Saturday, October 21, 2023

1255. காதலன் வருவான்?

"ஊருக்குப் போயிட்டு வரேன்னு சொல்லி ஆறு மாசமாச்சு. இன்னுமா திரும்பி வராம இருப்பான்? அவன் கம்பெனியில போயி விசாரிச்சுப் பார்த்தியா?" என்றாள் மரகதம்.

"ஒரு கம்பெனியில சேல்ஸ் எக்சிக்யூடிவா இருக்கேன்னு சொன்னாரு. கம்பெனி பேரு சொல்லலியே!" என்றாள் மஞ்சுளா.

"ஏண்டி, எந்த கம்பெனியில வேலை செய்யறான்னு கூடத் தெரிஞ்சுக்காமயா ஒத்தனைக் காதலிப்பே?"

"இல்லைம்மா. இப்ப இருக்கறது ஒரு சின்ன கம்பெனி. சீக்கிரமே ஒரு பெரிய கம்பெனியில வேலைக்குச் சேரப் போறேன். அங்கே சேர்ந்தப்புறம் அந்த கம்பெனி பேரைச் சொல்றேன்னு சொன்னார் அம்மா!"

"அம்மா! இன்னிக்கு அவரை பஸ் ஸ்டாப்ல பார்த்தேன்!" என்றாள் மஞ்சுளா.

"பார்த்தியா? நல்ல வேளை. நான் கும்பிடற கடவுள் என்னைக் கை விடல" என்றாள் மரகதம் கைகளைக் கூப்பியபடி.

"இல்லைம்மா. அவர் என்னைப் பார்த்ததும் அவசரமா ஏதோ ஒரு பஸ்ஸில ஏறிப் போயிட்டாரு."

"அடப்பாவி! அப்ப இத்தனை நாளா வேணும்னுதான் உன்னோட தொடர்பு கொள்ளாம இருந்திருக்கான். உன்னை நல்லா ஏமாத்திட்டானே! இனிமேயாவது அவனை மறந்துட்டு  உன் வாழ்க்கையைச் சரி பண்ணிக்க."

"ஏண்டி மஞ்சுளா, அவன் உன்னை ஏமாத்திட்டான்னு தெரிஞ்சு ஒரு வருஷம் ஆகப் போகுது. ஆனா நீ அவன் மறுபடி உன் கண்ல பட மாட்டானான்னு தேடி அலைஞ்சுக்கிட்டிருக்க. எப்பவும் அவன் நினைவாகவே இருக்க. வேற யரையாவது கல்யாணம் செஞ்சுக்கன்னாலும் கேக்க மாட்டேங்கற. சரியா சாப்பிடறதில்ல, தூங்கறதில்ல. உடம்பு வீணாப் போச்சு. உன்னை ஒத்தன் ஏமாத்திட்டான்னா, அவனை மறந்துட்டு இன்னொருத்தரைக் கல்யாணம் செஞ்சுக்கறதுதானே ஒரு தன்மானம் உள்ள பொண்ணு செய்ய வேண்டியது? இன்னும் எத்தனை நாளைக்கு அவன் மறுபடி உங்கிட்ட திரும்பி வர மாட்டானான்னு ஏங்கிக்கிட்டு இருக்கப் போற?" என்றாள் மரகதம்.

"என்னால அப்படி இருக்க முடியலையே அம்மா!" என்ற மஞ்சுளா, 'என்னைப் பீடித்திருக்கும் காதல் நோய் என்னைத் தன்மானத்தோட நடந்துக்க விடலையோ என்னவோ!' என்று நினைத்துக் கொண்டாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 126
நிறையழிதல்
குறள் 1255
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று.

பொருள்:
தம்மை வெறுத்து நீங்கியவரின் பின் செல்லாமல் மானத்தோடு நிற்கும் பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் தன்மையது அன்று.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...