Tuesday, October 31, 2023

1262. தோழியின் யோசனை!

"நான் ஒண்ணு சொல்றேன். கோவிச்சுக்க மாட்டியே?" என்றாள் தமயந்தி.

"உங்கிட்ட நான் என்னிக்குக் கோவிச்சுக்கிட்டிருக்கேன்? அதுவும் என் காதலரைப் பிரிஞ்சு இருக்கற இந்தக் காலத்தில எனக்கு ஆறுதலா இருக்கறது நீ ஒருத்திதான். உங்கிட்ட நான் எப்படிக் கோவிச்சுக்க முடியும்?" என்றாள் யாமினி.

"ஏன்னா, நான் சொல்லப் போறது உன் காதலரைப் பத்தித்தான். அது உனக்குப் பிடிக்காம இருக்கலாம்!"

"என்ன சொல்லப் போற அவரைப் பத்தி? அவர் எப்ப திரும்பி வரப் போறார்ங்கறதைப் பத்தி உனக்கு ஏதாவது தகவல் கிடைச்சிருக்கா என்ன?" என்றாள் யாமினி ஆர்வத்துடன்.

"இல்லை, இல்லை. உனக்குக் கிடைக்காத தகவல் எனக்கு எப்படிக் கிடைக்கும்? அவர்கிட்டேந்து தகவலே வரலைங்கறதுதானே பிரச்னை!" என்ற தமயந்தி, யாமினியின் கையைப் பரிவுடன் பற்றி, "எப்படி இருந்த நீ எப்படி ஆயிட்ட.! குத்து விளக்கு மாதிரி பளிச்னு இருப்பே. இப்ப இரும்புக் கம்பி மாதிரி இருக்க - அவ்வளவு இளைச்சு, கருத்துப் போயிட்ட!  கைவளை எல்லாம் மணிக்கட்டுக்குக் கீழே வந்துடுச்சு, எப்ப வேணும்னாலும் நழுவிக் கீழே விழப் போற மாதிரி!" என்றாள்.

"அதையெல்லாம் விடு. ஏதோ சொல்லப் போறேன்னியே, அதைச் சொல்லு!" என்றாள் யாமினி, தோழியின் பிடியிலிருந்து தன் கையை விடுவித்துக் கொண்டு.

தமயந்தி ஒரு கணம் தயங்கி விட்டு, "உன் காதலர் ரெண்டு மூணு மாசத்தில திரும்பி வந்துடறேன்னு சொல்லிட்டுப் போனாரு. ஆனா ஆறு மாசம் ஆகியும் அவர்கிட்டேந்து எந்தத் தகவலும் இல்லை. நீயானா எப்பவுமே அவரையே நினைச்சு ஏங்கி இளைச்சுக்கிட்டிருக்க. அவரை மறக்க முயற்சி செய்யேன். கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா அவரோட நினைவை விட்டுட்டா உன் உடம்பு கொஞ்சம் நல்லா இருக்கும், இல்ல?" என்று கூறி விட்டுத் தோழி என்ன சொல்லப் போகிறாளோ என்று பயந்து கொண்டே யாமினியின் முகத்தைப் பார்த்தாள்.

யாமினி பெரிதாகச் சிரித்து விட்டு, "அடி பைத்தியக்காரி! இப்படி ஒரு யோசனையைச் சொல்லத்தான் பயந்தியா? இப்படி ஒரு யோசனையை நான் பெரிசா எடுத்துக்கிட்டாத்தானே உங்கிட்ட கோவிச்சுக்கறதுக்கு? நீ இதை உண்மையாவே சொன்னாலும் நீ அதை விளையாட்டுக்குச் சொன்னதாத்தான் நான் எடுத்துப்பேன்" என்றாள்.

"இல்லை, யாமினி! நான் சொல்றதை நீ யோசிச்சுப் பார்க்கணும்."

"யோசிச்சுப் பார்க்க வேண்டியது நீதான்! ஒருவேளை நீ சொல்றபடி என் காதலரை நான் மறக்க முயற்சி செஞ்சா, என் உடல் இளைச்சு, எங்கிட்ட மீதம் இருக்கிற அழகும் போயிடும்.. என் கையில இருக்கிற வளையல்கள் கீழே விழுந்து உடைஞ்சுடும். நீ என்ன நோக்கத்துக்காக இதைச் சொன்னியோ, அதற்கு எதிரான விளைவுகள்தான் ஏற்படும்!" என்றாள் யாமினி."

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 127
அவர்வயின் விதும்பல் (அவரிடம் விரைதல்)
குறள் 1262
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.

பொருள்:
ஒளிரும் நகை அணிந்தவளே! பிரிவுத் துயரிலிருந்து விடுபட, என் காதலரை நான் இன்று மறந்தால் என்னிடம் மீதமுள்ள அழகும் என்னை விட்டு நீங்கி, என் தோளும் (கையும்) வளையல்களை இழக்கும்.
அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...