Wednesday, November 22, 2023

1279. வனவாசம் போனாலும் பிரியாத சீதை!

"உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்" என்றான் சோமன்.

"இந்த நேரத்தில சொல்ல வேண்டிய முக்கியமான விஷயமா என்ன?" என்றாள் அவன் அணைப்பிலிருந்த வைசாலி.

"வியாபார விஷயமா நான் வெளியூர் போகணும்."

அவன் அணைப்பிலிருந்து சட்டென்று தன்னை விலக்கிக் கொண்ட வைசாலி "ரெண்டு மூணு நாள்ள வந்துடுவீங்க இல்ல?" என்றாள்.

"இல்லை வைசாலி. ரொம்ப தூரம் போறேன். திரும்பி வர அஞ்சாறு மாசம் ஆகும்."

வைசாலி தன் முகத்தைத் திருப்பித் தன் இரு தோள்களையும் பார்த்தாள். பிறகு தன் இரு கைகளையும் உயர்த்தித் தன் இரண்டு மணிக்கட்டுகளையும் பார்த்தாள்.

"என்ன செய்யற?" என்றான் சோமன் குழப்பத்துடன். 

"புரியலையா? உங்களை விட்டுப் பிரிஞ்சப்பறம் இந்தத் தோள்கள் எந்த அளவுக்கு இளைச்சு எலும்பு தெரியற மாதிரி ஆயிடும், கைகள் மெலிஞ்சப்புறம் கைவளைகள் எப்படி நழுவிக் கீழே விழும்னு நினைச்சுப் பார்த்தேன்."

"நம்ம எதிர்காலத்துக்குப் பணம் சம்பாதிக்கணும் இல்ல? போய்த்தான் ஆகணும். வேற வழி இல்லையே!" என்றான் சோமன்.

"ராமாயணம் படிச்சிருக்கீங்களா?" என்றாள் வைசாலி.

"படிச்சிருக்கேன். ஏன் கேக்கற?"

"வனவாசம் போனாலும் பிரியாத சீதை!" என்ற வைசாலி, குனிந்து தன் பாதங்களைப் பார்த்தாள்.

தான் போகுமிடம் எதுவாக இருந்தாலும் அங்கே தன்னுடன் வரத் தயாராக இருப்பதை அவள் உணர்த்தியதை சோமன் புரிந்து கொண்டான்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 128
குறிப்பறிவுறுத்தல்
குறள் 1279
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது.

பொருள்:
பிரிவு காரணமாகக் கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக் கூடிய மென்மையான தோளையும் நோக்கியவள் காதலனைத் தொடர்ந்து செல்வதென்ற முடிவைத் தன் அடிகளை நோக்கும் குறிப்பால் உணர்த்தினாள்.

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...