Wednesday, November 8, 2023

1265. காண வேண்டும் கண்களால்!

"இவ்வளவு நாள் நீ காத்திருந்தது வீண் போகலை. உன் காதலர் ரெண்டு நாளில திரும்பி வரப் போறாராமே!" என்றாள் தாரிணி..

"ஆமாம்" என்றாள் பூரணி மகிழ்ச்சியுடன்.

"உனக்கு யாரு இந்தத் தகவலைச் சொன்னாங்க?"

"அவரோட பயணம் போயிருந்த  அவர் நண்பர் திரும்பி வந்துட்டாரு. அவரு நேத்திக்கு எங்க வீட்டுக்கு வந்திருந்தாரு. அவர்தான் இந்தத் தகவலைச் சொன்னாரு."

"ஏன் அவரோடயே உன் காதலரும் வரலை.?"

"அவருக்கு இன்னும் கொஞ்சம் வேலை இருக்காம். அதை முடிச்சுட்டு அடுத்த கப்பல்ல வரேன்னு சொல்லி அனுப்பி இருக்காரு. அந்தக் கப்பல் இன்னும் ரெண்டு நாள்ள வந்துடும்."

"ஆனா உன் காதலர் வரப் போறார்ங்கற மகிழ்ச்சி உங்கிட்ட முழுமையா இல்லையே!" என்றாள் தாரிணி.

"எதை வச்சு அப்படிச் சொல்ற?" என்றாள் பூரணி.

"ஏற்கெனவே நீ ரொம்ப இளைச்சு உன் தோள்கள் மெலிஞ்சிருக்கு. அதோட உன் தோள்ள பசலை படர்ந்து உன் தோள் நிறம் மாறி இருக்கே! அவர் பிரிவால வந்த இந்தப் பசலை அவர் வரப் போறார்னு தெரிஞ்சதும் மறைஞ்சிருக்க வேண்டாமா?"

"நீ வேணும்னா பாரு. அவர் திரும்பி வந்து அவரை நான் கண்ணால பார்த்த உடனேயே இந்தப் பசலை மறைஞ்சுடும்!" என்றாள் பூரணி உற்சாகத்துடன்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 127
அவர்வயின் விதும்பல் (அவரிடம் விரைதல்)
குறள் 1265
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.

பொருள்:
என் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம் தானே நீங்கி விடும்.

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...