Sunday, February 18, 2024

1296. தோழியின் உடல்நலக் குறைவு

அகிலா, தமயந்தி இருவரும் உடல் நலம் குன்றியிருந்த தங்கள் தோழி பரிமளாவைப் பார்க்கச் சென்றனர். 

கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்த தோழியைப் பார்த்ததும் இருவருக்குமே மனம் பொறுக்கவில்லை. 

கயிற்றுக் கட்டிலில் பிணைக்கப்படிருந்த கயிறுகளுடன் இன்னொரு கயிறு போல் படுத்துக் கொண்டிருந்தாள் பரிமளா. உடல் அந்த அளவுக்கு இளைத்திருந்தது.

அறைக்கு வெளியே வந்ததும் பரிமளாவின் தாயிடம், "என்னம்மா இப்படி எலும்பும் தோலுமா ஆயிட்டா?" என்றாள் தமயந்தி.

"என்னத்தைச் சொல்றது? ஏதோ பெயர் தெரியாத வியாதியாம். அது உடம்புக்குள்ள இருந்துக்கிட்டு அவளையே தின்னுக்கிட்டிருக்காம். சரியாகுமா ஆகாதேன்னே தெரியல. வைத்தியருக்கே பிடிபடல. கடவுள் மேல பாரத்தைப் போட்டுட்டு உக்காந்திருக்கேன்" என்றாள் பரிமளாவின் தாய்.

வெளியில் வந்ததும், "என்னடி இது? வியாதி உள்ளுக்குள்ளே இருந்துக்கிட்டு மனுஷங்களைத் தின்னுமா என்ன? நான் கேள்விப்பட்டதே இல்லையே!" என்றாள் அகிலா.

" கேள்விப்படறது என்ன? நான் அனுபவிச்சே இருக்கேன்" என்றாள் தமயந்தி.

"அனுபவிச்சிருக்கியா? என்னடி சொல்ற? உனக்கு இது மாதிரி வந்ததா என்ன? எனக்குத் தெரியாதே!" என்றாள் அகிலா வியப்புடன்.

"என் சொந்தக்காரர் ஒத்தருக்கு இப்படி வந்ததுன்னு எங்கம்மா சொல்லி இருக்காங்க. அதைத்தான் சொன்னேன்!" என்ற தமயந்தி, தன் காதலன் தன்னைப் பிரிந்திருந்த காலத்தில் தன் நெஞ்சு உள்ளிருந்து கொண்டு தன்னை நாள்தோறும் அணு அணுவாகத் தின்று கொண்டிருந்த அனுபவத்தை நினைத்துப் பார்த்துத் தன்னை அறியாமல் அதை வெளிப்படுத்தி விட்டதற்காகத் தன்னையே உள்ளூரக் கடிந்து கொண்டாள்.

'நல்ல வேளை. எதையோ சொல்லிச் சமாளிச்சுட்டேன். என் நெஞ்சு என்னைத் தின்ன அனுபவத்தை நான் சொன்னா இவ அதைப் புரிஞ்சுக்கவா போறா?' என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள் தமயந்தி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 130
நெஞ்சொடு புலத்தல்
குறள் 1296
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.

பொருள்:
காதலரைப் பிரிந்து தனியே இருந்து (அந்தப் பிரிவின் கொடுமையை) நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போன்ற துன்பம் ஏற்பட்டது.

No comments:

Post a Comment

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை. அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போ...