Monday, November 13, 2023

1271. மௌனமே பார்வையால்...

ராகவன் பணியாற்றி வந்த அந்தப் பெரிய நிறுவனத்தின் ஊழியர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் என்றாலும், பெண் ஊழியர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருந்தனர்.

ராகவன் பெண்களிடம் அதிகம் பேசும் இயல்பு கொண்டவன் அல்ல. சில பெண்கள் அவனிடம் கேலியாகப் பேசி அவனைச் சீண்டிப் பார்ப்பாரகள். ஆனால் அவன் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லிப் பேச்சை முடித்து விடுவான்.

ராதிகா அங்கே சமீபத்தில்தான் வந்து சேர்ந்தாள். ராதிகாவை ராகவனின் பெண் வடிவம் என்றே கூறலாம். அவள் ஆண்களிடம் அதிகம் பேச மாட்டாள்.

பல இளைஞர்களுக்கு ராதிகாவின் மீது ஒரு கண் இருந்தது. அவளிடம் பேச்சுக் கொடுத்தும், வேலையில் அவளுக்கு உதவி செய்தும், அவர்கள் ராதிகாவின் கவனத்தைக் கவர முயன்று கொண்டிருந்தனர்.

ராகவன் ராதிகாவை அலுவல் விஷயமாகச் சந்திக்க வாய்ப்புகள் ஏற்படவில்லை. ஆனால் இருவரும் ஒரே தளத்தில் பணி புரிந்ததால் அவ்வப்போது பார்த்துக் கொள்ள வேண்டி வரும்.

ராகவன் மற்ற பெண்களிடம் நடந்து கொள்வது போல்தான் ராதிகாவிடமும் நடந்து கொண்டான் - அதாவது அவளைப் பொருட்படுத்தாமல் இருந்து வந்தான்.

ன்று ராதிகா அலுவலகத்துக்கு வரவில்லை. அலுவலகத்துக்கு வந்த சிறிது நேரத்திலேயே  ராகவன் இதை உணர்ந்தான். 

மற்ற ஊழியர்கள் - ஆண்களோ, பெண்களோ- அலுவலகத்துக்கு வராதபோது அதை கவனிக்காத தான், ராதிகா வராததை மற்றும் ஏன் கவனித்து உணர வேண்டும் என்ற கேள்வி அவன் மனதில் எழுந்தது. அதை அலட்சியம் செய்து தன் வேலையில் ஈடுபட்டான் ராகவன்.

ஆயினும் அன்று முழுதும் ராதிகா அலுவலத்துக்கு வரவில்லை என்ற நினைவு அவன் மனதுக்குள் நிறைந்திருந்தது. சில சமயம் அவளை அன்று பார்க்க முடியாதது மனதுக்குள் ஒருவித ஏக்கத்தையும், வருத்தத்தையும் கூட அளித்தது.

ன்று இரவு நீண்ட நேரம் உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான் ராகவன். ராதிகாவை அவன் நேருக்கு நேர் பார்த்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தன.

திடீரென்று எதையோ உணர்ந்தவனாக எழுந்து உட்கார்ந்து கொண்டான் ராகவன்.

'ராதிகாவும் என்னைப் போல் அதிகம் பேசாதவள்தான். ஆனால் என்னைப் பார்த்த பார்வையிலும், மெலிதான புன்னகையிலும் ஏதோ ஒரு செய்தியை எனக்கு உணர்த்தி வந்திருக்கிறாள். அதை என் உள்ளுணர்வு ரீதியாக நான் புரிந்து கொண்டிருக்கிறேன். அதனால்தான் இன்று அவள் அலுவலகத்துக்கு வராதது என்னை இந்த அளவுக்கு பாதித்திருக்கிறது!'

மறுநாள் ராதிகாவைப் பார்க்கும்போது ஒரு புன்னகையாவது செய்து அவள் தனக்கு உணர்த்தி வந்த செய்தியைத் தான் புரிந்து கொண்டேன் என்பதை அவளுக்கு உணர்த்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் ராகவன்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 128
குறிப்பறிவுறுத்தல்
குறள் 1271
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு.

பொருள்:
நீ சொல்லாது மறைத்தாலும், மறைக்க உடன்படாமல், உன் மை தீட்டப் பெற்ற கண்கள் எனக்குச் சொல்ல விரும்பும் செய்தி ஒன்று உண்டு.

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...