"சொல்லுங்க" என்றபோதே வைகையின் உடலில் ஒரு பதட்டம் தெரிந்தது.
"ஏன் பதட்டப்படற?"
"நீங்க சொல்லப் போற விஷயம் எப்படி இருக்குமோங்கற பதட்டம்தான். சொல்லுங்க."
"நல்ல விஷயம்தான். ஆமாம். உங்கிட்ட ஏதோ ஒரு மாறுதல் தெரியுதே!"
"நல்ல விஷயம்னா ஏன் இப்படிச் சுத்தி வளைக்கிறீங்க? சீக்கிரம் சொல்லுங்க."
"நம்ம எதிர்காலத்துக்கு நன்மை பயக்கற விஷயம்தான். நிறையப் பணம் சம்பாதிக்க எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைச்சிருக்கு."
வைகை மௌனமாக இருந்தாள்.
"நாளைக்குக் கிளம்பற ஒரு சரக்குக் கப்பல்ல எனக்கு வேலை கிடைச்சிருக்கு. கப்பலோடபோயிட்டுத் திரும்பி வர வேண்டியதுதான். ஊதியமா நிறையப் பணம் கிடைக்கும்."
"கப்பல்ல போயிட்டுத் திரும்ப ரெண்டு மூணு மாசம் ஆகும் இல்ல?"
"ஆமாம். "
"அப்புறம் இது எப்படி நல்ல விஷயமா இருக்க முடியும்? என்னைப் பிரிஞ்சு இருக்கறது உங்களுக்கு நல்ல விஷயமா?" என்று கோபத்துடன் வெடித்தாள் வைகை.
"அப்படி இல்ல, வைகை..." என்று ஆரம்பித்தான் வளவன்.
"நீங்க இப்படி ஏதாவது செய்வீங்கன்னு எனக்கு நேத்திக்கே தெரியும்!"
"நேத்திக்கே தெரியுமா? எப்படி?"
"எனக்குன்னா எனக்கு இல்லை. என் கைவளையல்களுக்குத் தெரிஞ்சுடுச்சு. நேத்து ராத்திரி நீங்க என்னைக் கட்டி அணைச்சுக்கிட்டப்பவே நீங்க என்னைப் பிரியப் போறீங்கங்கறதை என் கைவளையல்கள் புரிஞ்சுக்கிட்டு என் கையிலேந்து நழுவி விழுந்துடுச்சு. எங்கிட்ட ஏதோ மாறுதல் தெரியுதுன்னீங்களே, என் கைவளையல்கள் நழுவி விழுந்ததால என் கைகள் வெறுமையா இருக்கே, அந்த மாறுதல்தான் அது!" என்றாள் வைகை, தன் கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டே.
கற்பியல்
குறிப்பறிவுறுத்தல்
No comments:
Post a Comment