Friday, November 17, 2023

1275. பார்வையில் கிடைக்குமா பதில்?

"நீயும் அவளை ஒரு மாசமாக் காதலிக்கற. ஆனா அவ இன்னும் உன் காதலை ஏத்துக்கிட்ட மாதிரி தெரியலியே!"

"என்ன செய்யறது? அவகிட்ட என் காதலைச் சொன்னேன். பதிலே சொல்லாம போயிட்டா. மறுபடி போய்ப் பேசறதுக்கு எனக்குத் தயக்கமா இருக்கு."

"அதுக்கப்புறம் அவளை நீ சந்திக்கவே இல்லையா?"

"தினமும் சந்திச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். என் வீடு இருக்கிற அதே தெருவிலதானே அவ வீடும் இருக்கு!"

"அப்ப தினமும் அவ வீட்டு வாசல்ல போய் நின்னுடுவேன்னு சொல்லு!"

"அப்படியெல்லாம் செய்ய முடியுமா? அவ எப்ப வீட்டை விட்டுக் கிளம்பறான்னு தெரியும். அந்தச் சமயத்தில அவ கண்ணில படற மாதிரி ஒரு இடத்தில நிப்பேன்."

"அவ உன்னைப் பாப்பாளா, பாக்காமலே போயிடுவாளா?"

"நிச்சயமாப் பாப்பா. ஒரு தடவை கூட திரும்பி என்னைப் பாக்காம இருந்ததில்ல."

"அப்புறம் என்ன? அவளுக்கும் உன் மேல ஒரு இது இருக்குன்னுதான் அர்த்தம்!"

"அப்படி இருந்தா வாயைத் தொறந்து சொல்லலாமே? எதுவுமே சொல்லாம என்னை ரொம்ப கஷ்டப்படுத்தறா!"

"அப்ப எதுக்கு அவளைப் பாக்கற? அவளா வந்து 'எனக்கும் உன்னைப் புடிச்சிருக்கு' ன்னு உங்கிட்ட சொல்லட்டும்!"

"போடா! அவ பார்வையில ஒரு குறும்பு இருக்கு. அந்தக் குறும்பத்தனம்தான் எனக்கு நம்பிக்கையைக் கொடுக்குது. அவ பதில் சொல்ல மாட்டேங்கறாளேங்கற ஏக்கத்தைப் போக்கற மாதிரியும் இருக்கு!"

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 128
குறிப்பறிவுறுத்தல்
குறள் 1275
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.

பொருள்:
வண்ணமிகு வளையல்கள் அணிந்த என் காதலியின் குறும்புத்தனமான பார்வையில், என்னை வருத்தும் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தும் இருக்கிறது.

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...