Sunday, November 12, 2023

1270. அப்படி எதுவும் நடந்து விடக் கூடாது!

நான் இங்கே வேலைக்கு வந்து ஐந்து மாதங்கள் ஆகி விட்டன. பயணம் கிளம்புவதற்கு ஒரு மாதம் முன்புதான் திருமணம் செய்து கொண்ட என் மனைவியை விட்டுப் பிரிந்தும் ஐந்து மாதங்கள் ஆகி விட்டன.

என்னை வேலைக்கு அழைத்து வந்த வணிகர், கிளம்புவதற்கு முன் சொன்னது மூன்று மாதங்களில் வேலை முடிந்து விடும் என்றுதான்.

ஆனால் நாங்கள் விற்பனைக்காக எடுத்து வந்த சரக்கு இரண்டு மாதங்களிலேயே விற்றுத் தீர்ந்து விட்டது. சரக்கு மிக வேகமாக விற்பனையாவதைக் கண்ட வணிகர் நாங்கள் இங்கே வந்த சில நாட்களிலேயே இன்னொரு கப்பல் மூலம் கூடுதல் சரக்கைக் கொண்டு வர ஏற்பாடு செய்து விட்டார்.

அதனால் மொத்த சரக்கையும் விற்று விட்டுத்தான் நாங்கள் கிளம்ப முடியும் என்ற நிலை.

"என்ன ஐயா இது? மூணு மாசம்னு சொன்னீங்க. அஞ்சு மாசம் ஆயிடுச்சே!" என்று நான் வணிகரிடம் கேட்டதற்கு, "என்ன செய்யறது தம்பி? காத்துள்ளபோதே தூத்திக்கணும் இல்ல? நான் உனக்கு லாபத்தில பங்கு கொடுக்கறதால, உனக்கும் அதிகப் பணம் கிடைக்குமே! கைநிறையப் பணத்தோட உன் திருமண வாழ்க்கையை ஆரம்பிக்கறது உனக்கு ஒரு நல்ல வாய்ப்புத்தானே?" என்றார் அவர். 

கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது!

ஆனால் என் மனைவி பற்றி அவருக்குத் தெரியாது. திருமணம் முடிந்து ஒரு மாதம் அவளுடன் வாழ்ந்தபோதே அவள் இயல்பு எனக்குப் புரிந்து விட்டது. என்னை விட்டுச் சில மணி நேரம் பிரிந்திருப்பது கூட அவளுக்குக் கடினமாக இருந்தது. 

நான் எங்காவது வெளியே போய் விட்டு வந்தால் நான் திரும்பி வரும் வரை சாப்பிடாமல் எனக்காகக் காத்திருப்பாள். 

"உங்களை விட்டு என்னால கொஞ்ச நேரம் கூடப் பிரிஞ்சிருக்க முடியலை. நீங்க வரதுக்குள்ள என் மனசு படற பாடு இருக்கே, அப்பப்பா!" என்பாள்.

அப்படிப்பட்டவள் இந்த ஐந்து மாதங்களாக என்னைப் பிரிந்திருக்கும்போது சரியாக உணவு அருந்துவாளா என்ன?

ஒருவேளை சரியாக உண்ணாமல், உறங்காமல் அவள் உடல்நிலை பாதிக்கப்பட்டால்?

உடல்நிலை பாதிக்கப்பட்டால் கூடப் பரவாயில்லை, மனநிலை பாதிக்கப்பட்டால்?

அப்போது நான் கைநிறையப் பொருளுடன் அவளைச் சென்று அடைந்து என்ன பயன்?

இறைவா அப்படி எதுவும் நடந்து விடக் கூடாது!

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 127
அவர்வயின் விதும்பல் (அவரிடம் விரைதல்)
குறள் 1270
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.

பொருள்:
என் பிரிவைத் தாங்காமல் உள்ளம் உடைய, அவளுக்கு ஏதாவது ஆகிவிட்டால் அதன் பிறகு அவள் என்னைப் பெறுவதால் ஆவது என்ன? பெற்றால்தான் என்ன? உடம்போடு கலந்தால்தான் என்ன? ஒரு பயனும் இல்லை.

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...