Monday, October 23, 2023

1258. கண்ணே, கனியே!

"இங்கே பாருங்க. தொட்டுப் பேசறதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான். அதுவரையிலும் வெறும் வாய்ப் பேச்சு மட்டும்தான்!" என்றாள் சரண்யா. 

"கண்ணே, கனியே, முத்தே அருகே வா!" என்றான் ராஜசேகர்.

"அருகே வரதெல்லாம் கிடையாது. இப்பதானே சொன்னேன்!"

"நான் சும்மா பாட்டுதானே பாடினேன்!"

"அப்புறம்?"

"அப்புறம்னா? தொடர்ந்து பாடணுமா? 
ஒருநாள் இரவு நிலவை எடுத்து உன் உடல் அமைத்தானோ
பலநாள் முயன்று வானவில் கொண்டு நல்வண்ணம் தந்தானோ?"

"போதும், போதும். வர்ணனை ரொம்ப ஓவரா இருக்கு."

"நான் இன்னும் வர்ணிக்கவே ஆரம்பிக்கலியே! பாட்டு மட்டும்தானே பாடினேன்!"

"சரி. வர்ணிங்க பார்க்கலாம்!"

"உன் அழகை வர்ணிக்கறதை விட உன் பண்பையும் அடக்கத்தையும் வர்ணிக்கறதுதான் எனக்குப் பிடிக்கும். இந்தக் காலத்தில இப்படி ஒரு பொண்ணா?..."

ராஜசேகர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.

சில நிமிடங்கள் கழித்து, "விடுங்க. என்ன இது? நான் தொடவே கூடாதுன்னு சொல்லிக்கிட்டிருக்கேன். ஆனா நீங்க என்னன்னா என்னை அணைச்சுக்கிட்டிருக்கீங்க!" என்று ராஜசேகரின் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றாள் சரண்யா.

"அஞ்ச நிமிஷமா என் அணைப்பில இருக்கே! தெரியுமா உனக்கு?" என்றான் ராஜசேகர் சிரித்தபடி.

"சரியான திருடர் நீங்க. என்னென்னவோ பேசி என்னோட நாணத்தையே விட வச்சுட்டீங்களே!" என்று பொய்க் கோபத்துடன்அவன் மார்பில் தன் கைகளால் மென்மையாகக் குத்தினாள் சரண்யா.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 126
நிறையழிதல்
குறள் 1258
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.

பொருள்:
நம்முடைய பெண்மையாகிய அரணை அழிக்கும் படையாக இருப்பது, பல மாயங்களில் வல்ல, கள்வனான காதலருடைய பணிவுடைய மொழி அன்றோ?

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...