு. ஒரு நாளைக்காவது உண்மையைச் சொல்லு!''

''சின்ன வயசில, அடிக்கடி என் அம்மா மடியில போய்ப் படுத்துப்பேன். கொஞ்சம் பெரியவனானப்பறம், என் அம்மா அதை நிறுத்தச் சொன்னாங்க. 'உன் மடியில படுத்துக்கிட்டா எனக்கு சந்தோஷமா இருக்கும்மா'ன்னு சொன்னேன். 'நீ பெரியவனாயிட்ட. இனிமே, என் மடியில படுத்துக்க முடியாது. உனக்கு சந்தோஷமா இருக்கற வேற விஷயத்தைக் கண்டுபிடின்னு சொன்னாங்க. அப்புறம், என் தாத்தாவையோ, பாட்டியையோ, கதை சொல்லச் சொல்லிக் கேப்பேன். அது சந்தோஷமா இருந்தது. அப்புறம், நான் வளர வளர, நண்பர்கள்கிட்ட பேசறது, விளையாடறது, புத்தகம் படிக்கிறதுன்னு எனக்கு சந்தோஷம் கொடுக்கற பல விஷயங்களைக் கண்டுபிடிச்சேன். இப்ப...''

''இப்ப?"

'இப்பல்லாம் எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கறது உன்னோட தோள்கள்தான்!' என்ற கணேஷ், அவள் தோள்களிலிருந்து தலையை எடுத்து , திரும்பி அவள் முகத்தைப் பார்த்தான். அவள் நீண்ட கூந்தலில் சூடியிருந்த மல்லிகையின் வாசத்தை மூச்சை இழுத்து அனுபவித்தபடியே, ''ஆஹா! என்ன ஒரு மணம்!'' என்றபடியே, அவள் தோள்களை இரு கைகளாலும் அழுத்தினான்.

''அழுத்தாதையா! வலிக்குது. நீ தோள்ள ரொம்ப நேரம் சாஞ்சுக்கிட்டிருந்தப்ப கூட எனக்கு வலிக்கல!'' என்றாள் விமலா.

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 111
புணர்ச்சி மகிழ்தல்  
குறள் 1105
வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.

பொருள்
நமக்கு விருப்பமான பொருள் ஒன்று நாம் விரும்பும்போதெல்லாம் நமக்கு இன்பமளிப்பது போல், மலரணிந்த கூந்தலைக் கொண்ட இவளுடைய தோள்கள் எனக்கு இன்பமளிக்கின்றன.

Read 'Discovering Happiness' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...