Thursday, October 19, 2023

1253. படித்துறைப் பேச்சு

தண்ணீர் எடுத்து வர ஆற்றுக்குச் சென்ற பொன்னியும் அவள் தோழிகளும் ஆற்றின் படித்துறையில்  குடங்களை வைத்து விட்டுச் சற்று நேரம்  அங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

பேச்சு அந்த ஊர் இளைஞர்களைப் பற்றித் திரும்பியது.

"இந்த இளமாறன் இருக்கானே, அவன் பெண்களைப் பார்த்தா உடனே உதவி செய்ய ஓடி வருவான். ஏன் தெரியுமா?"

"ஏன்?"

"அப்படியாவது எந்தப் பெண்ணாவது தன்னைக் காதலிக்க மாட்டாளாங்கற நைப்பாசைதான்!"

அனைவரும் கொல்லென்று சிரித்தனர்.

இது போல் வேறு சில இளைஞர்களைப் பற்றியும் அவர்கள் கேலியாகப் பேசிச் சிரித்தனர்.

"இந்த முத்து இருக்கான் இல்ல? அவனைப் பார்த்தா ரொம்பப் பரிதாபமா இருக்கு!" என்றாள் சாரதா.

"ஏன்?"

"பாவம் அவனை எந்தப் பெண்ணும் ஏறெடுத்துப் பாக்கல போலருக்கு. அன்னிக்குப் பாக்கறேன். ஒரு கொடிக்குப் பக்கத்தில நின்னு அதோட பேசிக்கிட்டிருக்கான்!"

"அடப்பாவமே! அவ்வளவு மோசமாப் போச்சா அவன் நிலைமை? பொதுவாப் பெண்களைக் கொடி மாதிரின்னு சொல்லுவாங்க. அவன் கொடியையே பெண்ணா நினைச்சு அதுகிட்ட காதல் மொழி பேசிக்கிட்டிருக்கான் போல இருக்கு!"

"தெரியாம பேசாதீங்கடி. அவர் ஒண்ணும் கொடியோட பேசல. அந்தக் கொடிக்குப் பின்னால நின்னுக்கிட்டிருந்த என்னோடதான் பேசிக்கிட்டிருந்தாரு!" என்று வெடித்தாள் பொன்னி.

"அடி கள்ளி, அதானா? நான் கூடக் கொடிக்குப் பின்னால ஏதோ அசையற மாதிரி இருக்கேன்னு நினைச்சேன்!" என்று சாரதா சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஒரு தோழி ஒரு பெரிய தும்மல் போட்டாள்.

"ஏண்டி தும்மற?"

"தும்மலை அடக்க முடியுமா?" என்றாள் தும்மல் போட்டவள்.

'அவளால் தும்மலை அடக்க முடியாமல் அது அவளிடமிருந்து வெளிப்பட்டது போல்தான் நான் கூட இத்தனை நாட்களாக மறைத்து வைத்திருந்த காதலை என்னை அறியாமலே வெளிப்படுத்தி விட்டேனோ!' என்று நினைத்துத் தன்னை நொந்து கொண்டாள் பொன்னி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 126
நிறையழிதல்
குறள் 1253
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.

பொருள்:
என் காதல் ஆசையை நான் மறைக்கவே எண்ணுவேன்; ஆனால், அது எனக்கும் தெரியாமல் தும்மலைப் போல் வெளிப்பட்டு விடுகிறது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...