Sunday, October 22, 2023

1256. பம்பாய்க்கு ஒரு பயணம்

பவானியின் காதலன் ராகேஷ் தனக்கு பம்பாயில் ஒரு நல்ல வேலை கிடைத்திருப்பதாகவும், அங்கே போன பிறகு தன் விலாசத்தைத் தெரிவித்து அவளுக்குக் கடிதம் எழுதுவதாகவும் சொல்லி விட்டு அவளிடமிருந்து விடைபெற்றுப் போனான்.

ஆனால் மூன்று மாதங்களாகியும் அவனிடமிருந்து எந்தக் கடிதமும் வராததால் பம்பாய்க்குச் சென்று அவனைப் பார்ப்பது என்று முடிவு செய்தாள் பவானி.

 தன் முடிவைத் தன் தோழி வசந்தாவிடம் கூறினாள் பவானி.

 "என்னது பம்பாய்க்குப் போகப் போறியா?" என்றாள் வசந்தா.

"ஆமாம். அவர் அங்கேதானே இருக்காரு?" 

"இங்கே பாரு, பவானி. நீங்க ரெண்டு பேரும் காதலிச்சீங்க. அவர் திடீர்னு பம்பாயில தனக்கு ஒரு வேலை கிடைச்சதா உங்கிட்ட சொல்லிட்டுப் போனாரு. போய் மூணு மாசம் ஆச்சு. உனக்கு ஒரு போஸ்ட் கார்டு கூடப் போடலை. அவர் பம்பாயில வேலை கிடைச்சதா அவர் சொன்னதே பொய்யா இருக்கலாம். உங்கிட்டேந்து விலகிப் போறதுக்காக அப்படி ஒரு பொய்யை அவர் சொல்லி இருக்கலாம். அவர் இந்த ஊர்லேயே கூட இருக்கலாம். சாரி. என் மனசில பட்டதை வெளிப்படையா சொல்லிட்டேன்" என்றாள் வசந்தா.

"இல்லை வசந்தா. அவரு அப்பாயின்ட்மென்ட் லெட்டரை எங்கிட்ட காட்டினாரு. கம்பெனி பேரு எனக்குத் தெரியும். டைரக்டரி என்கொயரிக்கு ஃபோன் பண்ணி பம்பாயில அந்த கம்பெனியோட அட்ரஸை வாங்கிட்டேன். அந்த அட்ரசுக்குப் போய்ப் பார்க்கப் போறேன். அவரு அங்கே இருந்தா, அவர்கிட்ட ரெண்டுல ஒண்ணு கேட்டுட்டு வரப் போறேன். அப்படி அவர் அங்கே இல்லேன்னா எல்லாம் முடிஞ்சுடுச்சுன்னு புரிஞ்சுப்பேன்" என்றாள் பவானி.

"உன் அம்மாகிட்ட என்ன சொல்லப் போற?"

"ஒரு தோழியோட கல்யாணத்துக்கு, உன்னோட பம்பாய்க்குப் போகப் போறதா சொல்லப் போறேன்!"

"அடிப்பாவி! என்னையும் இதில இழுத்து விடப் போறியா?"

"ஆமாம். நான் போயிட்டுத் திரும்பி வர வரைக்கும் என் அம்மா கண்ணில பட்டுடாதே!"

"உன்னை மாதிரி ஒரு சாதுவான பொண்ணை இந்த அளவுக்குச் செயல்பட வைக்குதுன்னா உன் காதல் ரொம்ப சக்தி வய்ந்ததுன்னுதான் தோணுது!" என்றாள் வசந்தா.

"சக்தி வாய்ந்த்தோ என்னவோ, ரொம்பக் கொடியது. இல்லேன்னா என்னை விட்டுட்டுப் போனவரைத் தேடி ஓடச் சொல்லி என்னை விரட்டுமா?" என்றாள் பவானி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 126
நிறையழிதல்
குறள் 1256
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.

பொருள்:
என்னைப் பிரிந்து சென்றவர் பின்னே நான் போய்ச் சேர வேண்டும் என்று என்னைப் பிடித்த இந்தக் காதல் நோய் தூண்டுவதால் இது மிக மிகக் கொடியது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...