Saturday, December 9, 2023

1287. எத்தனை நாள் ஆயிற்று?

 "எத்தனை நாள் ஆச்சு?" என்றாள் லதா.

"எது எத்தனை நாள் ஆச்சு?" என்றாள் மாலினி.

"நான் அவர்கிட்ட கோவிச்சுக்கிட்டு வந்து?"

"ஏண்டி, இதையெல்லாம் நான் கணக்கு வச்சுக்கணுமா? சண்டை போட்டுக்கிட்டு வந்த உனக்குத் தெரியாது?"

"அதுக்குப் பேர் சண்டை இல்ல. ஒரு பிணக்கு. அவ்வளவுதான்."

"அன்னிக்கு நீதான் சொன்னே, சண்டை போட்டுக்கிட்டு வந்துட்டேனு!"

"சரி. கோவத்தில சொல்லி இருப்பேன். என்னிக்கு அது?"

"முந்தா நாள்."

"முந்தா நாளா? அஞ்சாறு நாள் ஆயிருக்கும்னு நெனச்சேன்!"

"நெனப்ப! அது சரி. எதுக்கு இந்த நாள் கணக்கு இப்ப?"

"இன்னிக்கு சனிக்கிழமை. அவர் ஆஞ்சநேயர் கோவிலுக்குப் போவாரு. அங்க போய் அவரைப் பாத்துப் பேசலாம் பாக்கறேன்!"

"ஏண்டி, அன்னிக்கு என்னமோ அவரா வந்து உங்கிட்ட பேசினாதான் அவரோட பேசுவேன்னு வீராப்பா பேசின. இப்ப நீயே வலுவில  போய்ப் பேசறேன்னு சொல்ற!"

"காதல்ல கௌரவம் பாக்கக் கூடாது!"

"இந்தத் தத்துவம் எல்லாம் வேண்டாம். சண்டை போட்டுட்ட. ஆனா அவரைப் பிரிஞ்சு ரெண்டு நாள் கூட இருக்க முடியல. உன்னால அவரைப் பாக்காம ஒரு நாள் கூட இருக்க முடியாதுன்னு தெரிஞ்சும் ஏன் அவரோட சண்டை போட்ட?" என்றாள் மாலினி.

தோழியின் கேள்விக்கு லதாவிடம் பதில் இல்லை.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 129
புணர்ச்சி விதும்பல் (ஒன்று சேர விரும்பதல்)
குறள் 1287
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.

பொருள்:
வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில் குதிப்பவரைப் போல, வெற்றி கிடைக்காது எனப் புரிந்திருந்தும், ஊடல் கொள்வதால் பயன் என்ன?.

No comments:

Post a Comment

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை. அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போ...