Sunday, February 18, 2024

1297. நெஞ்சே, நீசொல்!

திருமணம் ஆன ஒரு மாதத்திலேயே சுரஞ்சனியை  விட்டுப் பிரிந்து வியாபாரத்துக்காக வெளியூர் சென்று விட்ட அவள் கன் சத்யகீர்த்தி ஊர் திரும்பப் போகிறான் என்பதுதான் அந்தச் சிற்றூரில் அன்றைய முக்கியச் செய்தி.

சத்யகீர்த்திடன் சென்ற அவன் நண்பன் குணாளன் முதல்நாளே ஊர் திரும்பி விட்டான். அவன் கொண்டு வந்த செய்திதான் அது. 

சத்யகீர்த்தி மட்டும் அருகிலிருந்த நகரத்தில் தன் நண்பன் வீட்டில் தங்கி விட்டு சுரஞ்சனிக்கும் மற்றவர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொண்டு அடுத்த நாள் மாலை ஊருக்குத் திரும்புவான் என்று ச்ரஞ்சனியின் வீட்டில் வந்து தெரிவித்து விட்டுப் போயிருந்தான் குணாளன்.

கணவனைப் பிரிந்த இத்தனை மாதங்களும் சரியாக உண்ணாமல், உறங்காமல், அலங்காரம் செய்து கொள்ளாமல் பொலிவிழந்து வாழ்ந்து கொண்டிருந்த சுரஞ்சனி காதலன் வருகிறான் என்றதும் தன்னைச் சிறப்பாக அலங்கரித்துக் கொண்டு தயாராக இருந்தாள்.

மாலை வந்ததும் தன் வீட்டு வாசலில் வந்து நின்றாள் சுரஞ்சனி. தெருவில் பல வீடுகளிலிருந்தும் அவளைப் பார்த்த சிலர் அவளைக் கேலி செய்து பேசத் தொடங்கினர். அவற்றைப் பொருட்படுத்தாமல் தெருமுனையைப் பார்த்தபடியே நின்றாள் சுரஞ்சனி.

தெருமுனையில் சத்யகீர்த்தியின் கம்பீரமான உருவம் தெரிந்தது.

தன் வீட்டு வாசலில் நின்றிருந்த சுரஞ்சனி வேகமாகத் தெருமுனைக்கு ஓடினாள். காதலன் அருகில் சென்றதும் அவனைக் கட்டித் தழுவிக் கொண்டு அவன் மார்பில் முகம் புதைத்து அவன் மார்பைத் தன் கண்ணீரால் நனைத்தாள்.

சத்யகீர்த்தி அவளை ஆதரவுடன் அணைத்தபடி வீட்டுக்கு அழைத்து வந்தான்.

வீட்டுக்கு வந்ததும் சத்யகீர்த்தி முகம் கழுவிக் கொள்ளப் பின்கட்டுக்குச் சென்றதும், சுரஞ்சனியின் தாய், "ஏண்டி, இப்படியா வெட்கத்தை விட்டு நடந்துப்ப? தெருவில எல்லாரும் பார்த்துக் கேலி பண்றாங்க பாரு! உன் பெண்ணுக்கு வெக்கம் இல்லையான்னு எங்கிட்ட கேப்பாங்க. அவங்களுக்கு நான் என்ன பதில் சொல்றது?" என்று தன் மகளைக் கடிந்து கொண்டாள்.

தலையைக் குனிந்து தன் நெஞ்சைப் பார்த்த சுரஞ்சனி, "ஏ,நெஞ்சே! அம்மா கேக்கறாங்க பாரு. பதில் சொல்லு. உன்னோட சேர்ந்து நானும் இல்லாம வெக்கம் இல்லாம நடந்துக்கிட்டேன்?' என்றாள்.

 தன் செய்கையை நினைத்து வெட்கப்பட்டுத் தலையைக் குனிந்து கொண்டதாக நினைத்த சுரஞ்சனியின் தாய் "சரி,பரவாயில்ல. விடு" என்றாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 130
நெஞ்சொடு புலத்தல்
குறள் 1297
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.

பொருள்:
காதலனை மறக்க முடியாத என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சினோடு சேர்ந்து, மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்து விடடேன்.

No comments:

Post a Comment

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை. அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போ...